
ராமனும் சுக்ரீவன் கூறியதை ஒத்துக் கொண்டு, தன் தவ வலிமையால் சமுத்திரத்தை வற்றிப் போகச் செய்யலாம், அல்லது, பாலமும் அமைக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார். மேலும், மேலும் அனுமனிடம் இலங்கையின் அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வம், படைபலம், வீரர்பலம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்றார். அனுமன் அவரிடம், அங்கதன், த்விவிதன், நீலன், மைந்தன், ஜாம்பவான், நளன், ஆகியோரே போதும் இலங்கையை வென்று சீதையை மீட்டும் வருவதற்கு. இவ்வாறிருக்கையில் வானரப் படைகள் சமுத்திரத்தைக் கடப்பதும் சாத்தியமான ஒன்றே என்று தெளிவாய் எடுத்துக் கூற ராமனும் மன அமைதி அடைந்து, படைகளைத் திரட்டி அணி வகுக்குமாறு சுக்ரீவனை உத்தரவிடச் சொல்லுகின்றார். நீலன் என்ற வானரத் தளபதியின் தலைமையில் படைகள் அணிவகுக்கப் பட்டு, யார், யார், எந்த, எந்தப் படைக்குப் பொறுப்பு எனவும் தீர்மானிக்கப் படுகின்றது. வானரவீரர்கள் கிளம்புகின்றனர் தென் திசை நோக்கி. ஒரு மாபெரும் அலையானது சமுத்திரத்தில் இருந்து பொங்கி வேகமாய்க் கரையை நோக்கி வருவதைப் போன்ற வேகத்துடனும், வீரத்துடனும், ராமனுக்கு ஜெயம், சீதாராமனுக்கு ஜெயம் என்ற ஜெய கோஷங்களை எழுப்பிக் கொண்டு வானரப் படையானது தென் திசை நோக்கிச் செல்கின்றது. வழியிலே காணப்பட்ட நற்சகுனங்கள் லட்சுமணன் மனதை நிறைக்கின்றது. காற்றானது, இளந்தென்றலாகவும் தென் திசை நோக்கி வீசிக் கொண்டும், பறவைகள் இனிமையான குரலில் கூவிக் கொண்டும், சூரியனானது மேக மூட்டமில்லாமல் ஒளி வீசிக் கொண்டும் காணப்பட்டான்.

இலங்கையில் அரக்கர்கள் ராவணன் தலைமையில் அரசவைக் கூட்டம் ஒன்று ஏற்படுத்தினார்கள். அனைத்து முக்கிய அரக்கர்களையும் கலந்தாலோசித்தான் ராவணன்.:" யாராலும் நுழையக் கூட முடியாத கடினமான கல்கோட்டை போன்றிருந்த இலங்கைக்குள் ஒரு வானரன் நுழைந்தது மட்டுமில்லாமல், சீதையையும் பார்த்துவிட்டு நகருக்கும் நாசத்தை விளைவித்துச் சென்றிருக்கின்றான். ராமன் விஷயத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் எனக்கு எடுத்துக் கூறுங்கள். நண்பர்கள், சகோதரர்கள், மற்ற உறவினர்கள், மற்ற உயர்ந்தவர்கள் அனைவரையும் ஆலோசித்துவிட்டுப் பின்னர் தெய்வத்தையும் நம்பிச் செயல் பட்டாலே சிறப்புக் கிடைக்கும் என்பது உறுதி. தானாக முடிவெடுப்பவன் சிறந்த அரசனாய்க் கருதப் படமாட்டான், இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? அறிவிற் சிறந்தவர்களே! தன் தம்பியோடும், பெரும் வானரப் படையோடும் ராமன் இலங்கையை நோக்கிப்புறப்பட்டிருக்கின்றானாம். சமுத்திரக் கரையை வந்தடைந்துவிட்டானாம். அந்த ராமனின் தவ வலிமை அவ்வளவு வலியதாம். அவன் தவ வலிமையால் சமுத்திரத்தையே வற்றச் செய்தாலும், செய்யலாம் என்று பேசிக்கொள்கின்றார்களே? இந்நிலையில் இந்த இலங்கை மாநகரையும், நம் படைகளையும் நான் காக்கும் வழிதான் என்ன?" என்று கவலையுடனேயே இலங்கேஸ்வரன் கேட்கின்றான். அதற்கு அவன் மந்திரி, பிரதானிகள் ஆன அரக்கர்களோ ராவணனைப் பாராட்டிப் பேசுகின்றார்கள்.
"இலங்கேஸ்வரா, ராவணா, உன் வீரம் சொல்லவும் முடியுமோ? நாகர்கள், யக்ஷர்கள், யமன், வருணன், வருணனின் மகன்கள், குபேரன், அவன் செல்வம் தானவர்களின் தலைவன் மது, தேவேந்திரர்களின் தலைவன் இந்திரன் போன்ற பலரை நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்கள் அரசே! பெரும் ஆற்றல் படைத்த பல க்ஷத்திரியர்களை நீங்கள் வென்றுள்ளீர்கள். கவலைக்கே இடமில்லை. தாங்கள் இங்கேயே இருந்தாலே போதுமானது. இந்திரஜித் ஒருவனே போதும் அனைவரையும் அழிக்க. சமுத்திரத்தைக் கடக்கும் முன்பே வானர வீரர்களை அடக்கிவிட்டு வெற்றியோடு திரும்பி வருவான்." என தைரியம் சொல்லப் பின்னர் அவன் மந்திரிகள் ஆன பிரஹஸ்தன், துர்முகன் போன்றோரும் அதை ஆதரித்தே பேசுகின்றனர். இவர்களில், வஜ்ரதம்ஷ்ட்ரன் என்னும் அரக்கன் கூறுகின்றான்: தேர்ந்தெடுத்த அரக்கர்களை மனிதர்களாய் மாறும் வல்லமை படைத்தவர்களை மனிதர்களாய் மாறச் சொல்லி, ராமனை அடைந்து பின் வரூம் வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும்:'ராமா, உன் தம்பியாகிய பரதனால் நாங்கள் அனுப்பப் பட்டு படையோடு வந்துள்ளோம். பரதனும் வந்து கொண்டிருக்கின்றார். பரதனைச் சந்திக்கும் ஆவலில், தன் படையோடு ராமன் பரதன் வரும் வழிக்குச் செல்லும்போது, நாம் காத்திருந்து சூழ்ச்சியால் முறியடிப்போம்." என்று யோசனை சொல்லுகின்றான்.

"மாற்றான் மனைவியான சீதையை அரசன் அபகரித்து வந்திருக்கின்றபடியாலே தானே நமக்கு இத்தகைய துன்பம் விளைகின்றது? சீதையால் நமக்குப் பெரும் விபத்தே வந்து சேரும். அவளை அவளுக்கு உரிய இடத்தில் சேர்ப்பிக்க வேண்டியதே நம் கடமை ஆகும். ராமரை விரோதித்துக் கொண்டு, பெரிய பட்டணமும், செல்வம் கொழிக்கும் இடமும் ஆன இந்த இலங்கையை அவர் படை வீரர்கள் அழிப்பதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வானர வீரர்களின் தாக்குதலில் இருந்தும் நம்மையும், நம் உறவினர்களையும், படை வீரர்களையும், நம் நாட்டையும், குடி மக்களையும் நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆகவே சீதை திருப்பி அனுப்பப் படவேண்டும். நாம் அனைவருக்கும் நல்லதே செய்வோம். சீதை ராமனிடம் திரும்பிப் போகட்டும்." என்று சொன்னான். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எந்தப்பதிலும் சொல்லாமல் ராவணன் திரும்பித் தன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள்?????
No comments:
Post a Comment