விதியை வெல்ல யாராலும் முடியாது தான். ஆனாலும் வென்று கொண்டிருக்கோம்னு நினைச்சேன். திடீரென வந்த சர்க்கரை அளவு எல்லாவற்றையும் தூக்கி அடித்து விட்டது. என்ன காரணம்? விடாமல் பிசியோதெரபி செய்து கொண்டிருந்திருக்கலாமோ? நடைப்பயிற்சிக்குக் கூப்பிட்டால் வரலைனுடுவார். ஹீமோக்ளோபின் குறைவால் நடக்க முடியலைனு நினைச்சேன். அது தப்போ? மருத்துவமனைக்குச் செல்லும் முன்னர் தானாகவே கரைத்த ரசம் சாதம், மோர் சாதம் பாத்திரத்தில் இருந்து தம்பளரில் விட்டுக் கொண்டு சாப்பிட்டதைப் பார்த்தால் நம்பிக்கை அதிகமாய்த் தான் இருந்தது. ஆனால் இம்முறை மருத்துவமனையில் வற்புறுத்திச் செய்யப்பட்ட என்.ஜி ட்யூப் மூக்குத்துவாரத்து வழியாக வயிற்றுக்குள் செலுத்தியதில் பேச முடியாமல், சாப்பிடமுடியாமல் போனது என்னமோ நிஜம், இத்தனைக்கும் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து அதை எடுக்கச் சொல்லியும் மேலும் ஆறு மணி நேரம் நீட்டித்து வைத்து 30 மில்லி திரவ ஆகாரத்தோடூ பசியும் பட்டினியுமாய்ப் போட்டதில் வந்ததா? எது? ட்யூபை எடுத்ததும் ஆகாரம் கொடுத்தால் முழுங்க முடியலை. என்றாலும் நினைவு தெளிவாக இருந்தது. ஆனால் அவருக்கு இருக்க வேண்டும், அதுக்காகப் போராடணும் என்னும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. ஏதோ ஒரு காரணம். போக வேண்டிய வேளையை விதி நிர்ணயித்து விட்டது.
ஆனால் ஒரு விதத்தில் நான் முன்னால் போயிருந்தால் அவர் தடுமாறிப் போயிருப்பார். யாருக்கும் தொலைபேசியில் அழைப்பதுன்னாக் கூட நான் தான் நம்பர் போட்டுத் தரணும். கத்துக்கோங்க, கத்துக்கோங்கனு எத்தனை முறை சொன்னாலும் அலட்சியமாகப் போடி என்பார். நான் விளையாட்டாச் சொல்லுவேன். திடீர்னு ஒரு நாள் நான் மண்டையைப் போட்டால் நீங்க யாரையும் கூப்பிட முடியாமல் திகைச்சுப் போய் நிப்பீங்க என்பேன். நீ எங்கே பார்த்துண்டா இருக்கப் போறே என்று வம்பிழுப்பார். ஆனால் நல்லவேளையாக அவர் அந்தக் கஷ்டம் எல்லாம் படவில்லை. கடவுள் என்னை நீ இருந்து எல்லாவற்றையும் அனுபவினு சொல்லிட்டு அவரை மட்டும் கூட்டிக் கொண்டு போய் விட்டார். கடைசியில் ராகவேந்திரர் பிரசாதம் மானசிகமாகக் கிடைச்சிருக்கு. அந்தத் திருப்தியோடு போயிட்டார். கொடுத்து வைத்த ஆன்மா. கடவுளைச் சிந்தித்த வண்ணமே போயிருக்கு. எனக்கும் உடனே உயிர் போயிடாதானு தான் இருந்தது. ஆவால் பாவப்பட்ட ஜன்மமான எனக்கு அதெல்லாம் எப்படிக் கிடைக்கும்?
யாரும் படிச்சுட்டு மனசு வருந்த வேண்டாம். தனிமரமாக நிக்கணும்னு எனக்கு விதி. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றையும் அவரிடம் மானசிகமாகச் சொல்லிட்டுத் தான் செய்யறேன். ஆனால் உயிரும், ரத்தமும், சதையுமாக இருப்பது போல் வருமா என்ன? ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை.