எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 07, 2016

நவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்!

இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.

      அன்னபூரணி க்கான பட முடிவு

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,

நெய்ப் பாயசம் செய்முறை:

அரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன்.

புட்டு செய்முறை:
நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.

அரிசி கால் கிலோ

பாகு வெல்லம் கால் கிலோ

தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை:
இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:

அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.

புட்டுச் செய்தால் இங்கே சாப்பிட ஆள் இல்லை என்பதால் நான் புட்டுச் செய்யவில்லை! இன்றைய தினம் கடலைப்பருப்புச் சுண்டல் தான் செய்யப் போகிறேன். 

13 comments:

  1. படித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், எப்போச் செய்வீங்க?

      Delete
  2. எல்லாமே நன்றாக இருக்கு. வழிபடும்முறை, அருமை.அன்புடன்

    ReplyDelete
  3. புட்டு செய்து பார்சல் அனுப்பி வைக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. எங்கே! இனிப்புப் பண்டங்களே வீட்டில் செய்வதில்லை. தவிர்க்க முடியாமல் பாயசம் மட்டும் முக்கியமான தினங்களில்! :(

      Delete
  4. வெள்ளி/செவ்வாய் வந்தால் புட்டு.... என்னிக்கு கிடைக்கும் எனக் காத்திருந்தேன்.... :)

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. புட்டுச் செய்தால் நிச்சயம் உண்டு! :)

      Delete
  5. என் மனைவி தாமரைக் காசுகளால் தினம் அர்ச்சனை செய்கிறாள்

    ReplyDelete
    Replies
    1. என்னால் கீழே அமர்ந்து பூஜை செய்ய முடிவதில்லை என்பதால் பூஜை எல்லாம் விட்டுப் பல வருடங்கள் ஆகின்றன. ஸ்லோகங்கள் சொல்வது மட்டுமே! :(

      Delete
  6. பதிவர்கள் யாரும், முன்'கூட்டியே சொல்லிவிட்டு வந்தால், அந்த அந்த நாளுக்கு நான் எழுதியிருக்கிறபடி பண்ணிவைப்பேன் என்று நீங்கள் எழுதியிருந்தால், எத்தனைபேர் வருகிறார்களோ அதற்கு ஏற்றபடி எல்லாவற்றையும் பண்ணியிருகலாமே.. சாப்பிட ஆள் இல்லை என்று, நெய்ப்பாயசம், புட்டு என்று வித்யாசமாகச் செய்யாமல் சுண்டலைப் பண்ணியிருக்கிறீர்களே...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், நெய்ப்பாயசம் எல்லாம் அலுக்கும் அளவுக்குச் செய்தாயிற்று. முன்னெல்லாம் ஒவ்வொரு சித்திரை விஷுவுக்கும் நெய்ப்பாயசம் தான்! இப்போதெல்லாம் இனிப்புக்குத் தடா என்பதால் எதுவும் பண்ணுவதில்லை! :)

      Delete
  7. நெய்பாயாசம் என்பதை நாங்கல் தேங்காய் அரிமாவுப் பாயாசம் என்போம் வீட்டில். புட்டு நீங்கள் சொல்லியிருக்கும் இரு முறையிலும் செய்வதுண்டு என்றாலும் முதல் முறைதான் முதல் சாய்ஸ். நவராத்திரியின் போது பலரும் புட்டு செய்திருந்தார்கள் வெள்ளியன்று ஆனால் எல்லாமெ ஈரமாகவே இருந்தது. கொச கொசவென்று. அதுவும் வெல்லமும் அதிகம்...உதிர் உதிராக இல்லை..

    கீதா

    ReplyDelete