எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 13, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43

தன் முன்னர் தோன்றிய லங்கிணியைப் பார்த்த அனுமன் இவள் யாரோ என யோசிக்க அந்த லங்கிணியோ அனுமனைப் பார்த்து, "ஏ, வானரமே, யார் நீ? ஏன் இங்கே வந்தாய்?" என வினவுகின்றாள். லங்கிணியைப் பார்த்த அனுமன் ஏன் என்னை விரட்டுகின்றாய் என வினவிவிட்டு உள்ளே செல்ல யத்தனிக்க, லங்கிணியோ, அனுமனைப் பார்த்துக் கோபமாய்ச் சொல்கின்றாள்,. "இந்த லங்காபுரியைக் காவல் காக்கும் லங்கிணி நான். என்னை மீறி யாரும் நகரின் உள்ளே செல்ல முடியாது. இதன் அதிதேவதை நானே." என்கின்றாள். ஏ, குரங்கே உன்னால் என்ன ஆகும் என்று சொல்லிக் கேலியாய்ச் சிரிக்க அனுமன் யோசிக்கின்றார். தன்னைச் சண்டைக்கு இழுக்கும் இவளை ஜெயிக்காமல் உள்ளே செல்ல முடியாது என நன்குணர்ந்த அனுமன் அவ்வாறே அவளோடு போரிட ஆயத்தம் ஆனார். அதற்குள் வெறும் குரங்குதானே என நினைத்த லங்கிணி, அனுமனை ஓங்கி அறைய, அந்த அறையின் வேகம் கண்ட அனுமன் அதை விட வேகமாய்ப் பெருங்கோஷத்துடன் தன் கைவிரல்களை மடக்கிக் கொண்டு முட்டியினால் ஒரு குத்துக் குத்தவே அந்த ஒரு குத்துக் கூடத் தாங்க முடியாத லங்கிணி கீழே விழுந்தாள்.

உடனேயே தன்னிலை புரிந்து கொண்ட லங்கிணி, அனுமனைப் பார்த்து, "ஓ,ஓ, வானரமே, இன்றுவரை யாராலும் நெருங்க முடியாத என்னை வீழ்த்திவிட்டாயே? எனில் அரக்கர்களுக்கு அழிவுகாலம் ஆரம்பம் ஆகிவிட்டதா? ஓஓஓ, என்ன சொல்வேன்? இந்நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தபோதே, பிரமன் சொன்னது, எப்போது ஒரு வானரத்தால் நீ வீழ்வாயோ அப்போதே உனக்கும், அரக்கர் குலத்துக்கும் அழிவு எனப் புரிந்து கொள் என்பதே! இப்போது நீ என்னை வீழ்த்திவிட்டாய், இனி அரக்கர் குலத்துக்கே அழிவுதான் என்பதைப் புரிந்து கொண்டேன். உன் வெற்றி உறுதி செய்யப் பட்டது. நீ நகருக்குள் செல்வாயாக!" என்று கூறி வழி விட்டாள். நகரினுள் சென்ற அனுமன் அங்கே பல இடங்களில் இருந்தும் வேத கோஷங்கள், உற்சாகமான ஒலிகள், மற்றும் பெண்களின் உல்லாசக் குரல்கள் அனைத்தையும் கண்டார், கேட்டார், வியந்தார். மாட, மாளிகைகளையும், கூட, கோபுரங்களையும் கண்டார். விசாலமான கடைத் தெருக்களைக் கண்டார். இவற்றில் சீதை எங்கே ஒளித்து வைக்கப் பட்டிருக்கின்றாளோ என வியந்தார்.
ஒவ்வொரு இடமாய் அலசி, ஆராய்ந்து கொண்டு வந்த அனுமன் கடைசியில் ஒரு பெரிய மாளிகையைக் கண்டார். அந்த மாளிகையின் தோற்றத்தில் இருந்தும், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், அதன் காவல் புரிபவர்களின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றில் இருந்தும் அதுவே ராவணன் மாளிகையாய் இருக்கலாமோ என எண்ணினார். அந்த மாளிகைக்குள் தன்னைச் சிறு உருவிலே மாற்றிக் கொண்டு சென்றார். அந்தப்புரம் நிறையப் பெண்கள் இருந்ததைக் கண்டார். இவர்களில் சீதையும் இருப்பாளோ என்று வியந்தார். பின்னர் இருக்க முடியாது எனத் தெளிந்தார். அரண்மனை பூராவும் செல்வம் கொழிப்பதைப் பார்த்த அனுமன், குபேரனின் மாளிகையோ என்னும் வண்ணம் செழிப்புடன் இருக்கின்றதே, இது நாசம் ஆகிவிடுமே என எண்ணிய வண்ணம் சென்ற போது ஒரு பக்கம் புஷ்பகவிமானத்தையும் கண்டார். உடனேயே அதில் ஏறிப் பார்த்தார். அப்போது ராவணனின் மாளிகையின் உட்புறமும், அந்தப்புரத்திலே பல பெண்கள் உறங்கிக் கொண்டிருப்பதும் கண்டார். அந்தப் பெண்களில் யாரும் சீதையாக இருக்கலாமோ என எண்ணிக் கொண்டு அந்தப்புரத்துக்குள் சென்று பார்த்தார். ஒரு விசாலமான அறையில் அமையப் பெற்றிருந்த ஒரு மேடையில் இருந்த ஓர் அழகான ஆசனத்தில் வீரம் செறிந்த ஓர் ஆண்மகன் இருப்பதைக் கண்டார்.

அந்த ஆண்மகனின் கம்பீரம், ஆடை, ஆபரணங்கள், சந்தனம், வாசனாதித் திரவியங்கள் பூசி அலங்கரிக்கப் பட்ட உடல், ஆசனத்தில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்த அவன் கம்பீரம் இவற்றைப் பார்த்த அனுமன், இவன் தான் ராவணன் என்பதையும் புரிந்து கொண்டார். (அனுமன் பார்க்கும்போது ராவணன் பத்துத் தலையோடு இருக்கவில்லை. வேண்டியபோது அவ்வாறு பத்துத் தலைகளுடன் கூடிய உருவை அவன் எடுத்துக் கொள்ளுவான்.)
அந்த ஆடவனின் பக்க்த்திலே விலை உயர்ந்த மற்றொரு கட்டிலிலே பேரழகுப் பெண்ணொருத்தி உறங்கிக் கொண்டிருக்கக் கண்ட அனுமன், துள்ளிக் குதித்தான். ஆஹா, இதோ சீதை, எனத் தெளிந்தான், பின்னர் மனம் கலங்கினான். ராமனைப் பிரிந்த சீதை, இப்படி எங்கேயாவது இன்னொரு ஆடவன் அருகே அவனுடைய கட்டிலில் படுத்து உறங்குவாளா? இல்லை, இல்லை இவள் சீதை இல்லை, பின் எங்கே சீதை? இவள் ஒருவேளை ராவணன் மனைவியோ, ஐயகோ, அப்படி எனில் மாற்றான் மனைவியை இவ்வாறு நான் எங்கனம் பார்ப்பது முறை? இந்த அந்தப்புரத்து மகளிர் அனைவரும் ராவணன் மனைவியரா? நான் இவ்வாறு பார்ப்பது முறையே அன்று. எனினும் நான் தீய எண்ணத்தோடு பார்க்கவில்லையே? சீதையைத் தேடும் முகமாய்த் தானே பார்க்கின்றேன். இவர்களில் யார் சீதை? எப்படிக் கண்டு பிடிப்பது? ஒருவேளை ராமனைப் பிரிந்த சோகம் தாளாமல் இறந்துவிட்டிருந்தால்? என்ன செய்யலாம்? பின்னர் ராமனிடம் போய் எவ்வாறு சொல்லுவேன்? ராமனும் உடனே உயிரை விட்டு விடுவாரே? பல விபரீதங்கள் எழுமே?

பின்னர் லட்சுமணன் உயிர் வாழ மாட்டான். பரதன் உயிர் தங்காது. சத்ருக்கனனும் அவர்கள் வழியே போவான். பேரழிவு ஏற்படுமே? இந்நிலை ஏற்பட நான் காரணம் என்பதறிந்தால் மன்னன் சுக்ரீவனும் உயிரை விட்டு விடுவானே? கிஷ்கிந்தை என்ன ஆகும்? அழிந்து படுமே/ அயோத்தியின் புகழ் மங்குமே? எப்படியாவது சீதையைத் தேடிக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இல்லை எனில் திரும்பக் கூடாது. திரும்பாமல் இங்கேயே துறவியாக வாழ்ந்துவிடலாம். இல்லை எனில் ஜலசமாதி அடைந்துவிடலாம். யாருக்கும் தெரியாது. அதனால் பல விளைவுகளையாவது தடுத்துவிடலாமே?" இவை எல்லாம் அனுமனின் மனதில் தோன்றிய எண்ணங்கள். பின்னர் மன உறுதியை மீண்டும் பெற்ற அனுமன் உயிர் விடுவதால் பயன் இல்லை, தொடர்ந்து முயன்று தீர்மானித்த காரியத்தில் வெற்றி அடைதலே வாழ்வின் அர்த்தம் எனத் தெளிந்து கொண்டார்.

சீதை கிடைக்கவில்லை எனில் ராவணனை நாமே அழித்துவிடலாம், அந்தப் பரமேசனுக்குப் பலியிடலாம், என எண்ணிக் கொண்ட அனுமனின் கண்களில் ஒரு பெரிய அசோகவனம் கண்ணில் பட்டது. இங்கே இன்னும் இதுவரை தேடவில்லையே என நினைத்த வண்ணமே, சீதை இங்கே இருக்கவேண்டுமே என்ற எண்ணத்துடனேயே, ராமனை, லட்சுமணனை, சீதையை,ருத்ரனை, எமனை, இந்திரனை, பிரம்மனை, அக்னியை, சந்திரனை, வாயுவை, வருணனை, விஷ்ணுவை என அனைத்துத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அனுமன் அசோக வனத்தினுள்ளே நுழைகின்றார்.

3 comments:

  1. படங்கள்ல்லாம் எங்கேயிருந்து எடுக்கறிங்கன்னு தெரியலை.. நல்லாயிருக்குங்க.. அக்கா:)

    ReplyDelete
  2. படிக்கப்படிக்க ஒரு விஷயம் புரிகிறது.
    வால்மீகி உள்ளதை உள்ளபடி எழுதியிருக்க வேண்டும். சாதாரண மனிதன் போல ராமன் புலம்புவது போல அனுமனின் எண்ணங்களும் சாதாரணமாக எவருக்கும் வருவது.

    ReplyDelete
  3. @ரசிகன்,
    படங்கள் எல்லாம் கூகிளாண்டவர் தயவு தான், அந்த, அந்தப் பதிவுக்குன்னு பார்த்துத் தான் எடுக்க வேண்டி இருக்கு! :D

    @திவா, நன்றி, வால்மீகி, கண்டதையும், கேட்டதையும் மட்டுமே எழுதி இருக்கின்றார், அதான் மத்தவங்களுக்கும், அவங்களுக்கு வர வித்தியாசமே!

    ReplyDelete