எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 13, 2018

ஒன்றா, இரண்டா! எடுத்துச் சொல்ல! திரு கிருஷ்ணமூர்த்தி 3

தில்லியில் இருந்த வண்ணமே திட்டக்கமிஷன் வேலையின் அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல காரியங்களையும் முடித்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் திரு அப்பாதுரைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு வேலைக்குத் திரும்ப இஷ்டமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிஈஎஸ் அதிகாரியாகத் திட்டக்கமிஷனுக்கே மீண்டும் வந்து அதே மின்சார வளர்ச்சித் திட்டங்கள் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இப்போதைய ஆட்சியில் திட்டக்கமிஷன் என்னும் பெயர் நீக்கப்பட்டு நிதி ஆயோக் என்னும் பெயரில் இயங்கி வரும் இது நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேருவின் ஆலோசனைகளின் பேரில்  ஐந்தாண்டுகள் ஒரு வளர்ச்சித் திட்டம் என்னும் வகையில் உருவாக்கப்பட்டது.

வளர்ச்சியை நிர்ணயிப்பதோடு அல்லாமல் எந்த எந்த மாநிலம் முன்னுரிமை பெற வேண்டும் என்பதையும் திட்டக்கமிஷனே நிர்ணயித்து வந்தது. நேரு அதன் தலைவர் எனில் அதில் இடம் பெற்ற மற்றவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. வி.டி.கிருஷ்ணமாசாரி(டிடிகே இல்லை), பி.சி.மகலேனாபிஸ், ஜே.ஜே. அஞ்சாரியா, தர்லோக் சிங், பென்டரல் மூன், பீதாம்பர் பந்த் ஆகியோரைத் தவிர்த்து சிந்தாமணி தேஷ்முக், டிடிகே, வி.கே.கிருஷ்ணமேனன், ரஃபி அஹமட் கிட்வாய் போன்றோருடன் மாநில முதலமைச்சர்களில் திறமை வாய்ந்த சிலராக இருந்த திரு காமராஜர், கர்நாடக முதல்வரான நிஜலிங்கப்பா, உ.பி.யின் கோவிந்த வல்லப பந்த் ஆகியோரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்களோடு  அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்த திரு கிருஷ்ணமூர்த்தி முக்கியமாய் அப்போது அணுசக்தித் துறைத் தலைவரான ஹோமி ஜே.பாபாவுக்கும் அப்போதைய பிரதமர் நேருவுக்குமான உரையாடல்களில் தான் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறார். தொடர்ந்து திட்டக்கமிஷனிலேயே நீடிக்க விரும்பினாலும் அவருக்கு BHEL  இல் தலைவராகும் வாய்ப்புத் தேடி வந்தது.

அப்போதைய திட்டக்கமிஷனின் முக்கியமான முடிவுகளாக மின் சக்தியைத் தயாரிப்பது அமைந்தது. அதற்காக அப்போது இருந்த இரண்டே வழிகளான நீர் ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல் இன்னொன்று நிலக்கரியை வைத்து அனல் மின்சாரம் தயாரித்தல் ஆகியவை! ஆனால் நீர் ஆதாரங்கள் குறைவாக இருந்ததால் 40% மட்டுமே மின்சக்தி கிடைத்தது. மீதமுள்ள 60% அனல் மின்சாரமாக நிலக்கரி மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம். இதில் எந்த மாநிலத்தில் நீர் மின்திட்டம் அமைப்பது, எந்த மாநிலத்தில் அனல் மின் திட்டம் அமைப்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கொண்ட திட்டக் கமிஷன் அறிக்கையை நம் கிருஷ்ணமூர்த்தியே தயாரித்தார். அப்போதே தில்லி வட்டாரங்கள் அவரை "விகே" என அன்புடன் அழைக்கத் துவங்கி இருந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் அவர் செல்வாக்குப் பரவி இருந்தது. அவர் தயாரித்த அறிக்கை ஜவகர்லால் நேருவால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்டு விவாதங்களுக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நேரு அறிக்கையில் கண்டபடி மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகளுக்கு எங்கே போவது என்னும் கவலையைத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி நாட்டின் மின் உற்பத்தி அமைய வேண்டுமானால் கருவிகள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் எனக் கிருஷ்ணமூர்த்தியும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே எஸ்.ஏ. காட்கரி தலைமையில் மின்சார உற்பத்தி செய்யப் போதுமானக் கருவிகள் தயாரிப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசனைகள் செய்தனர். இதிலும் கட்கரியின் உதவியாளராகப் பணியாற்றினார் திரு கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்த காரணத்தால் தனியார் மூலம் இவற்றைப் பெற முடியாது என்பதால் பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்யலாம் எனக் காட்கரி குழு தீர்மானம் செய்து அதை முறையே பிரதமருக்கும் தெரிவித்தனர்.  1956 ஆம் ஆண்டில் HEILஎன்னும் பெயரில் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் கம்பெனி பதிவு செய்யப்பட்டு பிரிட்டனின் அசோசியேடட் எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸின் ஒத்துழைப்போடு போபாலில் உற்பத்தி நிலையம் முதன் முதல் அமைக்கப்பட்டது.

திட்டக்கமிஷனில் பெரும்பங்காற்றிய திரு கிருஷ்ணமூர்த்தி இளமைத் துடிப்புடன் இருந்தார். இம்மாதிரியான ஓர் நிறுவனத்தில் தானும் இறங்கி தொழிலை வளர்த்து லாபம் அடையச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு அவருள் இருந்ததால் இந்த HEIL இல் சேர விண்ணப்பித்தார்.  இவரது திறமைகளை நன்கு அறிந்திருந்த திட்டக்கமிஷணிலும் சரி, பின்னர் ஏற்பட்ட கட்கரி குழுவிலும் சரி இவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கவே செய்தனர். ஆகவே போபாலில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி! ஆனால் திட்டக் கமிஷன் பணி பாதியிலே இருக்கிறதே. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுப் பணிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முடியாது எனத் திட்டக் கமிஷன் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டது. அதை எதிர்த்து ஏதும் செய்ய முடியா நிலையில் அங்கேயே தன் பணியைத் தொடரவேண்டிய கட்டாயம் திரு கிருஷ்ணமூர்த்திக்கு!

ஆனால் மின் உற்பத்திக்குத் தேவையான சாதனங்கள் HEIL மூலம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் போதுமான அளவுக்கு சாதனங்கள் தயார் செய்ய முடியவில்லை. காட்கரி குழுவின் அறிக்கையை மீண்டும் மறு பரிசீலனை செய்ததில் பஞ்சாப் மின் வாரியத்தைச் சேர்ந்த எச்.ஆர்.பாட்டியா என்னும் மற்றொரு குழு HEIL மட்டும் போதாது எனவும் இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் உடனடியாகத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. இங்கே திட்டக்கமிஷனில் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் திரு கிருஷ்ணமூர்த்திக்கு அங்கே இருக்க மனம் இல்லை. அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் HEIL க்குப் போய் விட்டார். புதிதாக வந்தவருக்குக் கிருஷ்ணமூர்த்தியுடன் இணக்கம் ஏற்படாமல் போகவே அப்போது பிரதமரின் அலுவலகத்தில் இருந்த திரு எல்.கே.ஜாவின் உதவியைக் கோரினார் கிருஷ்ணமூர்த்தி.

அப்போதெல்லாம் இம்மாதிரி மின் திட்டங்களின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளையே நியமனம் செய்து வந்தார்கள். அதன்படி அப்போது HEIL இன் தலைவராக இருந்தவர் திரு மாதுர் என்பவர். மின்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆகவே அவருக்கு உதவி செய்தாற்போலவும் இருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மாறுதல் கிடைக்கும் என நினைத்த திரு எல்.கே.ஜா ஓராண்டுக்கு மட்டும் அவரை அங்கே அனுப்பலாம் என நினைத்தார். யு.பி.எஸ்.சி. மூலம் நேரடித் தேர்வு எழுதி சி.ஈ.எஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்திருந்த திரு கிருஷ்ணமூர்த்தியை ஓராண்டுக்காகப் பாதுகாப்பான வேலையை விட்டு விட்டுச் செல்லும்படி சொல்வதா என்னும் சந்தேகமும் திரு ஜாவுக்கு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ பிடிவாதமாகத் தான் HEIL க்கே போவதாகச் சொன்னார்.  நண்பர்கள் வேறு எச்சரித்தனர். அதிலும் தலைவர் ஆன மாத்துர் பற்றி யாருமே நல்லபடியாகச் சொல்லவில்லை. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார் என்றே சொன்னார்கள். ஆனாலும் 1960 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷனை விட்டு விலகி HEIL இல் மாதுருக்கு உதவியாகச் சேர்ந்தே விட்டார் திரு கிருஷ்ணமூர்த்தி.

14 comments:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...

    ReplyDelete
  2. வரலாறு அறிந்து வருகிறேன்.... நன்றி

    ReplyDelete
  3. அருமையாகப் போகிறது உங்கள் பாணியில் எழுத்து.. தொடருங்கோ.

    ReplyDelete
  4. எனக்குத் தலை சுத்துது. புத்தகம் எழுதினது செல்லப்பா சாரா இல்லை நீங்களா?

    ReplyDelete
    Replies
    1. அதான் எனக்கும் புரியலை! எப்படிச் சுருக்குவது என யோசிப்பதிலேயே நாட்கள் செல்கிறது.

      Delete
  5. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. சின்ன விஷயமும் விடுபடாமல் அழகா தொகுக்கறிங்க .நல்லா இருக்கு வாசிக்க .

    ReplyDelete
  7. எத்தனை தகவல்கள்! Well done!

    ReplyDelete