எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 22, 2018

ஆடுகின்றானடி தில்லையிலே

Nataraja க்கான பட முடிவு


நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது.

சந்திரன் இந்த மாதம் திருவாதிரை நக்ஷத்திரக்கூட்டத்தின் அருகே காணப்படும்.பௌர்ணமி தினத்தன்று மிக அருகே காணப்படும் இந்த நக்ஷத்திரம் மற்றவற்றை விட ஒளி பொருந்தியது. ஆகவே இந்த நக்ஷத்திரக் கூட்டத்தைப் பார்க்கையில் திருவாதிரை நக்ஷத்திரம் இருப்பனவற்றிலேயே பெரிதாய் செக்கச் சிவந்த வண்ணத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட நாளையே திருவாதிரை என்கிறோம். இந்த நக்ஷத்திரம் விண்ணில் ஒளி விடும் அந்த நேரம் தான் ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை ஆரம்பித்த நேரமாகவும் கூறுவர். இறைவனின் ஆனந்த தாண்டவமே அந்த நக்ஷத்திர வடிவில் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது எனவும் கூறுவார்கள். இத்தகையதொரு காட்சியைத் தான் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் கண்டனர். அதுவே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

Nataraja க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அடிமுடிகாணா ஜோதி ஸ்வரூபமாய் நின்ற எம்பெருமானின் திருநடனக் கோலம் காணும் நாளே ஆருத்ரா தரிசனம் ஆகும். ஆருத்ரா என்பது ஆதிரை நக்ஷத்திரத்தைக் குறிக்கும். திரு என்னும் அடைமொழியைச் சேர்த்துக்கொண்டு திருவாதிரை என்று சொல்கிறோம். விண்ணில் விண்மீன் குழுமத்தில் திருவாதிரை நக்ஷத்திரம் இருக்கும் குழுவை ஓரியன் என அழைக்கின்றனர். இதை வேட்டைக்காரன் என்றும் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் இந்தக் குழுமத்தில் இருக்கிறது. இந்த ஓரியன் குழுவின் நக்ஷத்திரங்கள் அனைத்தையும் பொதுவாய் வேட்டைக்காரன் என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த வேட்டைக்காரனின் இடதுபக்கம் அவன் தோள்பட்டை போல் இருப்பது மிருகசீர்ஷம் எனில் வலது தோள்பட்டையாக விளங்குவதே இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் ஆகும். செக்கச் சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும் என்று தெரியவருகிறது. ஈசனின் நிறமும் செக்கச் சிவந்த வண்ணம் தானே?செந்தழல் வண்ணனுக்குரிய நக்ஷத்திரம் ஆன திருவாதிரையும் விண்மீன் குழுவிலேயே மிகப்பெரிய நக்ஷத்திரமாய்ச் சொல்லப் படுகிறது. மிகப் பிரகாசமான ஒளி பொருந்தியும் பரிமாணத்துக்கு ஏற்றவாறு ஒளி மாறும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் தெரியவருகிறது. பூமியிலிருந்து 430 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள இதன் அடிமுடியை எவரால் காண இயலும்?? பேரொளியும் அதனால் ஏற்பட்ட பெருவெப்பமும் கொண்ட இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் விண்ணில் அசைந்தாடுவதானது எல்லாம் வல்ல அந்தக் கூத்தனே இந்த நக்ஷத்திர வடிவில் இவ்வுலகை இயக்க ஆடுவதை நினைவூட்டுகிறது.  இந்த நக்ஷத்திரத்தின் குணமே துடிப்புடனும் செயலாற்றல் கொண்டவர்களாயும், உறுதியும் திடமும் படைத்தவர்களாயும் நிலையான மனம் படைத்தவர்களாயும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஏனெனில் ஈசன் அன்போடு படைக்கிறான். அன்போடு காக்கிறான். அதே சமயம் நமக்காக விஷத்தைக் கூட அருந்துகிறான். அவன் தலையிலே பாம்பையும் ஆபரணமாய்க் கொண்டிருக்கும் அதே சமயம் அமுத கிரணங்கள் உடைய பிறைச் சந்திரனையும் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரனாய்க் காட்சி அளிக்கிறான். ஒரு பக்கம் அமைதியின் வடிவாகவும் இன்னொரு பக்கம் அழிவைக் கொடுக்கும் ருத்ரனாகவும் காட்சி கொடுக்கிறான்.

கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் நீராடி உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையுடன் கோயிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுவ்துதான்.
அன்று காலை களி செய்து, எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் நடராஜருக்குப் படைப்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் களிக்கும் ஒரு கதை உண்டல்லவா? களி என்றாலே மகிழ்ச்சி தானே பொருள்?? அத்தகைய களியைத் தன் அடியாருக்குத் தந்தார் ஈசன்.

சோழநாட்டின் அரசர்களுக்கு முடிசூட்டுவது தில்லை வாழ் அந்தணர்களே ஆகும். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிக அளவில் திருப்பணிகளும் சோழ மன்னர்களால் செய்யப் பட்டது. சேந்தனாரின் காலம் சரிவரத் தெரியவில்லை எனினும் சில குறிப்புகள்கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவர் என்றும், சில குறிப்புகளால் முதல் ராஜராஜ சோழன் காலம் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தனார் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராய் விளங்கினார். பட்டினத்து அடிகள் துறவு மேற்கொண்ட பின்னர் அவரின் கட்டளைப்படி பட்டினத்தடிகளின் கருவூலத்து பொக்கிஷத்தைத் திறந்துவிட்டு எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக்கொள்ளச் செய்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சோழமன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான்.

பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுத்த சேந்தனாரோ தம் வாழ்க்கையைக் கழிக்க விறகு வெட்டியே பிழைத்துவந்தார். அதை அறியாத மன்னன் சிறையில் அடைக்க, சேந்தனாரின் மனைவியும், மகனும் பிச்சை எடுக்கவேண்டியதாயிற்று. உறவினர் அனைவரும் கேலி செய்ய சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.

மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
என்று இறைவனைப் பட்டினத்தடிகள் வேண்ட. இறைஅருளாலும் பட்டினத்தடிகள் வேண்டுதல் மூலமாகவும்  சேந்தனாருக்கு விடுதலை கிடைத்தது. தில்லையம்பதி சென்று அங்கும் விறகு வெட்டிப் பிழைத்த சேந்தனார் அன்றாடம் தாம் சம்பாதிக்கும் பொருளில் இருந்து ஒரு சிவனடியாருக்கு உணவு சமைத்துப் போட்டுப் பின்னரே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

மழைக்காலம் வந்துவிட்டது. வெட்டும் விறகெல்லாம் மழையில் நனைந்து போயிற்று. விற்க முடியவில்லை. ஈரவிறகை வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. யோசித்த சேந்தனார் சிவனடியார் எவருக்கேனும் உணவு பரிமாறவேண்டுமே என்பதால் பண்டமாற்று முறையில் விறகைக் கொடுத்து அரிசிமாவையும், வெல்லத்தையும் பெற்று வந்துக் களிசமைக்கச் சொன்னார். கொல்லையில் இருந்த கீரைத்தண்டோடு கொல்லையிலேயே கிடைத்த சில காய்களையும் போட்டுக் குழம்பும் சமைத்துச் சாப்பிட அடியாரைத் தேடிக் காத்திருந்தார். ஆனால் அடியாரே தென்படவில்லை. துன்பத்தோடு அமர்ந்திருந்த சேந்தனர் கண்களுக்கு ஒரு முதிய அடியார் தள்ளாட்டத்தோடு வருவது தெரிந்தது. பசியினால் விளைந்த தள்ளாட்டம் என்பது புரிந்து அவரை அழைத்துச் சென்று களியும், குழம்பும் உண்ணக் கொடுத்தார். பெரியவரும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு, "மிச்சம் இருப்பதையும் கொண்டா" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போயிவிட்டார்.
இங்கே தில்லை வாழ் அந்தணர்கள் திருவாதிரைத் திருநாளுக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அப்போது கருவறையில் ஈசனருகே களியாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு திகைத்தனர்.

உடனேயே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. மன்னனும் தீர விசாரித்துச் சேந்தனாரே இதன் மூலகர்த்தா என உணர்ந்து அவரைப் பிடித்துவருமாறு கட்டளையிடுகிறான். அப்போது நடராஜப் பெருமானின் திருத்தேரை இழுக்கும் அடியார்களில் ஒருவராய்ச் சேந்தனார் திருத்தொண்டு செய்து வந்தார். திடீரெனத் தேர் நின்று போக, அனைவரும் திகைத்தனர். மன்னன் தேரை நிலைக்குக் கொண்டு வர ஆட்களை அழைக்கத் தேர் இம்மியளவும் நகரவில்லை. அப்போது அசரீரியால் ஈசன், "சேந்தனாரே, நீர் திருப்பல்லாண்டு பாடும் தேர் நிலைக்கு வரும்" எனக் கூற சேந்தனார் முதலில் திகைத்தாலும் பின்னர் ஈசன் அருளால் திருப்பல்லாண்டு பாடி அருள தேரும் நிலைக்கு வந்தது.


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.

37 comments:

  1. ஹை அடுத்த பதிவும் வந்துருச்சா...இதோ வாசிக்கிறேன் கீதாக்கா...அதுக்கு முன்ன...

    கீதாக்கா உங்க திருவாதிரைக் களி ரெசிப்பி சுட்டி எபில நெல்லையின் ரெசிப்ப வந்தப்ப கொடுத்ததை எடுத்துட்டேன்/எபியில் நெல்லையின் ரெசிப்பி நினைவிருக்கு செய்தும் பார்த்துட்டேன்...அவரிடம் சொன்னேனா என்று தெரியலை. இப்ப உங்க சுட்டி கிடைக்க்ச்சுருச்சு பார்க்கறேன்...அதுதான் நாளை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. திருவாதிரைக்களி செய்முறை பல வருடங்கள் முன்னர் எழுதினது. சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் பகிர்ந்திருக்கேன். சுட்டி கொடுத்தேன், பார்த்திருப்பீங்க!

      Delete
    2. எங்கள் வீட்டில் இன்று களி எப்படி வருமோ என்று கிலியாக இருக்கிறது!

      Delete
    3. ஏன் ஶ்ரீராம், களி செய்வது உப்புமாக் கிண்டுவது போலத் தான். ரொம்பவே எளிமையான சமையல்.

      Delete
  2. திருவாதிரை ஐதீகம் குறித்த தகவல்கள் இப்பத்தான் அக்கா தெரிஞ்சுது உங்க பதிவின் மூலம்.

    ஓரியன் கூட்டம் பார்ப்பதுண்டு. வீட்டில் குழந்தைகள் வந்தால் அவர்களுக்குக் காட்டிச் சொன்னதுண்டு ஆமாக்கா வேட்டைக்காரன்னு....ஜனுவரியில் தெரியும்....இப்பத் தெரியுமான்னு தெரியலை இன்னிக்குப் பார்க்கனும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி என்பது ஆங்கில மாதக் கணக்கில் சொல்கிறீர்கள் தி/கீதா, நம் தமிழ்மாதக் கணக்கில் மார்கழிப் பௌர்ணமி தான் கணக்கு. அன்று விண்ணில் திருவாதிரை நக்ஷத்திரம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் எனவும் அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் அதைப் பார்ப்பது விசேஷம் எனவும் சொல்வார்கள். அந்தக் குறிப்பிட்ட நேரம் தான் ஆருத்ரா தரிசனம், சிவ தாண்டவம், ஆனந்த தாண்டவமாக ஆடி சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்டதாக ஐதிகம்.

      Delete
    2. "ஆனந்தத் தாண்டவமோ... ஆண்டவனா ஆடுகிறார் காலங்களெல்லாம்..."

      :)))

      Delete
    3. அப்படித் தான் சொல்கின்றனர் ஶ்ரீராம். அவன் ஆட்டம் நின்றால் நம் ஆட்டம் நின்று விடும் என்பார்கள்.

      Delete
  3. கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. //

    இது அறிவியல் பூர்வமாவும் சொல்லுவதுண்டுதான். சிதம்பரம் கோயிலுக்குப் போயிருந்தப்ப அந்த ஆகாசத்தத்துவத்தைச் சொல்லும் இருள் பகுதியைக் காண விழைந்து அதுக்குத் தனி டிக்கெட்...மேடையி ஏறிப் பார்த்தப்பா விளக்கியவர் இதையும் சொன்னார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரத்தில் இப்போல்லாம் ரகசியம்பார்ப்பது அன்னிக்கு எந்த தீக்ஷிதர் நடராஜருக்கு வழிபாடுகள் செய்யறாரோ அவர் தான் ரகசியம் காட்டுவது என மாற்றி விட்டார்கள். கடந்த 2,3 வருடங்களில் சில முறை சிதம்பரம் போயும் எங்களால் ரகசியம் பார்க்க முடியவில்லை. மாலை நேரம் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ரகசியம் காட்டுவதாக எங்கள் கட்டளை தீக்ஷிதர் சொன்னார். அதோடு முன்னெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது ரகசியம் பார்க்க எனக்குத் தெரிந்து டிக்கெட் எல்லாம் இல்லை. தமிழகத்திலேயே சிறப்பு தரிசனச் சீட்டோ, ரகசியம் பார்க்கத் தனி டிக்கெட்டோ, உண்டியலோ இல்லாத ஒரே கோயில் சிதம்பரம் தான். பத்தாண்டுகள் முன்னர் ஹைகோர்ட் தீர்ப்பின்படி அரசு உட்புகுந்து தரிசனச் சீட்டு, உண்டியல் எல்லாம் கொண்டு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அதை எல்லாம் எடுக்கச் சொல்லி விட்டது. நீங்க ஒரு வேளை அந்தச் சமயம் போயிருக்கலாம். சிதம்பரம் போனால் சொல்லுங்கள் பொன்னம்பல நாதனைக் கிட்டே இருந்து தரிசிக்க எங்களுக்குத் தெரிந்த தீக்ஷிதர்கள் உதவியுடன் பார்க்க ஏற்பாடு செய்கிறோம்.

      Delete
    2. தினமும் உச்சிகால பூஜை 12 மணிக்கு தீபாராதனை காட்டப்படும் போது திரை
      விலக்கி ​ரகசியம் காட்டப்படும். அதன் பின்னர் நடை அடைக்கப்படும்

      Delete
    3. நான் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால் உங்களிடம்தான் வழி கேட்கணும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன் கீசா மேடம்... (கட்டளை தீக்‌ஷிதர் என்றால் என்ன?)

      Delete
    4. இப்போத் தான் 2 மாசம் முன்னர் கூடப் போயிட்டு வந்தோம். இப்போ இல்லை ஜேகே அண்ணா. நாங்க கால பூஜை பார்த்து தீபாராதனையும் பார்த்த பின்னரே நடராஜரைத் தரிசனம் செய்ய மேலே ஏறினோம். எங்க தீக்ஷிதரிடம் கேட்டதுக்கு இப்போ மாலை ஒரே வேளை தான். அதுவும் அன்றைய பணியில் இருக்கும் தீக்ஷிதர் தான் காட்டுவார் என்று சொன்னார். எங்களோடு தரிசனம் செய்தவங்க யாருக்கும் காட்டவில்லை. முன்னெல்லாம் கட்டளை தீக்ஷிதர்களே காட்டி விளக்கம் சொல்வாங்க. பலமுறை பார்த்திருக்கோம்.

      Delete
    5. வழியெல்லாம் கேட்கும் அளவுக்குச் சிதம்பரம் ஒண்ணும் தெரியாத இடம் இல்லை நெ.த. நீங்க எதிலே பயணம் செய்வீங்கனு தெரியாது. ரயிலாக இருந்தால் ஸ்டேஷனிலே இறங்கிக்கலாம். உங்களுக்கு நடராஜரைத் தரிசனம் செய்ய வேண்டும் எனில் எங்கள் கட்டளை தீக்ஷிதரிடம் சொல்கிறோம். அங்கே எங்க வீட்டில் பையர், பெண், மற்றும் மாமா ஆகியோருக்குக் கட்டளை இருக்கு. மாமாவுக்குப் படிக்கிற நாளிலே இருந்து பழக்கம். கட்டளை சுமார் 50 வருடங்களாக இருக்கு. குழந்தைகளுக்கும் கட்டளை 20 வருடங்களாக இருக்கு. வருஷத்துக்கு இவ்வளவு எனப் பணம் அனுப்பி மாதம் ஒரு முறை அவரவர் குடும்பத்தின் பெயரில் அர்ச்சனைகள் செய்து பிரசாதம் அனுப்புவாங்க. வாராவாரம் வேணும்னாலும் அதுபடி கேட்டுக்கலாம். மேலும் இதைப் பற்றி எழுதினால் விரிவாக ஆகி விடும். நீங்க எதுக்கும் என்னோட சிதம்பர ரகசியம் புத்தகம் மின்னூலாகக் கிடைக்கும். படிச்சுப் பாருங்க! இப்போ இருக்கும் சின்ன தீக்ஷிதரின் தாத்தா காலத்தில் இருந்தே நம்ம ரங்க்ஸுக்குக் கட்டளை உண்டு. சிதம்பரம் கோயில் நிர்வாகமே இந்தக் கட்டளைகளால் தான் நடந்து வருகிறது. விபரம் தேவைனா படிங்க சிதம்பர ரகசியம்.

      Delete
    6. கோவிந்தராஜரையும் பார்க்கலாம். ஆனால் பட்டாசாரியார் யாரையும் எங்களுக்குத் தெரியாது. அங்கே மடப்பள்ளியிலேயே பிரசாதங்கள் கிடைக்கும். (முக்கியமான விஷயம் இல்லையோ!) தீக்ஷிதர்கள் பிரசாதங்கள் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து உள்ளே நுழையும் இடத்தில் கடை போட்டிருக்காங்க. அதில் கிடைக்கும். ஆனால் சுமாராகத் தான் இருக்கு!

      Delete
    7. நான் சிதம்பரம் போனது ஒரு தரம் ஒரே தரம்... இதில் எங்கே ரகசியம் பார்ப்பது? அதுதான் ரகசியத்தை சொல்லிட்டீங்களே...!!

      Delete
    8. ஸ்ரீராம்... இது என்ன... அஞ்சநேயர் படம் பார்த்துவிட்டால், நங்கநல்லூர் போகவேண்டாம்னு அர்த்தமா?

      Delete
    9. இனி போனால்சொல்லுங்க ஶ்ரீராம். மாலை நேரம் தரிசனத்தின் போது ரகசியம் காட்டி தீபாராதனை எடுக்கிறாங்க. முன்னெல்லாம் எங்களைப் போல் கட்டளைதாரர்கள் போனாலே கட்டளை தீக்ஷிதர்கள் அர்ச்சனை செய்து ரகசியம் காட்டி தீபாராதனையும் காட்டுவாங்க! இப்போ நிறுத்திட்டாங்களாம்.

      Delete
  4. மீண்டும் வரேன்....வாக்கிங்க் போய்ட்டு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, கமென்டிட்டுத் தானே போறீங்க! நேத்திக்கு ஶ்ரீராம் அப்பாலே வாரேன்னு போனார்! எப்பாலேனு தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. இன்னிக்கி வந்துட்டேன்...

      Delete
  5. மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
    நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
    செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
    கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
    என்று இறைவனைப் பட்டினத்தடிகள்//

    பட்டினத்தடிகளின் இப்பாடலை தமிழ்ப்பாடத் திட்டத்தில் படித்த நினைவு இருக்கிறது.

    சேந்தனார் கதையும் அப்படி அறிந்ததுண்டு அதோடு இப்பல்லாண்டு பாடலும் இங்க மீண்டும் நினைவு கூர்ந்தேன் அக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தி/கீதா, இந்தப் பட்டினத்தடிகள், பட்டினத்தார் இருவரும் ஒருவர் அல்ல என்பது என் கருத்து. பட்டினத்தார் காலத்தால் பிந்தியவர் என நினைக்கிறேன். பட்டினத்தடிகள் அவரை விடக் காலத்தால் முந்தியவர் என்பதும் என் கருத்து. இதற்கான விபரங்களைப் பின்னர் சொல்றேன்.

      Delete
  6. //சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.//

    சேந்தனார் மனைவி பட்டினத்தாரை வேண்ட பட்டினத்தார் விநாயகரை வேண்டிக் கொண்டதால் அவர் விலங்கை உடைத்து சேந்தனரை மீட்டதால் அந்த விநாயகருக்கு விலங்கு தறித்த விநாயகர் என்று பேர். திருவெண்காடு மேலவீதியில் இருக்கிறது அந்த விநாயகருக்கு கோவில்.

    அடிக்கடி அந்த விநயாகரை தரிசனம் செய்வோம். இந்த கோவில் பக்கத்தில் மாரி அம்மனுக்கும் ஒரு கோயில் இருக்கிரது அதற்கு நானும் பக்கத்து வீட்டினரும் செவ்வாய்க்கிழமை போவோம். (திருவெண்காட்டில் ஏழு வருடம் இருந்த போது)

    பட்டினத்தாரை காவலர்கள் வெட்டபோகும் போது அவர் கழுத்தில் பூமாலையாக விழுந்தாக சொல்வார்கள். பட்டினத்தார் திருவிழா நடக்கும் போது, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கல்யாணம் பேசபடும் அவருக்கு.
    இந்த கோவிலில் சேந்தனாரை காப்பாற்றிய கதை சொல்லபடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, திருவெண்காட்டுக்கும் சில முறை வந்திருக்கோம். ஆனால் விலங்கு தறித்த விநாயகர் அங்கே இருப்பதை அறியவில்லை. மாரி அம்மன் பற்றிக் கேள்விப் பட்டோம். தரிசிக்கவில்லை.

      Delete
  7. சேந்தனார் வரலாறும் அருமையாக சொன்னீர்கள்.
    பல்லாண்டு பாடல் பகிர்வுக்கு நன்றி.
    மாயவரத்தில் வைகுண்ட ஏகாசதிக்கும், திருவாதிரைக்கும் 21 காய் கொண்ட பாக்கெட் விற்பார்கள். சின்ன சின்ன துண்டங்கள் போட்டது.
    இங்கு அப்படி விற்பது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கோமதி, சென்னையில் துண்டங்கள் போடாமல் எல்லாக் காய்களும் காய்களாகவே சேர்த்து நிறுத்துத் தருவார்கள். நாம் எல்லாக் காய்களிலிருந்தும் தேவையான அளவுக்குப் போட்டுக்கலாம். எல்லாம் மொத்தமாகச் சேர்த்து எடுத்தால் கொஞ்சம் விலை குறையும். தனித்தனியாக வாங்கினால் விலை அதிகம்.

      Delete
  8. சேந்தனார் சரித்திரம் படித்து "களி"ப்புற்றேன். ஆனாலும் பட்டினத்தடிகளுக்கு பொக்கிஷத்தைத் திறந்துவிட என்ன தைரியம்! சட்டத்துக்குப் புறம்பான வேலை...

    ReplyDelete
    Replies
    1. பட்டினத்தடிகள் உத்தரவின் பேரில் பொக்கிஷத்தைத் திறந்தது சேந்தனார்! :))))) "களி"ப்புறக் களி நாளைக்கு!

      Delete
  9. சேந்தனார் வரலாறு அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. ஆடுகின்றானடி தில்லையிலே//

    அதிரா உறங்குகின்றேனே ஸ்கொட்லாந்திலே... ஹா ஹா ஹா கீசாக்கா பின்பு வாசிக்கிறேனே...

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி, ஞானி, செஃப், தமிழ்ப்புலவி, பூஸார், எப்போவேணா வந்து வாசிங்க! வரீங்களானு பார்த்துடறேன். :)))))

      Delete
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)... மீ திரும்ப வந்திருக்கிறேனே:).

      Delete
  11. வாசிக்க வாசிக்க மனதில் மகிழ்ச்சி... நன்றி அம்மா...

    ReplyDelete
  12. எல்லையில் நின்றாலும்
    அடி அந்தத்
    தில்லையில் நின்றாலும்
    சொல்லிடுவாய் கிளியே
    சிவசிவ என்று
    சொல்லிடுவாய் கிளியே!...

    திருவாதிரை நல்வாழ்த்துகள்..

    ஈசனருள் எங்கும் பொலியட்டும்...

    ReplyDelete