இன்னிக்குக் குளிக்கும்போது நம்ம ரங்க்ஸ் கீழே விழுந்துட்டார். தினம் தினம் தானே குளிப்பதால் இப்போக் கொஞ்ச நாட்களாகக் கிட்டே இருப்பதில்லை; அவரும் வேண்டாம், நீ போய் சமையலைப் பார் என்பார். ஆனால் கதவை உள்ளே தாழ் போட்டுப்பார்னு நினைக்கலை. இன்னிக்குச் சாதம் வைச்சுட்டு ஏற்கெனவே வேக வைச்சிருந்த குட்டி உருளையை எடுத்துக் கொண்டு தோல் உரிக்க வந்து உட்காரும் முன்னரே கீதா, கீதா எனக் கூப்பிடுகிறாபோல் இருந்தது. நிஜமா, அல்லது என்னோட பிரமையானு சுதாரிக்கும் முன்னர் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கூவல். என்னால் என்னதான் வேகமாய்ப் போனாலும் உடனே போக முடியாதே! இப்போத் தானே நடை பயிலும் குழந்தை போல் நடக்கிறேனே! ஆகவே நானும் பதிலுக்குக் கத்திக் கொண்டே போனேன்,. போனால் உள்ளே இருந்து ரங்க்ஸ் சத்தம் போடுகிறார், கீழே விழுந்துட்டேன் என்று. கடவுளே! என்னோட கை, கால்கள் இயங்காது போல் பின்னிக்கொண்டன. கதவைத் திறக்க முயன்றால் உள்ளே தாழ் போட்டிருக்கார்.
கடவுளே இப்போ என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து வேலை செய்யும் பெண் தாமதமாக ஒன்பதரைக்கு வந்திருந்தார். என்னோட கூச்சல், அவரோட கூக்குரல் எல்லாம் கேட்டுட்டு அவங்க வீடு சுத்தம் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுட்டு அங்கே வந்தார். கதவைத் திறக்க முயன்றார், அதுக்குள்ளே உள்ளே இருந்து ரங்க்ஸும் நல்ல வேளையாக் கைக் கம்பு உள்ளே எடுத்துப் போயிருந்ததால் அதன் உதவியோடு கதவுத் தாளைத் தள்ள ஆரம்பிச்சார். இங்கேயும், உள்ளே இருந்தும் முயன்றதில் கதவு தாழ் திறந்து கொண்டது.எக்கச்சக்கமான நிலையில் கீழே விழுந்திருந்தார். ஆனால் மெதுவாக எழுந்து எப்படியோ உட்கார்ந்து விட்டார். வேலை செய்யும் அம்மா உள்ளே போய்த் தூக்க முயல, அவரும் எழுந்திருக்க முயல வழுக்கிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் இன்டர்காம் மூலம் செக்யூரிடியை அழைத்து யார் இருந்தாலும் உடனே வரச் சொன்னேன். அப்போது ட்யூடியில் இருந்தவர் உடனே மேலே வர, வேலை செய்யும் பெண்ணும் அவருமாகத் தூக்கிக் குளிக்கும் நாற்காலியில் உட்கார்த்தி வைத்தனர்.
பின்னர் வாளியை ஸ்டூலில் வைத்து விட்டுத் தண்ணீர் நிரப்பி இருந்ததால் கிட்டே வைத்துக் குளிக்க வைத்துவிட்டுப் பின்னர் வெளியே வந்தார், செக்யூரிடி அவர் வேலையைக் கவனிக்கப் போக வேலை செய்யும் அம்மா வேலையைத் தொடர நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தேன்.
எல்லோரும் துணைக்கு ஒருத்தர் வேண்டும் என்கின்றனர். ஆனால் வரவங்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சொல்றாங்க. ஒரு அம்மா வீட்டோடு இருந்து பார்த்துக் கொண்டு சமைத்துப் போடுவேன் என தினசரியில் விளம்பரம் கொடுக்க அவங்களை அழைத்துப் பேசினால் காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்து காலை ஆகாரம், மதியம் சாப்பாடு முதலியன பண்ணி வைச்சுட்டுப் பத்துமணிக்குள் போயிடுவாராம். அவருக்கு காலை பத்தில் இருந்து மாலை நாலு, ஐந்து, சில நாட்கள் ஆறு மணி வரை அரசுக் காய்கறிப் பண்ணையில் வேலையாம். அதை முடிச்சுட்டு நேரம் இருந்தால் வந்து இரவு உணவு தயாரிப்பாராம். அப்படி வந்தால் இரவு இங்கேயே தங்கிப்பாராம். அதைத் தான் வீட்டோடு இருந்துனு சொல்லி இருக்கார் போல. வர முடியலைனா நாமே ஏதானும் பண்ணிக்கணுமாம். இல்லைனா ஓட்டலில் வாங்கிக்கோங்கனு புத்திமதி. அவங்க டிஃபன் செய்தாலும் இட்லி மட்டும் தான் பண்ண முடியுமாம். எண்ணெய் விட்டு தோசை, அடை, சப்பாத்தி எல்லாம் பண்ணினால் உங்களுக்கு ஜீரணமே ஆகாது என்றார். இங்கே நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவில் சப்பாத்தி அல்லது தோசை தான் பண்ணறேன்.
இதுக்கெல்லாம் நாங்க அட்ஜஸ்ட் செய்து கொள்ளணும் என்றும் சொன்னார். அதோடு குழம்போ, ரசமோ, சாம்பாரோ ஏதோ ஒண்ணு தான் பண்ணுவாராம். அதையே இரவு உணவுக்கும் வைச்சுக்கணுமாம். அவங்க இங்கேயே சாப்பிட்டுக்கறாங்களானு கேட்டதுக்கு எனக்கு இனிப்புப் பதார்த்தம் தான் ரொம்பப் பிடிக்கும். நான் ஏதாவது இனிப்புப் பண்ணிச் சாப்பிட்டுப்பேன். நான் சாதத்தில் குழம்பெல்லாம் உங்களைப் போல விட்டுக் குழைத்துச் சாப்பிட மாட்டேன் என்றார், இத்தனைக்கும் அவர் நாங்க சாப்பிடும்போது வரலை. சாப்பிடுவதைப் பார்த்ததும் இல்லை. சாப்பிட்ட பாத்திரங்களை ஒழிச்சுப் போடணுமேனு சொன்னதுக்கு அதுக்குத் தனியா ஆள் போட்டுக்கோங்க, என்னால் அதெல்லாம் இருந்து செய்ய முடியாது. அப்படி நான் தான் செய்யணும்னா சம்பளத்தில் கூடக் கொடுக்கணும் என்பதோடு பாத்திரங்களை இரவு நான் எப்போ வருவேனோ அப்போ ஒழிச்சுப் போடறேன். அது வரை டேபிள்ளேயே இருக்கட்டும் என்றார்.
எங்க வீட்டுக்கு வரவங்க யாரா இருந்தாலும் இவ்வளவு முடியாத சமயத்தில் கூட சமையலறை சுத்தமாக இருப்பதோடு வீட்டிலும் ஆங்காங்கே ஒட்டடை எல்லாம் தொங்காமல் கழிவறை, கை கழுவும் வாஷ் பேசின் எல்லாமும் சுத்தமாகப் பராமரிக்கிறீங்க என்பார்கள். இந்த அம்மாவை நான் வைத்துக் கொண்டால் வீடு அதோகதி தான். அதோடு இதை எல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்துக்கணும்னு வேறே சொல்றாங்க. என்னால் இதை எல்லாம் அட்ஜஸ்ட் செய்துக்க முடியாது என்பதால் பையர், பெண்ணிடம் பேசிட்டுச் சொல்றோம்னு சொல்லிட்டோம். அடுத்து நம்மவருக்கு திடீர்னு ஹோமுக்குப் போனால்னு ஒரு எண்ணம் தோன்ற பெருங்களத்தூரில் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர் திரு இன்னம்பூரார் இருந்த ஹோம் நன்றாக இருப்பதாக அவர் சொல்லிக் கொண்டே இருந்ததோடு என்னை அழைக்கவும் அழைத்தார். அவங்க விலாசத்தைக் கேட்டு வாங்கி அவங்களோடு பேசினதில் மனதில் அவ்வளவாய்த் திருப்தி வரலை. அபார்ட்மென்ட் தனியா இருக்காம். அதில் தங்கறவங்க டைனிங் ஹாலுக்குப் போய்ச் சாப்பிடணுமாம். எங்களைப் போல் முடியாதவங்களுக்கு ஒரு ஹால், ஒரு படுக்கை அறை என்றார். அழைப்பு மணியெல்லாம் பொருத்தி இருப்பதால் நீங்க எப்போக் கூப்பிட்டாலும் ஆட்கள் உடனே வருவாங்க என்றார். எல்லா வேலைகளும் செய்து கொடுக்கிறங்க தான். பணம் தான் அதிகம். மின்சாரக் கட்டணம் கூட ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய். தனியாக் கொடுக்கணும்.
எங்க உறவுப் பெண் ஒருத்தர் என் வயது கோவையில் பிரபலமான ஹோமில் தங்கிட்டு அங்கிருந்து வருவதற்கு முயற்சி பண்ணி மிகவும் கஷ்டத்தோடு நான்கு வருஷம் சிரமப்பட்டு இப்போத் தான் போன வருஷம் வந்து விட்டார். இன்னும் சிலர் ஹோமுக்குப் போன அன்றே இறைவன் அழைப்பில் போயிட்டாங்க. நல்ல ஹோமெல்லாம் இருக்குன்னாலும் நமக்கு மனது ஒத்துக்கணும்,. ஆகவே இப்போதைக்கு ஏதேனும் ஏஜென்சி மூலம் தங்க ஒரு ஆள் பகல் வேளை மட்டும் இருந்தாலும் போதும்னு பார்க்கிறேன். கிராமங்களிலும் விசாரிக்கிறேன். எனக்கு என்ன தான் உதவிக்கு ஆள் இருந்தாலும் என் வேலைகளை நானே செய்து கொண்டிருந்த/கொண்டிருப்பதால் மனம் சமாதானம் ஆகச் சில நாட்கள் ஆகும். பார்ப்போம். இறைவன் என்ன நினைக்கிறானோ அதுபடி. எங்கே போவது என்றாலும் அதற்கு முன்னால் சாமான்களை ஒழுங்கு செய்யணும், போகிற இடத்திற்கு என்னெல்லாம் கொண்டு போகலாம் என்பதை யோசிக்கணும். முக்கியமாய் ஸ்ரீராமர்! வேண்டாம் அழுதுடுவேன்.
இப்போ இங்கே இருப்பதால் என்னிக்கானும் மாறுதல் தேவைப்பட்டால் ஸ்விக்கி மூலம் உணவு வரவழைக்கிறேன். ஹோமில் அதெல்லாம் முடியாது. நமக்குத் தேவைக்கு ஒரு காஃபி கூடப் போட்டுக்க முடியலைனா ரொம்பக் கஷ்டம். யோசிக்கணும் விரைவில் ஆண்டவன் நல்லவழி காட்டுவான் என்னும் நம்பிக்கையோடு இருக்கேன்.