எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 30, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66

திரு திவா அவர்கள் அதிகாயன் பற்றிய கதையைச் சொல்லும்படிக் கேட்டுள்ளார். என்னிடம் உள்ள மிகச் சில குறிப்புகளில் அது இல்லை. மூலத்தைப்பார்க்கவேண்டும். கொஞ்சம் தாமதம் ஆகும். மூலத்திலும் இதுபற்றிப் படிச்சதாய் நினைவில்லை. பொதுவாய் ராவணனின் குடும்பத்தினர் அனைவருமே சிவபக்தியில் சிறந்தவர்களாயும், பல வரங்களைப் பெற்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். இனி, அடுத்தது என்ன என்று பார்க்கலாம். திடீரென 2,3 நாட்கள் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த ஜாம்பவான், குரலை வைத்தே விபீஷணன் தான் பேசுவது எனப் புரிந்து கொண்டு, அனுமனைக் கூப்பிடுமாறு சொல்லவே, விபீஷணன் அனுமனைத் தேடுவதின் காரணத்தைக் கேட்கின்றான். ஜாம்பவான் சொல்கின்றான். "வானரப்படை மொத்தமும் அழிந்திருந்தால் கூட திரும்ப அவற்றை மீட்கும் வல்லமை படைத்தவன் அனுமன் ஒருவனே! அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் நம் வெற்றியும் உறுதியே!" என்று சொல்கின்றான். உடனேயே பக்கத்தில் இருந்த அனுமன், ஜாம்பவானைப் பார்த்து, நலம் விசாரிக்கவே, ஜாம்பவானும், அனுமனிடம், சொல்கின்றான்:"வானரங்களில் மிக மிகச் சிறந்தவனே! வாயுகுமாரா, உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. இப்போது இந்த வாரப்படையையும், ராம, லட்சுமணர்களையும் காக்கும் பொறுப்பு உன்னிடம் தான் உள்ளது. நீ மீண்டும் கடலைக் கடக்கவேண்டும். கடலைக் கடந்து இமயமலைச் சாரலுக்குச் சென்று, அங்கே மிக மிக உயர்ந்திருக்கும் ரிஷப மலையின் மீது ஏறினால் திருக்கைலைமலையை நீ காண்பாய்! அந்த இரு மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் தன்மையை உடைய ஒரு மலையையும் நீ காணலாம். அந்த மலை தான் பல்வேறுவிதமான மூலிகைகள் அடங்கிய மலை ஆகும். ம்ருதசஞ்சீவினி, விசல்யகரணி, ஸுவர்ணகரணி, ஸம்தாணி, போன்ற நான்கு முக்கியமான மூலிகைகளை அங்கே இருந்து நீ கொண்டு வரவேண்டும். அவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக திரும்ப முடியுமோ அத்தனை விரைவாக வந்தாயானால் அனைவரையும் காப்பாற்றி விடலாம்." என்று சொல்கின்றான் ஜாம்பவான்.

ஜாம்பவான் கூறியதைக் கேட்ட அனுமன் புதிய பலம் வரப்பெற்றவராய், அந்த மகாவிஷ்ணுவின் சக்ராயுதம் செல்லும் வேகத்தை விட அதிக வேகத்துடன் எழும்பி, சமுத்திர ராஜனை வணங்கித் துதித்து, கடலைக் கடந்து விண்ணிலே தாவி, இமயத்தை நோக்கி வேகமாய் விரைந்தார். அந்த சூரியனையே சென்று தொட்டுவிடுவாரோ என்று அனைவரும் எண்ணி வியக்கும் வண்ணம் வேகமாயும், வெகு உயரத்திலும் பறந்து சென்று இமயமலையை அடைந்த அனுமன் அங்கே மூலிகைகளைத் தேடியும் அவரால் எதையும் சரிவரக் கண்டு பிடிக்க முடியவில்லை. கோபம் கொண்ட அனுமன் அந்த மலைச்சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்தார். தன் கையில் அதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் அதே வேகத்துடன் பறந்து வந்து இலங்கையில் போர்க்களத்தை அடைந்தார். அனுமனால் கொண்டுவரப்பட்ட மூலிகைகளின் சுகந்தம் எங்கும் பரவியது. அந்த வாசனையை நுகர்ந்ததுமே வானரங்களும், அவற்றின் தலைவர்களும் விழித்து எழுந்தனர். மூலிகைகளின் உதவியால், தங்கள் காயங்களும் ஆறப் பெற்று, புத்துயிர் கொண்டனர் அனைவரும். ராம, லட்சுமணர்களும் அவ்வாறே உயிர் மட்டுமின்றி, தங்கள் காயங்களும் ஆற்றப்பட்டு, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் போருக்குத் தயார் ஆனார்கள். ஆனால் இதே மூலிகைகள் அரக்கர்களையும் குணப்படுத்தி இருக்கும். ராவணன் செய்த ஒரு தவற்றினால் அவர்களுக்கு இதன் பலன் கிட்டாமல் போயிற்று. அரக்கர் தரப்பில் உயிர் இழப்பு அதிகம் என எதிரிகளுக்குத் தெரியக் கூடாது என்பதால், யாரேனும் காயம் அடைந்தோ, அல்லது உயிர் விட்டோ கீழே வீழ்ந்தால் அவர்களை உடனடியாகக் கடலில் தள்ளும்படியோ, வீசி எறிந்துவிடும்படியாகவோ ராவணன் உத்தரவிட்டிருந்தபடியால், இந்த மூலிகைகளின் பலன் அவர்களுக்குக் கிட்டாமல் போயிற்று. இதுவும் விதியின் ஒரு சூழ்ச்சி, அல்லது ராவணனின் அழிவுக்கு அடையாளம் எனக் கொள்ளலாம் அல்லவா?? "விநாச காலே, விபரீத புத்தி!" என்று சொல்வார்கள் அல்லவா??? பின்னர் அனுமன் அந்த மூலிகைச் சிகரத்தை மீண்டும் வானவீதிவழியாகவே இமயத்துக்கு எடுத்துச் சென்று எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்துவிட்டதாய்க் குறிப்புக் கூறுகின்றது.
இதன்பின்னர் நடந்த பெரும்போரில் பெரும்பாலும் அனுமனால் சொல்லப் பட்ட யோசனைகளே பின்பற்றப் பட்டன. ராவணன் தன் தம்பியான கும்பகர்ணனின் மகன்களையும், மற்ற வீரர்களையும் யுத்த களத்திற்கு அனுப்ப அவர்கள் அனைவரும் அங்கதனால் வீழ்த்தப் படுகின்றனர். இதே போல் மற்றொரு தம்பியான கரனின் மகனும் வீழ்த்தப் பட, கோபம் தலைக்கேறிய இலங்கேசுவரன், இந்திரஜித்தை மீண்டும் யுத்தம் செய்ய அனுப்புகின்றான். இந்திரஜித் இம்முறையும் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல் மறைந்திருந்தே யுத்தம் செய்கின்றான். பலவிதமான வழிபாடுகளையும் நடத்திவிட்டுப் போருக்கு வந்திருந்த இந்திரஜித், வானத்தில் எங்கே இருக்கின்றான் என்றே தெரியவில்லை, ராம, லட்சுமணர்களுக்கு. அவர்களின் அம்புகள் அவனைத் தொடக் கூட இல்லை. அங்கும், இங்கும் நகர்ந்து, நகர்ந்து அம்பு மழை பொழிந்தாலும் எந்த இடத்தில் இருக்கின்றான் எனக் குறிப்புத் தெரியாமல் தவித்தனர் இருவரும்.

அம்புகள் வரும் திக்கைக் குறிவைத்து, ராம, லட்சுமணர்கள் போர் செய்ய ஓரளவு அவர்களால் இந்திரஜித்தைக் காயப் படுத்த முடிந்தது என்பதை அந்த அம்புகள் கீழே விழும்போது ரத்தம் தோய்ந்து விழுவதை வைத்துத் தெரிந்தது. ஆனால் மறைந்திருந்து யுத்தம் செய்யும் இவனை அழிப்பது எவ்வாறு என யோசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார் ராமர். லட்சுமணனிடமும் அவ்வாறே கூறுகின்றார். ராமரின் எண்ணம் தன்னை அழிப்பதே எனப் புரிந்துகொண்ட இந்திரஜித், போர்க்களத்தை விட்டு வெளியேறுகின்றான். தன் மாயாசக்தியால், சீதையைப் போன்றே மற்றொரு சீதையைத் தோற்றுவிக்கின்றான். நிஜமான சீதை எவ்வாறு, அழுக்கான ஆடையுடனேயே, ஆபரணங்கள் இல்லாமல், உடலிலும் தூசியுடனும், புழுதியுடனும் காணப்பட்டாளோ அவ்வாறே இவளையும் தோற்றுவிக்கின்றான். சீதையின் துக்கமும் இவள் கண்களிலும் காணப்பட்டது. அனுமன் பார்த்தார். நிஜமான சீதைதான் இவள் என்றே நினைத்தார்.

பல வானரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு தன்னைத் தாக்க அனுமன் வருவதை இந்திரஜித் பார்த்துவிட்டு, நகைத்துக் கொண்டே தன் வாளை உருவி, தன்னருகில் இருக்கும் மாய சீதையின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்க ஆரம்பித்தான். அந்த மாய சீதையும், "ராமா, ராமா'" என்றே அலறுகின்றாள். கோபம் கொண்ட அனுமன் "உன்னுடைய அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இந்த அபலை உனக்கு என்ன தீங்கு செய்தாள்? ஒரு பெண்ணைக் கொல்வது மகா பாபம்! சீதையை நீ கொன்றாயானால், நீ உயிர் பிழைப்பது நிச்சயம் இல்லை." என்று எச்சரிக்கின்றார். இந்திரஜித் மேல் அனுமன் முழுவேகத்தோடு பாய, இந்திரஜித்தோ, "நீ சொல்வது உண்மையே, ஒரு பெண்ணைக் கொல்லக் கூடாதுதான். ஆனால் போரில் எதிரிக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்து பாதிப்பை ஏற்படுத்துவது செய்யக் கூடிய ஒரு காரியமே! இவளைக் கொன்றால் உங்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். முதலில் இவளைக் கொன்றுவிட்டு, பின்னர் உங்கள் அனைவருக்கும் முடிவு கட்டுகின்றேன்." என்று சொல்லிவிட்டுத் தன் கைவாளால் மாய சீதையை இரண்டு துண்டாக்குகின்றான். பதறிய அனுமன், மிகுந்த கோபத்துடன்,அரக்கர் படையைத் தாக்க, பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது இருதரப்பிலும். அனுமன் சீதை மரணம் அடைந்தாள் என்னும் செய்தியை ராமரிடம் தெரிவிக்க எண்ணி, போர்க்களத்தில் இருந்து மெல்ல, விலக, அதைக் கண்ட இந்திரஜித்தும், தானும் இன்னொரு யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு போர்க்களத்தில் இருந்து விலகுகின்றான்.

ராமரைச் சென்றடைந்த அனுமன், சீதை இந்திரஜித்தால் கொல்லப் பட்டாள் எனத் தெரிவிக்க, அதைக் கேட்ட ராமர் மனம் தாங்க முடியாத சோகத்தில் ஆழ, செய்வது இன்னதென்று அறியாமல் தவிக்க, மரம் போல் கீழே சாய்ந்தார். லட்சுமணன் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

1 comment:

  1. சோகமான கட்டத்தில் எல்லாம் கதையை நிறுத்தக்கூடாது!
    :-(

    ReplyDelete