எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 20, 2026

மொத ராத்திரி பார்த்தீங்களா? :D

 



ஒரு நல்ல படம் பார்த்தேன். அதுவும் தமிழில். உண்மையாகவே நல்ல படம். எல்லா நடிக, நடிகையரும் புதுசு எனக்கு. யாரையுமே தெரியலை. படம் பார்த்த பின்னர் விக்கியில் தேடிக் கண்டு பிடிச்சு யார் யாருனு பார்த்துக் கொண்டேன். படம் பெயர் "மொத ராத்திரி". கதையும் அது பற்றித் தான். துபாயில் ஆறு வருஷங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மருதநாயகத்துக்குத் திருமணம். ஆனால் அது அவனுக்குத் தெரியாது. அவனிடம் தங்கை பிள்ளைக்குக் காது குத்து என அழைத்திருக்காங்க. அந்தத் தங்கை பிள்ளைக்கு ஆறேழு வயதிருக்கும். ரொம்ப லேட்டாக் காது குத்தல்னு சொல்லிட்டாங்க போல. ஆனால் உண்மையில் அன்னிக்கு மருத நாயகத்துக்கு ஒரு தூரத்து உறவுக்காரப்   பெண்ணுடன் கல்யாணம்.

ஆரம்பத்திலேயே படம் விறு விறு. கல்யாணம்னு ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கையிலேயே முதல்நாள் தான் விமானம் ஏறுகிறான் மருத நாயகம். அவன் கல்யாணத்துக்கு வந்து சேருவானா இல்லையானு பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். பிள்ளையின் அம்மாவுக்குக் கவலை, சந்தேகம், பிள்ளை வருவானா ஏமாற்றுவானா என்பதில்.  இதை வைத்து மருதநாயகத்தின் பெற்றோருடன் அவன் தங்கை சண்டை போடுகிறாள். மருதநாயகம் ஏதோ மன வருத்தத்தில் ஊரை விட்டுப் போயிருக்கிறான் என்ற அளவில் புரிந்து கொண்டாலும் பின்னால் தெரிய வருகிறது காதல் தோல்வி என. மருதநாயகத்தை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும் அவன் தங்கையின் கணவர் அவனிடம் அவனுக்குக் கல்யாணம் என்பதைச் சொல்லாமல் ஊருக்கு அழைத்துவர நினைக்க மாமாவை அழைத்து வர அப்பாவுடன் சென்றிருக்கும் சிறுவன் போட்டு உடைத்துவிடுகிறான் மருதநாயகத்துக்கு முத்துச் செல்வி என்னும் பெண்ணுடன் கல்யாணம் என்பதை. அப்போது தான் காதல் தோல்வியில் மனம் உடைந்து ஊருக்கே வராமல் ஆறு வருஷங்களாக துபாயிலேயே இருந்த மருதநாயகத்தை இப்படிச் சொல்லி வரவழைத்திருக்கிறார்கள் என்பது. ஒரு மாதிரி சமாதானம் செய்து மாப்பிள்ளை தன் மனைவியின் கணவனை அழைத்து வருகிறார்.


ஆனால் அங்கே பெண்ணுக்கோ  வேறு பிரச்னை! அவள் வேறொருவனைக் காதலிக்கிறாள். அவனுடன் ஓடிப் போகத் திட்டம் போட்டிருக்கிறாள். இதற்கு நடுவில் பிள்ளை வீட்டுக்காரர்கள் தான் கல்யாணத்தை எடுத்துச் செய்யும் முறை என்பதால் பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக்காரர்கள் மரியாதை செய்யவில்லை எனச் சொல்ல இருவர் குடும்பத்திற்கும் கொஞ்சம் சச்சரவு ஏற்பட்டு அடங்குகிறது. பிள்ளையின் அம்மா தன் பிள்ளையின் பழைய விவகாரம் பெண் வீட்டுக்குத் தெரியாமல் காப்பாத்துவதற்காகத் தன் பெண்ணிடம் சொல்லிப் பெண் வீட்டினரை மனம் கோணாமல் கவனித்துக் கொள்ளச் சொல்லுகிறாள். ஆனால் பெண்ணோ! தனி அறையில் இருக்கும் பெண்ணை அழைத்துவரச் சொல்லி புரோகிதர் கூப்பிடப் பெண்ணை அழைத்துக் கொண்டு கதவைத் தட்டும் அவள் தங்கை முறைப் பெண் பெண் வர நேரமாவதை நினைத்துக் கூப்பிட அங்கே பெண்ணோ கழிவறையில் உட்கார்ந்து கொண்டு தன் காதலனுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறாள். அவளிடம் மொபைல் இருப்பது அவள் அம்மாவுக்குத் தெரியாது என்பதால் இடுப்பில் மறைச்சு வைத்துக்கொண்டு பேசிக் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிடுகிறாள். அவள் காதலனும் ஒத்துக் கொண்டு கிளம்புகிறான்.

ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. நண்பர்களைக் கேட்க அவர்களுடன் இவனுக்குச் சண்டை வர, நண்பர்கள் கை விரிக்கின்றனர் என்பதோடு அவன் நிலைமையையும் எடுத்துச் சொல்லுகிறார்கள்.   இங்கே இந்தப் பெண்ணோ முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் முன்னர் கிளம்பி விடத் துடிக்கிறாள். லங்கிணி மாதிரி இருக்கும் அம்மாவை ஏமாற்றி விட்டுக் கிளம்பணும். இதுக்குள்ளே கல்யாணம் ஆகித் தாலியும் காட்டிப் பெண்ணும், மாப்பிள்ளையும் பிள்ளை வீட்டிற்கு வந்து பெண் விளக்கேற்றி முதலிரவுக்குத் தயாச் செய்கின்றனர். முதலிரவு அறையில் தனித்தும் விட்டுவிட்டுக் கதவை சார்த்திக் கொண்டு எல்லோரும் படுக்கிறார்கள். கூட்டம் அதிகம் என்பதால் நெருக்கமாகப் படுத்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு அந்தப் பெண் தப்பித்து ஓட வேண்டும். என்ன செய்யப் போகிறாள்?

வெள்ளித் திரை எல்லாம் இப்போ இல்லை என்பதால் அவங்க அவங்க கணினியிலோ  லாப்டாப்பிலோ பாருங்க மிச்சத்தை. சேத்தன் பூசாரியாக நடிச்சிருக்கார். அவர் தேவையானு முதலில் யோசிச்சேன். ஆனால் முடிவுக்கு அவர் தான் காரணம் என்பதோடு இருவருக்கும் ஒரு வகையில் உதவுகிறார். கதாநாயகனாக நடிச்சிருப்பவர் யாரோ ரிஷி காந்தாம். நல்லா இயல்பா நடிச்சிருக்கார். படத்தில் எல்லோருமே அந்த அந்தக் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். கதை, வசனம், இயக்குநர் எல்லாமும் யாரோ ராஜா கருப்பசாமியாம். அவர் தான் இதில் பெண்ணின் காதலராகவும் வருகிறார். இவருக்கு அதிகமாக படத்தில் இடம் இல்லை. ஆனாலும் தான் கல்யாணம் செய்து கொண்டு காதலியைக் காப்பாற்ற முடியுமா? வாழ்க்கை நடத்த முடியுமா என்றெல்லாம் யதார்த்தத்தை யோசிக்கும் சமயம் நன்றாகவே நடிச்சிருக்கார். சேத்தனும் ஓகே தான். மற்றபடி மிச்சப்படத்தையும் முடிவையும் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க. 

ஒரு கல்யாணத்தின் போது இயல்பாகக் குடும்ப உறவுகளிடையே ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கினால் ஏற்படும் கலவரங்களை வெகு இயல்பாகக் காட்டி இருக்கார் இயக்குநர். சம்பந்தப்பட்டவங்க இருவரும் எங்கேயோ இருக்க இங்கே உறவினர்கள் குடுமிபிடிச் சண்டை. படம் பார்ப்பது போல் இல்லாமல் நானே நேரில் கலந்து கொண்டாற்போல் இருந்தது. நல்ல படம். 

Friday, September 11, 2026

தமிழா! தமிழா! தமிழில் பேசு தமிழா

 






பாரதியார் எழுதிய இந்தக் கவிதை தமிழகத்தின் இப்போதைய நிலைமைக்குப் பொருந்தி இருக்கா? கேள்விக்குறியே? அநேகமாக இன்றைய ஜென் ஜி எனப்படும் இளைய சமுதாயம் பாரதியைப் பற்றி அறிந்திருக்கவே நியாயம் இல்லை. பாரதியா அது யாருனு கேட்பாங்க. பாரதி தன் கவிதையில் தமிழ்நாடு கல்வியில் சிறந்தது எனக் கம்பரையும் இளங்கோவையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அவர்களை இந்த இளைஞர்கள், இளம்பெண்கள் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். இன்றைய இளம் தலைமுறைக்குக் கம்பனோ, இளங்கோவோ,, தமிழ் வளர்த்த புலவர்கள் பற்றியோ எதுவும் தெரியாது. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் பற்றியோ சுந்தரர் பற்றியோ அறிய மாட்டார்கள். ஆழ்வார்கள் குறித்தோ ரங்கனுக்காக உருகிய கோதை  நாச்சியார் பற்றியோ இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதைய இளைஞர்கள் தமிழ் பேசவும் எழுதியதைப் படிக்கவும் திக்கித் திண்டாடித் தடுமாற்றத்துடன் படிக்கிறார்கள். இத்தனைக்கும் தமிழ் தான் தமிழக் மாணவர்கள் கற்க வேண்டும் என முனைப்புடன் இருந்தஇருக்கும்/  ஆட்சியாளர்கள் காலத்தில் வளர்ந்தவர்கள். வளர்பவர்கள். ஆனாலும் தமிழ் தடங்கல் தான்.வேற்று மொழி நுழைந்தால் தமிழ் அழிந்துவிடும் எனச் சொல்பவர்கள்  இருக்கையிலேயே  தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இனி ஒரு பாரதி வந்து தமிழை வளர்த்தால் தான் உண்டு. அதுக்காகவாவது மீண்டு வா பாரதி!

Tuesday, September 08, 2026

கவர்னரைப் பார்த்தேன்!

 



ஒரு நல்ல ஹிந்திப்படம் பார்த்தேன். ஒரு மாதத்துக்கும் மேலாக அது அமேசான் பிரைமில் இருந்தாலும் நேத்திக்குத் தான் திடீர்னு அதைப்பார்க்கணும்னு நினைச்சேன். முதலில் ஏதோ மாநில கவர்னர் பத்தின கதைனு தான் நினைச்சேன். ஆனால் இல்லை. இது இந்தியாவின் பொருளாதார வரலாறு. அதுக்காக அறுவை எல்லாம் போடவில்லை. த்ரில்லிங்காக எடுத்திருக்காங்க. இது 1990 ஆம் ஆண்டில் திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தப்போ, அதாவது வி.பி. சிங்கிற்குப் பின்னர் கொஞ்ச காலமே சந்திரசேகர் பிரதமராக இருந்தார். யஷ்வந்த் சின்கா தான் அப்போ நிதி மந்திரினு நினைவு. அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் தோன்றிய நிதி நெருக்கடியையும் அதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த திரு வெங்கிட ரமணன் அந்த நிதி நெருக்கடியை எப்படிச் சமாளித்தார் என்பதையும் திரைப்படமாக எடுத்திருக்காங்க.

ஓர் தமிழரான வெங்கிடரமணன் இதிலும் கிட்டத்தட்ட அந்தப் பெயரிலேயே ராமன் என்று அழைக்கப்படுகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் ராமனாக நடித்திருப்பவர் மனோஜ் வாஜ்பாய். இவர் ஆரம்ப காலத்துப் படங்கள் அதிகம் பார்த்திருக்கேன். இப்போதைய படங்கள் பார்க்கவில்லை. இதில் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதலில் தன்னை விட சீனியரான டெபுடி கவர்னர் சி.ஆர். இருக்கையில் தன்னை கவர்னராகப் போட்டதையே ஏற்க முடியாமல் இருந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல சமாளித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் இருந்தாலும் மெல்ல மெல்ல அவர்கள் அபிமானத்தைப் பெறுகிறார். இவர் நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சொல்லும் ஒவ்வொரு யோசனையும் தோற்றுப் போகக் கடைசியில் அரசியல் நெருக்கடி காரணமாகச் சந்திரசேகர் காபந்து சர்க்காரின் பிரதமராக இருக்கையில் தான் இந்தத் தங்கத்தை வைத்துப் பணம் வாங்கும் சூழ்நிலையை ராமன் அவர்கள் நிதி மந்திரியிடமும், பின்னர் பிரதமரிடமும் சொல்ல இருவரும் கடுமையாக ஆக்ஷேபிக்கின்றனர். ஆனால் இப்போது ராமனின் தேசத்தின் மீதுள்ள பற்றும் எப்படியாயினும் தேசத்தைக் காக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சாக இயங்குவதையும் பார்த்த சி.ஆர். டெபுடி கவர்னர் அவருடன் ஒத்துழைத்துப் பிடிவாதமாக நிதி மந்திரியிடமும், பிரதமரிடமும் தங்கத்தை வைக்க ஒப்புதல் பெற்று விடுகிறார்.

அலுவலகச் சூழ்நிலையும் திருப்தியாக இல்லாத சமயத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் நிதானமாகக் கையாண்டு  நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கத்தை வைக்க வேண்டும் என்னும் முடிவுக்குப் பிரதமரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். அந்தத் தங்கத்தை விமானம் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அவர் படும் பாடு. கடைசி நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் பிரச்னை பண்ண அதுவும் பிரச்னை தீர்ந்து போய்த் தங்கம் அனைத்தும் மூன்று ராணுவ வான்களில் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதை சாதாரணமான வான் எனக் காட்டிக் கொண்டு எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் எடுத்துப் போனாலும் ஓர் பத்திரிகை நிருபியான அதிதி வர்மா என்னும் பெண் அதைப் பார்த்து விடுகிறாள். 

இதுக்கு நடுவில் 3 வான்களில் மற்ற இரண்டும் விமானம் ஏறப் போய்ச் சேர்ந்து விட மூணாவது வான் மட்டும் விபத்தில் மாட்டிக் கொள்ள விபத்தில் மாட்டினவன் பேட்டை தாதா. மூணாவது வானுக்கு என்ன ஆச்சுனு பார்க்க வந்த மனோஜ் வாஜ்பாய் அந்த மனிதனைச் சமாளித்து மூணாவது வானையும் விமான நிலையம் அனுப்பி வைக்கும் வரை அனைவருக்கும் திக் திக் திக் தான்.அவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து வானுக்குப் பாதுகாப்பாக வந்த ரிசர்வ் வங்கி அலுவலரின் மேல் சந்தேகப்பட்டு வானைச் சோதனை போட வேண்டும் என்று தகராறு செய்து போலீசை அழைக்கச் சரியாக அந்த நேரத்தில் வானைத் தேடிக் கொண்டு வரும் ராமன் விஷயம் புரிந்து தாதாவைச் சமாளித்து வானை விமான நிலையம் கொண்டு செல்ல உதவுகிறார். அந்தச் சமயம் பார்த்து பத்திரிகை நிருபியான அதிதி வர்மா அவரிடம் தங்கத்தை அடகு வைப்பது குறித்து ஆக்ரோஷமாகச் சண்டை போட அவரோ தன் நிலையை விளக்குகிறார். அவர் சொல்வதைக் கேட்ட அதிதிக்கும் மனம் மாறி இந்த விஷயத்தை ஸ்கூப் செய்தியாகப் பத்திரிகைக்கு அனுப்பாமல் காத்திருந்து காரியம் முடிந்ததுமே பத்திரிகையில் வெளியிட வைக்கிறாள்.

 ராமனின் மகள் ஐஏஎஸ். பாஸ் செய்த தகவல் வர   அங்கே நினைத்தால் எல்லோரிடமும் கடன் வாங்கிப் பிழைக்கும் ப்யூன் படில் ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் மகள் பார்தியும் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல  ஊழியர்கள் அனைவரிடமும் ஒரே உணர்ச்சி வெள்ளம்.ப்யூன் ஆன படில் ஸ்வீட் எடுத்து வந்து தன் மகள் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல   அனைவரும் கண்ணீரோடு ஆசீர்வாதம் பண்ணப் பின்னர் தங்கம் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்குப் பணமும் வந்து சேருகிறது. நடுவில் ராஜிவ் காந்தி கொலை பத்தி எல்லாம் வந்தாலும் விரிவாக எல்லாம் சொல்லலை. பின்னர் நர்சிம்ம ராவ் பிரதமராக ஆவதும் மன்மோகன் சிங் நிதி மந்திரி ஆனதும் அவர் மூலம் இந்தியா திறந்த பொருளாதாரத்துக்குள் நுழைந்ததும் காட்டப்படுவதோடு இப்போது இந்தியா பொருளாதாரத்தில் வலிமை அடைந்திருப்பதையும் சிம்போலிக்காகக் காட்டுவதோடு படம் முடிகிறது.

இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. எந்தவிதமானக் காதல் காட்சிகளோ, அல்லது சண்டைக் காட்சிகளோ இல்லை. பாடல் கூட ஒரே ஒரு இடத்தில் பின்னணியில் வருகிறது. உண்மையில் அந்தக் கால கட்டத்தில் இந்திய அரசாங்கத்தில் என்ன நடந்திருக்குமோ அதை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்பதால் அதிகமாகக் கட்டுக்கதையோ மிகைப்படுத்தலோ இல்லை. எல்லோரும் நிஜமான உணர்வுகளோடு வருகிறர்கள். நடிச்சுட்டு இல்லை அந்த அந்தப் பாத்திரமாக வாழ்ந்துட்டுப் போயிருக்கிறார்கள். 

Friday, September 04, 2026

கோகுலாஷ்டமி வாழ்த்துகள். சோதனைப் பதிவு

 Checking my post.




அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். என்னால் இன்னிக்கு மத்தவங்க யாரோட பதிவிலும் கருத்துச் சொல்ல முடியலை. அதான் இங்கே என்னோட வலைப்பக்கம் வந்து பழைய பதிவுகளிலும் இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டுட்டு இதிலேயும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொண்டேன். இது 2024 ஆம் வருடம் நம்ம ரங்க்ஸ் இருக்கையில் கொண்டாடியது. இதுக்கப்புறமாக் கொண்டாடலை. இந்த வருஷம் தான் இங்கே முதல் முதலாகக் கிருஷ்ண ஜயந்தியுடன் ஆரம்பிக்கும் பண்டிகைக் காலம்.   இங்கே இன்னிக்கு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் இந்தியாவில் பண்ணுவது போலெல்லாம் பண்ண முடியாது. சும்மாக் கொஞ்சம் போல் ஏதானும் இனிப்புச் செய்துட்டுப்ப் பால், பழம், தயிர், மோர், அவல் வைத்து நிவேதனம் பண்ணணும். அவ்வளவு தான் முடியும். முன்னர் போலெல்லாம் பக்ஷணங்கள் பண்ணவோ, அல்லது தின்னவோ உடல்நிலையோ மனநிலையோ இடம் கொடுக்காது. எனினும் குழந்தைகளின் க்ஷேமத்துக்காகப் பண்டிகையைக் கொண்டாடணும். இது என் அப்பா முன்னெல்லாம் அடிக்கடி சொல்லுவார். அப்பாவிடம், "நீ பண்டிகை கொண்டாடிட்டா நாங்க க்ஷேமமா இருந்துடுவோமா?" எனக் கிண்டல் செய்திருக்கேன். ஆனால் இப்போ அதன் உள் அர்த்தம் புரிகிறது. எல்லோரும் நல்லா இருக்கணும். உலக க்ஷேமத்தை வேண்டியும் இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தியை அனைவரும் நல்லபடியாக் கொண்டாடணும். ஒண்ணும் முடியாட்டியும், பால், சர்க்கரையாவது வைச்சுக் கிருஷ்ணனை வணங்குவோம்.


அனைவருக்கும் இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்.

Wednesday, August 05, 2026

கண்டு பிடிச்சீங்களா ?

 

இது யாருனு தெரியுது இல்லையா? எப்போ எடுத்ததுனு யாரானும் யூகம் செய்யுங்க. இப்படி இருந்த நான் தான் இப்போ இப்படி ஆயிட்டேன். :(


இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒண்ணொண்ணாப் போடறேன். கூட இருக்கிறவங்க யார்னு புரியுதா/ ம்ஹூம் புரிஞ்சிருக்காது. 


இப்போதைய மனோ நிலை எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு எல்லாவற்றிலும் ஒரு கலக்கமாக, கவலை தருவதாக இருக்கிறது. அதனால் இப்படிக் கொஞ்சம் மனசை மாற்ற முயற்சி செய்யறேன். ஆச்சு இன்னும் அதிகம் போனால் 20 நாட்கள் தான் இந்தியா வாசம். எப்போக் கிளம்புவோம்னு எனக்கே தெரியாது.

Wednesday, July 22, 2026

உன் பெயர் என்ன சொல்லு!

 /வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?//

நெல்லை சொல்லி இருப்பது, அதிலும் வெளிநாடுகளில் அப்பா பெயர் வைச்சுக்க மாட்டாங்கனு சொல்லுவது எனக்குத் தெரிஞ்சு தப்பு. பலரும் திருமணம் ஆனதும் கணவனின் குடும்பப் பெயரைத் தான் சுமந்துக்கிட்டு இருப்பாங்க/இருக்காங்க. இங்கே வட நாட்டிலும் கணவனின் குடும்பப் பெயராக மாறிடும். வெகு சிலர் மட்டுமே அப்பா வீட்டுப் பெயரில் இருப்பாங்க. ஆனால் தென்னாட்டில் (மத்த மாநிலங்கள் பத்தித் தெரியாது.) தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கல்யாணம் ஆனதும் கணவன் பெயரை நம் பெயரோடு இணைச்சுக்க முடியாது. இதுக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்/. நான் கல்யாணம் ஆவதற்கு முன்னரே தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைக்குத் தேர்வாகி விட்டேன். போஸ்டிங் வருவதில் தான் தாமதம். அதுக்குள்ளே என் அப்பா ரொம்ப அவசரப்பட்டதால் எனக்குக் கல்யாணமும் ஆகி நான் சென்னை/அம்பத்தூரில் குடித்தனமும் வந்தாச்சு. அதுக்குப் பின்னரே எனக்குச் சென்னையில் ஜார்ஜ் டவுன் அல்லது தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் போய் வேலையை ஒப்புக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்திருந்தது.

வேலைக்கான உத்தரவு வந்தப்போ அலுவலகத்தில் யாருக்கும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரியாது. குமாரி என்.ஆர்.கீதா என்று போட்டே உத்திரவு வந்திருந்தது. தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் வேலையை ஒப்புக் கொண்டேன். அதில் கையெழுத்து இடும்போது நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுத்தே என்னும் எண்ணத்தில் "கீதா சாம்பசிவம்" என்று கையெழுத்துப் போட்டு உத்தரவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உடனே வேலையையும் ஆரம்பிச்சுட்டேன். நான் இருந்தது ஓர் நிர்வாக அலுவலகம் மட்டுமே. தலைமை அலுவலகம் இம்மாதிரியான சென்னை/மற்ற ஊர்களில் உள்ளவை எல்லாவற்றுக்கும் சேர்த்து மவுன்ட் ரோடில் எல்.ஐ.சி.க்கு எதிரே ஓர் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்தது. உத்தரவை ஏற்றுக் கொண்டு முதலில் அங்கேதான் போய் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இதில் அனுபவம் உள்ளவர்கள் அம்பத்தூரிலேயே சொன்னதால் நான் முதலில் மவுன்ட்ரோட் அலுவலகம் தான் போனேன். அவங்க இந்த இரு அலுவலகம் தான் தட்டச்சுபவர் கேட்டிருப்பதால் இரண்டில் நீ எங்கே போய் வேலை செய்ய ஆசைப்படுகிறாய்னு கேட்டாங்க. சென்னைக்கு அவ்வப்போது வந்து போனதத் தவிர்த்தால் நான் சென்னைக்கே புதுசு. ஆகவே ஒண்ணும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவரே நீ எங்கே குடித்தனம் இருக்காய்னு கேட்டுட்டு அம்பத்தூ ர்னா பேசின் பிரிட்ஜ் வந்து அங்கிருந்து பேருந்து பிடிச்சு அலுவலகம் போகலாம். சாயந்திரமும் அலுவலக வாசலில் இருந்து பஸ் பிடிச்சு பேசின் பிரிட்ஜ் வந்து ரயிலில் வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். எனக்கு இதெல்லாம் அரை குறையாகத் தான் புரிஞ்சது. என்றாலும் சரினு தலை ஆட்டினேன். தண்டையார்ப்பேட்டை அலுவலக மெசெஞ்சர் வந்திருப்பதாகவும் அவருடன் போயிடுனும் சொன்னார்.

ரொம்பப் பெரிசா ஆயிட்டதாலே பதிவாப்போட்டுட்டேன்.

வேலைக்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா? அதூ அன்னிக்கே சாயங்காலம் அனுப்பிட்டாங்க. ஆனால் மறுநாள் அலுவலகம் வந்தால் ஒரே அதிர்ச்சி. என்னுடைய வேலைக்கான ஆர்டரை நிறுத்தி வைச்சிருந்தாங்க. என்னடா இது புதுக்குழப்பம்னு அக்கவுன்டன்ட் கிட்டே போய்க் கேட்டால். "உன் பெயர் என்னம்மா?" என்றார். கீதா நு சொல்லிட்டு இப்போக் கல்யாணம் ஆனதாலே கீதா சாம்பசிவம்னு சொன்னேன். இனிக்ஷியல்?  என்று கேட்டார். ஸ்கூலில் இரண்டு ஆர். கீதா இருந்ததால் எனக்கு என்.ஆர். கீதா தான் இனிக்ஷியல் என்றேன். உடனே அந்த மறுப்புக்கான காரணம் சொல்லி வந்திருந்த கடிதத்தை என் பெயருக்கும் அலுவலகம் பெயருக்கும் மவுன்ட் ரோடு அட்மின் அலுவலர் பெயருக்கும் வந்திருந்ததில் எனக்கான காப்பியைக் கொடுத்தார். பார்த்தால் அதில் நாங்கள் தேர்வு செய்த நபர் என்.ஆர். கீதா என்னும் பெண்மணி தான். ஆனால் கீதா சாம்பசிவம்னு கையெழுத்து இருப்பதால் இதை ஏற்க முடியாது. ஆள் மாறாட்டமாய் இருக்கலாமோ என்னும் சந்தேகத்துடன் திருப்பி அனுப்புகிறோம் என்றிருந்தது. உடனே நம்மவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் இந்த மாதிரி இந்தத் தேதியில் கல்யாணம் ஆயிடுச்சுனும். அப்போ உன் பெயர் என்.ஆர். கீதா தான் எனவும் கல்யாணம் ஆனதால் தானாகவே கணவன் பெயரோடு இணையும் எனவும் எழுதிக் கூடவே இன்னொரு எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்  பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் கொடுத்த டி.சி. எல்லாத்தையும் ஒவ்வொண்ணு கெஜடட் அலுவலரிடம் கையெழுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தேன். இஃகி,இஃகி,இஃகி.

மறு நாள் நடக்கப்போவதை அறியாமல் ஒரு பெருமூச்சுடன் (நிம்மதியாம்) என் இடத்தில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். மறுநாள் காலை அலுவலகம் வந்தால் மறுபடி உத்தரவை ரத்து செய்து அனுப்பி இருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னடா காரணம்னு பார்த்தால் என்.ஆர். கீதாவுக்குக் கல்யாணம் ஆனதெல்லாம் சரி. ஒத்துக்கறோம். ஆனால் அதனால் பெயரெல்லாம் மாறிடாது. என்.ஆர்.கீதா "கீதா சாம்பசிவம்"னு மாறணும்னா கெஜட்டில் விண்ணப்பம் செய்து அதில் விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டு இந்த மாதிரி என் பெயரை நான் சட்ட பூர்வமாகக் கணவர் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்டேன்னு அறிவிக்கணும். இல்லைனா இவங்க என்.ஆர்.கீதா தான். என்.ஆர். கீதா தான் இங்கே வந்து வேலையை ஏத்துக்கிட்டிருக்காங்கனு நாங்க நம்பணும்னா இவங்க கையெழுத்திலும் என்.ஆர்.கீதா என்றே போடணும். இல்லைனா நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்கு ஆலோசிச்சோம். என்னோட கடைசி நாத்தனார் அப்போ எங்களோட இருந்தாங்க. அவளுக்கு ஒரே கோபம். அது எப்படி அண்ணா பெயரைச் சேர்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நீங்க விடாதீங்க. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானாகவே யாரும் சொல்லாமலஏயே பெயர் மாறிடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அதை ஏத்துக்காமல் அலுவலக அளவில் என்.ஆர்.கீதாவே போதும்னு வைச்சுட்டோம். கெஜட் வரை எல்லாம் போய்ப் பெயரை மாத்த வேண்டாம்னு இருந்தோம். சரினு அலுவலகத்தில் என்.ஆர்.கீதானே எழுதிக் கொடுத்தாச்சு. அவங்களுக் குமாரியை எடுத்துட்டுத் திருமதி என்.ஆர்.கீதானு போட்டாங்க. ஆனால் இத்துடன் பிரச்னை நிக்கலையே.!

Saturday, July 18, 2026

கு.கு. ஊருக்குப் போயிருக்கு!

 வீடு ஒரே அமைதியா இருக்கு. ஐந்தாறு நாட்களாக. சத்தமே இல்லை. வைச்ச சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டர் அறை வெறிச்சோடிக் கிடக்கு. வாஷ் பேசினில் கை கழுவும் சோப் குறையவே இல்லை. விட்டு வைச்ச மாதிரி அப்படியே இருக்கு. வீட்டில் குப்பையும் இல்லை. ஹால் சோஃபாவில் படுத்திருக்கும் கு.கு.வின் பாப்பாக்கள் எல்லாம் கணினி அறையை விட்டே வெளிவரலை. கு.கு அதில் ஒன்றை எப்போவும் எடுத்துப் போகும். கூடவே வைச்சுக்கும். ஆனால் தோஹாவிலோ என்னமோ அதைப் பத்தி செக்யூரிடி கேட்டாங்களோ இல்லை வேறே காரணமோ தெரியலை. இப்போல்லாம் எடுத்துப் போவதில்லை. ஒருவேளை தான் பிக் கேர்ல் ஆகிக் கொண்டு வருவதாக அது சொல்லுகிறதே அதனாலோ என்னமோ. டைனிங் டேபிளில் பால் தம்பளரை வைச்சிருந்தால் உடனே வந்தெல்லாம் குடிக்காது. குடிச்சுட்டுப் பின்னர் ஓட்டமா ஓடிப் போய் சிங்கில் போட்டுவிட்டு ஓடும். 


கலர் கலராக வார்னிஷ் பேப்பர் அல்லது கலர் பேப்பர்களைக் கத்திரித்து அதுக்குத் தோன்றிய டிசைனில் வெட்டி ஒட்டிக் கொண்டு வீட்டில் காகிதக் குப்பைகளைப் போடும். கத்திரிக்கோல்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்கு இப்போ. வண்ணக்கலவை குழைக்கும் கிண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. அதன் பாட புத்தகம் மட்டும் கையில் எடுத்துப் போயிருக்கு போல. மற்றபடி அதன் நினைவுகள் இந்த வண்ணக்கலவைகளிலும், வெட்டிப் போடும் காகிதக் குப்பைகளிலும் ஆங்காங்கே கிடக்கும் அதன் பேபி பொம்மைகளும் அது இல்லை ஊருக்குப் போயிருக்கு என்னும் உண்மையைச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாது. இப்போத் தான் நாலைந்து நாட்கள் ஆகின்றன.  அது அடுத்த மாதம் 10 அல்லது 15 தேதிக்குத் தான் வரும். தினம் ராத்திரி அதுக்காக உணவு வரவழைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அமாவாசைக்கு அரைச்ச மாவு கொஞ்சம் மீதம். அதைப் பயன்படுத்துகிறேன். 


காகிதங்களைக் கத்திரித்து வெட்டி ஒட்டி ஒரிகாமி போலப் பற்பல டிசைன்களில் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கும். இல்லைனா படங்களை வண்ணம் குழைத்து வரைந்து வெட்டி அட்டையில் ஒட்டி வைச்சுக் கொடுக்கும். சில சமயம் வந்து காட்டிட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டு போயிடும். இப்போ! வெறிச். ஆச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் தான். என்றாலும் ஒரு குழந்தை வீட்டில் மனிதர்களிடையே இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு. முன்னெல்லாம் ஓல்ட் மேன், ஓல்ட் லேடினு எங்களைக் கூப்பிடும். இப்போத் தாத்தா இல்லை என்னும் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டிருக்கு. ஆகவே என்னிடம் அதிகம் வந்து முன்னைப் போல் எதுவும் கேட்பதில்லை. என்றாலும் பாசமும் இருக்கு. அது இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் ரங்க்ஸ் எனக்கு வெண்டைக்காய் நறுக்கித் தரும்போது செய்த சில்லறை விஷமம். கீழே.



நான் உடம்பு முடியாமல் இருந்தப்போ கெட் வெல் ஸூன் பாட்டி! என்று எழுதி துர்கானு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது இது.







தாத்தா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளைப் பொறுக்கித் தாத்தாவுக்கு ஆபரணங்களாக அணிவித்த படம் இது இரண்டும்.