எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 04, 2025

பல்லைப் பிடுங்கிட்டாங்க!

 வண்டியை விட்டு இறங்கும்போதே அதிர்ச்சி. அத்தனை படிகள். மருத்துவ சாலை மாடியில் இருந்தது. பையர்  என்னிடம் டாக்டர் சொல்லலையானு கேட்க நான் திரு திரு. இதை அவர் சொன்னதாக நினைவில் இல்லை. வந்தாச்சு, நான் மட்டும் மேலே போய்க் கேட்டுட்டு வரேன்னு பையர் போனார். டாக்டர் அவரிடம் நான் தான் அவங்களை வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே எனக் கேட்கப் பையர் அவங்க சரியாப் புரிஞ்சுக்கலைனு சொல்லி இருக்கார். சரி கீழே வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு மருத்துவர் கீழே வந்தார். அங்கிருந்த நரசை ஒரு நாற்காலி கொண்டு வந்து கீழே போடச் சொல்லிட்டு மருத்துவர் என்னை அதில் உட்காரச் சொல்லிட்டுப் பார்த்தார்.. ஒண்ணும் சொல்லலை. பையர் பின் தொடர மேலே சென்றார். மேலே போனதும் ஒரு வாரத்துக்கான மாத்திரைகள் நான்கு விதங்கள் எழுதிட்டுக் கூடவே பத்தாவது க்ராஸில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்குப் போய் ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்லிக் கொண்டு காட்டச் சொல்லி இருக்கார். பையர் கீழே வந்து வண்டி பிடித்துக் கொண்டு என்னையும் மெதுவாக வண்டியில் ஏற்றிக் கொண்டு ஸ்கேன் சென்டருக்குப் போனோம். அங்கே கூட்டமெல்லாம் இல்லை. போன உடனே நகைகளைக் கழட்டிட்டு ஸ்கேனுக்கு வரச் சொல்லிட்டாங்க. ஸ்கேன் எடுத்து முடித்ததும் சிறிது நேரத்தில் ரிப்போர்ட் கொடுக்க மறுபடி டாக்டரிடம் போனோம். நான் வண்டியிலேயே உட்கார்ந்திருக்கப் பையர் மட்டும் மேலே சென்று டாக்டரிடம் காட்டிவிட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார்.  அவர் சொன்னது விஸ்டம் பல் தான் பிரச்னை அதை எடுப்பது கஷ்டம், முடிஞ்சால் எடுக்கலாம் அல்லது ரூட் கானல் போட்டுக் காப் வைக்கலாம்னு சொல்லி இருக்கார். சரினு மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

சாயந்;திரமெல்லாம் ஒண்ணுமே இல்லை. ரன்க்ஸுக்கு தோசை கூட வார்த்துக் கொடுத்தேன். நானும் சாப்பிட்டுவிட்டு ஏழேகால் மணிக்கெல்லாம் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தால் படுக்கை கொள்ளவில்லை. எழுவதும் உடகாருவதும் படுப்பதுமாக அவதிப் பட்டேன். திடீரென வலி அதிகமாகிக் கண்ணுக்கும் கீழிருந்து தாடை வரை வீக்கம் பெரிசாக ஆகி ஒரு ஆப்பிள் பழம் அளவுக்குச் சிவந்து தொங்கியது. உதடெல்லாம் கோணிக்கொண்டு விட்டது. முகப் பக்கவாதமோ எனச் சோதனைகள் செய்து பார்த்தேன். வாயெல்லாம் நேராகவே இருந்தது. எதிர் வீட்டு மாமி சிஎம்சியில் ஸ்டாஃப் நர்சாக இருந்தவ்ர். அவரிடம் காட்டினேன். அவரும் முகப்பக்கவாதமோ, பொன்னுக்கு வீங்கி என்னும் மம்ப்ஸோ இல்லைனு சொல்லிட்டார். அதுக்குள்ளே பையர் வந்து என்ன ஆச்சுனு கேட்டுவிட்டு முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டார். மணியோ ஒன்பதுக்கு மேல் ஆகிக் கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியலை, த்லையைக் கீழேயே போட முடியலை. நான் வழக்கமாய் மருந்துகள் வாங்கும் மெடிகல் ஷாப்காரரான பார்மசிஸ்டை அழைத்து நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே நான் வலி குறைந்து ;தூங்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரேன், உங்க பையரைக் கீழே செக்யூரிடி இருக்கும்  இடத்துக்கு வரச் சொல்லுங்கனு சொன்னார். பையர் கிளம்புவதற்குள்ளாக அவரே வந்துட்டு என்னையும் பார்த்துட்டு மாத்திரைகளைக் கொடுத்துட்டு பல் மருத்துவர் கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சிலவற்றைச் சாப்பிடாதே என்றார்.

அவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தேன், அரைமணியில் வலி குறைய ஆரம்பித்தது. ஆனால் வீக்கம் வடியலை. என்றாலும் தூங்கினேன்னு தான் சொல்லணும் காலையில் எல்லோரும் பார்த்துட்டு வேறே மருத்துவர் கிட்டேப் போகச் சொல்ல எங்க வீட்டில் உதவிகள் செய்யும் பெண் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகேயே ஒரு மருத்துவமனையைச் சொன்னார். சரினு சாப்பாடு வந்ததும் ரங்க்ஸைச் சாப்பிடச் சொல்லிட்டு நாங்க மருத்துவமனை போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் பார்க்க அழைக்க, அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் என்னையும் மாற்றி மாற்றிப் பல்வேறு கோணங்களில் பார்த்துவிட்டு என்ன நடந்ததுனு கேட்டார். நான் ஏற்கெனவே ஒரு பல் உடைந்திருந்ததையும் உடைந்த பாகத்தை ஒரு மருத்துவர் எடுத்துட்டார்னும் சொன்னார். உடனே இந்த மருத்துவர் அதில் தான் பிரச்னையே. அந்தப் பல் ஏற்கெனவே இன்ஃபெக்ஷன் ஆகி உடைஞ்சிருக்கு. ஆகவே மொத்தப் பல்லையும் எடுத்திருக்கணும் அப்படி எடுக்காததால் பக்கத்தில் உள்ள பல்லும்/பற்களும் பாதிப்படைஞ்சிருக்குனு சொல்லிட்டு விஸ்டம் பல்லைத் தவிர்த்து மற்ற இரு பற்களை உடனே எடுக்கணும்னு சொல்லிட்டு அவரே செவ்வாய்க்கிழமை சாயங்காலமா வாங்கனு சொல்லிட்டார். எனக்குச் செவ்வாய்க்கிழமை ஒத்துக்கொள்ளாதே என்னும் கவலையில் நான் புதனன்று வரேனேனு சொன்னதைக் காதிலேயே போட்டுக்கலை. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஐந்தரைக்கு வந்துடுங்கனு சொல்லிட்டார்.

வலி வீக்கம் குறைய இந்தப் புது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு வந்தேன்,. வலி குறைந்தாலும் வீக்கம் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது. செவ்வாயன்று காலையிலிருந்தே திக் திக், திக் தான். மதியம் நெருங்க, நெருங்கக் கவலையும் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்னால் பல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்கேன் என்றாலும் அவை எல்லாம் ஆடிய பற்கள். இதுவோ ஸ்திரமாக கெட்டியாக ஊன்றி இருக்கு. வலி எப்படி இருக்குமோனு கவலை. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் அழைத்துப் பல் பிடுங்கும் ஆபரேஷன் தியேட்டரில் உட்கார வைத்து விட்டு மறுபடி பற்களை ஆய்வு செய்தார்,. விஸ்டம் பல்லுக்கு முந்தைய பற்களையே பிடுங்கணும்னு மறுபடி காட்டினார். பின்னர் என்னையும் சம்மதம் கேட்டுக் கொண்டு ரூட் கானல் வேண்டாம் என நான் உறுதியாகச் சொன்னதும் ஈறுகள் மரத்துப் போக ஊசியைச் செலுத்தினார். அந்த வீக்கம் இருக்கும் ஈறிலேயே ஊசியைச் செலுத்தியதால் அப்போவே வலி தாங்கலை. டாக்டர் ஒரு மாதிரி பேசி என்னைச் சமாதானம் செய்து கொண்டு ஊசியைப்போட்டுவிட்டுச் சற்று நேரம் உட்கார்ந்திருக்கும்படி சொல்லிப் போனார்.

இதற்கு நடுவில் நர்ஸ் வந்து என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுகிறேன் எனக் கேட்க நினைவிலிருந்தவற்றைச் சொன்னேன். மருத்துவர் முக்கியமாய் ஆர்த்தோ பிரச்னைக்கு என்ன சாப்பிடறேன்னு சொல்லச் சொன்னார். நினைவில் இருந்தவற்றைச் சொன்னேன். பின்னர் பையர் வீட்டில் ரங்க்ஸைக் கூப்பிட்டு என்னோட மருந்துகள் லிஸ்டை அனுப்பச் சொல்ல அவரும் மருமகள் உதவியோடு அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மருத்துவர் முன்னாடியே பார்த்திருக்கணும் என்றார். யாரும் என்னிடம் கேட்கலை என்றேன். இதுக்குள்ளே மரத்துப் போயிருக்கும்னு பல்லைப் பிடுங்க ஆயத்தமானார். என்ன செய்யப் போறோம் என்பதை மறுபடி ஒரு தரம் எனக்குச் சொல்லிட்டுப் பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். அதான் தெரியும். அடுத்த நிமிடம் நான் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியோ ஒரு பல்லைப் பிடுங்கிட்டார். என்றாலும் திரும்ப ஒரு தரம் ஊசி செலுத்தப்பட்டிருந்தது, இப்போது மூன்றாவது முறையாக மறுபடி கதறக் கதற ஊசி செலுத்திட்டு இன்னொரு பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். லேசில் வருவேனா என்றது அது. ஆழமாக வேரூன்றி இருந்திருக்கு. நான் கத்தவும் பிடுங்குவதை நிறுத்திட்டு இதோடு விட்டுடவா? இன்னொரு நாள் பிடுங்கலாமா என என்னிடம் கேட்டார். வேண்டாம், வேண்டாம் இன்னிக்கே ஒரு வழியா முடிச்சுடுங்கனு சொல்லிட்டு அடுத்த கத்தலுக்கு ஆயத்தமானேன். கதறக் கதறப் பல்லைப் பிடுங்கிட்டார். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் எடுக்க முடிஞ்சது. பல்லில் சீக்கோர்த்துக் கொண்டு வலியைக் கொடுத்த பாகத்தைக் காட்டினார். மற்றபடி பல் நன்றாகவே இருந்திருக்கு. முதலில் போன மருத்துவர் முறையாகச் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் இல்லை.

பல்லை ஒரு மாதிரி பிடுங்கிட்டாலும் அடுத்தடுத்து நான்கைந்து முறை மயக்க ஊசி போட்டதால் என்னால் எழுந்திருக்க முடியலை. அங்கேயே அப்படியே படுத்துட்டேன். மருத்துவரும் அரை மணி படுத்திருக்கட்டும். பின்னர் அழைத்துப் போங்க. நாளை வரை சூடு, காரம் இல்லாமல் திரவ உணவு தான். ஜூஸ், இளநீர் நிறையக் கொடுங்கனு சொல்லிட்டு அடுத்த பேஷன்டைப் பார்க்கப் போனார். பின்னர் கொஞ்சம் மயக்கம் சரியானதும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். இன்னிக்குத் தான் வலி, வீக்கம் இல்லாமல் சாப்பிட முடிஞ்சது. பேசவும் முடிஞ்சது. 

Wednesday, April 02, 2025

பல்லைப் பிடுங்கிய கதை!

 குட்டிக்குஞ்சுலு வந்து ஒரு வாரம் ஆச்சு,. இதோ வெள்ளிக்கிழமை கிளம்பிடும். பெரிய மாதக் காலண்டரில் அது இங்கே இருந்து கிளம்பும் நாளையும், சென்னையிலிருந்து கிளம்பும் நாளையும் கொட்டை எழுத்தில் எழுதி வைச்சிருக்கு. இந்த முறை வண்டி இல்லாததால் அதுக்கு அவ அப்பாவோட எங்கேயும் போக முடியலை. வண்டியை நம்ம ரங்க்ஸ் வித்துட்டார். அது வாங்கி 20 வருஷத்துக்கும் மேல் ஆச்சு. பையர் எப்போவானும் வரச்சே எடுக்கறது தான். ஆனால் குஞ்சுலுவுக்கு அதில் போவது என்றால் சாப்பாடு கூட வேண்டாம். இந்த முறை ஏமாற்றமாகிப் போச்சு அதுக்கு. பள்ளியில் சேர்ந்த முதல் வாரமே ஸ்டார் ஆஃப் தெ வீக் விருது வாங்கிக் கொண்டு வந்தது. ரொம்ப ஓஹோனு படிக்காட்டியும் படிக்கிறது. ஆனால் வீட்டுக்கு வந்ததும் பள்ளிப் புத்தகங்களையே தொடமாட்டேன் என்கிறது. அதான் ஸ்கூலில் படிச்சுட்டேனே என்கிறது. அவங்க பாட்டியைப் போல இருக்குமோ?இஃகி,இஃகி, ஆனால் பாட்டி வீட்டுக்கு வந்ததும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கலைமகள்னு படிப்பா. இது அப்படி எல்லாம்படிக்கிறதே இல்லை. எங்க அப்பா ஸ்கூலுக்கே வந்து எச்.எம்மிடம் என்னைப் பற்றிப் புகார் சொல்லி அடிக்கச் சொல்லிட்டுப் போவார். அவங்களும் அடிக்கையில் எல்லாம் கல்கி, குமுதம் மட்டும் படிக்கத் தெரியுமானு அடிப்பாங்க. இத்தனைக்கும் முதல் 3 ராங்கிற்குள் தான் சுத்துவேன்.

ஆஹா, ஓஹோ நு எல்லாம்                                                                                                                        விருச்சிக ராசிக்குப் போடறாங்க. ஆனால் எனக்கென்னமோ ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. காலில் கல்லைப் போட்டுக் கொண்ட பின்னர் சில நாட்கள் அப்படியே போயிடும்னு நினைச்சால் திடீர்னு ரங்க்ஸுக்குப் பல்வலினு போன மருத்துவர் கிட்டே என்னோட பல்லையும் காட்ட, அவர் ஒரு பல் உடைஞ்சிருக்குனு சொல்லி அதை எடுத்துட்டேன் என்றார். சரி,இத்தோடு விடும்னு நினைச்சால் வெள்ளிக்கிழமை அன்றிலிருந்து விடாமல் ப்ல் வலி. இது என்னடா சோதனைனு நினைச்சேன். ஏற்கெனவே ரங்க்ஸுக்குப் பல்வலி வந்தால் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் இருக்க அதைப் போட்டுக் கொண்டு படுத்தேன். தூக்கமா? நல்ல நாளிலேயே வராது. உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதுனு சமாதானம் செய்துக்கணும். இன்னிக்குத் தூக்கம் வராததோடு வலப்பக்கம் கன்னம் வீங்கி உதடுகள் எல்லாம் கோணிக்கொண்டு ஒரு சின்ன ஆப்பிள் அளவுக்குக் கன்னம் வீங்கித் தொங்க ஆரம்பிச்சது. பையர் பயந்து போய் விட்டார்.

மருத்துவர்கள் யாருமே அப்போது இல்லை. நான் போய்க் கொண்டிருந்த மருத்துவரை அழைத்தால் அவர் நாளைக்குப் பார்த்துக்கலாம். மெடிகல் கடையில் சொல்லி வலியைக் குறைக்கும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்குங்கனு சொல்லிட்டார். வேறே வழி? பையர் போய் வாங்கி வர அதைப் போட்டுக் கொண்டு தூங்கினேன். காலை எழுந்ததும் மருத்துவரிடம் பேசி எத்தனை மணிக்கு வரணும்னு கேட்டால் அவர் வராதீங்க. உங்களுக்கு இங்கெல்லாம் வருவது கஷ்டம் என்கிறார். தனியாய் வரணும்னு சொல்றார் போலனு நினைச்சுப் பையர் வந்திருப்பதால் அவரோடு வரேன்னு சொல்லிட்டேன். ஏற்கெனவே 12 மணிக்கு மேல் தான் இருப்பேன்னு சொல்லி இருப்பதால் சாப்பாடு வந்தது சொல்லிட்டுக் கிளம்பினேன். ரங்க்ஸுக்கு ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி, அதிகம் வீட்டுக்குள்ளேயே அலைய வேண்டாம்னு சொல்லிப் படுக்கச் சொல்லிட்டுக் கிளம்பினோம். ஆட்டோ பெரிய ஆட்டோ வந்தது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற முடியலை.  அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சின்ன ஸ்டூல் வைச்சிருந்ததால் அதை எடுத்துப் போட்டார், ஒரு மாதிரி ஏறிட்டேன்

ஒரு காலை வைச்சு ஏறிட்டேன். இன்னொரு காலை எடுக்கும் முன்னர் அதுவும் தொந்திரவு கொடுக்கும் இடக்கால். ஸ்டூல் ஆட ஆரம்பிச்சுடுத்து. உடனேயே கத்த ஆரம்பிக்கப் பையர் ஒரு பக்கமும் ஆட்டோ ஓட்டுநர் இன்னொரு பக்கமும் பிடித்துக்கொண்டு உள்ளே தள்ளினார்கள். ஒரு மாதிரியா உட்கார்ந்துட்டேன். தில்லை நகர் நோக்கி ஆட்டோ சென்றது. மருத்துவமனையின் விலாசத்தை வைத்துக் கண்டுபிடித்துக் கொண்டு கீழே இறங்கலாம்னு பார்த்தால் ஒரே அதிர்ச்சி. மருத்துவர், மருத்துவமனை எல்லாம் சரி. ஆனால் என்னால் அங்கே போக முடியாதே! என்ன செய்யப் போறேன்?

Wednesday, March 19, 2025

பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு!

 ஆன்மிகம் அல்லது பக்திப் பதிவுகள் எழுதணும்னு தான் நினைச்சுக்கறேன். ஆனால் மனம் பதிவதில்லை. அடுத்தடுத்தப் பிரச்னைகள் தான் காரணம். புத்தி அதிலே போய் விடுகிறது. பொதுவாக நான் என்னை அவமானம் செய்தவர்களிடம் கூடக் கடுமையாக நடந்துக்கறதில்லை. நடந்து கொண்டதும் இல்லை. கடந்து போய்விடுவேன். அவங்க பேசினாலும் பேசாவிட்டாலும் நான் பேசுவேன். ஆனால் ஒரு சிலர் இதைப்புரிஞ்சுக்கறது இல்லை. ஏதோ நாம் அவங்களிடம் நட்புக் கொண்டாடுவதை விரும்புவதாக நினைச்சுப்பாங்க. அதையும் தாண்டி வந்துடுவேன். ஆனால் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு நம்மூலம் பலரின் நட்பைப் பெற்றுக் கொண்டு பலன் அடைந்தவர்கள் பின்னால் நம்மை யாரென்றே தெரியாதது போல் நடந்துக்கறது தான் விசித்திரமாக இருக்கும்.  இன்னும் சிலர் நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகிவிட்டு நம் நேரத்தையும் அவங்களுக்காகச் செலவிட வைச்சுட்டுப் பின் திடீரென வேறொருவர் நட்புக் கிடைச்சதும். நம்மை யாரோ போல் பார்ப்பதோடு அல்லாமல் புதுசாய்ப் பழகறவங்களைப் பத்தி நாம் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லாமல் மழுப்பிடுவாங்க. இதை எல்லாம் இப்போத் தான் கடந்து  வந்திருக்கேன்,. போனது போகட்டும்.

கொஞ்ச நாட்களாக எனக்கு ஏதேனும் சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படுகின்றன. 15 ஆம் தேதி சனியன்று ரங்க்ஸை செக்கப்புக்குக் கூட்டிச் செல்லும் நாள். போயிட்டுத் திரும்பும்போது ஒரு மாதிரி, கவனிக்க, ஒரு மாதிரித் தான் ஆட்டோவில் ஏறிட்டேன். வலக்கால் உள்ளே வந்துடுத்து,, இடக்கால் தான் எப்போதும் பிரச்னை, அதைச் செல்லம் கொஞ்சி, தட்டிக் கொடுத்துக் கொண்டு வரணும். மெல்ல மெல்ல நான் முயன்று கொண்டிருக்கையிலேயே கூட வந்த அட்டென்டர் டக்கெனக் கீழே குனிந்து என் காலைப்பிடித்து, மடித்து உள்ளே தள்ளினாரே பார்ப்போம். அந்த இடமே களேபரம் ஆகிவிட்டது, என்னோட கத்தலினால். அவ்வளவு வலி. அதிலும் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை. எனக்கு ஊசி போட வரும் நர்ஸ் வெரிகோஸ் வெயின் நீளமாக அந்த இடத்தில் இருப்பதோடு ஆங்காங்கே சுருட்டிக்கவும் செய்யறது. ஆகவே அது சுருட்டிக்கும்போது வலி அதிகமாத் தெரியும் என்றிருக்கிறார். போறாததுக்குக் கால் முட்டி வேறே. தொட்டாலே கன்னாபின்னாவென நரம்புகள், எலும்புகள் பின்னிக்கொண்டிருக்கும்போல! ரொம்ப கவனமாய்க் கையாள வேண்டிய கால். இப்படிப் பண்ணிட்டாரேனு வேதனையா இருந்தது. வீட்டுக்கு வந்ததும் நர்ஸை அழை க்கலாமானு இருந்தேன், வேண்டாம்னு தோணித்து, 

ஏனெனில் எப்படியும் திங்களன்று ஊசி போட வேண்டிய நாள் என்பதால் அவரே வருவார். நேற்றுக்காலையில் வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குக் கஞ்சிக்குக் கேழ்வரகை வறுத்தேன். அதை ஆற வைச்சுப் பையில் போட்டுவிட்டு அதில் சுக்கை இடித்துச் சேர்த்துப் பின்னர் மாவு மிஷினில் அரைக்கக் கொடுக்கலாம் எனக் குழவிக்கல்லை எடுத்தேன். அதான் தெரியும். அடுத்த நொடியே நான் குய்யோ, முறையோ எனக் கத்த ஹாலில் உட்கார்ந்திருந்தவருக்கு உடனே எழுந்தும் வர முடியலை. என்னனும் புரியலை, ஒரு நிமிஷம் எனக்கே புரியலை. அப்புறமாத் தான் புரிஞ்சது குழவிக்கல்லைக் காலிலே போட்டுக் கொண்டிருக்கேன் என்பதே. நல்லவேளையாகப் பாதத்தின் நடுவில் விழாமல் ஓரமாய் விழுந்திருக்கு. ஏற்கெனவே இடக்கால் பிரச்னை. இப்போ வலக்காலும் சேர்ந்து கொண்டது, ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. ஆனால் எப்படியும் வந்து தானே ஆகணும். மெல்ல மெல்ல வந்து ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நர்ஸிடம் விஷயத்தைக் கூறி உடனே வரச் சொன்னேன்,. அவங்களும் அரை மணி நேரத்துக்குள் வந்துட்டாஅங்க. இரண்டு இடுப்பிலேயும் இரண்டு ஊசிகள். கடுமையான வலி, ஒரு ஊசி ஏறும்போதே வலி தாங்காது. வேதனை எல்லாப்  பக்கமிருந்தும். வலி அதிகமா இருந்தால் மாலை அழைக்கச் சொல்லி இருந்தார். அவ்வளவு வலி இல்லை. நேற்றும் வலி இல்லை. ஆனால் இன்று காலையிலிருந்து இடப்பக்கம் பூராவும் வலி. நரம்புகள் கன்னாபின்னாவென இழுத்துக்கொண்டு காலை வெட்டி வெட்டி இழுக்கிறது. கணுவைச் சுற்றிலும் வலி. பார்க்கலாம் என்றிருக்கேன். சுயப் பிரதாபத்தை முடிச்சுப்போமா

காடரிங் காரங்க சாப்பாட்டின் காரம் ஒத்துக்கறதே இல்லை. சுள்ளென்று மிளகாய்த் தூள் மட்டும் வத்தக் குழம்பில் போடுவாங்க போல. நல்லவேளையாக எனக்குக் குழம்பெல்லாம்  நிறைய விட்டுக் கொண்டு சாதம் பிசைந்து சாப்பிடும் வழக்கம் இல்லை. பிழைத்தேன் அரைக்கரண்டி குழம்பில் முடிஞ்சுடுஜ். ஆனால் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன், சமையல் அடிப்படை தெரிஞ்சோ தெரியாமலோ எல்லோருமே பொடி மட்டும் போட்டுத் தான் செய்கின்றனர் அதிலேயே பிட்லை, சாம்பார், ரசவாங்கி எனப் பெ யரும் கொடுக்கிறாங்க. பிட்லையின் வறுத்து அரைக்கும் பழக்கம் இப்போ எந்தக் காடரர் கிட்டேயும் இல்லை. எல்லோருமே தானைப் போட்டுப் புளி ஜலம்,  பருப்பு, (சிலர் வேக வைக்காமல் ஊற வைச்சு அரைச்சும் சேர்க்கிறாங்க)பொடி போன்றவை சேர்த்துக் கொண்டு குக்கரில் ஒரு தட்டில் இதையும் இன்னொரு தட்டில் கூட்டுக்கான காயைப் போட்டு, அரைச்சு விட்ட விழுதைப் பாசிப்பருப்போடு சேர்த்து உப்புச் சேர்த்துக் கொழ கொழவென ஒரே விழுதாக இருக்கும் கூட்டையும் பண்ணிடறாங்க. கூட்டில் என்ன தான் எனத் தேடணும், அதிலும் கூட்டு எனில் வெறும் பாசிப்பருப்பு ;விழுதை மட்டும் போட்டுக் கூட்டுப் பண்ணணும்னு இல்லை, பருப்பே இல்லாமலும் பண்ணலாம். நாலைந்து விதங்களில் கூட்டுப் பண்ணலாம். ஆனால் இவங்க தினம் தினம் இந்தப் பாசிப்பருப்பு விழுதைத் தான் கூட்டு  என்னும் பெயரில் கொடுக்கிறாங்க. என்னிக்கானும் மோர்க்கூட்டுன்னா அன்னிக்கு மோர்க்குழம்புக்கு அரைக்கிறாப்போல் கடலைப்பருப்பு, ஜீரகம் எல்லாம் வைச்சு அரைச்சு விடுகிறாங்க. மோர்க்கூட்டின் தாத்பரியமே போயிடறது,,

இப்போ உள்ள இளைய சமுதாயம் இதான் பண்ணும் முறை போலிருக்குனு இதையே கடைப்பிடிக்கும் அபாயம் இருக்கு. கடைசியில் மூலம் தெரியாமலேயே போகப் போகிறது. தமிழைக் கொலை செய்திருக்கிறாப்போல் சமையலையும் கொலை செய்யறாங்க. இப்போதைய தமிழில் நமக்கு ஒண்ணும் புரியறதே இல்லை. அதிலும் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தால் வெறும் சத்தம் மட்டுமே வருது.

Tuesday, February 25, 2025

சிவாய நம ஓம்! சிவராத்திரிப் பதிவு!

 நாளை சிவராத்திரி. ஆகவே ஏதேனும் எழுதலாம்னு நினைச்சேன். கடைசியில் 22 ஆம் வருஷத்துப் பதிவை மீள் பதிவாகப் போட்டிருக்கேன்.



இன்று சிவராத்திரி. முதலில் சிவராத்திரி என்றால் என்ன? சிவபெருமான் லிங்க வடிவாகத் தோன்றிய காலம் தான் லிங்கோற்பவ காலம் என்று சொல்லப் படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00 மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த தலம் திருஅண்ணாமலை ஆகும். சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும் கந்த புராணத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. அது என்ன என்றால் வழிபாடு மூன்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு. இப்போது நாம் செய்து வருவது உருவ வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும். அருவ வழிபாடு என்பது உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். "பார்க்கும் பொருளெல்லாம் பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும் அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும். எல்லாமே இறைவன் என்ற நிலையை ஞானிகளும், மஹான்களும் தான் அடைய முடியும் என்பதால் நம்மைப் போன்ற சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது அருவுருவ வழிபாடு. இதில் உருவம் இருக்கும். ஆனால் அவயங்கள் இருக்காது. அருவமாக இருக்கும். இந்த அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான் சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.

இதை எப்படிச் சொல்வது என்றால் இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது அதனுடன் இணைந்த ஆணாகும். அது போல் லிங்கம் இருக்கும் பீடம் ஆவுடையாள் எனப்படும் அம்பிகை என்றால் லிங்கமாகிய பாணம் சர்வேஸ்வரன் ஆகிறான். ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம். அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை. ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட மரக்காலைப் போல் இருக்கும் இந்த ஆகாயத்துக்கு இது தான் உருவம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம் பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம் என்னும் கூரையின் கீழ் தான் இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம் செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள். ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர் நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன. அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்களே பூக்களாகவும், மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான் திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம் பூராவும் தெரியாது. சிவராத்திரி மஹிமையில் படித்தது பற்றித் தான் எழுதுகிறேன்.)

 சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எனப்படும் திரு மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார். "தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீரது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே." என்று லிங்கத்தின் அருவுருவத்தை வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில் கண்டவர் எனக் கூறுவார்கள். 63 நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப் படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது. திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும் இருப்பது ஒரே கூரையின் கீழ். பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம் முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும் அம்பிகை இறைவனைப்பூசித்ததும் சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான். பொதுவான நியதிப்படி பகல் பொழுது ஈசனுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை ஈசனுக்கு அளித்து அவர் பெயரால் வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம். நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட சிவனைப் போற்றித் துதிப்போம்.

 "தென்னாடுடைய சிவனே போற்றி, போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி!!"


2008 ஆம் ஆண்டில் எழுதிய பதிவின் மீள் பதிவு. 

Wednesday, February 19, 2025

தமிழ்த்தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!

 வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு

உ.வே.சா. ”அரியலூரிலிருந்து இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார்.



அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

Wednesday, February 12, 2025

சமோசா வாங்கிய கதை!

 நம்ம ரங்க்ஸுக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். பையர் இருந்தால் வண்டியை எடுத்துக் கொண்டு குஞ்சுலுவும் கூடப் போகும். வாங்கிக் கொண்டு வந்துடுவார். யாருமே இல்லையே. ஆகவே நான் சமோசா இருப்பைப் பார்த்துக் கொண்டு ஸ்விகியில் ஆர்டர் பண்ணுவேன். விலை ஒட்டிக்கு இரட்டிப்புத் தான், ஆனாலும் அவருக்கு மட்டும் வாங்குவதால் அதிகம் கணக்குப் பார்ப்பதில்லை 2 சமோசா வாங்கி ஒண்ணை இன்னைக்குக் கொடுத்துட்டு இன்னொண்ணை மறுநாளைக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பேன்.  ஒரு தரம் சமோசா வாங்கினால் 2 சமோசாவுக்கு 42 ரூபாய் தான் ஆகும். ஆனால் ஸ்விகியில் 30+30 60 ரூபாய் ஜாஸ்தி வாங்கறாங்க. எல்லாம் சேர்த்து 42+60=102 ரூபாய் ஜிஎஸ்டி 5 ரூ சேர்த்து 107 ரூ வரும். ரொம்பக் கணக்குப் பார்ப்பது இல்லை. இது கொஞ்ச நாட்கள், அதாவது ஓரிரு மாதம் வரை சரியாகவே போய்க் கொண்டிருந்தது 

பின்னர் திடீரென சமோசாவை மெனுவிலிருந்து எடுத்துவிட்டு அன்றைய தினம் மாலை ஆறுமணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் மதியம் பதினோரு மணிக்குன்னோ போட்டு அப்போத் தான் கிடைக்கும் எனச் சொன்னார்கள் மெனுவில். சில சமயங்களில் திடீர்னு சமோசா மெனுவில் வரும். அப்போ சமோசானு போட்டால் ஆர்டர் எடுத்துப் பணம் கொடுக்கும்வரை எல்லாம் சரியாகப் போவது போல் இருக்கும். ஸ்விகிகாரங்க ஆர்டரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரப்போறாங்கனு செய்தியும் வரும். திடீர்னு தொலைபேசி அழைப்பு வரும். சமோசா தீர்ந்து விட்டது. வேறே ஏதானும் கொடுக்கலாமானு கேட்பாங்க. உண்மைனு நினைச்சுட்டு என்ன இருக்குனு கேட்டு அதில் அந்த ஆர்டர் செய்த பணத்துக்கு உள்ளதைக் கொடுப்பாங்க. அதுவும் அந்த 42 ரூபாய்க்கு என்ன வருமோ அது தான்.  இது கொஞ்ச நாட்களில் தொடர்கதை ஆக எனக்குச் சந்தேகம் வந்து ஒரு நாள் எனக்கு சமோசா தான் வேணும்,கிடைக்குமா, ஆர்டர் பண்ணட்டுமா? எனத் தொலைபேசியில் அந்தப் பிரபலக் கடையைக் கேட்டு அவங்க வ்ந்து வாங்கிக்கோங்கனு சொல்ல எனக்கு வ்ர முடியாது நடக்க முடியாதுனு சொல்லவும் ஆர்டர் பண்ணுங்க என்றனர்.



PC Google images

சரினு உடனே, கவனிக்கவும் உடனே ஆர்டர் பண்ணிப் பணமும் கொடுத்துட்டேன். சற்று நேரம் எந்தவிதமான செய்தியும் இல்லை. உங்க ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாங்கிக் கொண்டு வராங்கனு செய்தி வ்ந்தது. அப்பாடானு நினைச்சேன். அடுத்த நிமிஷமே தொலைபேசி அழைப்பு. சமோசா ஒண்ணு தான் இருக்கு. இன்னொண்ணு ஆனியன் சமோசா, அது தரலாமானு கடைக்காரர் கேட்பதாக உணவை டெலிவரி செய்யும் பையர் கேட்டார். நான் கேட்டுட்டுத் தான் ஆர்டர் கொடுத்திருக்கேன். எனக்கு இரண்டுமே ஆலு சமோசா தான் வேண்டும் எனச் சொல்லவே அது இல்லை. அதுக்குப் பதிலாக நீங்க ஆர்டர் செய்த பணத்துக்கு வேறே ஐடம் கொடுக்கிறோம்னு சொல்லவே கோபம் வாந்தது எனக்கு. ஏற்கெனவே ஒரு முறை வெங்காயப் பக்கோடா கொடுப்பதாகச் சொல்லிட்டு வெறும் அடித்தூளைக் கொடுத்து ஏமாத்தினாங்க. இத்தனைக்கும் பிரபல கடை இப்படிப் பண்ணறாங்க. யார் மேல் தப்புனு தெரியலை. நான் ஆர்டரைக் கான்சல் செய்வதாகச் சொல்லிட்டுக் கான்சலும் செய்தேன்.

உடனே வந்துட்டாங்கப்பா சாட்டுக்கும், சமாதானத்துக்கும். யாரோ ஒருத்த்ற் என்னைச் சற்றுக் காத்திருக்கும்படியும் நிலைமை என்னனு அவர் தெரிஞ்சுண்டு வருவதாகவும் சொன்னார் ஸ்விகியில் இருந்து. நான் ஒத்துக்கலை, எனக்குக் கான்சல் தான் பண்ணணும் என்று சொல்லவே உங்க பணம் தாமதமாய்க் கிடைக்கலாம் என சந்தேகமாய்ச் சொன்னார். எதுக்கும் நான் அசைஞ்சு கொடுக்கலை.. இதுக்குள்ளே கடையிலிருந்து டெலிவரி கொடுக்கும் நபர் கான்சலா? அல்லது கொண்டு வரணுமானு சீக்கிரமாச் சொல்லுங்க நான் எத்தனை நேரம் காத்துண்டு இருப்பது எனக் கோபித்தார். 2,3 முறை கூப்பிட்டு விட்டார். நானும் ஸ்விகியில் சாட் செய்தவரிடம் நிலைமையைச் சொல்லிக் கான்சலை ஏத்துக்கச் சொல்லிக் கேட்டேன். சற்று நேரம் வாதாடிய பிறகே அவர் கான்சலுக்கு ஒத்துக் கொண்டார் உடனே ஸ்விகியிலிருந்து ஒரு பெண்மணி வந்து நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு, உங்க பணம் 2 நாட்களில் திரும்பக் கொடுத்துடுவோம் என்றனர். அப்பாடானு ஆச்சு எனக்கு. அதன் பின்னர் அந்தப் பிரப்லக் கடைஇயில் எதுவுமே வாங்குவது இல்லைனு வைச்சுட்டோம். அதுக்காக அவங்களுக்கு வியாபாரம் ஆகாமல் போகப் போவதில்லை. ஏதோ நம் மனசு ஆறுதலுக்காக.

Wednesday, February 05, 2025

சாப்பாட்டைப் பழிக்க வேண்டாம்!

தலைப்பிலே சொல்லி இருக்கேனே தவிர அதைக் கடைப்பிடிப்பதில்லை!:(

சாப்பாடு மறுபடியும் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் கால்கள் படுத்தும் பாட்டில் தான்,. நின்று கொண்டு எதுவும் செய்ய முடிவதில்லை.. ஆனால் வாங்கும் சாப்பாடு நல்லா இருக்கானு கேட்டால் ஏதோ இருக்கு, அவ்வளவு தான்,. இதே காடரர் ஒரு வருஷம் முன்னாடி வரை நன்றாகவே கொடுத்தார். என்ன பிரச்னைன்னா தினம் மிஞ்சிப் போயிடும். அதை யாரிடம் கொடுப்பது என்பது ஒரு பிரச்னை. வீட்டு வேலை செய்யும் பெண்மணி காலையிலேயே வந்துட்டுப் போயிடுவாங்க. ஆகவே இதைக் கொடுக்கனு தனியா ஆள் தேட வேண்டி இருக்கும். நடுவில் மாமா குழம்பு, ரசம் சாப்பிடாததால் எதுவும் வாங்கவில்லை. இப்போ ஒரு வருஷம் கழிச்சுக் கொடுக்கையில் அந்தப் பெண்மணி ஆயிரம் கண்டிஷன்கள். வீடு வேறே மாத்திட்டாங்களாம். இங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் போயிட்டாங்க. அதோடு இப்போச் சாப்பாடு செய்து முடிக்கவே பத்து மணி ஆகிவிடுகிறதாம். அங்கெல்லாம் கொடுத்துட்டு இங்கே வர பதினோரு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறமா முடிஞ்சால் பத்தே முக்காலுக்குக் கொடுக்கச் சொல்றேன் நு அரை மனசோடு சொல்லி இருக்காங்க.

முன்னாலும் சாப்பாட்டில் காரம் இருந்தது, நாங்க சுட்டிக் காட்டினதோடு எங்களுக்கு ஒத்துக்கலைனும் சொன்னோம். குறைச்சுண்டாங்க. ஆனால் இப்போ அப்படி எல்லாம் சமரசம் செய்துக்கத் தயாரா இல்லை என்பதோடு, வேணும்னா வாங்கிக்கோங்க என்னும் நினைப்புத் தான். வாடிக்கையாளர்கள் நிறையச் சேர்ந்திருப்பாங்க போல. காய்கறியும் முன்னைப் போல் எல்லாம் பண்ணுவதில்லை. கறி கொஞ்சம் பரவாயில்லை ரகம். கூட்டில் காய்களே தெரியாது. காயை நறுக்கிப் பாத்திரத்தில் போட்டுக் கூட்டுக்கு அரைச்சு விடும் விழுதை நிறைய மாவு கரைச்சு அதோடு விட்டுக் குக்கரில் வைச்சுடறாங்க. காய் என்னமோ வெந்திருக்கும். ஆனால் அந்த விழுதில் தேடிக் கண்டு பிடிக்கணும். கரண்டியால் அரிச்சால் விழுது தான் வருது. கூட்டும் சில சமயம் காரமாக இருக்கும். ரசம் புளிப்பாக இருப்பதோடு உப்புச் சேர்த்தால் காரம் தனித்துத் தெரியும். சாம்பார் என்னிக்குமே காரம் தான்,. அதையும் மீறிக்கொண்டு மாவு கரைச்சு விட்டிருப்பாங்க. தான் என்ன என்பது வாசனையில் தான் தெரியும். முன்னெல்லாம் கூட்டில் காய்கள் நன்கு தெரியும் என்பதோடு அரைச்சு விடுவதும் நிதானமாக இருக்கும். இப்போ சமையலுக்கு, விநியோகத்துக்குனு ஆட்கள் வேறே போட்டுட்டாங்க. ஆகவே எல்லாம் கமர்ஷியல் தான்,

சாம்பாரைத் தவிர்த்து வேறே எதுவும் இந்தக் காடரிங் காரங்க பண்ண மாட்டாங்க போல. மோர்க்குழம்புனாலே பயம்மா இருக்கும். மோர் அவ்வளவு புளிப்பாக இருக்கும். அவியல் கூட இப்போல்லாம் தயிர் இல்லாமல் புளிச்ச மோரில் மாவு கரைச்சு விட்டுப் பண்ணிடறாங்க. மொத்தத்தில் ஒரிஜினாலிடி என்பதே இருப்பதில்லை. ஆனால் பாருங்க இதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் காஞ்சி முனிவர் தளத்தில் இருந்து சாப்பாட்டைப் பழிக்காதீங்கனு ஒரு பதிவு வந்திருப்பதைப் பகிர்ந்திருக்காங்க. படிக்கையில் மனசுக்குக் க்ஷ்டமாத் தான் இருக்கு. நாம் இவ்வளவு மோசமாக விமரிசிக்கிறோமே என்றெல்லாம் தோன்றியது. ரங்க்ஸிடம் சொன்னால் நான் எப்போவோ படிச்சுட்டேன் என்றார்.

பேசாமல் வீட்டிலேயே சமைச்சுடலாமானு தோணினா அப்போன்னு பார்த்துக் கால் தகராறு பண்ணும். ஒரு அடி எடுத்து வைப்பது கஷ்டமாக இருக்கும். வீட்டில் சமையல் ஆளை வைத்துச் சமையல் செய்வதிலும் பல  கஷ்டங்கள்
இருக்கின்றன. முதலாவது செலவு. சாமான்கள், காய்கள் எல்லாம் வாங்கணும். பொடிகள் எல்லாம் தயாரா வைச்சுக்கணும். நிச்சயமாச் செலவு கூடத் தான் ஆகும். அதுவே காடரர் கிட்டே வாங்கினால் ஒரு நாளைக்கு சாம்பார், ரசம், கறி,கூட்டுக்கு 100 ரூபாயும், சர்வீஸ் சார்ஜ் பத்து ரூபாயுமாக 110 ரூ தான் ஆகிறது. ஆனா வீட்டிலே விதம் விதமாப் பண்ணிக்கலாம், நல்ல சமையல் ஆளாக இருந்தால். இவங்க ரசம் கூட மாத்த மாட்டாங்க. எலுமிச்சை ரசம் வைக்கச் சொல்லி ஒரு நாள் கேட்டதுக்கு அதெல்லாம் கட்டுபடி ஆகாதுனு சொல்லிட்டாங்க. தினம் ஒரே ரசம் தான். நேத்து ரசத்தையே இன்னிக்குச் சுட வைச்சுச் சாப்பிடறாப்போல் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சாம்பார் தான், அவங்களுக்கு அதான் கட்டுபடி ஆகும்போல.

என்னடா இது, பதிவுகளே புலம்பலாக வருதே, இதுக்கு எழுதாமல் இருந்தப்போவே தேவலைனு தோணும். எனக்கே தோணுது. ஆனால் என்ன பண்ண? சுத்திச் சுத்தி மனசு இப்போ இதில் தான் பதிஞ்சு கிடக்கு. மெல்ல மெல்ல வெளியே கொண்டு வரப் பார்க்கிறேன்.  இதிலே பெஸ்ட்னு சொல்லக் கூடியது எங்க வீட்டுக் காஃபி தான். நல்ல பால், காஃபி பவுடரும் நல்ல கொட்டையை வறுத்து அரைச்சுத் தயார் பண்ணுவது. சிக்கரியே இல்லை. ஆகவே காஃபி டிகாக்ஷன் போடும்போதே வாசனை ஊரைத் தூக்கும். என் மாமனார் இருந்தவரை சொல்லிக் கொண்டே இருப்பார். காஃபிக்கு வெந்நீர் போடும்போதே வாசனை வந்துடுறாப்போல் இருக்கு என்பார். அதே பவுடரில் மத்தவங்க போட்டால் அம்புட்டு வாசனை வராது. இஃகி,இஃகி,இஃகி. அதே போல் இட்லி, தோசைக்கு அரைக்கும்போதும், அடைக்கு அரைக்கும்போதும் அம்பத்தூரில் ஐம்பது அடி தள்ளி இருக்கும் எதிர் வீடு வரை வாசனை மூக்கைத் துளைக்கும். அவங்கல்லாம் நீ என்னதான்  ரகசியமாப் பண்ணினாலும் உன் கை மணம் காட்டிக் கொடுத்துடும் என்பாங்க. இப்போ இந்த நிமிஷம் ஒரு மாமியிடம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன். இதான் இப்போதைய நிலைமை.