எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 22, 2016

சர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்!

நேற்று சர்வ தேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. கிட்டத்தட்ட 150 நாடுகள் இதில் பங்கேற்றிருக்கின்றன. இது நிச்சயம் பிரதமரின் தனிப்பட்ட வெற்றி என்றே சொல்லலாம். யோகாசனம் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக் கூடிய ஒன்று. யோகாசனம் செய்பவர்கள் தொடர்ந்து செய்து வர வர அவர்களின் கோப, தாபங்கள் குறைந்து உணவில் விருப்பம் என்பது பசிக்குச் சாப்பிடுதல் என்று மட்டுமே இருக்கும். அதிகம் கார,சாரமான உணவுகளை உண்ண விரும்ப மாட்டார்கள்.  ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும். ஆனால் உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து செய்து வர வேண்டும். மனமும், உடலும் சேர்ந்து இயங்க வேண்டும். வேகமாகவும் செய்யக் கூடாது. ஒவ்வொரு யோகாசன நிலையிலும் குறைந்தது 2 நிமிடம் தாக்குப் பிடிக்க வேண்டும்.

இத்தகைய யோகாசனம் இன்றைய நாட்களில் பெருமளவு மக்கள் கற்றுக் கொண்டு செய்து வந்தாலும் நேற்று நம் பிரதமர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்வைக் கிண்டல் செய்து முகநூலில் ஒரு சிலர் எழுதி இருந்ததைப் படிக்கும்படி நேர்ந்தது. அதில் ஒருவர் பாட்டி வைத்தியத்தைக் குறித்தும் கிண்டல் செய்து எழுதி இனி மோதி இதுக்கும் ஆதரவு தேடுவார் என்றும் தேநீர்க்கடைக்காரர் பிரதமராகி இருக்கையில் ஒரு பாட்டியை அல்லது சமையல்காரரைப் பிரதமர் ஆக்கலாம் என்றும் மிகவும் மோசமாகக் கூறி இருக்கிறார்கள்.  நம் பிரதமரை நாமே கேவலப்படுத்துகிறோம் சிறிதும் வெட்கம் இல்லாமல்! மோதி தேநீர் விற்றவர் தான்! அதனால்  என்ன? யார் பிரதமர் ஆனாலும் எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மேலும் பாட்டி வைத்தியம் ஒன்றும் தப்பே இல்லை. குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பது பற்றிக் கேலி செய்து போட்டிருந்தது. என்னளவில் நான் இப்போதும் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது விளக்கெண்ணெய் சாப்பிட்டு வருகிறேன். அதே போல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்! நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கும் தமிழ்நாட்டில் நிலவும் அதிக வெப்பமான சூழ்நிலைக்கும் இதெல்லாம் அவசியம்.

நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் இந்த விளக்கெண்ணெய் சாப்பிட்டும் எண்ணெய் தேய்த்துக் குளித்தும், குளிகைகள், உரை மருந்துகள் ஆகியவற்றைச் சாப்பிட்டே வளர்ந்தார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு ஒப்பிடுகையில் நம் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? நம் நாட்டுப் பாரம்பரிய மருத்துவ முறை தான் பாட்டி வைத்தியம். அஞ்சறைப்பெட்டி சாமான்களிலேயே சிக்கனமாகவும், அதே சமயம் விரைவில் குணமடையும்படியும் ஒரு காலத்தில் இருந்து வந்தது தான் பாட்டி வைத்தியம். இப்போவும் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் பேத்திகளுக்கு வயிற்றுக்கோளாறு எனில் எங்கள் பெண் முதலில் என்ன கைவைத்தியம் கொடுப்பது என்று தொலைபேசிக் கேட்டுக் கொள்வாள். குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி, குத்துவிளக்கில் வாட்டி வயிற்றில் தொப்புளின் மேல் போடுவது உண்டு. வசம்பு என்று அழைக்கப்படும் மருந்தைப் பிள்ளை மருந்து என்றே சொல்வார்கள். அந்தக் காலத்தில் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதைப் பெயர் சொல்லாதது என்று அழைப்பதோடு இது இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் இந்த வசம்பை நுனியில் விளக்கெண்ணெய் தடவிக் குத்துவிளக்கின் சுடரில் சுட்டுக் கரியாக்கி அந்தப் பொடியோடு விளக்கெண்ணெய் கலந்து தொப்புளைச் சுற்றிப் போட்டால் சற்று நேரத்தில் குழந்தை அழுகை நிற்கும்.

மாந்தம் வந்த குழந்தைகளுக்கு வேப்பெண்ணெய் நல்ல மருந்து. இதை என் தம்பிக்கு மாந்தம் வந்த சமயம் பார்த்திருக்கிறேன். பல்லெல்லாம் கிட்டிப் போய்க் கீழே விழுந்தவனை அரைப் பாலாடை வேப்பெண்ணெய் காப்பாற்றியது. அதன் பிறகே மருத்துவர் வந்து பார்த்தார்.  சூரத்தாவாரை என்றொரு விதை உண்டு. அதை வெந்நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தோடு  விளக்கெண்ணெய் சேர்த்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். இம்மாதிரி நம் நாட்டில், வீட்டில், அண்டை, அசலில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நம் உணவு முறையும், அதற்கேற்ற பழக்கவழக்கங்களும் உணவையே மருந்தாக உண்ணும் முறையும் ஏற்பட்டிருக்கின்றன. இதை நடைமுறைப் படுத்தியது சிறிதும் ஆங்கில அறிவே அற்ற நம் பாட்டிமார் தான்! இது எத்தகையதொரு பிரமிப்பான நடைமுறை என்பதை அறியாதவர்கள் தான் இதைக் கேலி செய்ய முடியும்.

பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நம் நாட்டு மருத்துவ முறை உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அது ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ நம் நாட்டு மருத்துவத்துக்கு ஈடு இணை இல்லை. ஆனால் நம் உடலும், மனமும் ஆங்கில மருத்துவத்துக்குப் பழக்கப்பட்டு விட்டது. நாமும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறோம். இதே யோகாசனத்தை வெளிநாட்டவர் யாரேனும் சர்வதேச யோகாதினமாக்க முயற்சித்திருந்தால் பாராட்டுகளும், புகழ்மாலைகளும் பெருமழையாகக் குவிந்திருக்கும்.


யோகாசனம் 

யோகாசனம் குறித்து நான் மழலைகள் தளத்தில் எழுதிய ஆசனப் பயிற்சிக் கட்டுரைகளை இந்தச் சுட்டியில் மின்னூலாகக் காணலாம். 

16 comments:

  1. யோகாசனம் எல்லாம் செய்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் ஆரம்பிங்க ஶ்ரீராம்! :)

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  3. அருமையா சொன்னீங்க ... ஆண்டாண்டு காலமாக புத்தகங்களில் அல்லாமல் தங்கள் அனுபவ அறிவால் அறிந்த ஞானத்தை தலைமுறை தலைமுறையாய் கொண்டு வருவதே ஒரு கலையும் இதன் ஆற்றலும் ஆகும் . நல்ல பதிவு கீதாம்மா ....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாஞ்சில் கண்ணன். தொடர்ந்து வருவதற்கு நன்றி.

      Delete
    2. :) nandri mattum thana geethamma?

      Delete
  4. யோகாசனம் என்பது சிறந்த உடற்பயிற்சி. அதன் பலன் தொடர்ந்து செய்வதில் வருவது மோதிக்கு வேண்டுமானால் இந்த மாதிரி ஒரு நாள் யோகா தினம் மூலம்பெயர் கிடைக்கலாம் மோடியின் gimmicks பெயர் பெறுகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பெற்றோரிடம் கை வைத்தியத்துக்கு உதவி நாடுவது இவை அதிகம் செலவில்லாதவை என்பதாலேயே . மோடி ஒரு முறை ப்லாஸ்டிக் சர்ஜெரி இந்தியாவில்தான் முதலில் நடந்தது என்று கூறி உதாரணத்துக்கு கணபதியைக் காட்டினாராம் அவர் சொல்வது செய்வது எல்லாமே அர்த்தமில்லாதது.ஸ்வச் பாரத் என்னும் விளம்பரத்தில் சுத்தத்தை நோக்கி முன்னேற கழிப்பறை கட்டல் வேண்டும் என்கிறார்கள் அந்தக் காலத்தில் கழிப்பறைகளா இருந்தது . அவர்கள் சுத்தமாய் இருக்கவில்லையா எனக்கு என்னவோ அளவுக்கு மீறிமோடியைப் புகழ்கிறோமோ என்று தோன்று கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் தான் முதல் முதல் நடந்தது! சுஸ்ருதர் என்னும் ஆயுர்வேத வைத்தியர் செய்திருக்கிறார். அவ்வளவு ஏன்? அகத்தியர் கூட மன்னன் ஒருவனின் தலையில் மூளைக்கு அருகே குடியிருந்த தேரையைத் தன் சீடன் மூலம் அகற்றினார். அதனால் அந்தச் சீடர் அன்று முதல் தேரையர் என அழைக்கப்பட்டார். நமக்கெல்லாம் ஆங்கிலேயரோ, அமெரிக்கரோ, ஆஸ்திரேலியரோ யாரானும் ஓர் வெள்ளைத் தோல்க்காரர் சொன்னால் தான் நம்புவோம்! :) மற்றபடி மோதி தகிடு தத்தம் ஏதும் செய்யவில்லை! செய்து பிரதமர் பதவிக்கு வரவும் இல்லை!

      Delete
    2. அதிகம் செலவில்லாமல் வீட்டிலிருக்கும் பொருளை வைத்தே வைத்தியம் செய்வதும், செய்து கொள்ளுவதும் நல்லது தானே! பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது! இப்போதெல்லாம் ஆங்கில மருத்துவர்களே ஆயுர்வேத மருந்தைப் பரிந்துரைக்கின்றனர். என் கணவருக்கு எங்கள் குடும்ப மருத்துவர் சிறுநீரகக் கல்லிற்கு யூபிஸ்டோன் எனப்படும் ஆயுர்வேத மருந்தைத் தான் பரிந்துரைத்தார். அதில் நல்ல பலனும் கிட்டியது. எனக்கு மூட்டு வலிக்கு எங்கள் மருத்துவர் ஆயுர்வேத மாத்திரைகள் தான் தந்திருக்கிறார். ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப்படும் வலி மருந்துகளை விட இது நன்றாகவே வேலை செய்கிறது. ஆயுர்வேதத்திலும் மாத்திரைகள், காப்சூல்கள் என வந்துவிட்டன! ஆகவே எடுத்துக் கொள்ளவும் எளிது!

      Delete
  5. பாட்டி வைத்தியத்தை கிண்டல் செய்பவர்கள் மெத்தப்படித்தவர்கள் எல்லாம் புதுமையின் மோகம் ஃபாஷன் என்ற பெயரில் நல்ல பேண்ட்டை கிழித்து விட்டு போடுகின்றார்கள் இல்லாதவன் போட்டால் கிறுக்கன்.

    அது சரி என்னுடைய யோகா''சாணம் பதிவைப்படித்து விட்டு போட்டிக்கு எழுதினீர்கலோ.... ? ஹி ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இல்லை, இல்லை, உண்மையில் இதை எழுதும்போது உங்க பதிவே நினைவில் வரலை. முகநூலில் ஒருத்தர் பாட்டி வைத்தியத்தைக் கேலி செய்து இனி மோதி இதற்கு ஐநா சபை போய் ஆதரவு திரட்டலாம் என்று கேலியும் செய்ததைப் படித்தேன். அதான்! :)

      Delete
  6. சுஸ்ருதர் செய்தது அறுவைச் சிகிச்சை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் மற்றபடி அகத்தியர் கதையெல்லாம் கற்பனையே நம்பமுடியாதது.

    ReplyDelete
    Replies
    1. நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம் ஐயா! :)

      Delete
  7. சில வருடங்கள் முன்பு தொடர்ந்து யோகாசனம் செய்திருக்கிறேன். மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

    பாட்டி வைத்தியம் பல சமயங்களில் உதவுகிறது.

    ReplyDelete
  8. பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நம் நாட்டு மருத்துவ முறை உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அது ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ நம் நாட்டு மருத்துவத்துக்கு ஈடு இணை இல்லை. ஆனால் நம் உடலும், மனமும் ஆங்கில மருத்துவத்துக்குப் பழக்கப்பட்டு விட்டது. நாமும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறோம். இதே யோகாசனத்தை வெளிநாட்டவர் யாரேனும் சர்வதேச யோகாதினமாக்க முயற்சித்திருந்தால் பாராட்டுகளும், புகழ்மாலைகளும் பெருமழையாகக் குவிந்திருக்கும்.// நச் !!!

    நல்ல பதிவு சகோ..கூடியவரை வீட்டு மருந்துதான்.....இப்போது அப்பா ஆயுர்வேத ப்ராக்டிஷனராக இருந்ததால்...

    கீதா : நானும் யோகா செய்து வந்திருக்கிறேன். இடைப்பட்டக் காலத்தில் செய்ய முடியாமல் போனது. மீண்டும் இப்போது தொடங்கியிருக்கிறேன். கூடியவரை நாட்டு மருந்துதான். கை மருந்துதான். வேறு வழி இல்லை எனில் அலோபதி.

    ReplyDelete