எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 04, 2019

மீண்டும் மஹாலக்ஷ்மி தரிசனம்! பண்டர்பூர் பயணம்!

தொடர்ந்து எழுதி முடிக்கலாம்னு பார்த்தால் நாலைந்து நாட்களாக அடிக்கடி மின் வெட்டு. அதிலும் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட முழு மின்வெட்டோனு நினைக்கும்படி இருந்தது. கிடைத்த நேரத்தில் ஒரு சில பதிவுகளுக்குத் தான் போக முடிந்தது. எழுத முடியலை. இரவிலும் ஒன்றரை மணி நேரம் போல் மின்சாரம் போய் விட்டது. இன்னிக்கும் காலை ஒன்பது அல்லது ஒன்பதரைக்குப் போன மின்சாரம் இப்போ ஒன்றரைக்குத் தான் வந்தது. இது தொடரும் மின்வெட்டா அல்லது பராமரிப்புக் காரணமான மின்வெட்டானு தெரியலை. அறிவிப்பெல்லாம் கொடுக்கவில்லை.  அதன் காரணமாகவே எழுதி முடிக்க முடியாமல் போகிறது.

ஏற்கெனவே அதீத சூடவெயில் காரணமாக வேனல் கட்டிகள் குழந்தைகளுக்கு வராப்போல் வந்து  ஒரு நாளைக்கு 100ரூக்கு  என மாத்திரை சாப்பிடும்படி ஆகி விட்டது. சூரியன் என்னமோ காலை வேளையில் போக்குக் காட்டினாலும் தாமதமாக எழுந்ததை ஈடு கட்டும் விதத்தில் சுட்டெரிக்கிறான். இன்னிக்கு அக்னி நக்ஷத்திரம் ஆரம்பமாம். 41 டிகிரி செல்ஷியஸ் காட்டுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கணினியில் ரொம்ப நேரம் உட்கார்ந்தாலும் சூடுதான் என்பதால் அதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது. கிடைக்கும் கொஞ்ச நேரத்துக்குள் எல்லாம் முடிக்க முடிவதில்லை! ஆகவே திடீர்னு காணாமல் போனால் தேடாதீங்க! வரவேண்டிய நேரத்துக்குக் கரெக்டா வந்துடுவேன்! :))))
********************************************************************************

மறுநாள் காலை எழுந்ததும் வழக்கம் போல் தேநீருக்குச் சொல்லிவிட்டு வாங்கிக் குடித்தோம். பின்னர் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் கோயிலுக்குச் செல்லத் தயாரானோம். லிஃப்டில் கீழே வந்து அங்கே போய்க் கொண்டிருந்த ஓர் ஆட்டோக்காரரை அழைத்துக் கோயில் வாசலில் விடும்படி கேட்டுக் கொண்டோம். அவரும் அழைத்துச் சென்றார். நிற்கவா எனக் கேட்டவரை வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டோம். வாசலில் விற்றுக் கொண்டிருந்த பூக்காரர்களிடம் கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டு நேற்றுச் சென்ற அதே வழியில் சென்றோம். கூட்டமே இல்லை. என்றாலும் சுமார் நூறு, இருநூறு பேர்கள் இருப்பார்கள். ஆனால் அங்குமிங்குமாக இருந்ததால் சந்நிதியில் கூட்டம் தெரியவில்லை. முதல் நாளைப் போல இன்றும் சரஸ்வதியையும் காளியையும் தரிசித்துக் கொண்டு நேற்றுப் பார்க்காமல் விட்ட மஹாகணபதியையும் தரிசித்துக் கொண்டோம். அங்கிருந்து சந்நிதிக்குச் செல்லும்போது நாங்கள் தமிழில் பேசுவதைக் கண்ட ஓர் தம்பதியினர் எங்களை விசாரிக்க நாங்களும் அவர்களை விசாரித்தோம். அவர்கள் நால்வர். பல வருஷங்களாக நண்பர்களாம்.சென்னை வாசிகள். ஒருத்தர் இருப்பது வட சென்னை பெரம்பூர். இன்னொருத்தர் இருப்பது தென் சென்னை க்ரோம்பேட்! ஆனாலும் நட்பு இருவரையும் குடும்பத்துடன் இங்கே தரிசனத்துக்கு அழைத்து வந்திருந்தது.

பின்னர் சந்நிதிக்குச் சென்று அம்பிகையைக் கண்ணாரப் பார்த்தோம். பட்டர் தான் எழுந்து போய், எழுந்து போய் கூடியவரை மறைத்துக் கொண்டிருந்தார். என்றாலும் விடாமல் நின்று பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அங்கே ஓர் இடத்தில் அம்பிகைக்கு மக்கள் அளித்த உண்டியல் காணிக்கைகள் மூலம் பண்ணப்பட்ட தங்கப்பல்லக்கு காட்சி அளித்தது. அதை ஓர் க்ளிக் செய்து கொண்டேன்.

வெளியே வந்து பிரகாரங்களைச் சுற்றிய போது சில இடங்களில் பிரகாரங்களை மட்டும் க்ளிக்.




அதிகம் படங்கள் எடுக்கலை. நம்ம ரங்க்ஸுக்குப் பசி வந்து விட்டது. ஆகவே அங்கே வெளியே கடை போட்டிருந்த ஓர் பெண்மணியிடம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக அம்பிகையின் படங்கள் மற்றும் ஶ்ரீசக்ரம் படங்கள் வாங்கிக் கொண்டோம். பின்னர் நாங்கள் நுழைந்த வாயில் வழியே வெளியே வந்தோம்.  காலை உணவுக்கு எங்கே போகலாம் என யோசிக்கையில் கோயிலுக்கு எதிரேயே இரண்டு, மூன்று கடைகள் திறந்து வைத்திருந்தனர். ஓர் கடையில் நன்றாக இருக்கும் என ஓர் ஆட்டோக்காரர் சொல்லவே அங்கே போனோம். நான் எனக்குப் போஹா மட்டும் போதும் எனச் சொல்லவும், அவரும் அதுவே வாங்கிக் கொண்டார். காரமில்லாமல் இருக்கணும் என நினைத்து வாங்கியது ஒரே பச்சை மிளகாய்! பொறுக்கி மாளலை! அதைச் சாப்பிட்டுவிட்டுத் தேநீர் வேண்டாம்னு சாச்(ஸ்)(chach) கேட்டோம். மோர் என்னமோ நல்ல திக்காக இருந்தது. ஆனால் இதிலும் பச்சைமிளகாய்க் கூட்டம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனதுக்குள் சொல்லிவிட்டு எல்லாவற்றையும் எடுத்துவிட்டுக் குடித்தாலும் காரம் நாக்கில்!

பின்னர் அங்கிருந்து ஓர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு ஓட்டலுக்குப் போனோம். அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு நாங்க  சொன்ன ஓட்டல் பெயர் புரியாமல் நீளப் போனார். அவரை வழிமறித்து யூ டர்ன் அடிச்சுத் திரும்பி வரணும்னு சொல்லி நாங்க தங்கிய இடத்துக்கு வந்தோம். மேலே அறையில் போய்க் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாமான்கள் எல்லாவற்றையும் கட்டியாச்சானு சரி பார்த்து விட்டுப் பத்து மணி போலக் கீழே இறங்கலாம்னு நினைச்சோம். ஏனெனில் பனிரண்டு மணிக்கு பண்டர்பூருக்கு வண்டி அங்கிருந்தே போகிறது. நாக்பூர் போகும் ரயில் பண்டர்பூர் வழியாகச் செல்கிறது. அதில் இரண்டு படுக்கை உள்ள இருக்கைகளை இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தோம். 

நாங்கள் கீழே சாமான்களை எடுத்துக் கொண்டு போகவும் எங்கள் ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் வரவும் சரியாக இருந்தது. ஓட்டலில் பணம் செட்டில் செய்துவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போனோம். நல்லவேளையாக ரயில் அங்கிருந்தே கிளம்புவதோடு முதலாம் நடைமேடையும் கூட. ஆகவே அங்குள்ள முதல் வகுப்புப் பிரயாணிகள் தங்குமிடம் சென்றோம். ஒரே கூட்டம். நெரிசல். கழிவறை நாற்றம். சகித்துக் கொண்டு உட்கார்ந்தால் என்ன ஆச்சரியம்! காலையில் கோயிலில் பார்த்த நபர் க்ரோம்பேட்டைக்காரர்.அவர் மனைவியும் நண்பர் மற்றும் அவர் மனைவியோடு இன்னொரு பயணிகள் தங்குமிடத்தில் தங்கி இருப்பதாகவும் அங்கே கொஞ்சம் நன்றாக இருக்கும் எனவும் அவர் சொன்னார். ஆனால் இங்கே ஐஆர்சிடிசியின் உணவகம் பக்கத்தில் இருந்தது. நம்ம ரங்க்ஸுக்கு மத்தியானம் கொஞ்சமானும் சாப்பிடணும்! ஆனால் ரயில் வர நேரமிருந்ததால் அங்கிருந்து வந்துக்கலாம்னு நினைச்சுக் கிளம்பினோம். 

அந்த உணவகத்தில் விசாரித்தால் உணவு தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். சரினு என்னைக் கொண்டு போய் அந்தச் சென்னைப் பயணிகள் பக்கம் உட்கார வைத்துவிட்டு அவர் மட்டும் சாப்பிடச் சென்றார். நான் அவர்களுடன் பேசிக் கொண்டு பொழுதைக் கழித்தேன். சிறிது நேரத்தில் ரயில் வர நாங்கள் கிளம்பினோம். நான் தயிர் மட்டும் வாங்கிக் கொண்டேன். அமுல் கிடைக்குமானு கேட்டதுக்கு அவங்க சரியாச் சொல்லலை. அமுல் விற்பனைக்கூடம் கொஞ்சம் தள்ளி இருந்திருக்கு! நமக்கு அது தெரியலை. அவங்க கொடுத்த தயிரை வாங்கிக் கொண்டேன். அதில் 12 ரூ போட்டிருக்கப் பதினைந்து வாங்க எனக்கும் அவங்களுக்கும் ஒரு வாதவிவாதம். முடிவில் நான் 12 ரூ கொடுத்து வாங்கிக் கொண்டு வெற்றிப்புன்னகையுடன் திரும்பினேன். வழியில் பார்த்தால் அமுல் பொருட்கள் விற்பனை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  அவங்க "பெண்"களூர் போவதால் ரயிலுக்கு இன்னும் நேரம் இருந்தது. கோலாப்பூரிலிருந்து "பெண்"களூருக்கு ரயிலும், விமானமும் நேரடிப் போக்குவரத்து இருக்கு! இது தெரிஞ்சால் நாங்க புனேயில் தங்காமல் திருச்சியில் இருந்து நேரடி விமானத்தில் "பெண்"களூர் வந்து அங்கிருந்து கோலாப்பூர் போயிருந்தால் அலைச்சலும் மிஞ்சி இருக்கும். பணமும் மிஞ்சி இருக்கும். சரியாக விசாரிக்கலை. இனி என்ன செய்ய முடியும்? ரயிலில் ஏறிக்கொண்டு எங்கள் படுக்கை இருக்கைக்கு வந்தோம். ஒரு பக்கம் எனக்குச் சிரிப்பு! ஏனெனில் சாயங்காலம் /மத்தியானம் மூன்றரை மணிக்கெல்லாம் இது பண்டர்பூர் போயிடும். அதுக்கு படுக்கையா என நினைச்சேன். எங்களோட வந்த ஒரு பெண்மணியும் நாங்க எங்கே இறங்கப் போறோம்னு கேட்டுட்டு பண்டர்பூர்னதும் அதிசயமாப் பார்த்தாங்க! இஃகி,இஃகி. 

ரயிலில் தயிரைச் சாப்பிட்டேனோ இல்லையோ மேல் வயிற்றில் வலி! ரொம்பவே சிரமமாகப் போய் விட்டது. என்ன செய்யறதுனு தெரியாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்லிக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். நம்மவர் நல்ல தூக்கம். கொஞ்ச நேரத்தில் பண்டர்பூர் வரும் அறிகுறிகள் தெரிய நான் அவரை எழுப்ப அவர் இல்லைனு சொல்ல, நான் ஆமாம்னு சொல்லக் கடைசியில் பண்டர்பூர் வந்தே விட்டது. அடிச்சுப்பிடிச்சு இறங்கணுமேனு கவலைப்பட்டால் டிடிஆர் வந்து பத்து நிமிஷம் நிற்கும். நிதானமா இறங்குங்க என்றார். அப்பாடானு பெருமூச்சு விட்டுக் கொண்டு கீழே இறங்கினோம். முன்னர் பார்த்தது நான்கே நடைமேடைகள் உள்ள சின்ன ரயில்வே ஸ்டேஷன். அதில் இரண்டில் மட்டும் ரயில் போகும். இப்போப் பார்த்தால் ரயில் நிலையமே மாறி விட்டிருந்தது. கீழே இறங்கவும் இங்கேயும் ஓர் ஆட்டோக்காரர்!

42 comments:

  1. //இது தொடரும் மின்வெட்டா// - இந்தப் பிரச்சனை உங்க ஊர்ல இருக்கா? இங்க சென்னைல அப்போ அப்போ டிரிப் ஆகுமே தவிர மின் வெட்டுன்னு நான் பார்க்கலை (ஜெனெரேட்டர் இருக்கறதாலயும் இருக்கலாம்). என் மனைவி அப்போவே சொன்னா... சென்னைல மின்வெட்டு குறைவா இருக்கும், தென் தமிழகம் போகப் போக மின்வெட்டு, இண்டெர்னெட் வேகம் என்று ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும். அதுனால செட்டில் ஆக விரும்பும் இடத்தில் (62+ல்) 2 மாதம் வாடகை வீட்டில் தங்கி அனுபவத்தைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம் என்று சொன்னா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. தெரியாது! மின்சார நிலைமை பற்றிப் பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சிச் செய்திகளிலோ வந்ததாய்த் தெரியலை! சென்னையிலும் மின்வெட்டு உண்டு. தி.நகர், கோபாலபுரம், நந்தனம், அடையாறு, க்ரீம்ஸ் ரோடு, போயஸ் கார்டன் இவை தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும். அதிலும் க்ரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் போன்ற தென் சென்னைப் புறநகரத்துப் பகுதிகள், வட சென்னைப் பகுதி (தண்டையார்ப்பேட்டை, எண்ணூர், வண்ணாரப்பேட்டை போன்றவை) அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின் வெட்டு இருக்கும். இங்கே நாங்கள் வந்த புதிதில் 2012 ஆம் ஆண்டில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அப்போதும் சென்னையிலும் ஒரு நாளைக்கு 3 மணி நேர மின்வெட்டுப் பிரிச்சுப் பிரிச்சு இருந்தது. நாங்க ஜெனரேட்டர் வைச்சுக்கலை. இன்வெர்டர் இருக்கு! ஆனாலும் குறைந்த அளவுக்குத் தான் பயன்படுத்துவோம். இன்வெர்டர் எனில் இரண்டு மின் விசிறிகள் ஒரே சமயம் போடுவதில்லை. மிக்சியில்/கிரண்டரில் அரைக்க மாட்டோம்! தொலைக்காட்சி இன்வெர்டர் மூலம் பார்க்க முடியாது! அவசியத்துக்கு மட்டுமே அந்த மின்சாரம் பயன்படுத்திப்போம்.

      Delete
  2. வழியில் சாப்பிடும் கார உணவுகள் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலிருக்கு. போஹா என்று கேட்பதற்குப் பதில் காரமில்லாமல் என்ன இருக்குன்னு கேட்டிருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. காரமில்லாமல் அதே ப்ரெட் டோஸ்ட் தான்! :)))) மற்றபடி வடை சாம்பார்(திடீர் வடைமாவில் பண்ணித் தராங்க) தோசை, சாம்பார், இட்லி சாம்பார், உப்புமா போன்றவை. போஹா உறைக்காது என நினைச்சால் மிளகாயிலேயே பண்ணி இருக்காங்க! எல்லாத்தையும் எடுத்துட்டுத் தான் பொறுமையா உட்கார்ந்து சாப்பிட்டேன். :) May be due to my irritable bowels! :)))) Cannot help it!

      Delete
    2. நான் சின்ன வயதிலிருந்து காரம் மிக மிக அதிகமாக சாப்பிடுவேன். (நாந்தான் ரொம்ப காரம் சாப்பிடறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தால், நான் இருந்த ஊரில் என்னுடன் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஆந்திராக் காரன், சாதம், எண்ணெய், சிவப்பு மிளகாய்பொடியை சாதத்தில் நிறைய கலந்து சாப்பிட்டான். அடப் பாவீன்னு நினைத்துக்கொண்டேன்). தயிர் சாதத்தைவிட மாங்காய் ஊறுகாய் அதிக அளவு சாப்பிடுவேன். ஆனால் ஒரு சில வருடங்களாக காரம் ஒத்துக்கொள்வதில்லை, பிடிப்பதில்லை. ஒரு மிளகாய் போட்டிருந்தாலே பிடிப்பதில்லை.

      அதனால் இது இயல்பாக வரும் ஒன்றுதான்.

      Delete
    3. நான் பொதுவா வடமாநிலங்களில் இட்லி, தோசை, வடை போன்ற தென்னிந்திய உணவுகள் சாப்பிடுவதை விரும்ப மாட்டேன். ஆனால் நம்மவர் எங்கே போனாலும் அதைத் தான் கேட்பார்! :)))) எங்கே அதைச் சொல்லிடப் போறாரேனு அவசரத்தில் போஹாவைச் சொன்னேன். போட்டு வாங்கிடுச்சு.

      Delete
    4. எனக்கு எப்போவுமே காரம் ஒத்துக்காது! மூலம் ஆபரேஷனும் செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே காரம் என்றாலே சாப்பிட மாட்டேன். ப்ரெட் சாப்பிட்டிருக்கணும்! அது வேண்டாம்னு நினைச்சேன்.

      Delete
  3. அங்கே போய் வயிற்று வலி வந்ததா. பாவமே கீதா மா.
    மற்றபடி தாயார் தரிசனம் கிடைத்தது அதிர்ஷ்டம் தான். மேல் கொண்டு
    பயணத்தில் இடையூறு
    இல்லாமல் இருக்க வேண்டும்.
    பண்டர்பூருக்காகக் காத்திருக்கிறேன்.

    ஆட்டோக்காரர்களின் அருமை வியக்க வைக்கிறது.
    நம் குழந்தைக் குரு சொல்வார். எல்லா இடத்துக்கும்
    விமானம் இருக்கிறது. திட்டமிட்டுப் பயணம் செய்யுங்கள் என்று கடைசியாக
    லண்டனில் என்னிடம் பேசும்போது சொன்னார்.

    வேனல் கட்டிகளுக்குச் சந்தனம் உபயோகப் படுமே.
    சீக்கிரம் சரியாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி, அதனால் எதுவுமே சாப்பிடாமல் தான் இருந்தேன். ஆட்டோக்காரர்கள் பொதுவாக மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் பரவாயில்லை ரகம். அதுவே தில்லியில் மோசம்! ஆம் நம் குழந்தை குருவைப் பார்க்காமல், அவர் பேச்சைக் கேட்காமல் தவிப்பாகத் தான் இருக்கு! என்னிடம் கடைசியில் 2017 ஆம் வருஷம் பேசினார்.

      வேனல்கட்டிகளுக்குக் கடையில் கிடைக்கும் சந்தனம் பயன்படுத்துவதில்லை. டி.எஸ்.ஆர். சந்தனம் என நம்பி வாங்கிக் கறுப்பாக ஆகி விட்டது! ஆகவே காலமைன் லோஷன்! தே. எண்ணெய் தான்!

      Delete
    2. CALACLEAR LOTION தடவினால் வேர்குரு, வேனல் கட்டி சரியாகி விடும்.

      இங்கு எங்கள் குடியிருப்பு வளாகத்தில் ஜெனெரேட்டர் போட்டுவிடுவார்கள்.
      மிகிஸி, டிவி இரண்டுக்கும் இணைப்பு கொடுத்து இருக்கிறார்கள் ஜெனெரேட்டரில்.
      நாங்கள் வைத்து இருக்கும் இன்வெர்டரில் கணினிக்கு கொடுத்து இருக்கிறோம்.
      அதனால் மின்வெட்டு பாதிக்கவில்லை.

      இரவு தான் எல்லோரும் ஏசி போடுவதால் சில நேரம் ஒரு பேஸ் வேலை செய்யாது.
      காலை மின்சார அலுவலகத்திலிருந்து வந்து போஸ்டில் சரி செய்ய வேண்டும்.


      உங்கள் பயண அனுபவத்தில் ஆட்டோக்காரர் சேவை மகத்தானதுதான்.

      தரிசனம் நன்கு செய்து இருக்கிறீர்கள்.
      காரம் வயிற்று ஒத்துக் கொள்ளது எனக்கும். காரமே சாப்பிட முடிவது இல்லை.

      Delete
    3. calaclear lotion இதுவும் காலமைன் வகையைச் சேர்ந்ததோ? இங்கேயும் குடியிருப்பு வளாகத்தில் ஜெனரேட்டர் உண்டு. ஆனால் பொதுவான விளக்குகள், லிஃப்ட், மோட்டார் போன்றவற்றுக்கு மட்டும்! எல்லாருமே இன்வெர்டர் போட்டிருக்கோம். ஆனாலும் அதை ஜெனரேட்டருடன் இணைக்கவில்லை. கணினிக்கும் இணைக்கவில்லை. அதோடு நான் (லாப்டாப்) மடிக்கணினி தான் பயன்படுத்தி வருகிறேன். காரம் எதுவுமே ஒத்துக்கவில்லை தான்!

      Delete
  4. //தொடர்ந்து எழுதி முடிக்கலாம்னு பார்த்தால் நாலைந்து நாட்களாக அடிக்கடி மின் வெட்டு.//

    போதாக்குறைக்கு ஸ்ரீராம் தொந்தரவு வேற....! ஹா... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி,இஃகி, வாங்க ஶ்ரீராம். ஒருவழியா உங்களோடதை முடிச்சுட்டேன். மனதிலிருந்து பாரம் இறங்கினாப்போல் இருக்கு!

      Delete
  5. எங்களுக்கு நடு இரவில் எல்லாம் கரண்ட் போகிறது. ஆனால் இரண்டு மூன்றுமணிநேரம் எல்லாம் வராமல் இருந்ததில்லை - இன்ஷா முருகா.... எங்களுக்கு சென்னையில் இரண்டு நாட்களாக 107, 108 டிகிரி...

    ReplyDelete
    Replies
    1. அங்க 45+ டிகிரி சர்வ சாதாரணம். வெளியில் நடந்தாலே தொப்பலாயிடுவோம். ஆனால் இன்ஃப்ராச்ட்ரக்சர் அட்டஹாசம். அதுனால வெயில் காலம் சர்வ சாதாரணமா கழிந்துவிடும்.

      இங்க கஷ்டம்தான். இப்போதானே அக்னி நட்சத்திரம் ஆரம்பமாயிருக்காம்... ம்ம்... போதாக்குறைக்கு பெங்களூரும் சூடாத்தான் இருக்கு..

      Delete
    2. //அங்க 45+ டிகிரி சர்வ சாதாரணம். வெளியில் நடந்தாலே தொப்பலாயிடுவோம். ஆனால் இன்ஃப்ராச்ட்ரக்சர் அட்டஹாசம். அதுனால வெயில் காலம் சர்வ சாதாரணமா கழிந்துவிடும்./// எங்கே?????????????

      சென்னை 365 நாட்களும் வெயிலில் தான் கழியும்!

      Delete
    3. நான் ஊர் பேர் சொல்லாம 'அங்கே' என்று எழுதினால் நான் 25 வருஷம் வாழ்ந்த கல்ஃப் தேசங்கள்.

      கீசா மேடம்... இந்தத் தடவை முதல் முறையா பெங்களூர்ல இரவு, பகல், ஃபேன் இல்லாம இருக்க முடியலை. ஃபேன் இருந்தாலும் சுமாராத்தான் இருந்தது. உங்க ஊர்ல மின்சாரம் இல்லாம அறைகள் ரொம்ப சூடா இல்லையா? இல்லை காற்று நல்லா வருதா? (வெயில் காலத்துல மத்யானம் பெருமாளுக்கு சூடா இருக்கக்கூடாதுன்னு, கர்ப்பக்க்ரஹத்தைச் சுற்றி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விடும் வீடியோ-அரங்கன் சன்னிதி-பார்த்திருக்கிறேன்)

      Delete
    4. //நான் ஊர் பேர் சொல்லாம 'அங்கே' என்று எழுதினால் நான் 25 வருஷம் வாழ்ந்த கல்ஃப் தேசங்கள்.// அப்படியா? "பெண்"களூரில் மரங்கள், தோட்டங்கள் எல்லாம் சிறுகச் சிறுக அழிந்து விட்டன அல்லது அழித்து விட்டார்கள். அப்புறம் சூடு இல்லாமல் வேறே எப்படி இருக்கும்? இங்கே அறைகள் எல்லாம் சூடு இல்லை. வடக்கே இருக்கும் கணினி அறை காலை வேளையிலும் இரவிலும் ஜில்லென்றே இருக்கும். அந்தப்பக்கமிருந்து காற்று வரும். மழை, இடி வந்தால் சாரல் வரும் என்பதால் அப்போது ஜன்னல் கதவைச் சார்த்துவோம்.பெருமாளுக்குக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விட்டு நான் பார்க்கவே இல்லை. கேள்விப் படவும் இல்லை. யாரையானும் கேட்கிறேன்.

      Delete
    5. அக்கா பெங்களூரில் அழித்துவிட்டார்கள் என்பதே சரி!

      இங்கு நம் வீட்டில் கொஞ்ச நேரம் தான் சூடு தெரிகிறது. லேட் மதியம் முதல் மாலை வரை. அப்புறம் நைட் அத்தனை பிரச்சனை இல்லை. வெளியில் சென்றால் சூடுதான் என்னவென்றால் இங்கும் வேர்த்தாலும் சென்னை அளவு ஊத்துவதில்லை.....புழுக்கம் அத்தனை இல்லை. ஆனால் வார்மாகத்தான் இருக்கிறது. கொஞ்சமாக வேர்த்தால் நல்லதுதான்.

      கீதா

      Delete
  6. வடசென்னை, தென் சென்னையாக இருந்தால் நட்பாக இருக்கக் கூடாதா என்ன? அங்கேயும் பட்டர் என்றுதான் சொல்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இப்போத் தான் வட சென்னை, தென் சென்னை! படிக்கும் நாட்களிலிருந்து ஒன்றாகவே இருந்தார்களாம்.
      இங்கே பட்டரா என்னனு தெரியாது. அர்ச்சகர்னு தான் சொல்லி இருக்கணும். இல்லைனா வட இந்திய வழக்கப்படி பண்டிட்ஜி எனச் சொல்லி இருக்கணும்.

      Delete
  7. // ப்ரகாரங்களை மட்டும் க்ளிக்//

    அந்தப் பையன் குழப்பத்துடன் "இந்த மாமி நம்மளை ஏன் போட்டோ எடுக்கறாங்க?" என்று பார்க்கிறான்! பார்க்க கொஞ்சம் எங்கள் ஸ்ரீகாந்த் போல இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இவ்வளவு மோசமா எடுக்கிறாங்களேனு பார்த்திருப்பான்!/ர்.

      Delete
  8. போஹா என்றால் என்ன என்று சொல்லவேண்டாமா? அல்லது படமாவது காட்டவேண்டாமா? என்னை மாதிரி அப்பாவிகள் என்ன செய்வார்கள்?

    ReplyDelete
    Replies
    1. நம்ம அவல்தான். பெங்களூரிலேயே போஹா உப்புமா, போஹா கீர்னு தங்கும் ஹோட்டல்களில் மெனு இருக்கும்...

      ஒருவேளை உணவு ரெடியாலைனா, அவல், சிறிது வெல்லம், கொஞ்சம் பொடித்த ஏலம், பால் - 5 நிமிடங்களுக்குப் பிறகு சாப்பிட அட்டஹாசமா இருக்கும்.

      Delete
    2. ஶ்ரீராம், அவலுக்கு ஹிந்தியில் போஹா என்று பெயர். வெங்கட் கூட ஒரு பதிவில் சொல்லி இருந்தார். அவலில் தான் வெங்காயம், உ.கி. போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து உப்புமா!

      Delete
  9. சென்னைக்காரர்கள் எதற்காக பெங்களூர் செல்கிறார்கள்?

    குழப்பம், கவலை!

    நீங்கள் அதை விசாரிக்கவில்லையா?!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பெரம்பூர்க்காரரின் மனைவி "பெண்"களூரைச் சேர்ந்தவர். அவங்க பிறந்த வீட்டுக்குப் போறாங்க போல! அதோட அந்த மாமி அங்கேயே வேலையும் பார்த்தாராம். அவங்க உடை உடுத்தி இருந்த பாணியே கன்னட பாணியில் இருந்தது. அதே போல் இடது மூக்குக் குத்தி இருந்தார். விசாரிக்காமல் வேறே வேலை? :)))))

      Delete
  10. ஆஹா... எல்லா இடத்திலும் காத்திருக்கிறார்கள் ஆட்டோக்கார்கள் உங்களுக்கு. ஆபத்பாந்தவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அதிர்ஷ்டம் கொஞ்சமானும் பண்ணி இருந்திருக்கோம். :))))

      Delete
  11. வணக்கம் சகோதரி

    முன்னுரையே நன்றாக உள்ளது. வெய்யில் தாக்கம் இந்தப்புயலினால் அதிகமாகவே இருக்கும் எனச் செய்திகள் வந்தனவே.! அக்னி நட்சத்திரம் ஆரம்பத்தில் இல்லையென்றாலும், முடிவிலாவது நல்ல மழை பெய்து அனைவரையும் குளிர்விக்க வேண்டும். தங்கள் உடல்நிலை தற்சமயம் குணமா? கவனித்துக் கொள்ளவும்.

    /ஆகவே திடீர்னு காணாமல் போனால் தேடாதீங்க! வரவேண்டிய நேரத்துக்குக் கரெக்டா வந்துடுவேன்! :))))

    ஹா.ஹா.ஹா. "இது எங்கேயோ கேட்ட குரல்.. அடிக்கடி கேட்கும் குரல் கூட.." அருமை..இனி பதிவை படிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, காலை வெயில் குறைவாக இருந்தது. 28 டிகிரி காட்டி, 30க்குப் போய் இப்போ 36 காட்டுகிறது! ஆனால் காற்று அடிப்பதால் மின் விசிறிக்காற்று இதமாக வருகிறது. பதிவைப்படிச்சீங்களா? உடல்நிலை அப்போ அப்போ இப்படித் தான் வயிறு தகராறு செய்யும். லங்கணம் போட்டால் சரியாகும்.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    பதிவை படித்து விட்டேன். வழக்கம் போல் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள். இப்படி காலை எழுந்தவுடன் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வேறு ஏதாவது ஊருக்கு கிளம்பும் முன் அந்த இடத்திலுள்ள ஸ்வாமியை (அவர்களை நேற்றே நன்றாக தரிசித்திருந்த போதும்,.. ) மறுபடியும் சென்று தரிசிக்கும் போது மனசுக்கு ரொம்பவே நன்றாக இருக்கும். நாங்கள் குருவாயூர், உடுப்பி போன்ற ஸ்தலங்களுக்கு சென்ற போது இப்படித்தான் இரு முறைகள் தரிசிப்போம். குருவாயூர் இரண்டு நாட்கள் தங்கி தரிசிப்போம். என் கணவருக்கு மிகவும் பிடித்த தெய்வம்.. அப்படியும் அங்கிருந்து கிளம்பவே மனசுவராது.

    அங்கும் தங்களுக்கு நட்பூக்கள் கிடைத்து விட்டனர் போலும். அதுவும் மன மகிழ்ச்சியை தரும். ஒருவேளை அந்த காரமான உணவான போஹா வயிற்று வலியை உண்டாக்கியிருக்கிறதோ.! அவல் சில நேரங்களில் ஜீரணம் ஆகாமல் போகும். வெளியில் செல்லும் போது, அதுவும் பிராயணத்தில் உடல் உபாதைகள் வந்தால் கஸ்டந்தான்.! அதன் பின் பண்டரிபுரம் போவதற்குள் "பண்டரிநாதன்" கொஞ்சம் சரியாக்கி இருப்பான் என நம்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. பதிவை மேலும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, மீள் வரவுக்கு நன்றி. உடுப்பி நாங்க முதல்முறை போய் தரிசனம் செய்துட்டு அங்கிருந்து நேரே ச்ருங்கேரி போயிட்டோம். நாலு நாட்கள் ச்ருங்கேரியில் கழித்த பின்னர் மீண்டும் உடுப்பி வந்தோம். இரண்டு நாட்கள் தங்கினோம்! அருமையான தரிசனம். சாப்பாடில் தான் உடுப்பி மடங்களில் ஓர வஞ்சனை அதிகம்! :( நான் பொதுவாகப் பிரயாணத்தில் அதிகமாக ஜூஸ், இளநீர் போன்றவை மட்டும் சாப்பிட்டுவிட்டு லங்கணம் தான் போடுவேன். இம்முறை ஓட்டல்களில் தங்கியதால் பரவாயில்லைனு சாப்பிட்டேன். அது ஒத்துக்கலையா? தயிர் ஒத்துக்கலையா தெரியலை!

      Delete
  13. தேர்தலுக்குப் பிறகு அடிக்கடி மின்வெட்டு பரவலாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் , இருக்கலாம் கில்லர்ஜி, இங்கே ஒரு மாசமாகவே பிரச்னை தான்!

      Delete
  14. ஆகவே திடீர்னு காணாமல் போனால் தேடாதீங்க! வரவேண்டிய நேரத்துக்குக் கரெக்டா வந்துடுவேன்! :))))//

    ஹா ஹா ஹா இதென்னாது இமயமலைக்கு அப்பப்ப காணாமல் போகும் நபரின் டயலாக் போல!! ஹிஹிஹிஹி...

    கீதா

    ReplyDelete
  15. பெங்களூரும் ஏப்ரல் வரை சூடாகத்தான் இருந்தது. மேயிலிருந்து சூடு குறையும் என்கிறார்கள். மழை தொடங்க வேண்டுமே? அன்று அக்கூ பட்சியின் குரல் கேட்டது. அக்கூ பட்சி அழைத்தால் மழை வரும் என்பார்களே.

    ReplyDelete
  16. நாங்கள் பார்க்க வேண்டிய தலங்களில் கோலாப்பூரும், பண்டரிபுரமும் இருக்கின்றன. ஜூலையில் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். இறையருள் வேண்டும்.

    ReplyDelete
  17. நாங்கள் பார்க்க வேண்டிய தலங்களில் கோலாப்பூரும், பண்டரிபுரமும் இருக்கின்றன. ஜூலையில் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். இறையருள் வேண்டும்.

    ReplyDelete
  18. இந்த முறை உங்களுக்கு ஆட்டோக்காரர் வசதியாகக் கிடைத்துவிட்டார் இல்லையா அக்கா அதனால் கொஞ்சம் சிரமம் குறைந்திருக்கும்.

    நான் சொல்ல வந்த கேட்க நினைத்தது எல்லாம் எல்லாரும் கேட்டுட்டாங்க உங்க பதிலும் பார்த்துவிட்டேன்...ஸோ தொடரல் தான்.

    5 நாள் வலை வராமல் இப்ப வரும் போது ஒரு சுணக்கம்...இன்னும் பல பதிவுகள் பார்க்கணும் கருத்து போடனும்..ஹிஹிஹிஹி...

    கீதா

    ReplyDelete
  19. திருச்சுற்றுகள் அருமை. உடன் உலா வந்ததுபோன்ற உணர்வு.

    ReplyDelete