எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 10, 2025

நினைவோ ஒரு பறவை!

 இந்த வருஷம், இந்த மாதம் ஐந்தாம் தேதியோடு சரியா இருபது வருஷங்கள் ஆகின்றன. நான் வலைப்பக்கம் எழுத ஆரம்பிச்சு 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆரம்பத்தில் தமிழ் எழுத வராமல் ஆங்கிலத்தில் தட்டச்சி இருந்தேன். அதுக்கு ஒருத்தரும் கருத்துச் சொல்லவில்லை. சில, பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டில் ரஞ்சனி முதல் ஆளாக வந்து கருத்திட்டிருந்தார். பின்னர் கில்லர்ஜி அடுத்த நாளே வந்திருந்தார். இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கம் மட்டும் இன்று வரையில் 2,972 பதிவுகள் வந்திருக்கின்றன. சில மீள் பதிவுகளையும் சேர்த்து. ஆனால் பலருக்கும் எனக்கு இது ஒன்று மட்டும் நான் வைத்திருக்கும் வலைப்பூ அல்ல இன்னும் சிலவும் இருக்கின்றன என்பது தெரியாது. இதே ஐடியிலேயே என்னுடைய கோயில்களின் புனித யாத்திரை பற்றிய பதிவுகள் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதிலே முதலில் எங்க கயிலை யாத்திரை பற்றி எழுதிட்டுப் பின்னர் சிதம்பரம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு தொடர் எழுதினேன். என்னை ஓரளவுக்குப் பிரபலம் ஆக்கியது அந்தத் தொடர் தான். அதனால் பல சிதம்பரம் தீக்ஷிதர்களும் பழக்கம் ஆனார்கள். பின்னர் ஆங்காங்கே நாங்கள் போய் வந்த கோயில்கள் குறித்தெல்லாம் எழுதிட்டுப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஆரம்பிச்சிருந்தேன். அதைத் தொடர முடியாமல் நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தேன். அதில்லிருந்தே நான் பதிவுகள் எழுதுவது ரொம்பக் குறைந்து விட்டது. 

முதலில் எழுதிய பதிவின் சுட்டி கீழே

https://sivamgss.blogspot.com/2005/11/my-thoughts.html#comment-form

கண்ணனைப் பற்றி எழுத ஆரம்பிச்சப்போ முதலில் இந்த வலைப்பக்கம் தான் ஆரம்பிச்சேன். பின்னர் அதற்கெனத் தனியாக ஒரு மெயில் ஐடி கொடுத்து அதில் ஒரு வலைப்பக்கம் திறந்து அதில் எழுதி வந்தேன். அதற்கு முன்னரே எங்களோட பிரயாணங்களையும் , முக்கியமான இடங்களையும் பற்றி எழுதத் தனியான ஓர் மெயில் ஐடியில் எழுதி வந்தேன். மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ அந்த ஐடி தான் அதிகம் உபயோகிச்சிருக்கேன். மின் தமிழ் குழுமத்திற்காக எழுதிய ஒரு சில பதிவுகள், குறிப்புகள் எல்லாமும் அங்கே வெவ்வேறு பெயர்களில் உள்ள வலைப்பக்கங்களில் காணக் கிடைக்கும். சமையல் பற்றி எழுத ஒரு தனி வலைப்பூ இந்த ஐடியில் துவங்கி பாரம்பரிய சமையலில் இரு புத்தகங்களும் கின்டிலில் போட்டிருக்கேன். எங்க பொண்ணு, இன்னும் சில உறவுக்காரப் பையர், பெண்களுக்காக ஆங்கிலத்தில் ஓர் சமையல் குறிப்புக்கள் கொண்ட வலைப்பூவும் ஆரம்பிச்சேன்.

படங்களுக்கெனத் தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கி இருந்தேன்.  ராம்லக்ஷ்மியிடம் இருந்து  பாராட்டுக் கிடைத்தால் சந்தோஷம். அதையும் சின்னப் புத்தகமாகப் போட்டிருக்கேன். ஆக இவை எல்லாமும் சேர்ந்தால் மொத்தப்பதிவுகள் நிறையவே இருக்கும். மழலைகள் குழுமத்துக்கு, நம்பிக்கை குழுமம், முத்தமிழ்க் குழுமம், ரத்தினமாலை குழுமம் எனக் குழுமங்களுக்காக எழுதியவையும் உண்டு. அப்போல்லாம் நிறையப் படித்துக் கொண்டிருந்ததாலும், அடிக்கடி கோயில்களுக்குப் போனதாலும் எழுத விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்தும் லினக்ஸிற்காகத் தமிழ் மொழீபெயர்ப்பு, தினத்தந்தி நூற்றாண்டு மலருக்காக வேலை எனப் பற்பல வேலைகள். இப்போ எதுவும் இல்லை. நேரம் என்னமோ இப்போக் கடினமாக இருப்பதோடு கொஞ்சம் எழுதவே நிறைய நேரம் எடுக்கிறது என்பது உண்மை. 

இதை எல்லாம் இப்போ ஏன் எழுதுகிறேன் எனில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னால் நாங்க எழுதினப்போ எழுதிக் கொண்டிருந்த க்ருத்திகா ஸ்ரீதர் என்னும்  ஒரு சிநேகிதியின் பதிவை முகநூலில் படிச்சேன். அவர் சில நாட்களுக்கு முன்னர் வந்து கூட என்னிடம் இன்னமும் ப்ளாக் எல்லாம் எழுதறீங்களா என ஆச்சரியமாய்க் கேட்டிருந்தார். இவர் தெரிந்தவரே ஒழிய நான் அதிகம் போனதில்லை. படிச்சது இல்லை. என்றாலும் படிச்சிருக்கேன். ஒரு சில சமயங்களில் கருத்துப் போட்டிருப்பேன். ஆனால் அவர் எழுத்துப் பரிச்சயம் தான். இத்தனை வருஷங்கள் கழிச்சும் அவர் என்னை நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அப்போதெல்லாம் இவர், கவிதா கஜானன் போன்றவர்கள் எழுதுவதைப் படிக்கையில் எனக்கு அறிவுஜீவிகள் தோற்றம் வரும். நமக்குத்தான் அறிவு ஜீவி என்றால் ஒத்து வராது என ஒதுங்கியே இருந்திருக்கேன். உண்மையில் இன்று அவர் என்னை நினைவு கூர்ந்திருந்தது நெகிழ வைத்தது. அப்போது எழுதிக் கொண்டிருந்த பல நண்பர்களின் நினைவுகளும் வந்து அலை மோதின. 

ஏன் இவங்க எழுத்தை எல்லாம் பற்றிப் பயந்தேன் என்றால் நான் என்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள அப்போல்லாம் மொக்கைப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருந்தேன். நாம தீவிரமான சிந்தனைப்பதிவுகளை எழுதினால் படிப்பாங்களா என்னும் சந்தேகம். பின்னர் மெல்ல மெல்ல நானும் நடு நடுவே பக்திப்பதிவுகள், நவராத்திரிப் பதிவுகள்னு போட ஆரம்பிச்சேன். தமிழ் மணம் நக்ஷத்திரமாக இருந்தப்போ இந்த மும்மொழித்திட்டம் குறித்த ஓர் பதிவைக் கூட எழுதினேன் என்றால் பார்த்துக்கோங்க.  அதோடு அப்போல்லாம் வருடா வருடம் பதிவு எழுதிய/எழுத ஆரம்பிச்ச தினத்தைக் கொண்டாடுவேன். ஆரம்பத்தில் ஆதரவளித்த சூப்பர் சுப்ரா என்பவரை வருடா வருடம் நினைவு கூர்ந்து வந்தேன். பின்னர் காலப் போக்கில் எத்தனை வருடங்கள் என்பதே மறந்தும் விட்டது. என்றாலும் பலரின் நினைவுகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றன. இதில் என்னைப் போல் இன்னமும் ப்ளாக் எழுதுவது துளசி மட்டும் தான். வல்லி சிம்ஹன் அவ்வப்போது எழுதுகிறார். என்னை விடத் துளசி இன்னும் பிரயாணம் அதிகம் செய்வதால் அவர் இன்னமும் புத்துணர்வோடு எழுதிட்டு இருக்கார். வாழ்த்துகள். ஏதோ இந்த அளவுக்காவது என்னாலும் எழுத முடிகிறதே என்பதில் எனக்கும் சந்தோஷம் தான்.

Thursday, October 30, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்! 2 தொடர்ச்சி!

 சுமார் பனிரண்டு மணி அளவில் எக்ஸ்ரேக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டார்கள். தூக்கம் வேறே முழு ஏசி என்பதால் குளிர் வேறே. ஒண்ணும் சாப்பிடாததால் பசி வேறே. காலை நீட்டிப் படுத்தால் தேவலை போல இருந்தது. கொஞ்சம் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தால் இடப்பக்கம் அந்த நரம்பு முடிச்சுக்களெல்லாம் நகர்ந்து கொண்டு மேலும் வலியை அதிகப்படுத்தியது. அதற்குள்ளாக மேலும் இரு முறை மருமகள் வந்து பார்த்துட்டு செவிலியரிடம் எப்போ எனக்கு செக்கப் ஆரம்பம் எனக் கேட்டுக்கொண்டாள். சர்ஜன் வரணும் என்றார்கள். அதுக்குள்ளாக ட்யூட்டி மருத்துவர் மாதிரி ஒரு சர்ஜன் வந்து என்னைப் படுக்கையில் படுக்கச் சொன்னார். படுக்கை மிக உயரத்தில் இருக்க என்னால் ஏறிப் படுக்க முடியலை. உடனே ஒரு நர்சை அனுப்பி ஸ்டூல் கொண்டு வரச் சொல்லிப் படுக்கையையும் கொஞ்சம் இறக்கச் சொன்னார். ஏறிப் படுத்தேன். கால்களை மேலே தூக்கிப் போட முடியாமல் தவிக்கச் செவிலியர் தூக்குகையில் வலி தாங்காமல் கத்திவிட்டேன். பின்னர் இந்த மருத்துவர் என்னிடம் விபரங்களைக் கேட்டுக் கொண்டு சின்னதான ஒரு ஸ்கேன் மானிடரில் என் மேல் வயிற்றில் வலி இருக்குமிடம் பரிசோதனை செய்து கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் அது முடிந்து அவர் ஏதோ சொல்லிட்டுப் போனார். என்னவென்று கேட்டதற்கு அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எடுத்தே ஆகணும் எனவும் அங்கே ஆள் இன்னும் வராததால் சிறிது நேரம் அங்கேயே இருக்கணும் எனவும் சொன்னார்கள். மறுபடி தேவுடு காத்துக் கொண்டிருந்தேன். 

நல்லவேளையாகப் போர்த்திக்கொள்ளப் போர்வை கொடுத்தார்கள். கீழே இருந்து யாரும் வரலை. தூங்கிட்டாங்க போலனு நினைச்சுட்டிருந்தப்போ என்னோடு காத்திருந்த ஒரு தமிழ்ப் பெண் அல்ட்ரா சவுன்டுக்கு நர்ஸ் துணையுடன் கிளம்பிப் போனார். அடுத்து நம்மைக் கூப்பிடுவாங்கனு எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தேன்.கொஞ்சம் அப்படியே கண்ணசர யாரோ கூப்பிடும் ஒலி கேட்டுக் கண் விழித்தால் நர்ஸ் ஒருத்தர். என்னை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவருடன் அங்கே போனேன். ஆனால் இது விஷயம், பையருக்கோ அவர் மனைவிக்கோ தெரியாது. அவங்க கீழேயே இருந்தாங்க. அங்கே இருந்த பெண்மணி என்னைத் தனியாகவா வந்திருக்கே எனக் கேட்கக் கீழே பையரும், மருமகளும் காத்திருப்பதைச் சொன்னேன். இவர் ஹிந்தியிலும் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் நடந்தது. நான் வெளியே வந்தப்போப் பையர் அங்கே நின்றிருந்தார். செவிலியரோ அல்லது மருமகள் மூலமாகவோ செய்தி தெரிந்து அங்கே வந்திருந்தார். ஸ்கேன் செய்த பெண்மணியிடம் என்ன பிரச்னை எனக் கேட்க அவர் சர்ஜன் தான் சொல்லுவார் எனச் சொல்லிட்டார்.

பின்னர் பையரைக் கீழே போகச் சொல்லிட்டு நர்ஸ் ஒருத்தர் வந்து மறுபடி எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்து வந்தார். உட்காரச் சொன்னார்கள். சுமார் அரைமணிக்கும் மேலாக ஆகி விட்டது. இம்முறை கொஞ்சம் நன்றாகவே தூங்கி விட்டேன். மறுபடி எழுப்பும் சப்தம் கேட்டுப் பார்த்தால் என்னை வீட்டுக்குப் போகலாம்  என்று சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் விபரங்கள் கேட்டதற்கு வெளியே கையைக் காட்ட அங்கே பையர் நின்று கொண்டிருந்தார். பின்னர் வீல் சேரை வெளியே தள்ள அங்கிருந்து பையர் என்னைக் கீழே அழைத்துச் சென்றார். போகும்போதே அவர் என்னிடம் உள்ளே நரம்புகள் சுருட்டிக்கொண்டு இருப்பதைத் தவிர்த்து வேறே எதுவும் தெரியலை என்றும் வலி குறைய மாத்திரைகள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். பின்னர் எமர்ஜென்சிக்கு வெளியே வந்து ஃபார்மசியில் மருந்துகளை வாங்கிக் கொண்டுக் குட்டிக்குஞ்சுலுவும் அவங்க அம்மாவும் காத்திருந்த இடம்  வந்து அவங்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். வண்டியில்  ஏறும் வரை வீல் சேர்தான். சிரமப்பட்டுத் தான் வண்டியில் ஏற முடிந்தது. மணி நாலரை ஆகி இருந்தது. வீடு வந்து சேரும்போது ஐந்தரைக்குக் கிட்டத்தட்ட ஆகி விட்டது. வீட்டில் படிகள் ஏறணுமே! எனக்கு உள்ளே போக இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இரவு முழுதும் உட்கார்ந்திருந்ததால் கால்கள் வேலை செய்யவில்லை. நகர்த்தவே முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கால்களை நகர்த்தி ஒவ்வொரு அடியாக வைத்து வைத்து வீட்டுப் படிகளைக் கடந்து ஒருவழியாக உள்ளே போனப்போ மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் படுத்துவிட்டேன். 

Monday, October 27, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்!

 அது என்னமோ தெரியலை. மாமா இருந்தவரைக்கும் நான் அதிகமா மருத்துவப் பரிசோதனை எல்லாம் செய்துக்கலை. மருத்துவர் கொடுத்த வழக்கமான மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இப்போப்பையரும் பெண்ணும் மாமாவின் காரியங்கள் முடிந்ததும் கூட்டிச் சென்றார்கள் கத்தார் வருவதற்கு மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டும் மருத்துவரின் மருந்துச் சீட்டும் இல்லாமல் போக முடியாது என்பதால் போனோம். அதிலிருந்து ஒரே பரிசோதனைகள் தான். நான் ஜூன் மாசம் வரைக்கும் ரத்தத்தில் சர்க்கரை பார்ப்பது தவிர்த்து எதுவும் செய்து கொண்டதில்லை. இப்போ எக்கச்சக்கப் பரிசோதனைகள்.  அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரேக்கள் என. அதிலும் பிஎஸ் என் எல் போனப்போப் பையர் படிகளில் இறங்க முடியாத என்னைத் தூக்கி இறக்கி விடும்போது ஏதோ பிரச்னையாகி வயிற்றில் மார்புக்கூட்டுக்கு அருகே இருந்து மேல் வயிறு முழுவதும் எக்கச்சக்க வலி ஏற்பட்டுப் பல மருந்துகள் சாப்பிட்டும் தீராமல் இங்கே தோஹா வருவதற்கு நாலைந்து நாட்கள் முன்னர் (டிக்கெட் எல்லாம் வாங்கினப்புறமா) வலி மிக மிக அதிகமாகி உட்காரவோ, படுக்கவோ முடியாமல் போனதில் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு சர்ஜனிடம்அவர் சொன்னபடி எல்லாவிதமான ஸ்கேன்களும் எடுக்கப்பட்டு உள்ளே  மசில் ஸ்பாசம் ஆக இருக்குனு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார் ஐந்தே நாட்களுக்கு. கிளம்பும் முன்னர் சரியாகவும் போச்சு. இங்கே வந்து கொஞ்ச நாட்கள் இடப்பக்கம் படுக்க முடியாமல் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது. 

இ த்தனை நாட்கள் கழிச்சு இ ப்போத் திடீரென புதன்கிழமை அன்று மதியத்திலிருந்து அந்த வலி. முதல்நாள் கொஞ்சம் பொறுக்கும்படி இருந்தாலும் மேல்வயிற்றைத் தொட முடியலை. படுக்க முடியலை. அன்னிக்குப் பையர் அலுவலக வேலையாக ஆஃப் ஷோர் போயிருந்தார். ஆகவே வீட்டுக்கு வரலை. மறுநாள் தான் வந்தார். அன்னிக்குச் சாயங்காலம் மறுபடி திடீரென வலி வரவே கொஞ்சம் பயந்த நான் பையரிடம் சொல்லக் கிட்டத்தட்ட ஆறரை மணி அளவில் மருத்துவமனை சென்றோம். வழக்கமாகப் பார்க்கும் மருத்துவர் அந்த வாரம் முழுவதும் விடுமுறையில் இருந்ததால் இன்னொரு மலையாள மருத்துவரிடம் போனோம். அவர் பல விதங்களிலும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் சர்ஜனிடம் தான் போகணும்னு சொல்லிட்டார். சொல்லிட்டு அந்த மருத்துவமனையின் சர்ஜனைத் தொடர்பு கொண்டால் அவர் அன்னிக்கு வரலை. ஆகவே கத்தாரின் தோஹாவில் உள்ள அரசு மருத்துவமனை சர்ஜனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். உடனே அங்கே போய் எமர்ஜென்சியில் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டார். 

நாங்கள் போன ஆஸ்டெர் மருத்துவமனையிலிருந்து சுமார் அரை மணி நேரப் பயணத்தில் அரசு மருத்துவமனை இருந்தது. அங்கே போனோம். போகும்போதே ஏழரைக்கு மேல் ஆகி விட்டது. அங்கே போய் எமர்ஜென்சியைத் தேடிக்கொண்டு போனோம். இங்கே எல்லாம் பெண்களுக்குத் தனி/ ஆண்களுக்குத் தனி என்றிருப்பதோடு பெண்கள் பக்கம் ஆண்கள் வரக்கூடாது/வர முடியாது. ஆகவே மருமகளுக்குத் தொலைபேசி எப்போ வேண்டுமானாலும் அழைப்பேன் எனப் பையர் சொல்லி வைத்திருந்தார். மருத்துவமனையில் எமர்ஜென்சிக்குள் போகும் இடம் வரைப் பையர் வந்து விட்டார். அங்கே போய்ப் பெயரை ஐடிகார்டுடனும் ஹெல்த் கார்டுடனும் கொடுத்துப் பதிந்து கொண்ட பின்னர் (வழக்கம்போல் வீல் சேர்தான்) அந்தச் செவிலியர் ஒரு பரிசோதனை அறைக்கு முன்னர் என்னை உட்கார்த்தி வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். காரைப் பார்க் செய்யச் சென்ற பையர் முக்கிய நுழைவாயில் வழியாக வந்து நான் அமர்ந்திருக்கும் பெரிய கூடத்தின் வாயில் வரை வந்து அங்கிருந்த செக்யூரிடியிடம் என்னைக் காட்டி விபரங்கள் சொன்னார். அவர் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். ஆனால் பையரை உள்ளே விடவில்லை. 

காத்திருந்த இடத்தில் எனக்கு முன்னரே நாலைந்து பேர்கள் இருந்ததால் அங்கிருந்த செவிலியர் ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு உள்ளே அழைத்துச் சென்று பரிசோதனைகளை முடித்தார். கீழே ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றச் சின்னச் சின்னப்பரிசோதனைகள். அவை முடிந்ததும் என்னை அங்கிருந்த ஒரு உதவிப் பெண்மணி  மேலே எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இது வேறே வாயில் என்பதால் வெளியே நின்ற பையருக்கு நான் மேலே போயிருப்பதே தெரியாது. உள்ளே போனது தான் தெரியும். பின்னர் எப்படியோ விசாரித்துக் கொண்டு வர முயன்றால் எத்தனையோ ஆண்கள் தத்தம் மனைவியரோடு வந்திருக்கையில் பையரை மட்டும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆகவே அவர் கீழே சென்று விட்டார். நான் மத்தியானம் சாப்பிட்டது தான். கீழே இருக்கையிலேயே பையர் அங்கே இருந்த செக்யூரிடியிடம் கேட்டுவிட்டு அங்கிருந்த காஃபி ஷாப்பில் கேக் போன்றதொரு வஸ்துவை வாங்கிக் கொடுத்துவிட்டார். தாங்கணுமே, எத்தனை நேரம் ஆகுமோ என்பதால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டேன். தண்ணீர் குடிச்சால் நம்பர் ஒன் போக வேண்டி இருக்கும். துணை இல்லாமல் வீல் சேரிலோ, நடந்தோ போக முடியாது. ஆகவே தண்ணீரே குடிக்கவில்லை. மேல சில மணி நேரக் காத்திருப்பில் எப்போப் பரிசோதனைகள் ஆரம்பிக்கும் எனக் கேட்டதில் சரியாகப் பதில் கிடைக்கவில்லை.

நான் கையில் என்னுடைய அலைபேசியை எடுத்துச் செல்லாததால் மணி என்னனு தெரியலை. அங்கிருந்த ஓரிரு மலையாளச் செவிலியர்கள் பிடிவாதமாக மலையாளத்திலும்/ ஆங்கிலத்திலும்/ அரபியிலும் பேசினார்கள். மறந்து கூட இந்தியிலோ/தமிழிலோ பேசவில்லை. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் என்னைப் பார்க்க மருமகள் வந்து விட்டாள். அவளிடம் கேட்டதில் விபரங்கள் ஒன்றுமே தெரியாத காரணத்தால் அந்த அகாலத்தில் பையர் மருமகளைக் குழந்தையை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் எனவும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கீழே பையரிடம் விட்டுவிட்டுத் தான் மட்டும் மேலே வந்திருப்பதையும் மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் பதினோரு மணிக்குப் பரிசோதனை ஆரம்பிக்கும் எனச் சொன்னதாகவும் தகவல்கள் கொடுத்தார். பின்னர் அவர் உதவியோடு நான் கழிவறை சென்று வந்தேன். பையரிடம் விபரம் தெரிவிக்க மருமகள் கீழே போய் விட்டார். சற்று நேரத்தில் எனக்குக் கையில் நரம்பு மூலம் மருந்து ஏற்றுவதற்கான ஊசியைச் சொருகி அதில் சில/பல மருந்துகளை ஏற்றி அடுத்தடுத்துச் செய்யப் போகும் பரிசோதனைகளுக்குத் தயார் செய்தனர்.


Wednesday, October 08, 2025

கூப்பாடு ஆன சாப்பாடு!

 செப்டெம்பர் பதினொண்ணுக்குப் பின்னர் பல முறை எழுத நினைச்சு எழுதலை. மனசு பதியலை. நடுவில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் தீர்ந்து போய் இங்குள்ள மருத்துவமனையின் மருத்துவரைப் பார்த்துச் சொல்லி மருந்து வாங்கி வரப் போகும்படி இருந்தது. என்னதான் இங்கே இருந்தாலும் மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டு நகரவே இல்லை. அங்கேயே இருக்கு. சில சமயம் காலை சாப்பிடும்போது ரங்க்ஸ் நினைவு வந்துடும். ஒவ்வொரு விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்து சொல்லிட்டுத் தான் செய்வேன். அல்லது அவரிடம் கேட்டுப்பேன். இப்போவும் சில சமயம் ஏதானும் விஷயம்னால் உடனே அவர் வந்ததும் சொல்லணும் எனத் தோன்றுகிறது. பின்னர் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு கடவுளே, அவர் எங்கே இருக்கார்னு நினைவில் வரும். எதையும் பகிர ஆளில்லையேனு மனசு கிடந்து தவிக்கும். வெங்கட்டின் அம்மா அவர் கணவர் இறந்து ஒரு வருஷத்துக்குள்ளாக அவரிடம் போயிடுவேன்னு சொன்னாங்களாம். அதே மாதிரிப் போயிட்டாங்க. ஒரு மாசம் ஆகி இருக்கும். எனக்கெல்லாம் அப்படிக் கிடைக்குமானு தெரியலை. கிடைச்சாலும் தெரியப் போறதில்லை. :(

சாப்பாடு பல மாதங்களாகவே வேண்டாவெறுப்பாகத் தான் சாப்பிட்டு வருகிறேன். அங்கேயானும் கிரைண்டர் இருப்பதால் இட்லி,  தோசைக்கு மாவு நானே அரைச்சுடுவேன். இங்கே மிக்சி தான். அதையும் ஸ்டபிலைசர் போட்டுட்டு அரைக்க வேண்டி இருக்கு. குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, ரைஸ் குக்கர் எல்லாமும் அம்பேரிக்காவின் மின் பயன்பாட்டுக்கு ஏற்றவகை என்பதால் இங்கே ஸ்டபிலைசர் போட்டுத் தான் அவற்றை இயக்கணும். அம்பேரிக்காவில் இதே மிக்சியில் நானே தனியாக அரைச்சிருக்கேன். ஆனால் இங்கே அரைக்க யோசனை. ஏதானும் பிரச்னையாயிடுத்துன்னா என்ன செய்யறது? ஏற்கெனவே இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணாகப் போய் கன்டென்சர்/கம்ப்ரெஸர்(?) எதுனு தெரியலை. மாத்தணும்னு சொல்லி அப்புறமா ஒண்ணுமே தெரியலை. ஆகவே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. சப்பாத்தி மாவு சப்பாத்தி பண்ணினால் நல்லாவே இல்லை. கடிக்கக் கொஞ்சம் இல்லை, ரொம்பவே கஷ்டம். ஏற்கெனவே பற்களில் பிரச்னை. ஆகவே சப்பாத்தி பண்ணினால் சாப்பிட அரை மணிக்கும் மேல் ஆயிடும். :( சாதம் போதும்னு சொன்னாலும் பிள்ளை, மருமகள் கேட்பதில்லை. இதிலே அசிடிட்டி தொந்திரவு ரொம்பவே அதிகம் ஆகி இரவுத் தூக்கம் இல்லாமல் போனதில் நேற்று மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.

ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள்! ஸ்ரீரங்கத்தில் கொடுத்திருக்கும் மருந்துகளில் அவருக்குத் திருப்தியே இல்லை. அதோடு ரத்த அழுத்தம் வேறே 103/54 என்றே காட்டியது. அவரோட பிபி மெஷினில் அவருக்கே சந்தேகம் வந்ததால் வேறே கொண்டு வரச் சொல்லி 2,3 முறை பார்த்தார். அதுக்கெல்லாம் பிபி அசரலை. விடாமல் 103/54 என்றே காட்டியது. உடனே பிபி மருந்தைப் பாதி மட்டும் எடுத்துக்கோ, 2,3 நாட்களுக்கு மாத்திரையே வேண்டாம்னு சொல்லிட்டு, அங்கே ரத்தச் சர்க்கரை பார்க்கவும் அதோடு கூட வயிற்றில் பாக்டீரியா இன்ஃபெக்ஷன் இருக்கானு பார்க்கவும் சேர்த்தே பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து ரிப்போர்ட் வந்ததும் மறுபடி வரச் சொன்னார். அதுவரை அங்கேயே உட்காரச் சொல்லிட்டார். பரிசோதனைக் கூடத்தில் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். ஆகவே என்னைக் கூப்பிடவே ஐந்தே முக்கால் ஆச்சு. அவங்க ரத்தம் எடுக்கும்போது வலியே தெரியலையேனு நினைச்சால் இன்னிக்கு அந்த இடத்தில் நீலமாக ரத்தம் கட்டி இருக்கு. செவிலியரும் தமிழ். மருத்துவர் மலையாளம் என்றாலும் நல்லாத் தமிழிலேயே பேசினார்.

மருத்துவருக்கு என்னோட அனிமிக் பிரச்னை,  விடமின் D குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை இதோடு காலில் ஆர்த்ரிடிஸ், வயிற்றில் லிவரில் பாதிப்பு, அசிடிட்டி எல்லாத்தையும் பார்த்ததும் ஒரே தலை சுற்றல். எப்படி இவங்க  அனிமியா, விடமின் D குறைபாட்டுக்கெல்லாம் மருந்தே சாப்பிடாமல் இருக்காங்கனு ஆச்சரியம் வேறே. நல்லவேளையா லிவருக்கு ஸ்ரீரங்கம் மருத்துவர் மாத்திரைகள் 3 மாசத்துக்குக் கொடுத்திருக்கார். அது ஒண்ணுதான் பரவாயில்லை. மத்தபடி அங்கே நல்லாவே கவனிக்கலைனு இவரோட கருத்து.  ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்ததும் அங்கே உள்ள கான்டீனில் உட்கார்த்தி வைத்துவிட்டுப் பையருக்கு ஏதோ கேட்கப் போனார். அங்கே இட்லி, போளி, வடை போன்றவை கிடைப்பதாகப் போட்டிருந்தாங்க. பையர் வேண்டுமானு கேட்டார். தண்ணி கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். பின்னர் எனக்கு வீல் சேர் எடுத்துவரும் உதவியாளர் பரிசோதனைச் சாலையில் போய் ரிசல்ட் வந்துடுத்தானு கேட்டுட்டு வந்தார். ரிசல்ட் மருத்துவருக்கே ஆன்லைனில் அனுப்பிடறாங்க. அவர் பார்த்துத் தக்க மருந்துகளைக் கொடுக்கிறார். நமக்கு ரிப்போர்ட் கைக்கு வருவதில்லை. வேணும்னால் ஆன்லைனில் பார்த்துக்கலாம். அதுவும் மருத்துவர் பார்த்துச் சரியெனச் சொன்னதும். எனக்கு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் இல்லைனு சொல்லிட்டார். மற்றபடி அசிடிடிக்கு மாத்திரை, சிரப் கொடுத்திருக்கார். 

சாப்பாடுதான் கூப்பாடாகி விட்டது. பருப்பு வகைகள், உ.கி. புளி முதலியன அறவே தவிர்க்கணும்னு சொல்லிட்டார். பையருக்கு அப்போவே கவலை. பின்னே எதைச் சாப்பிடுவதுனு. வீட்டுக்கு வந்ததும் நான் தக்காளியை சூப் மாதிரி வைச்சு மிளகு பொடி போட்டு அதை ரசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திக்கிறேன்னு சொன்னேன். அதோடு மோர்ச்சாறு போன்றவையும் அவ்வப்போது பண்ணிக்கிறேன்னு சொன்னேன். காய்கறிகள் கொஞ்சமா சாம்பார்ப் பொடி போட்டு வதக்கியோ வேக வைச்சோ சாப்பிட்டுக்கலாம். பையர் நாளையிலே இருந்து உன்னோட சாப்பாட்டை நீயே சமைச்சுக்கோ. உனக்குத் தான் எப்படினு புரியும்னு சொல்லிட்டார். ஆகவே இன்னிக்கு நானே சமைத்துக் கொண்டேன். ராத்திரிக்கு மருமகள் தோசைக்கு அரைச்சு வைச்சிருக்கா. அதான் சாப்பிடணும்.

Thursday, September 11, 2025

வாழ்க நீ எம்மான்!

 



உன்னை என் திருவிழியால் காணுகின்றேன்

ஒளி பெறுகின்றேன் இருளை ஒதுக்குகின்றேன்

இன்னலெல்லாம் தவிர்க்கின்றேன் களி கொள்கின்றேன்

எரிவில்லை குளிர்கின்றேன் உள்ளும் புறமும்

அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவும் முற்றி

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்

இன்பமெனும் பால் நுரையே குளிர் விளக்கே

எனைஇ இழந்தேன் உனதெxஇலில் கலந்ததாலே

Sunday, September 07, 2025

பெண்களின் மனோபாவம் மாறுமா?

 கணவர் இறந்த பின்னரும் பெண்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்றே எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ இன்னமும் மனதில் எதுவும் ஒட்டவில்லை. ஏதோ போல் இருக்கு. எந்தச் சின்ன விஷயமானாலும் ரங்க்ஸிடம் சொல்லியே பழக்கம் என்பதால் சட்டென மனமும், உடலும் அவரைத் தேடி ஓடும். பின்னர் சாட்டை அடி போல் மனதில் அடி விழுந்ததும் யதார்த்த நிலை புரியும். சமாளித்துக் கொள்வேன். அதிலும் இரவுகளில் அவர் பக்கத்தில் படுத்திருக்கும் நினைப்பில் பேசிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். 12 மணி வரை தூக்கம் வராது. பின்னர் ஏதோ தூங்குவேன். எப்படி ஆனாலும் 3 மணி அல்லது மூன்றரை மணிக்கு விழிப்பு வந்துடும். இங்கே அடுக்களையில் போய் எதுவும் செய்ய முடியாது என்பதால் அப்படியே படுத்திருப்பேன். ஐந்து மணிக்குப் பிள்ளை, மருமகள் இறங்கி வரும்போது அவங்களுக்குத் தொந்திரவாய் இருக்கக் கூடாது எனப் படுத்தே இருப்பேன். சுமார் ஐந்தே முக்கால் அளவில் மருமகள் குழந்தைக்குக் காலை உணவு, மதிய உணவு தயாரித்து முடித்துவிட்டுக் குழந்தையைத் தயார் செய்ய மாடிக்குப் போவாள். 

அப்போ எழுந்திருந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றி (ஸ்வாமி விளக்கேற்றியதும் சட்டெனக்குங்குமம் வைத்துக் கொள்ளக் கை நெற்றிப் பொட்டிற்குப் போகும். கஷ்டத்துடன் நிறுத்திப்பேன்.)  பின்னர் காஃபி போட்டுப்பேன். சில நாட்கள் முதல்நாள் டிகாக்ஷனே இருக்கும். ஊரில் இருந்தவரை மாமா இருந்தால் குடிக்க மாட்டார் என்பதால் புதிதாகப் போடுவேன். இங்கே அப்படி எல்லாம் பார்ப்பதில்லை. ஏதோ குடித்து வைப்பேன் .அங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்தவரைக்கும் காலை எழுந்ததும் வழக்கம்போல் வாசல் தெளிக்கவெனப் போகவே கஷ்டமாக இருக்கும். எதிர் வீடுகளிலெல்லாம் அந்த நேரம் வாசல் தெளிக்க வந்தால் நம்மைப் பார்த்ததும் என்ன நினைச்சுக்குவாங்களோ என்று தயக்கமாக இருக்கும். ஆனால் என்னைப் பத்து நாட்களும் பார்க்கவே பார்க்காத ஒருத்தர் எந்தவிதமான மன வேறுபாடும் இல்லாமல் வந்து பார்த்துவிட்டு வெற்றிலை, பாக்கெல்லாம் வாங்கிக் கொண்டு போனார். இன்னொருத்தரோ மாமா இறந்த அன்றிலிருந்து நான் தோஹா கிளம்பும்வரை வெளியேயே வரலை.  இன்னும் சிலர் வந்துட்டுப் பார்த்துட்டுப் பின்னர் அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.அபார்ட்மென்டில் இது ஒரு பிரச்னை. தனி வீடெனில் தெரியாது. ஏனெனில் இங்கெல்லாம் இன்னமும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்ப்பவர்களும் கடைப்பிடிப்பவர்களும் இருக்காங்களே!

 நான் வெளியே வந்தால் அவங்க கண்ணில் பட்டு விடுவோமோ எனக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வெளியே வருவேன். வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தனவே. வங்கிக்கு, மருத்துவரைப்பார்க்கவெனப் போக வேண்டி இருந்தது. ஆனால் நெருங்கிய சொந்தங்கள் எந்தவிதமான மன வேறுபாடும் காட்டாமல் சகஜமாக வந்தனர். இதில் முக்கியமாக வெங்கட்டின் மனைவி, இன்னொரு இளம் சிநேகிதி, பெண்களூரிலிருந்து வந்தவர் என வந்தார்கள். அபார்ட்மென்டிலேயே சிலர் சகஜமாக வந்து நான் தனியாக இருப்பதால் ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டுவிட்டுப் போனார்கள். சிலர் உட்கார்ந்து பேசி ஆறுதலும் கொடுத்தனர். என்றாலும் ஒரு சிலர் இன்னமும் இந்த வேறுபாடுகளைப் பார்ப்பது, அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

இதுவும் கடந்து போகும் என நானும் கடந்து வந்து விட்டேன். வங்கிகளுக்குச் செல்வதெனில் மதியம் பனிரண்டுக்குக் கிளம்பிப் போய் மூன்றுக்குள் திரும்புமாறு பார்த்துக் கொண்டேன். அந்த நேரம் வீட்டில் இருக்கும் பெண்களின் ஓய்வு நேரமாக இருக்குமே. மருத்துவரைப் பார்க்க இரவு எட்டு மணிக்குப் போவேன். இப்படியே ஜூன், ஜூலை மாதங்களைக் கடத்திவிட்டு ஆகஸ்டிலும் பதினைந்து தேதி வரை ஓட்டிவிட்டு இங்கே வந்தாச்சு. இங்கே வந்த மறுநாளே சுப்புத்தாத்தா பேசினார் என்றாலும் வருவதாகச் சொல்லலை. அவர் வயதுக்கும் உடம்புக்கும் அவரை வரச் சொல்வதெல்லாம் சரியாய் இருக்காது என்பதால் நானும் அழைக்கவில்லை. தக்குடு தொடர்பில் இருந்தார். ஒரு நாள் கூப்பிட்டுப்பேசினார். என்னை அவங்க வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கார். அதன் கஷ்டம் இன்னும் அவருக்குப் புரியலை. வண்டியில் ஏறுவதே கஷ்டமாக இருக்கு. நடப்பது இன்னொரு கஷ்டம். இங்கெல்லாம் எங்கே போனாலும் டைல்ஸ் வழவழப்பாக இருப்பதால் சறுக்குகிறது. அதிலும் மருத்துவமனையில் எனக்கு நடக்கவே பயமாக இருந்தது/இருக்கு. நல்லவேளையாக வீல் சேர் கொண்டு வந்து விடுகின்றனர். இப்படியே போய் மருத்துவப் பரிசோதனை, கைரேகைகள் பரிசோதனை எல்லாமும் முடிச்சுக் கத்தார் ஐடியும் வாங்கிக் கொண்டு மருத்துவக் கார்டும் வாங்கி ஆச்சு. எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பேனு எல்லோரும் கேட்கிறாங்க. எனக்கே தெரியாது. இங்கே இன்னும் மனமே ஒட்டலை. இருப்பதும் தனித்தனி வீடுகள். யாரும் யாரையும் வந்தோ போயோ பார்ப்பதில்லை. யார் இருக்காங்கனு கூடத் தெரியாது.

நாட்கள் மட்டும் போய்க் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் எதுவும் எடுத்துவரலை. வெங்கட் மனைவி கின்டிலில் படிக்கச் சொல்லி இருக்கார். முயற்சி பண்ணணும். இப்போதைக்கு முகநூலில் தான் அதிகம் படித்து வருகிறேன். சில சமயம் திரும்பிப் போவோமா எனச் சந்தேகம் வருது. எப்படியும் பையர் மாமாவின் ஆறாம் மாசத்திதிகளை ஸ்ரீரங்கத்தில் போய்ச்செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். அப்போக் கூட்டிப் போகச் சொன்னால் கஷ்டம் என்கிறார். என்னமோ பார்ப்போம். கடவுள் விட்ட வழி.

Sunday, August 31, 2025

காலம் நகரவில்லை! நிற்கிறது!

 3BHK பார்த்த பின்னர் மேலும் சில படங்கள் பார்க்க நேர்ந்தது. மாரீசனும் அதில் ஒன்று. வடிவேலு நடிப்பும் அந்த ஃபகத் ஃபாசில் நடிப்பும் ஒருவருக்கொருவர் போட்டியாக அமைந்திருந்தது. இந்த நடிகர் நடித்த படத்தை இப்போத் தான் முதல் முதல் பார்த்தேன். பின்னர் ட்ரென்டிங் என்றொரு படம். நல்ல படிப்பினைக் கொடுக்கும் படம். ஆனால் எத்தனை பேர் படிப்பினையாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து முந்தாநாள் பிள்ளையும் மருமகளும் குழந்தைக்குப் பள்ளீச் சீருடை எடுக்கப் போயிருந்தப்போ மருமகள் ரொம்பவே சிபாரிசு பண்ணிப் போட்டு விட்டுப் பார்க்கச் சொன்ன பட. தலைவன், தலைவி. வெகு சாதாரண மனிதர்களை வைத்து எடுத்த படம். நடிகர்களெல்லாம் யாரென்றே தெரியலை. படம் எடுத்தவர், கதை வசனகர்த்தா,எல்லோருமே தெரியாதவங்க. ஆனால் படம் இந்தக் காலத்துத் தம்பதிகள் பார்க்க வேண்டியதொரு படம்.

ஒற்றுமையாய்க் குடும்பம் நடத்தும் கணவன், மனைவி வாழ்க்கையில் இரு பக்கத்து நெருங்கிய சொந்தங்களும் பெண் வீட்டில் பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தவர் எனில் பையர் வீட்டில் அவருடைய சகோதர், பெற்றோர், குறிப்பாகத் தாய், போதனையில் மயங்கித் தவறு செய்யும் தாய், பின்னர் திருந்துவதும் நல்லா இருந்தது.  மற்றவர்களின் போதனையில் பிரியும் தம்பதிகள் விவாகரத்து வரை போய்விடப் பின்னர் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதைச் சொல்லும் படம். இதில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் அன்பும், பாசமும், புரிதலும் இருந்ததால் தாங்கள் செய்வது தவறு எனப் புரிகிறது. ஈகோ இருந்தாலும் நிலைமைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துப் போகும் அனுசரிப்பும் இருந்தது. ஆகவே கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இந்தக்காலப் படித்த, படிக்காத இளைஞர்களுக்குத் தேவையான படிப்பினையைச் சொல்லும் படம். அதில் இந்த யோகி பாபு எதற்காக, ஏன் வந்தார் என்றே புரியலை. அவரைப் போட்டால் படம் ஓடும் என்னும் மரபு ஏதானும் இருக்கும்போல.  தேவையே இல்லாத கதாபாத்திரம்.

கண்ணில் கட்டி பெரிதாக வலது கண்ணின் மேல் இமையில் வந்திருக்கிறதால் வியாழனன்று இந்த ஊர் மருத்துவமனைக்குப் போயிருந்தோம். என்னால் காரிலேயே ஏற முடியலை என்பதால் கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டி இருக்கு. ஆனால் மருத்துவமனையில் என்னைப் பார்த்ததுமே வீல் சேர் கொண்டு வந்துட்டாங்க. மருத்துவர் கூட அதில் உட்கார்ந்த வண்ணமே நான் இருக்க என்னைப் பரிசோதித்தார். கண் மருத்துவர் இல்லை. மருத்துவமனை பெரிதாக உள்ளது என்பதோடு முதல் இடத்தில் இருக்கும் பத்து மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாம். ஆஸ்டர் என்னும் பெயர். இங்கு வந்ததும் செய்ய வேண்டிய நடைமுறைகளை வந்த இரண்டு நாட்களிலேயே செய்து முடித்து விட்டதால் மருத்துவமனைப் பிரவேசம் எளிதாக இருந்தது. மருத்துவர் உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகளும், கண்ணில் போட்டுக்கொள்ள மருந்தும் கொடுத்திருக்கார். கட்டி பழுத்திருக்கே தவிர உடையவில்லை. அப்படியே அமுங்குமோ என்னமோ தெரியவில்லை. கொஞ்சம் பார்வை மங்கலாகவே இருக்கு. 

இன்னிக்குக் குழந்தை பள்ளிக்குப் போய்விட்டதால் வீடே வெறிச். விளையாட்டு அட்டைகளை வைத்துக் கொண்டு ஸ்னேக் அன்ட் லாடரும், லூடோவும் விளையாடும். அது தான் ஜெயிக்கணும் என்று சொல்லும். லூடோ விளையாட்டில் அதன் காயை நான் வெட்டும் நிலை வந்தப்போ அதுக்குப் புரியலை. அப்புறமாச் சொன்னேன். ஒத்துக் கொண்டது என்றாலும் அதுவே பழம் எடுக்கும்படி விளையாடினேன். இதைத் தவிர்த்து பில்டிங் செட்டை வைத்துக் கொண்டு தானே பேசிக் கொண்டு தானே விளையாடிக்கும். தினம் தினம் தோசை தான் வேண்டும். அதுவும் மிளகாய்ப் பொடியோடு. தாத்தாவுக்கும் அதான் பிடிக்கும். அதோடு உடலில் ரத்தம் எடுக்கறது எனில் தாத்தா மாதிரி பேத்திக்கும் நரம்பே கிடைப்பதில்லை. பள்ளிக்குப் போவதற்கு அழுவதில்லை. தானே கிளம்பி விடுகிறது. இந்த வருஷத்தில் இருந்து அவங்க அம்மாவே கொண்டு விடுவதாகச் சொன்னார்கள். பள்ளிப் பேருந்து கட்டணம் மிக அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. இன்னிக்குக் காலம்பரவே எழுந்து குளித்து விட்டதால்நேரம் போகவே இல்லை. அதான் கணினியில் உட்கார்ந்து ஏதேனும் செய்யலாம்னு உட்கார்ந்தேன். இந்தியாவில் இப்போது பனிரண்டரை மணி எனக் கணினி காட்டுகிறது. இங்கே பத்து மணி ஐந்து நிமிடம். பொழுது நகரவே இல்லை. மெதுவாகப் போகிறது. அங்கே எனில் நாள் பறந்து விடும்.