ஒரு நல்ல படம் பார்த்தேன். அதுவும் தமிழில். உண்மையாகவே நல்ல படம். எல்லா நடிக, நடிகையரும் புதுசு எனக்கு. யாரையுமே தெரியலை. படம் பார்த்த பின்னர் விக்கியில் தேடிக் கண்டு பிடிச்சு யார் யாருனு பார்த்துக் கொண்டேன். படம் பெயர் "மொத ராத்திரி". கதையும் அது பற்றித் தான். துபாயில் ஆறு வருஷங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மருதநாயகத்துக்குத் திருமணம். ஆனால் அது அவனுக்குத் தெரியாது. அவனிடம் தங்கை பிள்ளைக்குக் காது குத்து என அழைத்திருக்காங்க. அந்தத் தங்கை பிள்ளைக்கு ஆறேழு வயதிருக்கும். ரொம்ப லேட்டாக் காது குத்தல்னு சொல்லிட்டாங்க போல. ஆனால் உண்மையில் அன்னிக்கு மருத நாயகத்துக்கு ஒரு தூரத்து உறவுக்காரப் பெண்ணுடன் கல்யாணம்.
ஆரம்பத்திலேயே படம் விறு விறு. கல்யாணம்னு ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கையிலேயே முதல்நாள் தான் விமானம் ஏறுகிறான் மருத நாயகம். அவன் கல்யாணத்துக்கு வந்து சேருவானா இல்லையானு பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். பிள்ளையின் அம்மாவுக்குக் கவலை, சந்தேகம், பிள்ளை வருவானா ஏமாற்றுவானா என்பதில். இதை வைத்து மருதநாயகத்தின் பெற்றோருடன் அவன் தங்கை சண்டை போடுகிறாள். மருதநாயகம் ஏதோ மன வருத்தத்தில் ஊரை விட்டுப் போயிருக்கிறான் என்ற அளவில் புரிந்து கொண்டாலும் பின்னால் தெரிய வருகிறது காதல் தோல்வி என. மருதநாயகத்தை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும் அவன் தங்கையின் கணவர் அவனிடம் அவனுக்குக் கல்யாணம் என்பதைச் சொல்லாமல் ஊருக்கு அழைத்துவர நினைக்க மாமாவை அழைத்து வர அப்பாவுடன் சென்றிருக்கும் சிறுவன் போட்டு உடைத்துவிடுகிறான் மருதநாயகத்துக்கு முத்துச் செல்வி என்னும் பெண்ணுடன் கல்யாணம் என்பதை. அப்போது தான் காதல் தோல்வியில் மனம் உடைந்து ஊருக்கே வராமல் ஆறு வருஷங்களாக துபாயிலேயே இருந்த மருதநாயகத்தை இப்படிச் சொல்லி வரவழைத்திருக்கிறார்கள் என்பது. ஒரு மாதிரி சமாதானம் செய்து மாப்பிள்ளை தன் மனைவியின் கணவனை அழைத்து வருகிறார்.
ஆனால் அங்கே பெண்ணுக்கோ வேறு பிரச்னை! அவள் வேறொருவனைக் காதலிக்கிறாள். அவனுடன் ஓடிப் போகத் திட்டம் போட்டிருக்கிறாள். இதற்கு நடுவில் பிள்ளை வீட்டுக்காரர்கள் தான் கல்யாணத்தை எடுத்துச் செய்யும் முறை என்பதால் பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக்காரர்கள் மரியாதை செய்யவில்லை எனச் சொல்ல இருவர் குடும்பத்திற்கும் கொஞ்சம் சச்சரவு ஏற்பட்டு அடங்குகிறது. பிள்ளையின் அம்மா தன் பிள்ளையின் பழைய விவகாரம் பெண் வீட்டுக்குத் தெரியாமல் காப்பாத்துவதற்காகத் தன் பெண்ணிடம் சொல்லிப் பெண் வீட்டினரை மனம் கோணாமல் கவனித்துக் கொள்ளச் சொல்லுகிறாள். ஆனால் பெண்ணோ! தனி அறையில் இருக்கும் பெண்ணை அழைத்துவரச் சொல்லி புரோகிதர் கூப்பிடப் பெண்ணை அழைத்துக் கொண்டு கதவைத் தட்டும் அவள் தங்கை முறைப் பெண் பெண் வர நேரமாவதை நினைத்துக் கூப்பிட அங்கே பெண்ணோ கழிவறையில் உட்கார்ந்து கொண்டு தன் காதலனுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறாள். அவளிடம் மொபைல் இருப்பது அவள் அம்மாவுக்குத் தெரியாது என்பதால் இடுப்பில் மறைச்சு வைத்துக்கொண்டு பேசிக் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிடுகிறாள். அவள் காதலனும் ஒத்துக் கொண்டு கிளம்புகிறான்.
ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. நண்பர்களைக் கேட்க அவர்களுடன் இவனுக்குச் சண்டை வர, நண்பர்கள் கை விரிக்கின்றனர் என்பதோடு அவன் நிலைமையையும் எடுத்துச் சொல்லுகிறார்கள். இங்கே இந்தப் பெண்ணோ முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் முன்னர் கிளம்பி விடத் துடிக்கிறாள். லங்கிணி மாதிரி இருக்கும் அம்மாவை ஏமாற்றி விட்டுக் கிளம்பணும். இதுக்குள்ளே கல்யாணம் ஆகித் தாலியும் காட்டிப் பெண்ணும், மாப்பிள்ளையும் பிள்ளை வீட்டிற்கு வந்து பெண் விளக்கேற்றி முதலிரவுக்குத் தயாச் செய்கின்றனர். முதலிரவு அறையில் தனித்தும் விட்டுவிட்டுக் கதவை சார்த்திக் கொண்டு எல்லோரும் படுக்கிறார்கள். கூட்டம் அதிகம் என்பதால் நெருக்கமாகப் படுத்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு அந்தப் பெண் தப்பித்து ஓட வேண்டும். என்ன செய்யப் போகிறாள்?
வெள்ளித் திரை எல்லாம் இப்போ இல்லை என்பதால் அவங்க அவங்க கணினியிலோ லாப்டாப்பிலோ பாருங்க மிச்சத்தை. சேத்தன் பூசாரியாக நடிச்சிருக்கார். அவர் தேவையானு முதலில் யோசிச்சேன். ஆனால் முடிவுக்கு அவர் தான் காரணம் என்பதோடு இருவருக்கும் ஒரு வகையில் உதவுகிறார். கதாநாயகனாக நடிச்சிருப்பவர் யாரோ ரிஷி காந்தாம். நல்லா இயல்பா நடிச்சிருக்கார். படத்தில் எல்லோருமே அந்த அந்தக் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். கதை, வசனம், இயக்குநர் எல்லாமும் யாரோ ராஜா கருப்பசாமியாம். அவர் தான் இதில் பெண்ணின் காதலராகவும் வருகிறார். இவருக்கு அதிகமாக படத்தில் இடம் இல்லை. ஆனாலும் தான் கல்யாணம் செய்து கொண்டு காதலியைக் காப்பாற்ற முடியுமா? வாழ்க்கை நடத்த முடியுமா என்றெல்லாம் யதார்த்தத்தை யோசிக்கும் சமயம் நன்றாகவே நடிச்சிருக்கார். சேத்தனும் ஓகே தான். மற்றபடி மிச்சப்படத்தையும் முடிவையும் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.
ஒரு கல்யாணத்தின் போது இயல்பாகக் குடும்ப உறவுகளிடையே ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கினால் ஏற்படும் கலவரங்களை வெகு இயல்பாகக் காட்டி இருக்கார் இயக்குநர். சம்பந்தப்பட்டவங்க இருவரும் எங்கேயோ இருக்க இங்கே உறவினர்கள் குடுமிபிடிச் சண்டை. படம் பார்ப்பது போல் இல்லாமல் நானே நேரில் கலந்து கொண்டாற்போல் இருந்தது. நல்ல படம்.



