எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 10, 2008

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!


அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. இதுக்கு மேல் எழுதினால் கல்லெறி விழும்னு நினைக்கிறேன்.

8 comments:

  1. துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை.


    முற்றும் துறந்த பட்டிண்த்தார் கூட அன்னைக்கு மகத்தான் மதிப்பு அளித்தார். அன்னை இறந்தவ்டன் ஒரு 10 பாடல்கள் அன்னயின் சிறப்பைபற்றி பாடினார்.கடை
    சியில் அன்னையின் சடலத்தை வாழைப்பட்டையின் மீது வைத்து இந்தபதிகத்தைப் பாடியவுடன் தானகவே தீ பற்றி எறிந்தது

    வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

    கட்டிலிலும் வைதென்னைக் காதலித்து --முட்டச்

    சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

    விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே

    பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

    யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

    அருமையாகச் சொன்னீர்கள் தாயின் அருமை பற்றி. நன்றி
    ஆனால் நாம் இப்போது இருக்கும் டாலர் உலக்த்திலே போனவாரம் முதியோர் இல்லத்தில் இறந்துபோன ஒரு தாயினுடைய ஒரே மகன் வராததால் அநாதை ஸம்ஸ்காரம்தான் பண்ண முடிந்தது.

    ReplyDelete
  2. கீதா. ரொம்ப உயர்வாக அன்னையைப் பற்றி எழுதிவிட்டீர்கள்.
    இந்தப் பதிவை உலக அன்னையரின் அன்புக்கு சமர்ப்பிக்கிறேன்.


    நேற்றேல்லாம் எங்க அம்ம்மாவின் நாளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன்.
    எத்தனை தடவை கூப்பிட்டாலும் வராத இடத்துக்குப் போய்விட்டாயே என்று. உங்கள் பதிவைப் படித்ததும் இது உலகம் பூராவும் அனைவரும் அனுபவிக்கும் துயரம்தானே என்று சிறிது ஆறுதல் பிறந்தது. ரொம்ப நன்றி கீதா. உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உண்மைதானுங்க அக்கா..உறவறுந்த மோன நிலையில்கூட தாய்மையை துறக்க முடியவில்லை ஞானியால்.
    தாய்மையை தேவி சக்தியாக பார்த்து கண்ணியப்பட்டார்.

    பாடல் வரிக்ள் இப்போ கூட மனதில் ஒலிக்கிறது. நினைவுப்படுத்தியதற்க்கு நன்றிகள்:)

    ReplyDelete
  4. நல்ல பதிவு தலைவி..;)

    உங்களுக்கு என்னோட மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  5. அன்னையர் தின வாழ்த்துக்கள் கீதாம்மா!!!!

    :-)

    ReplyDelete
  6. உங்களுக்கு என்னோட மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

    மாத்ரு பஞ்சக அர்த்த விளக்கங்கள் மிக அருமை.

    TRC சார், அது பட்டினத்தார் பாடலா? ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  7. Why is Copy paste facility disabled ? Please enable.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். காப்பி, பேஸ்ட் செய்ய வேண்டாம் என்பதால் தான் அதைத் தடுத்திருக்கிறேன். காப்பி செய்து போடுபவர்கள் குறைந்த பக்ஷம் என் பெயரையாவது போட வேண்டும். போடுவதில்லை.

      Delete