எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 27, 2018

வையாளி சேவை காண வாருங்கள்!



இந்தச் சுட்டியில் வையாளி சேவையை மட்டும் பார்க்கலாம். நம்பெருமாளைக் க்ளோஸ் அப்பில் காட்டுகையில் அவர் முகத்தைப் பார்த்தால் அதில் காணும் சிரிப்பு நம்மை பரவசப்படுத்தும். உண்மையில் அவரை ஓர் விக்ரஹமாக எண்ணத் தோன்றாது. நிஜம்மாகவே எதிரே நின்று பார்த்துச் சிரிப்பது போலவே இருக்கும். இந்த யூ ட்யூபிலும் க்ளோஸ் அப்பில் காட்டும்போது பாருங்கள்! பரவசம் அடையுங்கள்!

முந்தாநாள் எங்க ஊரில் வரும் கேபிள் தொலைக்காட்சியில் ஶ்ரீரங்கம் கோயிலில் நடந்த வேடுபறி நிகழ்ச்சி பார்த்தோம். ஆயிரக்கால் மண்டபத்துக்கு அருகே உள்ள பிரகாரத்தில் நடந்தது. முதலில் நம்பெருமாள் வையாளி சேவை கண்டருளினார். அதை எங்களால் முழுதும் பார்க்க முடியவில்லை.  வையாளி சேவை குறித்துப் பழம்பாடல் ஒண்ணு எங்கோ படிச்சது அரைகுறை நினைவு.

வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”


இந்த வையாளி சேவைப்படம், சேர்த்தி வைபவத்தின் போது உள்ளது. இப்போதைய படம் கிடைத்தால் போடறேன். ஆனாலும் வையாளி சேவை என்றால் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் ஏறிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்.  நான்கு திசைகளிலும் சுற்றி வருவார். அதன் பின்னர் ஓர் இடத்தில் பெருமாளை நிறுத்திவிட்டு ஶ்ரீபாதம்தாங்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு நிற்பார்கள். இனி அடுத்து வேடுபறி. இது திருமங்கை ஆழ்வாரைப் பெருமாள் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி. ஓர் திருடனாக வழிப்பறிக்கொள்ளை செய்து அதன் மூலம் அன்னதானம் செய்து வந்த திருமங்கை மன்னன் ஓர் கல்யாண கோஷ்டி காட்டிலே கடந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களைக் கொள்ளை அடிக்க வருகிறான். கல்யாணப் பெண்ணும், மாப்பிள்ளையும் வேறு யாரும் இல்லை. பெருமாளும், மஹாலக்ஷ்மியும் தான்! அவர்களின் ஆடை, ஆபரணப் பெட்டிகளைக் கொள்ளை அடித்துத் தன் கூட வந்தவர்களிடம் கொடுத்தனுப்பிய திருமங்கை மன்னன் மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்களையும் கழட்டித் தரச் சொல்ல தாயார் அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிட்டு நின்றாள்.

நாராயணனும் கழட்டுகிறார். ஆனால் காலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட வரவில்லையாம். அந்தக் காலங்களில் மாப்பிள்ளைக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதைக்குறிக்கக் காலில் மெட்டி அணிவிப்பார்கள். இதைத் தான் கால்கட்டு என்றார்களோ என்னமோ. அந்த மெட்டியைத் தான் கழட்ட முடியாதது போல் நம் பெருமாள் நடிக்க திருமங்கை மன்னனுக்குக் கோபம் வருகிறது. பெருமாள் கிட்ட வந்து அவனும் கழட்டப் பார்த்துக் கழட்ட முடியாமல் அவர் காலைத் தூக்கித் தன் பல்லால் அதைக் கழட்ட முயல்கிறான். கொடுத்து வைத்தவன். இந்தத் தருணத்திற்காகத் தானே காத்திருந்தார் பெருமாள்! உடனே குனிந்து அவன் காதில் ஓம் நமோ நாராயணாய! என்று ஓத திருமங்கை மன்னனுக்கு வந்தது யார் எனப் புரிகிறது. தான் இத்தனை பாக்கியம் செய்தவனா என்னும் எண்ணமும் ஏற்பட்டு அன்றில் இருந்து ஓர் ஆழ்வாராக மாறி ஊர் ஊராக எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளைப் போற்றித் துதிக்கிறார். இந்நிகழ்ச்சி தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் இராப்பத்து உற்சவத்தின் போது நடித்துக் காட்டப்பட்டது. 

திருமங்கை மன்னனின் வம்சாவளியைச் சேர்ந்தோர் இப்போதும் தெப்பக்குளம் நெடுந்தெருவிலிருந்து வாண வேடிக்கை, மேள,தாளத்துடன் ஓர் குழந்தையைத் திருமங்கை மன்னனாகப் பாவித்து வேடம் கட்டி அழைத்து வருகின்றனர். நம்பெருமாளைக் கம்புகளுடனும், வேல்களுடனும் சுற்றிச் சுற்றி வந்து கொள்ளை அடிப்பதாகப் பாவனை செய்து பின்னர் பெரும்பெட்டிகளைத் தூக்கிச் செல்கின்றனர். அதன் பின்னர் கால் மெட்டியைக் கழட்டும் காட்சி. திருமங்கை மன்னனைப் பெருமாள் ஆட்கொள்ளும் காட்சி. அதன் பின்னர் ஒவ்வொரு ஆழ்வாராக மரியாதைகள் செய்யப்பட்டுச் சென்றனர். அரையர்கள் வந்து சேவை சாதிக்க ஆரம்பித்தனர். அப்போது கொஞ்சம் நேரம் ஆகிவிட்டபடியால் நான் தூங்கச் சென்று விட்டேன்.

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில்நம்ம ரங்க்ஸுக்கு ஒரு சந்தேகம். அது ஏன் பெருமாளின் பல்லக்கைத் தூக்கி வைத்துக் கொண்டே அவரைத் தாலாட்டிக் கொண்டே நிற்கின்றனர்? கீழேயும் வைப்பதில்லை. எத்தனை நேரம் தூக்கிக் கொண்டே நிற்கின்றனர்? ஆயக்கால் போட்டாவது நிறுத்தலாமே! என்பது. அப்போத் தான் எனக்கு ஒரு சமயம் திருவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொன்னது நினைவில் வந்தது. அதோடு சமீபத்தில் வாட்சப்பிலோ, முகநூலிலோ கூடப் பகிர்ந்திருந்தனர். பெருமாளைத் தூக்குவது பாரம் என ஶ்ரீபாதம் தாங்கிகள் (பல்லக்குத் தூக்குபவர்கள்) நினைக்க மாட்டார்களாம். அப்படி நினைத்தால் அது அபசாரமாம். அதோடு இல்லாமல் அவர்கள் இந்தப் பல்லக்குத் தூக்க வேண்டிப் பயிற்சி எல்லாம் எடுத்துப்பாங்களாம். அது எப்படி எனில் முதலில் வலுவான உடல் கட்டமைப்பு உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு எந்தத் தோள்பக்கம் வசதி என்பதைக்கண்டறிவார்களாம்.  அவர்கள் உயரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் பெருமாளின் பல்லக்கான "தோளுக்கு இனியானை"க் கொடுத்து அதைத் தூக்கிக் கொண்டு கொள்ளிடம்/காவிரி மணலில் நடக்கச் சொல்லிப்பயிற்சி! அப்போதே ஒவ்வொரு கதிக்கும் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதும் சொல்லிக் கொடுப்பார்களாம். அது என்ன கதி எனக் கேட்கிறீர்களா?

நம்பெருமாள் அதிகம் ஆரோகணிப்பது தோளுக்கு இனியானிலே தான். பல்லக்குத் தூக்குபவர்களையும் ஶ்ரீபாதம் தாங்கிகள் என்றே அழைப்பார்கள். புறப்பாட்டின் ஆரம்பத்தின் போது கருடன் எப்படிச் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிக்கிறதோ அப்படி நடப்பார்களாம். இதை கருட கதி என்பார்களாம்.  சரி, புறப்பட்டுச் சட்டெனெ வெளியே வந்துவிடுவாரா? முடியாது அல்லவா? அப்போது ஒரு சிங்கம்  எப்படி குகையில் இருந்து வெளியே வந்து எதிரிகள் இருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு சிங்கநடை போட்டு குகையில் இருந்து வெளியேறுகிறதோ அது போல இருபக்கங்களிலும் பார்த்துவிட்டு சிங்க கதியில் நடப்பார்கள். அநேகமாய் கர்பகிரஹத்தில் இருந்து வெளியே எடுக்கைய்ல் சிம்ம கதியில் இருக்கும் என்பார்கள். இதை அடுத்து மேலும் கவனமாகச் செல்ல வேண்டும். வேட்டைக்குச் செல்லும் புலி முதலில் இரண்டு, மூன்று அடி எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் தயங்கி நிற்கும். மறுபடி முன்னே செல்லும். நிற்கும். பின்னர் செல்லும். அதன் பின்னர் வேட்டையின் மீது ஒரே பாய்ச்சல் தான். அது போல பெருமாள் இங்கே ஶ்ரீபாதம் தாங்கிகளால் சுமக்கப்பட்டு முதலில் கொஞ்ச தூரம் செல்வார்கள். நிற்பார்கள். பின்னர் மறுபடி செல்வார்கள். நிற்பார்கள். இதை வியாக்ர கதி என்பார்கள். 

இதை அடுத்துப் பெருமாள் மேலும் உலாவில் துரிதமாகக் கிளம்புவதை  ரிஷப கதி எனவும் நடுவே யானை போல் நடப்பதை கஜகதி எனவும் சொல்லுவார்கள். இப்படி எல்லாம் நடந்து கொண்டு தான் ஶ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இது பெருமாளோடு மட்டும் நிற்காது. கூடவே அரையர் ஸ்வாமிகளும், அந்த ஆட்டத்திற்கு ஏற்றாற்போலவே பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் செல்ல, ஆலவட்டம் சுமப்போர், தீவர்த்தி சுமப்போர், குடை பிடிப்போர், வெள்ளித்தடி ஏந்துவோர் அனைவருமே இம்மாதிரியான கதிகளில் ஆடிக்கொண்டு தான் செல்வார்கள். செல்ல வேண்டும். புறப்பாடு முடிந்து திரும்பி வந்ததும் கர்பகிரஹத்தினுள் நுழைகையில் பாம்பு தன் புற்றுக்குள் திரும்பும்போது தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டுச் சட்டென உள்ளே நுழைவதைப் போல் நுழைவார்களாம். இதை சர்ப்பகதி என்பார்கள்.  உள்ளே நுழைந்ததும் பெருமாளை அவர் இருப்பிடத்தில் அமர வைப்பதை ஹம்சகதி என்பார்கள். அவ்வளவு அழகான நடையில் இருக்குமாம் அது.

இதே போல் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும்போதெல்லாம் அதற்கேற்ப நடைகள் மாறும். சேஷ வாஹனம், ஆனை வாஹனம், கற்பக விருக்ஷம், பசு வாஹனம் என ஒவ்வொரு வாஹனத்தின் போதும் ஶ்ரீபாதம் தாங்கிகள் அந்த அந்த வாஹனங்களுக்கு ஏற்ற நடையில் நடக்க வேண்டும். அதனால் தான் வையாளி சேவை நடக்கும் குதிரை வாஹனத்தில் பெருமாள் வீற்றிருக்கையில் முதலில் இரண்டு நடை வேகமாகக் குதிரையைப் போல் செல்வார்கள். பின்னர் இடப்பக்கம் ஒரு சுற்று, அதன் பின்னர் வலப்பக்கம் ஓர் சுற்று, பின் மீண்டும் இரண்டு நடை வேகமான நடை! இப்படிச் செல்வார்கள். இத்தனைக்கும் உண்டான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நல்லபடி சேவை செய்வார்கள் என்பது நிர்வாகத்திற்குத் திருப்தி உண்டானால் தான் அவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நியமனம் ஆவார்கள். 

48 comments:

  1. பக்தியுடன் படித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், யூட்யூபைப் பார்த்ததாகத் தெரியலை! :)

      Delete
  2. கீசா மேடம்... நேற்றுத்தான் காணொளி பார்த்தேன். அதற்கு முன்பு வாட்சப்பில் இதைப்பற்றி யாரோ டீடெயிலாகப் பகிரிந்துகொண்டிருந்தார்கள்.

    உங்களுக்கு அனுப்பலாம்னு நினைத்தேன். உடனே 'திருப்பதிக்கே லட்டா' என்று சண்டைக்கு வந்துடுவீங்களோன்னு நினைத்தேன். ஸ்ரீரங்கம் வந்தால் சாப்பிடுவதற்கு உள்ள இடத்தைக் கெடுத்துக்கொள்வானேன் என்று சும்மா விட்டுவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க அநேகமா முக்கியமான நிகழ்ச்சிகளை எங்க ஊர் கேபிள்காரங்க காட்டுவதைப் பார்த்து விடுவோம். ஆகவே மத்தவங்க அனுப்பினால் அது டூப்ளிகேட் தான்!:) சுடச் சுட நேரடி ஒளிபரப்புக் காட்டுவாங்க. இன்னிக்கு நம்மாழ்வார் மோக்ஷம் தான் பார்க்க முடியலை! பையர் வந்திருக்கார் என்பதால் கொஞ்சம் பிசி. ராத்திரி காட்டறாங்களானு பார்க்கணும். நேத்துத் தீர்த்தவாரியும் பார்க்கலை.

      Delete
    2. பையர் நல்லபடியாக மலைக்கு சென்று வந்ததில் சந்தோசம். மண்டல பூஜைக்கு 2 நாள் முன்பு இரண்டு பெண்கள் செய்த அட்டூழியம் கண்டு நானும் ஏதேனும் விபரீதம் நடக்குமோ என்று பயந்து இருந்தேன். எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது.


      Jayakumar​​

      Delete
    3. நேத்திக்குத் தான் அம்பேரிக்காவில் இருந்தே வந்திருக்கார். நாளைக்குத் தான் இருமுடி கட்டணும். மண்டலபூஜை முடிஞ்சு இப்போ நடை சார்த்தி இருக்காங்க. 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தான் திறக்கிறாங்க.31 ஆம் தேதியில் இருந்து தான் நெய்யபிஷேஹம்.

      Delete
    4. நல்லபடியா சென்றவரட்டும், பெருமாள் கிருபையில். குஞ்சுலு?

      Delete
    5. நன்றி நெல்லை, இன்று காலை இருமுடி பூஜை முடிந்து கிளம்பிப் போயிருக்கார். வத்தலக்குண்டு தாண்டியதும் தொலைபேசித் தகவல் தெரிவித்தார். நிலக்கல் போக இரவு ஆகும்னு நினைக்கிறேன். அங்கிருந்து பம்பா போய் இரவிலேயே மலை ஏறணும். நாளைக்காலை தரிசனத்துக்கு நேரம் கொடுத்திருக்காங்க.

      Delete
    6. இது திடீரென எடுத்த முடிவினால் குஞ்சுலுவும் அவ அம்மாவும் வரலை. அங்கே தான் இருக்காங்க. தினம் ஸ்கைபில் பார்க்கிறோம். குஞ்சுலுவுக்கு ஒரே கோபம்! ஏற்கெனவே நாங்க விட்டுட்டு வந்துட்டோம்னு கோபம். சில சமயம் பார்க்க மாட்டேன்னு முகத்தை மூடிக்கும். இப்போவும் அப்பாவிடம் கோபம். அழுகை! இன்னிக்குக் கொஞ்சம் சமாதானமா இருந்தது.

      Delete
    7. குஞ்சுலு பத்தி சொல்லிருக்கறதை வாசித்து ரசித்தேன் அக்கா...சமத்து...God Bless!!

      கீதா

      Delete
  3. ஐயாவின் கேள்விற்கு உங்களின் விளக்கம் அருமை (அசத்தல்) அம்மா...

    ReplyDelete
  4. மிக அருமை. காணப் பெற்றவர்கள் கொடுத்துவைத்திருப்பவர்கள்.
    நன்றி கீதா மா.

    ReplyDelete
  5. //வையாளி சேவை காண வாருங்கள்//
    வந்திட்டேன்ன்ன்... வையாளி.. என இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.. இப்போதான் அறிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி, பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்த வண்ணம் உலா வந்து சேவை சாதிப்பார். பல்லக்குத் தூக்கிகள் நடை குதிரை நடப்பது போலவும் ஓடுவது போலவும் இருக்கும். அதிலும் சுமார் இருபது பேராவது அந்தப் பல்லக்கைச் சுமப்பார்கள். அனைவருடைய நடையும் சிறிதும் மாறுபாடு இல்லாமல் ஒரே கதியில் வரவேண்டும்.

      Delete
  6. நல்ல விவரங்கள்...
    கலைக் களஞ்சியம் தாங்கள்....

    ஸ்ரீ பாதந்தாங்கிகள் கொடுத்து வைத்தவர்கள்....

    வாழ்க நலம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை. ஶ்ரீபாதம்தாங்கிகளைத் தவிர வேறே யாரும் அரங்கனின் பல்லக்கைத் தொட முடியாது! இது எழுதப்படாத சட்டம்.

      Delete
  7. வையாளி சேவையை ஊன்றி படிச்சி பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் ..உங்க மனசு எத்தனை உற்சாகமா இருக்கு என்பது நன்கு தெரியுது பதிவில் ..கால் கட்டு ..ஆண்களுக்கும் மெட்டி இதெல்லாம் ஆச்சர்யமாவும் வியப்பாவும் இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், இந்தக் கால்கட்டு, மெட்டி அணிவிப்பது பத்தி நம்ம சிவகுமார் தாத்தா அவர் நடிச்ச கந்தன் கருணையிலேயே விளக்கி இருப்பாரே! பார்க்கலையோ? இது காலம் காலமாக இருந்து வந்ததாகவும் பின்னாட்களில் விடுபட்டதாகவும் சொல்லுவார்கள்.

      Delete
    2. கந்தன் கருணை படத்தை போட்டு பார்க்கணும் .திருவிளையாடல் தான் அடிக்கடி பார்க்கிறது மகளுக்காக

      Delete
    3. பாருங்க ஏஞ்சல்! ஒரு முறை பார்க்கலாம். கே.ஆர். விஜயா(நம்ம ஶ்ரீராமின் ஆஸ்தான கதாநாயகி) தேவானை, ஜெயலலிதா வள்ளி)

      Delete
  8. காணொளி பார்த்தேன் ..நீங்க சொன்னது உண்மையே அழகு புன்னகை .குழந்தைங்க கண்ணை மூடிட்டு நமக்கு வேடிக்கை காட்டுவாங்களே அப்படி ஒரு INNOCENT குழந்தை சிரிப்பு ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏஞ்சல், யாரும் நான் கொடுத்த யூ ட்யூப் இணைப்பில் பார்த்ததாகத் தெரியலை. நீங்க பார்த்ததுக்கும் ரசித்ததும் அதை உணர்ந்ததுக்கும் ரொம்ப நன்றி. நமட்டுச் சிரிப்பாகத் தெரியும் எனக்கு! chuckle சரியான வார்த்தையாக இருக்குமா?

      Delete
    2. அது ஒரு பரவசமான சிரிப்புக்கா :) க்ளோசப்பில் செம கியூட் chuckle பொருத்தமான சொல்

      Delete
    3. ஆமாம், சமயங்களில் இரவு படுக்கும்போது அந்தச் சிரிப்பை நினைத்துக் கொண்டு படுத்தால்! அருமையாத் தூக்கம் வரும்.

      Delete
  9. திருவரங்கத்தில் இருப்பதால் இவை அனைத்தையும்தெரிந்து கொள்ளும் வாய்ப்போ

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லை ஐயா. எந்த ஊரில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். இங்கே நேரில் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்.

      Delete
  10. வையாளி என்பதின் அர்த்தம் அல்லது பெயர்க்காரணம்?

    ReplyDelete
    Replies
    1. vaiyāḷi s. A full gallop, குதிரையின் மிகுகதி. (c.) வையாளிவிட, inf. To gallop a horse. வையாளிவீதி, s. A hippodrome. See குதிரைவையாளிவீதி (சது.)

      வையாளி குதிரை செல்லும் வழி
      குதிரையேற்றம்
      வையாளிவீதி குதிரை செல்லும் வீதி

      Delete


  11. ஸ்ரீரங்கத்துவாசியான நீங்கள் கொடுத்துவைத்தவர். சந்தேகமில்லை.

    திருமங்கையாழ்வார் கதை முன்பே படித்திருக்கிறேன். அவருடைய பரம்பரைக்காரர்கள் இன்னும் இருப்பது, விழா எடுப்பது இப்போதுதான் தெரிந்தது. ஸ்ரீபாதம் தாங்கிகள்பற்றி அன்பர் ஒருவர் வாட்ஸப்பில் பகிர்ந்திருந்ததையும் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. ஸ்ரீரங்கத்துத் தலைவனைப்பற்றிக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். படித்துக்கொண்டிருக்கலாம். நிறைய விஷயங்கள் இன்னுமிருக்கும்.

    நல்லகாலம், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கையில், மெட்ராஸ் ஸ்டேட்டின் மையத்தில் அகப்பட்டுக்கொண்டதால் ஸ்ரீரங்கநாதன் கர்னாடகா, கேரளா எனப் போய்விடுமாறு அமையவில்லை! ஆனால், திருவேங்கடத்தான் ஆந்திராப் பக்கமும், அனந்தபத்மநாபன் கேரளா பக்கமும் ஒதுங்கிவிட்டனரே..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏகாந்தன். அந்த வகையில் நான் மதுரையில் இருந்தவரையும் அனைத்துத் திருவிழாக்களையும் கண்டு களிக்கும் பேறு பெற்றிருந்தேன். அதிலும் மீனாக்ஷி கல்யாணம் நடக்கும் சித்திரைத் திருவிழாவை மிகவும் அனுபவித்து ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு வருஷமும்! அலுப்புத் தட்டியதில்லை.

      Delete
    2. வேங்கடவன் ஆந்திரா போனது ஒரு வகையில் நல்லது என்றாலும் நடுவில் கொஞ்சம் கவலையாக இருந்தது. அனந்தபத்மநாபன் கேரளாவில் இருப்பதே நல்லது. இங்கே இருந்தால்! அந்த மூன்றாவது அறை! வேணாம், வேணாம்!

      Delete
    3. ஏகாந்தன் ஐயா கர்நாடகத்திலும் ஒரு ஸ்ரீ ரங்கப்பட்டினம் உண்டு. அங்கு தான் திப்பு சுல்தான் போரில் மரணமடைந்தார்,
      அனந்த பத்மநாபன் தமிழ்நாட்டில் இருந்தால் அவரே காணாமல் போயிருப்பார். பொன் மாணிக்கவேல் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள், மற்றும் செல்வங்கள் யாவும் திருடு போனது தெரியாதோ? சுமார் 30 வருடமாகிய போதிலும் இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
      Jayakumar​​

      Delete
    4. திருவட்டாறு விஷயம் 30 வருஷங்களுக்கு மேல் இருக்குமோ? இப்போ ஏகாம்பரேஸ்வரர் கோயில் விஷயம் தான் சிரிப்பாய்ச் சிரித்ததே!
      கர்நாடகத்தில் இருக்கும் ஶ்ரீ(சீ)ரங்கப்பட்டினத்துக்கும் போயிருக்கோம். இரண்டு முறை போனோம்.

      Delete
    5. @ jk22384 / GS :
      ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டையெல்லாம் போயிருக்கிறேன். திப்புசுல்தான் கதையும் ஓரளவு தெரியும்.

      திருவட்டார், ஏகாம்பரநாதர் கதைகளை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மூன்றுவருடமுன்பு உப்பிலியப்பன் கோவிலில் கைவரிசையைக் காண்பிக்க சிலர் முயற்சிப்பதாகக் காதில் விழுந்தது. பழனியாண்டிக்கும் ஆபத்து என்று கேள்வி. போகர் வடிவமைத்த நவபாஷாண விக்ரஹமாயிற்றே.. யார் யார் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லையே. வேல்தான் காப்பற்றவேண்டும் பொன்னையும் மாணிக்கத்தையும்..

      கோவில் வாசலில் நெற்றியில் ஏறிய சந்தனத்தை வேகவேகமாக அழித்துக்கொண்ட நேதாவின் தர்மபத்தினி, குடும்ப உறுப்பினர் சிலரோடு வந்திருக்கிறார் காசிக்கு, குறிப்பாக குமாரசாமி மடத்தில் தரிசனம் செய்யவென. அது தெரியவந்த ஆன்மீக ஆதித்யநாதர், தமிழ் தெரிந்த அதிகாரியின் துணையையும், உதவி ஏற்பாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தாராம், நல்லபடியாகக் கும்பிட்டுவிட்டுப் போகட்டுமென. காசியின் கேதார்காட்டில் தரிசனம், மடாதிபதியுடன் படம், கங்கையில் படகு.. கண்கொள்ளாக் காட்சிகளை வாட்ஸப் நகர்த்திக்கொண்டிருக்கிறது. டெக்னாலஜி வாழ்க!

      Delete
    6. மீள் வருகைக்கு நன்றி ஏகாந்தன். நாங்களும் மேல்கோட்டா போயிருக்கோம். ஆனால் ஒரே முறை தான். தொட்டமளூரும் , சீரங்கப்பட்டினம், மைசூர், சாமுண்டி மலை எல்லாம் 2,3 தரம் போயிருக்கோம். அங்கெல்லாம் தரிசனமும் பிரச்னை இல்லை. அதுவும் உடுப்பி, முகாம்பிகை கோயில்களில் உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பார்கள். இங்கெல்லாம் நினைச்சே பார்க்க முடியாது. அதே போல் குஜராத்திலும் உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பாங்க!

      Delete
    7. தளபதியின் மனைவி பத்தித் தான் முகநூலில் பேசிட்டு இருக்காங்களே. ஆதித்யநாத் செய்த உதவிகள் எல்லாம் செய்திகளாகவே வந்திருக்கின்றன. அப்படியாவது புத்தி வந்தால் சரி! வராது! தளபதி சமீபத்தில் சொல்லி இருப்பது மோதி ஒரு சாடிஸ்ட் எனவும் எப்போதும் பயணத்திலேயே இருக்கார் என்பதும் தான்! அது எதுக்குனு யோசிக்கவோ, ஆராய்ந்து பார்க்கவோ இல்லை! கண்ணை மூடிக்கொண்டு பேச வேண்டியது.

      Delete
  12. நல்ல பகிர்வு. வையாளி நேரில் பார்த்ததுண்டு. வேடுபறி இன்னமும் பார்க்கக் கொடுப்பினை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நான் இதெல்லாம் மதுரையில் பார்த்தது தான் நேரில். இங்கெல்லாம் போக முடியறதில்லை. அவ்வளவு நேரம் நிற்க முடியாது! தேரின் போது கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு வெளியே வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுத்து! ஆகையால் கூட்டம்னா போவதில்லை. அதோடு வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் கேபிள்காரங்க நேரடி ஒளிபரப்புச் செய்கிறாங்களே!

      Delete
  13. வையாளி சேவை தரிசித்தேன்.
    ஶ்ரீபாதம் தாங்கிகள் பற்றிய விளக்கம் ஆச்சர்யமாக இருக்கிறது.

    பல்லக்கு தூக்குவதில் இவ்வளவு விடயங்களா ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி. ரொம்பவே பிசியா மருமகள் தேடுவதில்? :)))) தாமதமா வந்திருக்கீங்க! பல்லக்குத்தூக்குவது மட்டும் இல்லை, உள்ளே இருந்து செய்யும் சேவைகள், மடப்பள்ளியில் சமைக்கும் விதங்கள் என ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள், பொருள் பொதிந்த அர்த்தங்கள் உள்ளன. இதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காமல் எல்லோரும் அர்ச்சகராகலாம் எனச் சொல்கின்றனர். :)))))) இதில் உள்ள கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் அறிந்தோர், அதில் பயிற்சி பெற்றோர் தான் இந்த வேலைகளுக்கே வர முடியும்.

      Delete
    2. ரொம்பவே பிசியா மருமகள் தேடுவதில்? :)))) //

      ஹா ஹா ஹா கீதாக்கா கில்லர்ஜி மருமகள் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு...தையில் கல்யாணம் அதான் அவர் கல்யாண வேலைகளில் பிஸியோ பிச்சி...

      கீதா

      Delete
  14. வணக்கம் சகோதரி

    வையாளி சேவை பற்றியும், ஸ்ரீபாதம் தாங்குபவர்கள் பற்றியும் தாங்கள் அளித்த விளக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது.

    திருமங்கையாழ்வார் கதை தெரியும். தங்கள் பதிவிலும் படித்தேன். ரங்கனின் பாதம் தொடவும், அவரது (நேரடியாக) அருளைப் பெறவும் என்ன தவம் செய்திருக்க வேண்டும்... இதெல்லாம் பூர்வ ஜென்ம பலன்தான் இல்லையா? ஆசைப்படும் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே! அவர்களின் வம்சாவளிகள் வந்து விழாக்களை வருடந்தோறும் சிறப்பிப்பது மற்றொரு பூர்வ ஜென்ம தொடர்புகள்தான். இதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..நீங்கள் இவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் எழுதி அதை நாங்கள் படித்துணர்வதும், மகிழ செய்வதாகத்தான் உள்ளது. தங்கள் பக்திக்கும், அதை பக்குவமாய் எடுத்துரைக்கும் சிறப்புக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஸ்ரீரங்கத்தில் இருப்பதால் இதெல்லாம் பார்க்கவும், கேட்கவும் கொடுத்து வைத்திருக்கிறது. உங்கள் அன்பான கனிவான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. இதை எல்லாம் பார்க்கையில் இன்னமும் கடுமையாக உழைக்கணும் என்பதும் புரிகிறது. அப்போது தான் இதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்! ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  15. தி/கீதா, எல்லாப்ப்பதிவுகளிலும் உலாத்துகிறார். இந்தப்பக்கம் எங்கே காணோம்! வரலை!

    ReplyDelete
  16. அக்கா நெட் போன சமயம் இப்பதிவு வந்திருக்கிறது அதான் மிஸ்ட் இட்...வந்தாச்சு..பதிவு பின்னாடி போயிருந்திருக்கு பார்க்காம விட்டிருக்கேன் கீதாக்கா...

    வையாளி - இதை இப்பத்தான் அறிகிறேன் கீதாக்கா..

    திருமங்கை மன்னன் ஆழ்வாரான கதை தெரியும் என்றாலும் அதை அப்படியே நிகழ்த்துகின்றார்கள் என்பது உங்க பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..விவரங்கள் உட்பட...

    நீங்க சொல்லிருக்கும் பல்லாக்கு விவரம் வாட்சப்பில் வேளுக்குடி சொன்னது மிக டீட்டெய்ல்டாக வந்திருந்தது.

    படம் நல்லாருக்கு கீதாக்கா...

    கீதா

    ReplyDelete
  17. வையாளி வீடியோவும் பார்த்துட்டேன் அக்கா மிக்க நன்றி...இதுதான் முதல் முறை பார்க்கிறேன்...

    கீதா

    ReplyDelete
  18. மிக அருமையான நிகழ்வு அது ...

    செவி வழி கேட்டு ரசித்தது உண்டு ,....இன்னும் நேரில் காணும் பாக்கியம் கிடைக்க வில்லை மா..

    ReplyDelete