எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 02, 2019

அன்னை/தாய், பாசம் உள்ளவளா?

பதாகையில் அன்னை கதையும் என் விமரிசனமும்

பதாகையில் "தன்ராஜ் மணி"யின் "அன்னை" சிறுகதை படித்தேன். சுருக்கமாக என் கருத்தையும் பதிவு செய்தேன். பதாகையின் தொடர்பாளர் தொடர்பு கொண்டு கதையின் நிறைகுறைகளைப் பட்டியலிட்டு விமரிசனம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். கதையில் குறை என எதையும் சொல்ல முடியாது. தன்ராஜ் மணியின் கதைகளை முன்னால் படித்த நினைவும் இல்லை. இவர் யாரென அறிய முயன்றால் எந்தத் தகவலும் கிடைக்கவும் இல்லை. போகட்டும். நாம் சொல்ல வேண்டியது கதையைப் பற்றி மட்டுமே.

பெண்கள், பெண்கள்! அவர்களின் ஆளுமை பல விதத்திலும்! இங்கே தாய்மையின் ரூபத்தில்! அதிலும் எப்படிப்பட்ட தாய்மை! தவிக்கும் தாய்மை! ஒரு பக்கம் வயது வந்த அம்மாவின் மகளாக! இன்னொரு பக்கம் பிள்ளை பெற்ற மகளின் தாயாக! தவிக்கிறாள் சாந்தம்மா!  அநேகமாக வெளிநாடுகளில் குடி இருக்கும் மகள், மகன் ஆகியோரின் பெற்றோர்  தங்கள் குழந்தைகளைப் பார்க்க வெளிநாடுவருகையில் தாய் நாட்டில் விட்டு வரும் தங்கள் பெற்றோர்களில்  எவரேனும் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது அங்கேயும் இருக்க முடியாமல் சட்டெனக் கிளம்பவும் முடியாமல் இங்கேயும் அங்கேயுமாக மனசு அலை பாயும். கட்டி இழுக்கும். பதறித்துடிக்கும்.

இங்கே சாந்தம்மாவுக்கும் அதே தான். இத்தனைக்கும் மாமியார் கூட இல்லை. பெற்ற தாய். பிள்ளை பெற்றிருப்பது அவள் பெண் வயிற்றுப் பேத்தி. ஆனாலும் கிழவிக்கு அடம்! தன்னை விட்டு விட்டுத் தன் பெண் போவதாவது! அவள் பெண்ணைச் சீராட்டுவதாவது? கிழவிக்கு ஆனாலும் தன் பெண் தனக்கு மட்டுமே சொந்தம் என்னும் பொசசிவ்னெஸ் போகவில்லை. ஆகவே பெண்ணை வரவழைக்க நாடகம் போடுகிறாள்.

என்றாலும் மென்மையான மனம் படைத்த சாந்தம்மா தன் பெண்ணை எப்படியோ சமாதானம் செய்துவிட்டு ஆறு மாத விசாவைக் கான்சல் செய்து நான்கு மாதம் முன்னாலேயே தன் அம்மாவைக்காண ஓடோடி வருகிறாள். அம்மா போய்விடுவாள், முகமுழி கூடக் கிடைக்காது போயிடுமோ என்னும் பதைபதைப்பு!

வந்ததும் அது நாள் வரை அன்ன ஆகாரம் இல்லாமல் கிடையாய்க் கிடந்த கிழவி தேங்காய் பன்னுக்கு வாயைத் திறக்கிறாள். நல்ல நினைவோடு அடுத்த ஆகாரம் என்ன வேண்டும் என்பதைச் சொல்லிச் சாப்பிடுகிறாள். 2,3 நாளில் பழைய பலம் வந்து எழுந்தும் உட்காருகிறாள். வழக்கம்போல் பெண்ணை அதட்டி வேலையும் வாங்க ஆரம்பித்து விட்டாள்.

சாந்தம்மா! பாவம்! விட்டு விட்டு வந்த தன் பெண்ணையும், பேத்தியின் பிஞ்சு முகத்தையும் நினைத்துக் கொண்டு குமுறுகிறாள்.

இப்படியும் ஆட்கள் இருப்பாங்களானு கேட்டால் இருப்பாங்க! இருக்காங்க! இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டவர்கள் சாமர்த்தியசாலியாய் இருக்கணும். இல்லை எனில் சாந்தம்மா கதி தான்!
இருவேறு குணாதிசயங்கள். தன் பெண்ணைத் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணும் ஒரு தாய்! தான் செய்வது தவறு, தன் மகளுக்கும் ஒரு குடும்பம் இருக்கு, அவளுக்கும் உணர்வுகள் உண்டு. அவளுக்கும் ஒரு பெண் இருக்கிறாள், அந்தப் பெண்ணிற்கும் தாயின் தேவை வேண்டும் என நினைக்காத, அதற்காகச் சிறிதும் வருந்தாத ஓர் மனம்! இது தான் சாந்தம்மாவின் தாய்.

தாயா, மகளா என்னும் போராட்டத்தில் தாயை நினைத்து அவளுக்கு வயதாகி விட்டது. இறந்து விட்டால் குற்ற உணர்ச்சியால் மருகுவோம் என்னும் எண்ணத்தோடு பிள்ளை பெற்ற பெண்ணை விட்டு விட்டு வந்த தாயான சாந்தம்மா தன் மகளை நினைத்து அழுவது தவிர வேறென்ன செய்ய முடியும்!

கதாசிரியர் அனுபவசாலி என்பதோடு மனித மனங்களை முக்கியமாய் தாய்மையின் இருவேறு சொரூபங்களைப் புரிந்து கொண்டு எழுதி இருக்கார். அவருக்கு என் பாராட்டுகள். இது மாதிரி நடக்குமா என்றால் நடக்கும். உளவியல் ரீதியாக ஆய்ந்து இன்னும் எழுதலாம். எழுதவும் எழுதினேன். சில வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக இருக்குமோ என நீக்கினேன். ஆனாலும் கிழவியின் மேல் என் கோபம் போகவில்லை. அவளைத் தனியே விட்டுவிட்டுப் போகவில்லையே! பார்த்துக்கொள்ள ஆட்கள் இருந்தார்கள் தானே! அப்படி இருக்கையில் முதல் முதலாகக் குழந்தை பெற்றுத் தன்னந்தனியாகப் பேத்தி தவிக்கட்டும்; தன் பெண் தனக்கு வந்து பணிவிடை செய்ய வேண்டும் என அந்தக் கிழவி நினைத்ததும் அதை நடத்திக்கொண்டதும் எந்தவகையில் நியாயம்? தன் தாயைப் பற்றி சாந்தம்மாவுக்குத் தெரியாமல் இருக்குமா? அதுவும் அவள் மகளே சொல்லும்போது? வந்த உடனே பிள்ளையும் சொல்கிறான். என்றாலும் அவள் மனம் தாயை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கிறது. அதே சமயம் பெற்ற மகளை விட்டு வந்ததுக்குக் குமுறுகிறது.


மேலே கண்டுள்ளது கதை குறித்த என் விமரிசனம். இதைப் பதாகையில் அவர்களின் மின்னூலில் சேர்த்திருப்பதாகச் சொல்லிச் சுட்டியும் அனுப்பி இருக்காங்க. பார்க்கலாம் என்றால் திறக்கவில்லை. நிதானமாக  மத்தியானமாத் தான் பார்க்கணும். சுட்டி இங்கே. 
படிக்கிறவங்களும் இந்தக் கதைக்கான உங்கள் கருத்தை தாராளமாகத் தெரிவிக்கலாம்.



29 comments:

  1. நல்ல விமர்சனம்...

    உங்கள் வார்த்தைகளின் வழியே சாந்தம்மா நம் கண் முன்னால் அவர்களின் வேதனைகளுடன் ..ரொம்ப பாவமா இருக்கு ..

    இன்றைக்கு நிறைய இடங்களில் இப்படியும் இருக்கு ..

    வயதான அந்த பாட்டிமா வும் அதட்டி வேலை வாங்குவது அவங்க உரிமையை நிலை நாட்டும் முறைன்னு எண்ணம் போல...அப்படி யே இருந்து விட்டார்கள் இனி மாறவும் முடியாது ...

    ஆனால் முயற்சிக்கலாம் சாந்தம்மாக்காக..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, சில விடுபட்ட வரிகளை இப்போது சேர்த்திருக்கிறேன். இயன்றால் மீண்டும் பாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  2. விமர்சனம் படித்துவிட்டு இனிதான் அங்கு சென்று பார்க்கவேண்டும். விமர்சனம் வழக்கம்போல உங்கள் பாணியில் படபடசரசர என உற்சாக வெள்ளம்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், அதெல்லாம் இல்லை. அவங்க என்னைக் கேட்டுப் பின்னர் கொஞ்சம் யோசித்துத் தான் எழுதினேன். நீளமாக இருந்ததைச் சுருக்கினேன். இப்போது சில வரிகளைச் சேர்த்திருக்கேன். மற்றபடி உற்சாகம் எல்லாம் வரலை. ஒரே கோபம் தான் வந்தது.

      Delete
  3. சாந்தம்மாவை படித்து வருகையில் (உங்கள் விமர்சனத்தில்தான்) ஒரு இடத்தில் வல்லிம்மாவின் நிர்மலா நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் சாந்தம்மாவை வாசித்து வருகையில் வல்லிமாவின் நிர்மலா நினைவுக்கு வந்தார்...ஆனால் நிர்மலாவுக்கு இப்படியான அம்மாவோ, மாமியாரோ இல்லையே. சுயமாக முடிவெடுத்து தன் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்தது.

      கீதா

      கீதா

      Delete
    2. ஶ்ரீராம், நிர்மலா அளவுக்கு சாந்தம்மாவுக்கு தைரியம் இருந்திருந்தால் இப்படிப் பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு வந்திருக்கவே மாட்டார்! தைரியம் போதவில்லை. மனமும் சஞ்சலம் அடையும் மனம்! தீர்க்கமான முடிவை எடுக்க ரொம்ப யோசிக்கும் குணம்.

      Delete
    3. தி/கீதா சொல்வது சரியே!

      Delete
  4. இவளும் தாய் ; அவளும் தாய். வித்தியாசமான பிரச்னை. ஒரு பாட்டிக்கு தன் பேத்தி, கொள்ளுப்பேத்தியின் மீது பாசம் இருக்காதோ....

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இப்படியான சிலரை நான் பார்த்திருக்கேன். ஒரு பாட்டி இப்படித் தான் தன் பிள்ளையிடம் போய் உதவிக்கு இருந்த மருமகளை வேண்டுமென்றே தனக்கு உடம்பு சரியில்லை எனப் பொய் சொல்லி வரவழைத்தார். அவர் பிள்ளையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அந்தப் பாட்டி கேட்கவில்லை. மாட்டுப் பெண் வந்ததும் அந்தப் பாட்டியின் முகத்தில் விஷமச் சிரிப்பு! இப்படி நடந்ததும் தெரியும்! எத்தனை வருஷம் ஆனாலும் சிலருக்குத் தாங்கள் மாமியார் என்னும் எண்ணத்தை/குணத்தை விட்டுக் கொடுக்க முடியாது! இங்கே மாமியார் இல்லைதான். தாய்! தாயும் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள்! அதுவும் பெண் தான் செய்ய வேண்டும். மற்றவர் செய்தால் ஏற்க மறுக்கிறாள். அதான் பிரச்னையே! அனுசரணை என்பதே இல்லை.

      Delete
  5. தங்களது விமர்சனம்.. அருமை.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் தானே!...

    என்ன செய்வது!..எல்லோருடைய மனங்களையும் அலசிப் போடுவது ஆகின்ற காரியமா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நீங்க சொல்வதும் சரி தான். ஒவ்வொருவர் மனத்தையும் ஆராய முடியாது தான். :(

      Delete
  6. தன் பெண்ணைத் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணும் ஒரு தாய்!//

    இப்படியான அம்மாக்கள் - பெற்றோர்கள் இருக்காங்கக்கா. பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தவங்களும் இருக்காங்க. பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனக்கு மட்டும்தான் தாங்கள் சொல்வது மட்டும்தான் கேட்கனும் என்று சொல்லி பல பிரச்சனைகளை உருவாக்கி, பெண் எங்கு சென்றாலும் அவளுடனேயே சென்று அதாவது அவள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன் அவளால் சமாளிப்பது கடினம் என்று சொல்லி அவளுடனேயே பயணித்து என்று புகுந்த வீட்டினரிடம் இருந்து பிரித்து..அதாவது பிரித்து என்று சொல்வதை விட தன் பெண் என்ன தவறு செய்தாலும் அட்வைஸ் செய்யாமல் சப்போர்ட் செஞ்சு பிரச்சனை பூதாகாரமாக்கி புகுந்த வீட்டுடன் தொடர்பே இல்லாமல் செய்யும் பெற்றோர்களையும் பார்க்கலாம்....

    பானு அக்காவின் வீடியோ பதிவு கூட இந்த பாசம் வெர்சஸ் அன்பு பற்றியதுதான்...

    ஆனால் இந்தக் கிழவியின் ரியாக்ஷன் தன் பெண்ணின் மீது பாசம் என்று கூடச் சொல்ல இயலவில்லை...அதீத பொஸஸிவ்னெஸ்...ஒரு விதமான சுயநல வெறி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது...

    பார்க்கிறேன் அங்கு சென்று...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, பெண்ணைச் சொந்தம் என எண்ணினால் அவளுக்கும் மனம்னு ஒண்ணு இருக்குனு தோணுமே! இங்கே அப்படி எண்ணவில்லை. தனக்குப் பணிவிடை புரியும் ஒரு வேலைக்காரியாகவே நினைக்கும் தாய்! தன் சொல், தன் முக்கியத்துவம் குறையக் கூடாது. மற்றவர் எப்படிப் போனால் என்ன!

      பானுமதியின் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

      Delete
  7. முதலில் கொடுத்திருக்கும் சுட்டி திறக்கிறது

    ஆனால் கீழே இறுதியில் கொடுத்திருக்கும் சுட்டி திறக்கவில்லை அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கீதா, எனக்கும் திறக்கவில்லை. யாரானும் திறப்பது எப்படினு சொல்லட்டும் என்பதற்காகவே இரண்டாவது சுட்டியும் கொடுத்திருக்கேன்.

      Delete
  8. இப்பத்தான் அந்தக் கதை வாசித்தேன் அக்கா. அதில் அந்தப் பாட்டிக்கு எப்படி தன் பேத்தியின் மீது ஒரு துளி அன்பு கூட இல்லாமல் போனது. பொதுவாகப் பாட்டிகளுக்கு தன் குழந்தைகள் மீது அன்பு இருந்தாலும் தன் பேரன் பேத்திகளின் மீதுதான் இன்னும் பாசம் அதிகம் இருக்கும் இல்லையோ?
    இந்தக் கதையில் வரும் பாட்டி டாமினேட்டிங்க் அதுவும் அதீதமாக என்று தோன்றுகிறது...அப்னார்மல்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பாட்டிக்குத் தன் காரியம் தான்முக்கியம். தன் சுகம் தான் முக்கியம். அப்படியே வாழ்ந்திருக்கிறாள்.

      Delete
  9. உங்கள் விமர்சனம் அருமை கீதாக்கா...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

    கீதா

    ReplyDelete
  10. ஆவலைத்தூண்டிய விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  11. இப்படி உண்மையில் இருக்கிறார்கள். அவர் அதை பார்த்து இருப்பார், அல்லது கேட்டு இருப்பார்.
    கதை படிக்கும் போது மனது கஷ்ட படுகிறது.
    என் மாமியார் உடல் நிலை சரியில்லை என்று நாங்கள் மகன் வீட்டிலிருந்து வந்த போது என் மாமியார் மிகவும் வருந்தினார்கள் உன் மகனுடன், பேரனுடன் இருக்கவிடாமல் இப்படி படுத்து உன்னை வரவழைத்து விட்டேனே என்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, நீங்க சொல்வது போலத் தான் நானும் நினைத்தேன். இப்படி இருக்கிறவர்கள் உண்டு. மற்றபடி உங்கள் மாமியாருக்காக நீங்கள் வந்தது சரியே!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    நல்ல கதை. மனசை சாந்தம்மா மாதிரி கருணையால் கட்டிப் போட்ட கதை. தாய் பாசங்களுக்கு நடுவே மகளையும், தாயையும் என்று எவரையும் விட முடியாமல் அல்லாடும் சாந்தம்மாவை நினைக்கும் போதே மனசுக்குள் சங்கடம் மேலோங்குகிறது. இதை எழுதியவருக்கு எனது பாராட்டுக்கள்.

    கதையை பற்றி விமர்சனம் எழுதி, கதையை கண் முன்பே கொண்டு வந்து நிறுத்திய தங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். தங்கள் எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டுதான், பதாகையின் தொடர்பாளர் தங்களை விமர்சனம் எழுதச் சொல்லியிருக்கிறார்.

    /அநேகமாக வெளிநாடுகளில் குடி இருக்கும் மகள், மகன் ஆகியோரின் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வெளிநாடுவருகையில் தாய் நாட்டில் விட்டு வரும் தங்கள் பெற்றோர்களின் எவரேனும் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது அங்கேயும் இருக்க முடியாமல் சட்டெனக் கிளம்பவும் முடியாமல் இங்கேயும் அங்கேயுமாக மனசு அலை பாயும். கட்டி இழுக்கும்./

    வெளிநாடு என்பதில்லை.. இந்தியாவுக்குள்ளேயே, இல்லை ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளேயே, தாய் தந்தை உடம்புக்கு முடியாமல் ஓரிடம், தன் குடும்பம் கணவர் குழந்தைகள் என ஓரிடம் என்றிருக்கும் பெண்கள் எதை விட்டு விட்டு எங்கு சென்று சிலகாலம் இருந்து வருவது..என்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வதுண்டு. தாய் பாசம், பிள்ளைகள் பாசமென இரு பக்கமும் கயிறு கட்டி இழுக்க அப்போதைக்கு எந்த பக்கம் சாய்வதென்ற தெரியாத நிலையில்... கஸ்டந்தான் பெண்கள் பாடு. ஏனெனில் என் நிலையும் (அண்ணா நல்லபடியாக வைத்து கவனித்து கொண்டாலும், ஒரு தாய்க்கு தன் பெண்ணும் தன் அருகிலேயே இருக்க வேண்டுமென நினைப்பது சகஜந்தானே..!) என் அம்மாவின் கடைசி காலத்தில் அப்படித்தான் இருந்தது.) மீண்டும் சொல்கிறேன். சாந்தம்மாவின் கதை மனதை விட்டு அகலாது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா ஹரிஹரன், நீங்கள் சொல்லுவதும் சரி, எப்போதுமே பெண்கள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்து போகும்படி தான் நடக்கின்றன/நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் இம்மாதிரியான பெண்களைப் பார்க்க முடியுமா என்பதே சந்தேகம். :(

      Delete
  13. என்ன ஒரு தாய் இவள். பாவம் சாந்தம்மா.
    நான் எழுதின நிர்மலாவுக்கு இது போலக் கஷ்டங்கள் இல்லை.
    கஷ்டம் வரும் என்று தெரிந்த போது விலகி விட்டாள். அந்த தைரியம்
    எல்லோருக்கும் வந்து விடாது.

    நல்லதொரு விமர்சனம் ./ எழுதியவருக்கு அதாவது கதை எழுதியவருக்கு
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரேவதி. உங்கள் நிர்மலாவோடு சாந்தம்மாவை ஒப்பிட முடியாது. தைரியமான பெண்மணி. இத்தகைய மனோதைரியம் என் பெரிய மாமியாருக்கு இருந்தது. மாமியாரின் ஓர்ப்படிக்கு! விமரிசனம் எழுதியவரின் கருத்தையும் கீழே பதிந்துள்ளேன். உங்கள் வாழ்த்துகள் அவருக்குப் போய்ச் சேரட்டும்.

      Delete
  14. இந்தக் கதையை எழுதிய திரு தன்ராஜ் மணி அவர்கள் இன்று மின்னஞ்சலில் அனுப்பி இருக்கும் நன்றி நவில்தல் கடிதம்.

    அன்பிற்குரிய கீதா அவர்களுக்கு,
    பதாகையில் வெளி வந்த என்னுடைய புனைவு அன்னைக்கு தாங்கள் எழுதிய விமர்சனத்தை வாசித்தேன்.
    இலக்கியம், கோட்பாடு , கதையின் நடை என்றெல்லாம் பார்க்காமல் கதையின் மைய உணர்வு நிலையை தொட்டு அதையொட்டி உங்கள் விமர்சனம் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    சொல்ல வருவதை இன்னொருவர் புரிந்து கொண்டு எதிர்வினை ஆற்றுவதின் உவகை புதிதாய் பேச்செடுக்கும் எல்லா மழலைக்கும் உண்டு, அவ்வுவகையை புதிதாய் எழுத வந்திருக்கும் எனக்களித்ததற்கு மிக்க நன்றி.
    விமர்சன குறிப்பில் என்னை யாரென்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
    நான் மென்பொருள் துறையில் இருக்கிறேன். தற்போது இங்கிலாந்தில் மனைவி, இரு ஆண் குழந்தைகளுடன் வசிக்கிறேன், சேலம் என் சொந்த ஊர். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவன், ஓரிரு வருடங்களக சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
    மற்றபடி என்னைப் பற்றி விஷேசமாக சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.
    உங்கள் விமர்சனக் குறிப்புக்கு மீண்டும் மிக்க நன்றி, மேலும் எழுத வேண்டும் என்னும் உத்வேகத்தை உங்கள் விமர்சனம் கொடுத்தது.
    அன்புடன்,
    தன்ராஜ் மணி.

    ReplyDelete