எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 28, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12

 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

 Image result for வீட்டு மாடம் கோலமும்

 மணிமாடக் கோலம், நன்றி கோமதி அரசு!                     


வீட்டு மாடம், அல்லது வீடு மாதிரிக் கோலமோ போடலாம். இல்லத்தைக் குறித்துச் சொல்லி இருப்பதால் மாடக் கோலமும் போடலாம்.

திருப்பாவை படங்கள் க்கான பட முடிவு   திருப்பாவை படங்கள் க்கான பட முடிவு

செழிப்பாக வளர்ந்ததால்  பால் தானாகச் சொரிந்து இல்லத்தையே சேறாக்குகின்றனவாம் எருமைகள். ஆகையால் வீட்டுக்குள் நுழைய முடியாமல், வீட்டின் வாசல் நிலைக்கட்டையைப் பிடித்துக் கொண்டு பனியில் தொங்கும் பெண்கள் விடாமல் தோழியை எழுப்புகின்றனர்.  இங்கேயும் ராவண வதம் புரிந்த ராமனைக் குறித்தே மனதுக்கு இனியான் எனச் சொல்கிறாள் ஆண்டாள்.  அத்தகைய இனியானைப் பாடக்கூட வாய் திறக்கமுடியாமல் தூங்குகிறாயா?  என்ன ஒரு பெருந்தூக்கம், கும்பகர்ணன் தோற்கும்படியாக என வசை பாடுகிறாள் ஆண்டாள்.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!= எருமை மாடுகள் கறக்க ஆளில்லாமல் பால் கட்டி அவஸ்தைப் படுகின்றனவாம். அதோடு கன்றுக்கு ஊட்டவும் முடியாமல் மாடுகள் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன. இங்கே கட்டுதல் என்பது அறியாமையில் நாம் கட்டப் பட்டிருப்பதையும் சொல்லலாம். எருமையும் அறியாமையின் அடையாளமே என முன்னரே பார்த்தோம். அப்படிக் கட்டிப் போட்டிருக்கும் எருமைகள் பால் கனம் தாங்க முடியாமல் தானாகவே பாலைச் சொரிகின்றன. அந்தப்பாலெல்லாம் கீழே விழுந்து கோபர்களின் இல்லமெல்லாம் பாலும், மண்ணும் கலந்து சேறாகிவிட்டதாம். இந்த கோபன் இல்லை போலும், அதான் பால் கறக்க ஆளில்லை!

அவன் எங்கேயும் போகவில்லை. நற்செல்வன் ஆச்சே! வெறும் பொருளால் ஆகிய செல்வம் மட்டும் இல்லை அவனிடம், அவனிடம் சிறந்த பக்திச் செல்வமும் இருப்பதாலேயே கோதை அவனை நற்செல்வன் என்று கூறுகிறாள். அத்தகைய நல்ல பக்திச் செல்வம் நிறைந்தவனின் தங்கை வீட்டிற்கு இப்போது போயிருக்கிறாள் ஆண்டாள். அவளை எழுப்புகிறாள்.

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! = பனி கொட்டுகிறது. அதுவும் கோகுலத்தில் கேட்கவும் வேண்டுமா?? கொட்டும் பனியில் நனைந்து கொண்டு கீழே நிற்கலாம் என்றால் கீழேயும் பால் கொட்டிச் சேறு. இத்தனை அமர்க்களத்தில் நாங்கள் நிற்க முடியாமல் உன் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். என்கிறாள் ஆண்டாள். அப்படியும் அவள் அசைந்தே கொடுக்கவில்லை.

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = சினம் என்ன சாதாரண சினமா? தன் மனைவியைச் சிறைப்பிடித்த சினம். சிறைப்பிடித்தவனும் சாமானியன் அல்லவே. சிறந்த சிவபக்தன். நவகிரஹங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றைத் தான் மிதிக்கும் படியாகப் போட்டுக்கொண்டவன். தன் அண்ணனாகிய குபேரனின் செல்வத்தைக் கொள்ளை அடித்து அவனை லங்காபுரியிலிருந்து அலகாபுரிக்கு விரட்டி அடித்தவன். ஈசனிடமே சரிக்குச் சரியாக நின்று அவரை ஆட்டி வைக்கப் பார்த்துப் பின்னர் அவர் கால்விரலின் கனம் தாங்காமல் கத்தோ கத்துனு கத்தி அதனால் ராவணன் என்ற பெயரும், சந்திரஹாசம் என்ற வாளும் பெற்றவன். இப்படிப் பட்ட ராவணனைத் தோற்கடித்தவன் யார்??

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்! =வேறே யாரு? நம்ம மனதுக்கு இனியவனே என்கிறாள் ஆண்டாள். ஆமாம், இந்தக் கண்ணன் படுத்தற பாடு தாங்கலை தான். கோபியர்களை அங்கேயும், இங்கேயும் அலைக்கழிக்கிறான். திடீர்னு ஒருத்திக்குப் பூச்சூட்டுகிறான் இன்னொருத்திக்குத் தலை வாரிவிடுகிறான். வேறொருத்தியின் வீட்டில் வெண்ணெய் சாப்பிடுகிறான். சரினு பார்த்தால் நம் வீட்டு முற்றத்திலே நிற்கிறான். புல்லாங்குழல் பாட்டிசையைக் கேட்டுப் போனால் ஒளிஞ்சுக்கறான்.

ஆனால் ஸ்ரீராமன் அப்படி இல்லை. கருணாமூர்த்தி! தனக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன்மையே செய்பவன், ராவணனைக்கூட இன்று போய் நாளை வா என்றே பெருந்தன்மையாய்க் கூறினான் அன்றோ! ஆகவே ஏ, பெண்ணே இந்தக் கண்ணன் நாமம் வேண்டாம், சரியா, ராவணனுக்கே சரணாகதி கொடுக்கத் தயாராய் இருந்த ஸ்ரீராமன் நமக்கும் கொடுப்பான். அத்தகைய மனதுக்கு இனிய நற்குணங்கள் நிரம்பிய ஸ்ரீராமனைப் பாடுவோம் வா, நாங்களும் அவன் புகழைப் பாடுகிறோம். நீ என்னன்னா இன்னும் தூங்குகிறாயே! எழுந்திரு பெண்ணே! இனியாவது எழுந்திரு! அக்கம்பக்கம் எல்லாம் பார்க்கிறாங்க பார்! எங்களுக்கு ஒண்ணுமில்லை அம்மா, உனக்குத் தான் அவமானம், இப்படியும் ஒரு பெண் இத்தனை பேர் இத்தனை நேரம், இத்தனைப் பாட்டுப்பாடியும் தூங்கறாளேனு சொல்லுவாங்க. வா, வா சீக்கிரமாய்!

இத்தகைய பக்தியைப் பற்றி நாராயண பட்டத்திரி சொல்வது:
"ஸோயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்ய ஸிக்ஷார்த்தமேவம்
விஸ்லேஷார்த்தி: நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா:
நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவந புரபதே வ்யாதுநு வ்யாதிதாபாந்

குருநாதரின் வாதநோயைத் தனதாக்கிக்கொண்ட பட்டத்திரி மஹாவிஷ்ணுவின் திவ்ய சரித்திரத்தைப் பாடுவதன் மூலம் தன் வாத நோய் தீரும் எனத் தீர்மானத்தோடு மஹாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதார மகிமை பற்றியும் பாடி வந்தார். அதிலே ஸ்ரீராமாவதாரத்தின் மகிமை பற்றிக்கூறுகையில் ஸ்ரீராமாவதாரமானது சாமான்ய மக்களுக்குப் படிப்பினை சொல்லுவதற்காகவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், தர்மம் என்பது எந்த எந்த சமயங்களில் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக்கூறுவதாயும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அன்பிற்குரியவர்கள் கொஞ்ச நேரம் கண்கள் எதிரே இல்லைனாலும் மனம் சஞ்சலம் அடையும், கவலை அடையும், வருத்தம் கொள்வோம். ஆனால் ஸ்ரீராமரோ தன் கண்ணுக்கும் மேலாக அன்பு செலுத்தி வந்த மனைவியை முதலில் ஸ்ரீராவணன் அபகரித்துச் சென்றபோது பிரிந்தார். பின்னர் அரச தர்மத்தைக் காக்கவேண்டி, நாடு முழுதும், தன் நல்லாட்சியைப் பாராட்டும் அதே சாமான்யக் குடிமக்கள் ராவணன் ஊரில் அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைத் தான் திரும்ப ஏற்றுக்கொண்டது சரியில்லை என்ற கோணத்தில் பேசிக்கொள்வதையும், இனி தாங்களும் அவ்வாறுதான் இருக்கவேண்டுமோ என்றும் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை நிரந்தரமாய்ப் பிரிகிறார். குடிமக்களின் நல்வாழ்க்கைக்காகவும், அவர்களுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாய் இருக்கவேண்டியும் தன் அன்பு மனைவியைப் பிரிந்தார் ராமர். இவ்வாறு திவ்யச் செயல்கள் புரிந்த ஸ்ரீராமர் குற்றமற்ற சீதையை எப்படிப் பிரிந்தார்?? தர்மத்தின் மேல் வைத்த அதீதப் பற்றா?? இவ்வளவு புகழ் வாய்ந்த ஸ்ரீராமர் இப்போது குருவாயூரப்பன் உருவில் வந்து இறங்கி இருக்கிறாரே, அவரே என் வாத நோயைப் போக்கி அருளவேண்டும் என்கிறார்.

ஆண்டாள் கண்ணனை விடுத்து ஸ்ரீராமனை மேற்கோள் காட்டியவாறு பட்டத்திரியும் மஹாவிஷ்ணுவின் அளப்பரிய லீலைகளை நினைத்து ஆநந்தம் அடைவதோடு நம்மையும் அடையச் செய்கிறார். சதா விஷ்ணுவின் லீலைகளைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும்படியும் கூறுகிறார்.


  

22 comments:

  1. ஆகா... அருமை...
    விரிவான விளக்கங்கள்....

    திருப்பாவையில் திளைத்திருப்பதும் இனிமை தான்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்களாவது வந்தீங்களே! ஸ்ரீராம் இப்போல்லாம் இந்தப் பக்கம் மார்கழிப்பதிவுனா வரதில்லைனு வைச்சிருக்கார் போல! :) அரட்டை சகோதரிகளும் பிசி! தி/கீதா மார்ச் வரை வர மாட்டார். பானுமதி எப்போவானும் வருவார். நெல்லை பயணத்தில். கோமதியும் பிசி! முடிஞ்சப்போ வராங்க! :))))) மத்தவங்களும் எப்போவானும் வராங்க! கில்லர்ஜி அவ்வப்போது தலையைக் காட்டுகிறார்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      நானும் தொடர்ந்து வராமைக்கு மன்னிக்கவும். என்னால் இயன்றவரை தொடர்கிறேன். நடுவில் நான்கைந்து நாட்கள் விடுபட்டு விட்டது. அவையனைத்தும் அவ்வப்போது படிக்கிறேன். நீங்கள் முன்பு எழுதியதை நான் படிக்கவில்லையாததால் முதலிருந்தே தொடர்ந்து வரவும் முயற்சித்தேன். நடுவில் சில பிரச்சனைகள். உடல் நிலை கோளாறுகள் என தடைபட்டு விட்டது. இனி தொடர்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. எனக்கு சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாக அமையாதது தான் பிரச்னை...

      வேலைநேரத்தில் முடிந்தவரை பல பதிவுகளையும் படித்து விடுவதுண்டு...

      ஆனால் அந்த கணினியில் தமிழ் எழுத்துரு பதிவதில்லை...

      மாலை அறைக்கு வந்தால் இணையம் இணைந்து வருவதில்லை...

      இடையே சமையல்... அத்துடன் மார்கழித் தொகுப்பினையும் கவனிக்க வேண்டும்...

      ஏதோ இந்த அளவுக்கு ஓடிக் கொண்டிருப்பது வரப்ரசாதம்...

      Delete
    4. வாங்க கமலா, உங்கள் முதல் கருத்து துரையின் கருத்தில் நான் சொன்னதுக்குப் பதிலாகப் போய்விட்டதால் அங்கே இடம் பெற்று விட்டது. அதைத் தொடர்ந்து துரையும் சொல்ல, நான் இப்போத் தான் கவனித்து உங்களுக்கு பதில் சொல்கிறேன். உங்கள் கருத்து பதிவாகி உள்ளது.

      Delete
    5. மீள் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி துரை. அரட்டை சகோதரிகளில் தேம்ஸ் நதியில் விழுபவர் இங்கே மார்கழிப் பதிவின் குளிர் தாங்காமல் அரட்டை அடிக்க முடியலையாம். சொல்லிட்டாங்க. இன்னொருத்தர் தான் பிசியோ பிசி. ஸ்ரீராமுக்கும் உங்களைப் போல் இணையம் இல்லையாம்! என்னத்தைச் சொல்ல. நீங்கள் நேரம் இருக்கையில் வந்து கருத்துச் சொல்லுவதற்கே நான் நன்றி சொல்ல வேண்டும். முடிஞ்சப்போ வாங்க துரை. ஏதோ அந்த நேரம் மனதில் யாரும் வரலையேனு தோன்றவே சொல்லிட்டேன். :( ஒருத்தர் கூடக் கருத்துச் சொல்லாட்டியும் பதிவு போடும் வழக்கம் உண்டு. என்னமோ திடீர் மனச்சோர்வு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    6. என் இரண்டு மூன்று பதிவுகளுக்கு சகோ துரைசெல்வராஜூ அதுதான் காணோமா?

      Delete
    7. இருக்கலாம். இப்போது பலருக்கும் இணைய இணைப்பு சரியில்லை என்கின்றனர். ஸ்ரீராமுக்கும் இணைய இணைப்பு சரியில்லை என்றார்.

      Delete
  2. இப்பொழுது வாசலில் கோலம் போடுவது குறைந்து விட்டது.
    தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஸ்ரீரங்கத்தில் கோலம் போடுவது இன்னமும் நிற்கவில்லை. வெளி ஊர்களுக்குச் சென்றாலும் வீட்டு வாயில்களில் கோலங்களைப் பார்க்கிறேன்.

      Delete
  3. ஆஹா... சிறப்பான விளக்கங்கள். சுவையான பகிர்வு.

    விளக்கத்துடன் படிக்க ஆனந்தம் தான். தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்வேன் நேரம் எடுத்து!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்!

      Delete
  4. அன்பு கீதா , அருமையான விளக்கம்.
    அக்கம்பக்கத்தார்களும் அறிந்து கொண்டு விடுவார்களோ என்ற பயம் எப்பொழுதும் உண்டு போலும்.

    இப்போது விடுமுறை நாட்களாக இருப்பதால் பின்னூட்டம் எழுத நேரம் இல்லையாக இருக்கலாம்.

    நம் கடமை எழுதுவது.
    உடல் நலம் சரியாக இருக்க வேண்டும் என்பதே
    என் வேண்டுகோள்.

    நேற்று கடும் வயிற்றுவலிக்கு நடுவில் இங்க்லீஷ் பாட்டியை அமெரிக்கா அனுப்பி வைத்தேன்.
    கொஞ்ச நாட்கள் குழந்தைகளோடு செலவழைக்க வேண்டும்.
    கோதையைப் பாடி,உரை கேட்காவிட்டால் மனம் தெளிவடைய மறுக்கிறது.
    பார்க்கலாம்.
    நாராயண பட்டத்ரியின் ராகவ மஹிமை அருமை.
    படித்தாலே பாபம் போகும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, விடுமுறைனு மட்டும் இல்லை, இத்தகைய கனமான விஷயங்களைப் படிக்கப் பொழுதும் குறைவாக இருப்பதால் வருவதில்லை போலும்! இங்க்லீஷ் பாட்டியை நானும் வந்து பார்த்தேன். சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்.

      Delete
  5. காலையில் வர முடிவது இல்லை ஆனால் பதிவுகளை படித்து கருத்து சொல்லி விடுகிறேன்.
    பதிவு மிக அருமை.
    அருமையான விளக்கம். பதிவில்
    என் கோலம் இடம் பெற்றது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நேரம் இருக்கையில் வாங்க கோமதி, கைப்புண்கள் ஆறி விட்டனவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. கைப்புண்கள்ஆறி விட்டது. விசாரிப்புக்கு நன்றி.உடன் பிறப்புகள் வீட்டுக்கு விடுமுறைக்கு அவர்கள் பேரன் பேத்திகள் வந்து இருக்கிறார்கள், அவர்களை போய் பார்ப்பது. ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ள நட்பை போய் பார்த்து உடல் நலம் விசாரித்தல். காலை கோவில் ,வீட்டில் பூஜை என்று நேரம் போகிறது. விடுமுறை காலம் என்பதால் பேரன் பேசுகிறான் . அவனுடன் விளையாட்டு , பேச்சு என்று பொழுதுகள் போகிறது. காலை நேரத்தில் வர முடியவில்லை.
      இன்று உறவினர் மாலை வருகிறார்கள்.

      Delete
    3. நிதானமாய் நேரம் கிடைக்கையில் வாருங்கள் கோமதி!

      Delete
  6. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவுக்கு ஒரு கருத்துரை பதிந்திருந்தேன். காக்காவோ, இல்லை இங்கு நிறைய இருக்கும் கழுகோ தூக்கி கொண்டு போய் விட்டது போலும்..! காணவில்லையே!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. எதுவும் தூக்கிச் செல்லவில்லை கமலா. உங்கள் பதிவு முன்னால் இடம் பெற்றுள்ளது. அவ்வளவே!

      Delete
  7. படித்தேன்.   கோமதி அக்காவின் வரைந்த கோலத்தை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என் கோலத்தை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete