எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 20, 2020

ஐஸ்லாந்திற்குப்போகலாம் வாங்க!


வண்ண விளக்கு அலங்காரங்களும் பனிக்கட்டிக் கொண்டாட்டங்களும்  முதல் பதிவு இந்தச் சுட்டியில்

நாங்க வீட்டிலிருந்து கிளம்பி கால்வெஸ்டன் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இடத்தின் அருகே எங்களை விட்டு விட்டுப் பையர் வண்டியைப் பார்க் செய்து விட்டு வந்தார். அங்கே சில, பல படிகள் மேலே ஏறணும் என்பதால் நான் சரிவுப் பாதையில் சென்றுவிட்டேன். குழந்தைக்கு வண்டி எடுத்து வந்திருந்ததால் குழந்தையையும் தள்ளிக்கொண்டு நான், பையர், மருமகள் சரிவுப் பாதையில் செல்ல நம்ம ரங்க்ஸ் மட்டும் படி ஏறி வந்தார். மேலே போனதும் அனுமதிச் சீட்டு வாங்கும் இடத்தில் கேட்கையில் அவங்க எங்களை உள்ளே போகும் பாதையில் செல்லும்படி காட்ட, உள்ளே சென்றோம். ஒரு சில சின்னச் சின்ன அலங்காரத் தோட்டங்களைக் கடந்து சென்றதும் ஓர் இடத்தில் ஒரு சின்னப் பெண் அனுமதிச் சீட்டைப் பார்த்துக் கொண்டு உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் காட்டினோம். எங்களை உள்ளே போகச் சொன்னாள். அங்கேயே கழிவறைகள் இருந்ததால் நாங்கள் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உள்ளே ஐஸ்லாந்துக்குச் செல்லும் பாதையில் சென்றோம்.

வீட்டில் இருந்து கிளம்பும்போதே பையர் எங்களைக்  குளிருக்கான ஆடைகளைப் போட்டுக்கொண்டு வரச் சொன்னார். நான் ரொம்பப் பெருமையாக நாங்கல்லாம் இமயமலைக்கே போயிட்டு வந்தாச்சு, இந்தக் குளிர் எல்லாம் ஜுஜுபி என்றேன். பையர் இங்கே அந்த மாதிரி எல்லாம் இல்லை. முழுக்க முழுக்கப் பனிக்கட்டி வாசம். மைனஸில் 20 டிகிரி வரை இருக்கும், எதுக்கும் நீ கையிலாவது கொண்டு வா என்றார். சரினு அரை மனசாக் கொண்டு போனோம். நம்மவர் முன்.ஜா.மு.அ.வாக எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு விட்டார். உள்ளே நுழைகையில் எல்லோரும் குளிருக்கான ஆடைகள் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு நானும் அரை மனசாகப் போட்டுக் கொண்டேன். முதலில் ஒரு கூடத்தில் உள்ளே நாம் பார்க்கப் போவதைப் பற்றி ஒரு சின்ன வீடியோ மூலம் விளக்கம் கொடுக்கின்றனர்.



உள்ளே என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் சொல்கின்றனர். பின்னர் அங்கேயே கொடுக்கும் குளிருக்கான ஆடையைக் கட்டாயமாய் வாங்கிக் கொண்டு செல்லும்படியும் சொன்னார்கள். நாங்கள் அந்தக் கூடத்திலிருந்து இன்னொரு கூடம் சென்றதும் எல்லோருக்கும் ஆடைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆறே மாதம் ஆன சின்னக் குழந்தையிலிருந்து 70,80 வயது ஆன பெரியோர் வரை சாரி சாரியாக வந்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் என்பதால் உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகம் இருக்காது எனவும், அவர்கள் அன்றைய தினத்தை உறவினரோடு விருந்து உண்பதிலும், சர்ச்சுகளுக்குச் செல்வதிலும் கழிப்பார்கள் எனவும் ஆனால் 25 ஆம் தேதி மத்தியானத்திலிருந்து ஆரம்பித்துக் கூட்டம் இது மூடும் வரை தாங்காது எனவும் சொன்னார் பையர். என்றாலும் இப்போதும் கூட்டம் இருக்கத் தான் செய்தது.

உள்ளே நுழையும் வழியில் காணப்பட்ட பனிக்கட்டி அலங்காரங்கள் கீழ்க்காணும் படங்களில் காணலாம்.
















எங்கள் முறை வந்து எங்களுக்கும் குளிருக்கான ஆடையைக் கொடுத்தனர். தலை முதல் கால் வரை மூடி இருக்கும் கனமான ஆடை! அதைப் போட்டுக்கொள்ளாமல் உள்ளே செல்லக் கூடாது. ஆகவே அதை எல்லோரும் போட்டுக் கொண்டு குழந்தைக்கும் போட்டுவிட்டோம். என்றாலும் நாங்கள் அனைவரும் செய்த ஒரு தவறு கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டோம். ஆனால் யாருமே கைகளுக்கான க்ளவுஸ்களைப் போட்டுக் கொள்ளவில்லை. அதிலும் நான் அங்கே போனதும் எந்த எந்த நாட்டில் என்ன மாதிரி அலங்காரம் என்றெல்லாம் பார்த்துக் குறித்துக் கொள்ளவேண்டும் என்றும் அதில் என்ன சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு மனக்கோட்டையைப் பெரிசாக் கட்டிக் கொண்டு தான் போனேன்.








எஸ்கிமோக்களின் இருப்பிடம்


சான்டாவும் அதன் அருகே நின்று படம் எடுத்துக்கொண்டிருந்த  அம்மாவும், குழந்தையும். அவங்க இருப்பது தெரியாமல் தான் நான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். அவங்க போட்டிருக்கும் ஆடையைப் பார்த்தீங்க இல்லை? நாங்க போட்டிருந்த ஓவர்கோட்டிற்கு மேல் அந்த ஆடையைப் போட்டுக்கொண்டு தான் போகணும். அவங்களும் இப்படித்தான் வந்திருந்தாங்க.

22 comments:

  1. பனிக்கட்டி அலங்காரங்கள் எல்லாம் அழகு.
    தகுந்த உடை அணிந்து ரசித்தால்தான் உடம்புக்கு நல்லது.

    எஸ்கிமோக்களின் இருப்பிடம் அழகு.
    விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க அழகான ஏற்பாடு.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உண்மையில் டிஸ்னிலான்ட் தான் கூட்டிப் போகணும்னு பையருக்கு ஆசை. ஆனால் எங்களால் முடியாதுனு சொல்லிட்டோம். இது வரை பார்த்தவையே போதும்னு சொல்லிட்டோம்.

      Delete
    2. உங்களோட இன்னொரு கருத்தையும் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது வரலை, எங்கேயோ போய் ஒளிஞ்சிருக்கு! :))))))

      Delete
  2. படங்கள் தெளிவு ஆனால் எடுக்கும் கோணத்தில் சற்று சிரத்தை காட்டி இருக்கலாம்.

    பல படங்கள் ஒரே போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, அந்த அலங்காரங்கள் எல்லாம் இரு பக்கங்களிலும் மாறி மாறி ஒரே மாதிரிச் செய்திருந்தவை. இரு பக்கங்களிலும் படம் எடுத்ததால் ஒரே மாதிரியாகத் தெரிகிறது உங்களுக்குனு நினைக்கிறேன். தவிர்த்திருக்கலாமோ? இனி கவனமாகத் தேர்வு செய்து போடுகிறேன். அந்தக் கூட்டத்தில் கோணமெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை என்பதோடு அதீதக் குளிரில் கைபேசியையே பிடிக்கமுடியவில்லை. விரல்கள் விரைத்துப் போய் விட்டன.

      Delete
  3. எல்லாமே ஐஸ்ல செய்து இருக்காங்க.அப்போ குளிரத்தான் செய்யும்.
    நல்ல வேளை ஓவர்கோட்டும் போட்டுக் கொண்டீர்கள்.
    கொஞ்ச நேரம் என்றாலும் தாங்க முடியாது.

    அம்மாவும் குழந்தையும் அழகு.
    வண்ணம் கொடுத்து செதுக்கி இருக்கிறார்கள்.
    அருமையான சிற்பங்கள்.எங்களையும் அழைத்த்ப் போனதற்கு மிக மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, செய்தவை உருகாமல் இருக்கும் அளவுக்குக் குளிரை அங்கே கொடுத்திருந்தாங்க இல்லையா? அதனால் அதிக நேரம் நிற்கக் கூட முடியாமல் தான் இருந்தது. பாராட்டுக்கு நன்றி. படம் எடுக்கையில் ஜனங்கள் இடித்துக் கொண்டு சென்றதால் சில படங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்றாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

      Delete
  4. அழகிய படங்கள். கண்டு மகிழ்ந்தோம்

    ReplyDelete
  5. ஊரார்களையும் எல்லாம் படமெடுத்துப் போடுறீங்க ஆனா உங்களை இருட்டில்கூட போட மாட்டேன் என்கிறீங்க இது தப்பில்லையோ:)... கர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைப்பக்கத்திலேயே என்னோட படங்கள் நிறையவே வந்திருக்கே அதிரடி, நீங்க பார்த்ததில்லையோ? இஃகி,இஃகி, தேடிக் கண்டு பிடிச்சுக்கோங்க! :)))))))

      Delete
  6. கீசாக்காவுக்கு முதல்ல நல்ல ஒரு கமெரா வாங்கிக் குடுக்கோணும்:).. படங்கள் கலங்குதே...
    ஆனா கீசாக்கா இப்படியான இடங்கள் நேரில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும் அதனை கமெராவில் எடுத்துக் காட்ட முடியாது.... என் சோய் பண்ணுங்கோ...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, படங்கள் கலங்கினதுக்குக் காரணம் மேலே சொல்லிட்டேன் பாருங்க, என்னிடம் காமிராவும் இருக்கு. ஆனால் இந்தத் தரம் அதைக் கொண்டு வரலை. இவை எல்லாம் செல்லிலே எடுத்தவை. எடுக்கும்போது அடுத்தவங்க காமிராவில் விழாமல் இருக்கணும் என்பதோடு கொஞ்சம் நிதானமாகவும் எடுக்கணும். ஆனால் அந்தக் குளிரில் நின்று படம் எடுக்க முடியாதது ஒரு குறை எனில் அங்குமிங்கும் போகிறவர்கள், வருகிறவர்களை விட்டு விட்டு எடுப்பது இன்னமும் சிரமம்.பார்த்தால் புரியும்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    ஐஸ்லாந்து பெயருக்கேற்றபடி பார்க்கும் போதே கண்ணுக்கு நல்ல குளிராகத்தான் இருக்கிறது. பனிக்கட்டி அலங்காரத்தில், கிறிஸ்துமஸ் மரங்கள், சான்டா சிலைகள் என அத்தனையும் பனிக்கட்டியில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கண் கொள்ள காட்சிகளாக உள்ளது. அந்தப் பனிச்சிலைகள் உருகி, உருக்குலையாமல் இருக்க வேண்டுமென்றால், உள்ளுக்குள் எந்த அளவு, குளிரூட்டியிருக்க வேண்டும்... அதனால்தான் உள்ளே செல்வோருக்கு அவ்வளவு கனமான உடுப்புக்கள் கொடுத்துள்ளார்கள். என்னால் இவ்வளவு குளிர் தாங்க இயலாது என நினைக்கிறேன். இங்கேயே இந்த தடவை அதிக குளிர்.. குளிரினால் எனக்கு ஏகப்பட்ட உபாதைகள் என வண்டி(காலமெனும் வண்டி ஹா.ஹா.ஹா. ) ஓடுகிறது தங்கள் புண்ணியத்தால் ஐஸ்லாந்தை உடம்பில் குளிர் வாட்டாமல் ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, மூக்கு நுனியெல்லாம் சிவந்து ஜில்லிட்டுப் போய்விட்டது. குழந்தை எப்படித் தாங்கினாளோ என நினைத்தோம். நல்லவேளையா நடக்க விடாமல் பெற்றோரு இருவரும் மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எங்களுக்குக் குளிர் பழக்கம் தான் என்றாலும் இத்தனை குளிர்!!!!! அதீதம்! - 20க்கும் கீழே! இரட்டை உடுப்புப் போட்டும் குளிர் தாங்கலைனாப் பாருங்க!

      Delete
  8. எப்படியான சந்தோஷமெல்லாம் இந்த உலகில்!..

    ஏதோ தங்களால் நானும் கண்டு கொண்டேன்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. நீங்கள் கொண்டு சென்று போட்டுக்கொண்ட உடைகளின் மேலே அவர்கள் கொடுத்ததையும் போட்டுக் கொண்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அப்படியும் குளிர் தாக்கியது. கை விரல்கள் எல்லாம் விரைத்துப் போய்விட்டன. கண்ணெல்லாம் எரிய ஆரம்பித்து விட்டது.

      Delete
  10. பாவம் சின்னக்குழந்தைகள்...   பெரியவர்களின் ஆசைகளுக்காக குளிரில் கஷ்டப்படுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை, இத்தனை சின்னக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரணுமானு நினைச்சேன்.

      Delete
  11. இந்தக் குளிர் எம்மாத்திரம் என நினைத்து விடக்கூடாது! பனி உறையும் இடங்களில் செல்லும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் அலுவல் வேலையாக இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) ஷிம்லா செல்ல நேர்ந்தது. மாலை நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு. கையுறைகளைக் கழற்றி பனி படர்ந்திருந்த வாகனத்தில் விரல்களால் கோலமிட (!) உறைந்து போய் உணர்வே இல்லை - சுமார் அரை மணிநேரத்திற்கு! :(

    பனியால் செய்த உருவங்கள் அழகு.

    ReplyDelete