எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 18, 2008

கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48

இலங்கையை எரித்தது சரியே என மன அமைதி பெற்ற அனுமன், அசோகவனத்தில் சீதைக்குத் துன்பம் எதுவும் நேரிடைவில்லை என இன்னும் அதிக அமைதியுடனும், ஆறுதலுடனும் விடைபெற்றுக் கொண்டு, சீதையின் செய்தியுடன், மீண்டும் இலங்கையை விட்டுவிட்டு, வத இடம் நோக்கிக் கிளம்பினார். அரிஷ்டம் என்னும் பெயர் கொண்ட மலைமீது ஏறி நின்றுகொண்டு, தன் உருவை வளர்த்துக் கொண்டு கால்களைப்பலம் கொண்ட வரைக்கும் எம்பினார். மலை மண்ணோடு மண்ணாக நொறுங்க அனுமன் விண்ணில் கிளம்பினார். வானவெளியில் மிக வேகமாய்ப் பறந்து சென்று அனுமன் கடலின் அக்கரையை விரைவில் அடைந்து மகேந்திரமலையைக் கண்டதும், மகிழ்ச்சியில் ஒரு ஹூங்காரம் எழுப்பினார். அந்த ஹூங்காரத்தைக் கேட்ட வானரர்கள், அனுமன் திரும்பிவிட்டதை மட்டுமல்லாமல் வெற்றியோடு வருகின்றான் என்ற நிச்சயமும் கொண்டனர். ஜாம்பவான், அனுமன் எழுப்புகின்ற ஒலியே அவன் போன காரியத்தில் வெற்றி பெற்றான் என்பதைக் காட்டுகின்றது என்று மற்ற வானரர்களிடம் உற்சாகத்துடன் சொன்னார். காற்றை விலக்கிக் கொண்டு அனுமன் வேகமாய் வந்த காட்சியானது, கார்கால மேகம் விரைவில் விண்ணைத் தன் கூட்டங்களால் நிரப்புவது போல் காட்சி அளித்ததாம். இரு கரம் கூப்பி நின்ற வானரர்கள் நடுவே மகேந்திர மலையின் மீது இறங்கிய அனுமன் முதலில் ஜாம்பவானையும், இளவரசன் அங்கதனையும் வணங்கிவிட்டுப் பின்னர் "கண்டேன் சீதையை" என்ற நற்செய்தியைத் தெரிவித்தார். பின்னர் அங்கதனின் கையைப் பற்றிக் கொண்டு கீழே அமர்ந்த அனுமன், தான் கிளம்பியதில் இருந்து, அசோகவனத்தில் சீதையைத் தான் சந்தித்ததையும், சீதை அங்கு அரக்கிகளின் காவலில் இருப்பதையும், ராமரை நினைத்து வாடிக் கொண்டிருப்பதையும் தெரிவிக்கின்றார்.

பின்னர் அங்கதன் அனுமனைக் கண்டு, மிக்க துணிவோடு இக்காரியத்தை நீ நிகழ்த்தி உள்ளாய். உனக்கு நிகரானவன் எவரும் இல்லை. நீ செய்த இந்தக் காரியத்தினால் வானர குலத்துக்கே பெருமை சேர்த்துவிட்டாய். உன்னால் வானரக் குலம் அழியாப் புகழ் பெறும் என்றெல்லாம் பராட்டுகின்றான். பின்னர் அனைவரும் அமர்ந்து யோசனை செய்தனர். ஜாம்பவான், அனுமனைப் பார்த்து, அனைத்து சம்பவங்களையும் விபரமாய்ச் சொல்லுமாறு கேட்க, அனுமனும் அவ்வாறே சொல்கின்றான். ராமனிடம் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்பதையும் இங்கேயே முடிவு செய்யுமாறும் கூறுகின்றான் ஜாம்பவான். அதன்படியே அனைத்தையும் கூறிய அனுமன் மேலும் சொல்கின்றான்: "சீதையின் தூய்மை வியக்கும் வண்ணம் உள்ளது. அதைக் கண்டதுமே என் மனம் நிறைந்துவிட்டது. விரத வலிமை ஒன்றாலேயே மூவுலகையும் பொசுக்கும் வல்லமை கொண்டவர் அவர் என்பதை அறிந்தேன். ராவணன் பெற்ற பெரும் வரங்கள் காரணமாகவே சீதையைத் தீண்டித் தூக்கிச் சென்றும் அவன் இன்னும் பொசுங்காமல் இருக்கின்றான். எனினும், ராவணனையும், அவன் மகன் இந்திரஜித், சகோதரன் கும்பகர்ணன் அனைவரையும் என் ஒருவனாலேயே எதிர்க்க முடியும். ஜாம்பவானாகிய உம்மை எதிர்க்கும் வல்லமை கொண்டவனும் எவனும் இல்லை. அதே போல் வாலியின் மகன் ஆகிய அங்கதனும் திறமை கொண்டவனே. மிகப் பெரிய வீரன் ஆகிய நீலனும் நம்மிடையே இருக்கின்றான். இப்படிப் பெரும் வல்லமை கொண்ட நாம் அனைவரும் கூடி இருக்கின்றோம். சீதையின் துயரத்திற்கு முடிவு கட்ட ஆலோசனை செய்யலாம்." என்று கூறுகின்றான்.

உடனேயே அங்கதன் சீதையைப் பார்த்தாகிவிட்டது, ஆனால் மீட்டு வரவில்லை, என்று கிஷ்கிந்தையில் போய்ச் சொல்ல முடியுமா? தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நிகரான சக்தி படைத்த நாம் சென்று அரக்கர்களை அழித்து, ராவணனைக் கொன்று, சீதையை மீட்டுக் கொண்டே கிஷ்கிந்தை திரும்பவேண்டும். அனுமனோ ஏற்கெனவே பெரும் நாசத்தை இலங்கையில் விளைவித்துள்ளான். நாம் சென்று சீதையை மீட்டு வருவதே பாக்கி. இதை விட்டுவிட்டு, நாம் சென்று ராம, லட்சுமணர்கள் கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரட்டும் என்று சொல்வது சரியல்ல. இது நாமே செய்துவிடலாம், கிளம்புங்கள், சீதையை மீட்டுக் கொண்டே, நாம் கிஷ்கிந்தை சென்று ராம, லட்சுமணர்களைச் சந்திப்போம்." என்று சொல்கின்றான். ஜாம்பவான், வயதில் மட்டுமன்றி, புத்தியிலும் மூத்தவர் என்பதற்கிணங்க, அங்கதனைப் பார்த்துச் சொல்கின்றார்:" நீ விவேகத்துடன் பேசவில்லை அங்கதா, நமக்கு சீதையை மீட்டு வருமாறு கட்டளை ஒன்றும் இடப்படவில்லை என்பதை அறிவாய் அல்லவா? நாம் மீட்டுச் சென்றால் கட்டாயம் ராமர் மனம் வருந்துவார். தன்னைத் தவிர, வேறு யார் சீதையை மீட்டு வந்தாலும் ராமர் விரும்பமாட்டார் என்றே கருதுகின்றேன். மேலும் எல்லா வானரர்கள் முன்னிலையிலும் ராமர் செய்துள்ள சபதத்தை மறந்துவிட்டாயா? நாம் சீதையை மீட்டு வந்துவிட்டால், அந்தச் சபதம் என்னாவது? அனுமனின் சாதனைகள் வீணாகிவிடும். நாம் சென்று அனுமனின் சாதனையைச் சொல்லுவோம். ராமனின் தீர்மானப் படி முடிவெடுப்போம்." என்று சொல்ல அனைவரும் அதை ஏற்றுக் கிஷ்கிந்தை புறப்படுகின்றார்கள்.
உற்சாகம் கொண்ட வானரர்கள் அங்கிருந்து கிளம்பி மதுவனம் என்னும் நந்தவனத்தை அடைந்து, மகிழ்ச்சியில் இன்னது செய்கின்றோம் என்பதே அறியாமல் அந்த வனத்தில் புகுந்து தேன் பருகும் ஆசையில் அங்கிருந்த பழமரங்களை முற்றுகை இட்டனர். அந்த வனம் சுக்ரீவனின் மாமன் ஆன ததிமுகன் என்பவனுடையது. வானரங்கள் அங்கே வந்து பெரும் நாசத்தை விளைவித்து, மரங்களிலிருந்த பழங்களையும், கனிகளையும் உண்ணவே, போதை அதிகம் ஆகி, அங்கே உள்ள காவலாளிகளைத் தாக்க ஆரம்பித்தனர். தடுத்த ததிமுகனும் தாக்கப் படவே அவன் சென்று சுக்ரீவனிடம் நடந்ததைச் சொல்லுகின்றான். யாரும் நுழையாதவாறு தடுக்கப்பட்டுக் காவல் காக்கப் பட்டிருந்த மதுவனம் நம் வானரர்களாலேயே அழிக்கப் பட்டது, எங்களையும் கடுமையாகத் தாக்கிவிட்டனர். மதுவனம் அழிந்தது." என்று சொல்லவே லட்சுமணன் அப்போது அங்கே வந்தான். ததிமுகனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என லட்சுமணன் விசாரிக்கவே, சுக்ரீவன் தன்னால் அனுப்பப்பட்ட வானரவீரர்கள் மதுவனத்தை அழித்தது பற்றிச் சொல்லி, தாங்கள் சென்ற காரியத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஒழிய இந்த வானரங்களுக்கு இத்தகைய தைரியம் வந்திருக்காது. மேலும் அனுமனே இதைச் சாதித்திருப்பான், மற்றவர்கலுக்கு இத்தகைய தைரியம் இல்லை. ஆகவே போன காரியத்தில் வெற்றி அடைந்திருக்கின்றனர்," என்று சொல்லவே அருகில் இருந்த ராமனும், லட்சுமணனும் மகிழ்ந்தார்கள். வானரர் கூட்டத்துக்கு சுக்ரீவனால் அழைப்பு அனுப்பப் பட்டது. சுக்ரீவன் அனைத்து வானரங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டுப் பின்னர் அனைவரையும் கிஷ்கிந்தை செல்ல உத்தரவிட அனைவரும் கிளம்பினார்கள்.
பெரும் மகிழ்வோடு வானரர்கள் வந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்ட சுக்ரீவன், அவர்கள் குரலின் மகிழ்வில் இருந்து வெற்றி உறுதியாகிவிட்டது, ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். காலக்கெடு கடந்தும் கூட அவர்கள் என்னைத் தேடி வருகின்றார்கள் எனில் எடுத்த காரியத்தைச் சாதித்து விட்டார்கள் என்றே அர்த்தம். இல்லை எனில் என் அண்ணன் மகன் ஆன அங்கதன் என் முன்னே வரமாட்டான். இனி கவலை வேண்டாம். என்று சொல்கின்றான். அங்கதன், அனுமன் தலைமையில் வானரர்கள் வந்து சேர்ந்தனர். அனுமன் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுப் பின்னர் "கண்டேன், சீதையை!" என்று கூறிவிட்டு, அவள் உடல் நலத்தோடு இருக்கின்றாள் என்ற நற்செய்தியையும் தெரிவிக்கின்றான் முதலில். மேலும் சீதைக்கு ராவணன் விதித்திருக்கும் காலக்கெடுவையும் குறிப்பிடுகின்றான் அனுமன். ராமன் அனைத்து விபரங்களையும் கிளம்பியதில் இருந்து சொல்லுமாறு கேட்க, அவ்வாறே அனுமன் தான் கொண்டு வந்திருந்த சூடாமணியை ராமனிடம் கொடுத்துவிட்டுப் பின்னர் தன் பிரயாண விபரங்களைத் தெரிவிக்கின்றான். கடலைக் கடந்து வந்து தன்னை ராமன் மீட்கவேண்டும் என சீதை சொன்னதையும், அவள் அளித்த சூடாமணியையும் கண்ட ராமன் கண்ணில் இருந்து அருவி போல் நீர் பொங்கியது.

அந்தச் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்ட ராமன், இந்த நகை ஜனகரால் சீதைக்கு அளிக்கப் பட்டது. ஜனகருக்கு இதை இந்திரன் கொடுத்தான். இந்த நகையைப் பார்க்கும்போதெல்லாம் சீதை கண்முன்னே வருகின்றாள். என் தந்தை ஆன தசரதச் சக்கரவர்த்தியும், சீதையின் தகப்பன் ஆன ஜனகனும் நினைவில் வருகின்றனர். அனுமனே, சீதை என்ன சொன்னாள், எப்படி இருந்தாள், அவள் கூறிய வார்த்தைகள் என்ன என்பதை நீ எனக்கு இன்னும் விபரமாய் எடுத்துச் சொல்வாயாக, என் மனமானது அதில் கொஞ்சம் ஆறுதல் அடையும்f எனத் தோன்றுகின்றது. என்று அனுமனை மீண்டும் விபரம் கேட்க, அனுமன் சீதைக்கும், தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளை விபரமாய்க் கூற ஆரம்பிக்கின்றான்.

இத்துடன் சுந்தரகாண்டம் முடிந்தது. இனி யுத்த காண்டம். நாளை முதல்

1 comment:

  1. ///...மலைமீது ஏறி நின்றுகொண்டு, தன் உருவை வளர்த்துக் கொண்டு கால்களைப்பலம் கொண்ட வரைக்கும் எம்பினார். மலை மண்ணோடு மண்ணாக நொறுங்க அனுமன் விண்ணில் கிளம்பினார். ///

    அட என்ன ஒரு வர்ணனை ! Action-reaction என்பதை எவ்வளவு அழகாக கண்முன் நிறுத்துகிறார் வால்மீகி. கண்ணால் கண்டிருந்தாலன்றி இப்படி ஒரு வர்ணனை செய்திருக்க முடியாது.

    ReplyDelete