எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 23, 2020

பொழுது போக்கிய நாட்கள்/நேரங்கள்!

காரே இல்லை, ஆனால் காருக்கான இன்சூரன்ஸுக்குப் பிரிமியம் கட்டச் சொல்லி மட்டும் கேட்டுட்டே இருக்காங்க. முதல்லே காருக்கான பணத்தைக் கொடுத்தாங்கன்னா பரவாயில்லை. அதே போல் எனக்கு லக்ஷக்கணக்கிலே கடன் சாங்க்‌ஷன் ஆகி இருப்பதாயும் சொல்லுவாங்க! திரும்பக் கட்டுவதும் அவங்களே செய்தா நல்லா இருக்கும். நாமல்ல கட்டணுமாம்! அது எப்பூடி?
*********************************************************************************

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் பெரும்பாலும் அன்றாட நடப்புகள் பாதிக்கப்படுவதில்லை. இன்னிக்குக் காலம்பர வழக்கம்போல் எழுந்தாலும் அதிகப்படி வேலைகள் சுமையாக ஆகிவிட்டன. அதிலும் இரண்டு வருஷங்களாக வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டு அந்த சுகத்தை அனுபவித்ததாலோ என்னமோ ஒவ்வொரு வேலையும் மாபெரும் நிகழ்வாகப் பயமுறுத்துகிறது. அதோடு தோசைக்கு அரைக்கப் போடலாம் என அரிசி, உளுந்து தயார் செய்துவிட்டுக் களையப் போனால் காவிரித் தண்ணீர்க் குழாயில் சொட்டு ஜலம்வரலை.  இது என்னடா புதுக்கதைனு கீழே பாதுகாவலரைக் கூப்பிட்டுக் கேட்டால் எல்லோருக்கும் வருது, உங்க வீட்டுக்குத் தான் வரலை. நீங்களே மொட்டை மாடியில் போய் என்னனு பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டார். சரினு எதிர் வீட்டில் கேட்டால் மெலிதாக வருதுனு முதல்லே சொன்னாங்க. அரை மணிக்கெல்லாம் இரண்டு எதிர்வீடுகளிலேயும் தண்ணீர் வரலைனு சொன்னாங்க. சரினு காரியதரிசியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்னு போனேன். ப்ளம்பர் பத்து மணிக்குத் தான் வருவாராம். அதுக்கப்புறமாத்தான் என்னனு தெரியும் என்று சொன்னாங்க.

சரினு போர்த் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு அதில் களைந்து ஊறப்போட்டுவிட்டு, மற்ற எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுக் குளித்துவிட்டு வந்து சமைக்க ஆரம்பிக்கையில் பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. உடனே சொல்லாமல் கொள்ளாமல் மின்சார வெட்டு. இப்போத்தான் மாதாந்திர வெட்டுப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் வந்து போனது. இன்னிக்குக் காரணம் என்னனு தெரியாமல் மின் வெட்டு. இதோ வந்துடும், அதோ வந்துடும்னு காத்திருந்ததில் நேரம் தான் வீணானது. மற்றச் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டே சாதம், ரசம், கூட்டு எனத் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னிக்குனு மோர்க்குழம்புக்கு ஏற்பாடு செய்தேன். அதோடு அரைக்கவும் போட்டிருந்தேன். எப்படி அரைப்பது? மின்சாரம் மத்தியானம் வந்துவிட்டதெனில் சரி. இல்லைனா ஐந்து மணிக்கு மேலே அரைத்துக் கரைத்துப் பின்னர் ராத்திரிக்கும் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆகிடும்.  ஒரு நாளைக்குப் பத்துப்பேருக்கு மேல் சமைத்தது எல்லாம் பொய் என்னும்படி இப்போ ஆகிவிட்டது!

மின்சாரம் மத்தியானம் 2 மணிக்கு மேல் தான் வந்தது. கிட்டத்தட்ட அப்போத் தான் காவிரித் தண்ணீரும் வந்தது. ப்ளம்பர் வரவே இல்லையாம். அசோசியேஷன் செக்ரடரியும் இன்னும் யாரோ என்னனு பார்த்துட்டு இரண்டு ப்ளாக்கிலும் உள்ள தண்ணீரைப் பங்கிட்டிருக்கின்றனர். அதனால் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் வந்தது. குடிநீருக்காக ஃபில்டரைப் போட்டுவிட்டுத் தண்ணீர் எடுத்து கிரைண்டரைக் கழுவலாம்னா செக்கச்செவேர்னு தண்ணீர். பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டினாலும் அப்படியே நிறம் மாறாத தண்ணீர். விதியேனு மீண்டும் போர்த்தண்ணீரையே பயன்படுத்திக்கொண்டேன். அரைத்துக் கொண்டே பாத்திரங்களையும் தேய்த்துவிட்டு, விளக்குத் தேய்த்து ராகுகால விளக்கு ஏற்றி வைத்து வாழைப்பழம் நிவேதனம் பண்ணிட்டுத் தேநீரும் போட்டு முடித்து உட்காரும்போது மணி 3.35 ஆகிவிட்டது. இன்றைய பொழுது காத்திருப்பில் போய் விட்டது.
*********************************************************************************

ஒடிஷாவில் புரி ஜகந்நாதர் ரத யாத்திரை மனிதர்களே அதாவது பக்தர்களே இல்லாமல் நடந்து வருகிறது. கொஞ்ச நேரம் மொபைலில் யூ ட்யூபில் வந்ததைப் பார்த்தோம். இந்த ரத யாத்திரையை நிறுத்தினால் நாட்டிற்குக் கேடு உண்டாகும் என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்னார்களாம். மேலும் புரி ஜகந்நாதர் ரதம் ஓட ஆரம்பிச்சால் நடுவிலும் நிற்காதாம் முழுக்க முழுக்க ஓட வேண்டுமாம். சிதம்பரம் கோயிலிலும் ஆனித்திருமஞ்சனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கேயும் தேரோட்டம் உண்டு. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. பல்லக்கில் நடராஜரை வைத்துப் பிரகாரத்தினுள் சுற்றிக்கொள்ளுமாறு கூறி இருக்கின்றனர். ஆனால் இது ஒரு வகையில் நல்லதே! நம் மக்கள் அதீத உணர்ச்சி வசப்படுவார்கள். நடராஜர் தேரோட்டம் நடந்தது எனில் நிச்சயம் கூட்டம் கூடி இருக்கும். கட்டுப்படுத்த முடியாமலும் போயிருக்கலாம். ஏற்கெனவே ஊரடங்கை ஒழுங்காய்க் கடைப்பிடிக்காமல் தான் இப்போ மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து மதுரையிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கே திருச்சியிலும் ஊரடங்கைச் செயல்படுத்துவது பற்றி யோசிக்கின்றனர். நாளுக்கு நாள் இங்கேயும் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. ஸ்ரீரங்கத்தினுள்ளும் நுழைந்து விட்டது.
*********************************************************************************
"ஒரு யோகியின் சுயசரிதை!" புத்தகத்தைப் படித்து முடித்தேன். நெல்லைத்தமிழர் அனுப்பி வைத்தார். மெய் சிலிர்க்கும் சம்பவங்கள்/உண்மைச் சம்பவங்கள் நிறைந்த புத்தகம். அதில் உள்ள சில அறிவுரைகள் எங்க குருநாதர் எங்களிடம் சொல்லுவது தான். அவரும் கிட்டத்தட்ட இந்த யோகியைப் போலவே நன்கு படித்தவர். நடு நடுவில் யோகப் பயிற்சிக்குச் சென்று சென்று வந்தவர். யோகப் பயிற்சி என்பது இங்கே நாம் தினசரி செய்யும் யோக ஆசனப் பயிற்சி இல்லை.  இது ஒருவிதமான கிரியா. பல முத்திரைகள் உண்டு. அதில் கேசரி முத்ரா என்னும் முத்ராவில் கடைசி கிரியா என்னும் ஆக்ஞா சக்கரத்தின் மூலம் உயிரை வெளியேற்றுவது என்பது இந்த யோகங்களைச் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும். அத்தகைய பயிற்சியைப் பெற்றவர் தான் "எம்" எனப்படும் இந்த யோகி. இவருக்குத் தன் ஒன்பதாவது வயதிலேயே குருவின் தரிசனம் கிடைக்கிறது. அதன் பின்னரும் பற்பல யோகிகளையும் யோகினியையும் பார்த்துப் பார்த்து இவருக்கு மனதில் தானும் இத்தகையவனாய் இருந்தவனே என்பது தெரிய வருகிறது. ஆனால் தான் யார் என்பதை வெளி உலகுக்குச் சொல்லாமல் ஓர் யோகியாக வாழ்ந்து வந்தவர் பின்னர் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டித் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது 72 வயது ஆகும் இவர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என நம்புகிறேன்.

ஏற்கெனவே யோகியாய் வாழ்ந்த ஓர் பத்தொன்பது வயது யோகி தன் அறியாமையால் செய்ததொரு தவறால் மறு பிறவி எடுத்துத் தன் யோக வாழ்க்கையை வாழும்படி நேர்கிறது. ஆனால் மறுபிறவியில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் ஓர் முஸ்லீம் பதான் குடும்பத்தில் பிறக்கும் திரு "எம்" எவ்வாறு தன் குருவைத் தரிசிக்கிறார், தன் முற்பிறவி பற்றி அறிகிறார் என்பதும் இவருக்கு அந்த நினைவுகள் எல்லாம் ஒன்பது வயதுக்குள்ளாகக் கனவுகளாக வந்து போயிருக்கின்றன.  தன் குருவான "பாபாஜி" இவர் ஸ்ரீகுரு எனப்படும் ஆதிகுருவின் அத்யந்த சீடர். இந்த ஸ்ரீகுரு தான் தன்னை முற்பிறவியில் உயிரை விடச் சொன்னார் என்பதெல்லாம் இவருக்கு, அதாவது திரு "எம்" அவர்களுக்கு இப்போதைய குரு பாபாஜி மூலம் தெரிய வருகிறது. உறைபனி சூழ்ந்த இமயத்திற்குச் சென்று அங்கே தன் குருநாதரைப் போன்ற பல அசாதாரண மனிதர்களைச் சந்தித்துத் தன் ஆன்மிகத் தேடலை நிவர்த்தி செய்து கொள்ளும் "எம்" முதல் முறை கயிலைப் பயணம் போக முடியாமல் உடல் நிலை காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்ட "எம்" பின்னாட்களில் சென்ற கயிலைப் பயணத்தில் தன் குருவை மட்டுமில்லாமல் தன்னையும் தன் குருவையும் வழி நடத்தி வந்த ஸ்ரீகுருவையும் தரிசித்ததையும் தான் லௌகிக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய காரணத்தையும் தெரிந்து கொண்டு ஜனகரைப் போல் ஓர் இல்லறத்துறவியாக வாழ்ந்து வருகிறார்.

இவருடைய நண்பர்கள், தெரிந்த மனிதர்கள் பட்டியலில் இருக்கும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றனர். எனினும் யாரிடமும் அதிகம் தொடர்பில்லாமல் தன் வேலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் வேலையைத் தன் குருநாதர் சொன்னபடி நடத்தி வருகிறார் எம். இதில் இருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் தான். ஆனால் படிப்பதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடும். விடாமல் படித்தால் இரண்டு நாட்களில் முடிந்து விட்டிருக்கும். நான் கொஞ்சம் விட்டு விட்டுத் தான் படித்தேன். நடு நடுவில் வீட்டு வேலைகள், கணினியில் உட்காருதல், என எல்லாவற்றையும் செய்து கொண்டே படித்ததால் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. மறு வாசிப்பை ஆரம்பித்துள்ளேன். புரியாத இடங்களில் எல்லாம் அப்போவே மீண்டும் மீண்டும் போய் மறுபடி மறுபடி படித்தாலும் மறு வாசிப்பில் என்ன மாதிரி புரிதல் வரப்போகிறது என்று பார்க்கும் எண்ணமும் கூட!

இமயகுருவின் இதய சீடன்! ஒரு யோகியின் சுயசரிதை! ஸ்ரீ எம்!

தமிழில் : பி.உமேஷ் சந்தர் பால்,

மஜன்டா பதிப்பகம், மடிக்கேரி, கர்நாடகா! பக்கங்கள் 512, விலை 295

49 comments:

  1. கொரோனா உண்மையிலேயே தமிழகத்தில் இப்பொழுதுதான் ஊடுறுவி இருக்கிறது.

    இறைவனே உலக மக்களை காக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பல உயிரிழப்புக்களைப் பார்க்கும்போது மனது வேதனையில் ஆழ்கிறது.

      Delete
  2. எனக்கும் காருக்கான தவணை கட்டச் சொல்லி மெஸேஜ் வந்து கொண்டேயிருந்தது. கண்டுக்காமல் விட்டிருந்தேன். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக வாட்ஸாப்பில் ஒரு பெண் வந்து அதையே நினைவூட்ட, "ஏம்மா படுத்தறீங்க? யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கே அனுப்பிகிட்டு இருக்கீங்க... என்கிட்ட ஒரு சைக்கிள் கூடக் கிடைநாது... ஆமாம், சைக்கிள் வாங்க லோன் தருவீங்களோ" ன்னு பதில் அனுப்பினேன். ஸாரின்னு பதில் வந்தது!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஸ்ரீராம், எங்களுக்குத் தொலைபேசியில் எல்லாம் செய்திகள் வரும். எல்லோரிடமும் நம்மவர் வம்பு பேசிட்டுத் தொலைபேசியைக் கீழே வைப்பார். நான் பட்டென எடுத்த எடுப்பிலேயே அழைப்பை வெட்டி விடுவேன்.

      Delete
  3. இந்தத் தண்ணீர்ப் பிரச்னை வேற மாதிரி்எங்க பில்டிங்ல... ப்ளம்பருக்காகக் காத்திருக்கிறோம்.. ஒண்ணாம் தேதிக்கு மேலதான் எல்லாம்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நான் எப்போவுமே தண்ணீர்ப் பிரச்னையை அனுபவித்தது இல்லை. அதனால் ஆண்டவன் இம்மாதிரிச் சில சிறு சிறு நிகழ்வுகள் மூலம் எனக்குத் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் போலும்! இங்கே தண்ணீர்ப் பிரச்னை என்பதே இல்லை. இம்மாதிரி மோட்டார்கள் பழுது படுவதும், தண்ணீர் எடுக்காமல் குழாயில் அடைப்பு வருவதும் தான்பிரச்னை. பொதுவான ஒன்று என்பதால் அனைவருக்குமான இந்தப் பிரச்னைக்குப் ப்ளம்பர் வந்து தான் பார்க்கணும். நேத்திக்கு என்னமோ ப்ளம்பர் வரலை!

      Delete
  4. இமயகுருவின் இதயசீடன் நெல்லை அனுப்பி, படிச்சும் ஆச்சா? வெரிகுட்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், படிச்சு நாலைந்து நாட்களுக்கும் மேல் ஆகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

      Delete
  5. ஓ கீதாக்கா கரன்ட் கட் ப்ளம்பர் இல்லை அரைக்கப் போட்டுவிட்டு கஷ்டம்தான். இங்கும் அரைக்கப் போட்டு இப்படி ஆனதுண்டு. ஆனால் தண்ணீர் கஷ்டம் இல்லை என்பதால் பிழைத்தேன். சென்னை என்றால் நீங்கள் சொல்லுவது போல் ஆகும் நிறைய. கறுப்பாக எல்லாம் தண்ணீர் வரும் போட் மண்ணோடு.

    ஓ ஸ்ரீரங்கத்திலும் நுழைந்துவிட்டதா? கவனமாக இருங்கள். வேறு என்ன சொல்ல?

    எங்கள் பகுதியிலும் நுழைந்துவிட்டது. பங்களூரில் கணிசமான பகுதிகள் தொற்ரு சிவப்பு புள்ளி காட்டுது. எங்கும் செல்ல முடியவில்லை. எங்கள் பகுதி சிவப்பு புள்ளிக்கு வராவிட்டாலும் நுழைந்துவிட்டது. நாம் கவனமாக இருப்போம் மனதை தளரவிடாமல்.

    நெல்லை எழுதியிருந்த புத்தகம் பற்றிய் உங்கள் விமர்சனமும் நன்ரு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இந்த மின்வெட்டு திடீரென்று ஏற்பட்டது. ப்ளம்பர் எப்போவும் உடனே வருவார். நேத்திக்கு என்னமோ வரலை. தண்ணீர் அடியோடு ஏறவில்லை என்பதால் அடிக் கறுப்பெல்லாம் சேர்ந்து தானே மேலே வரும். அதைத் தனியாக ஒரு வாளித் தண்ணீரில் கழுவிவிட்டுத் தொட்டியைச் சுத்தம் செய்த பின்னர் தண்ணீரை மேலேற்றினால் இப்படி வராது. ஆனால் நாங்க பலமுறை சொல்லியும் அப்படிச் செய்வதில்லை. அம்பத்தூரில் இருந்தவரைக்கும் நாங்க தானே தொட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம்.

      Delete
  6. புத்தக விமர்சனம் நன்று.

    கவனமாக இருங்கள் சகோதரி. தமிழ்நாட்டில் அதிகம் பரவுவதாகச் செய்திகள் வருகிறதே. பல இடங்கள் முழு லாக் டவுனில் என்றும் அறிய முடிகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீண்ட நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க.

      Delete
  7. இன்று எனக்கும் வீட்டு வேலை அதிகம்.

    உறவினர் ஒருவர் இறந்து விட்டார், தவிர்க்க முடியவில்லை நான் மட்டும் ஆட்டோவில் போய் வந்தேன்.

    எவ்வளவு வேலை பார்த்த உடம்பு இப்போது கஷ்டபடுகிறது. மனம் சந்தோஷமாக இருந்தால் உடம்பு ஒத்துழைக்கும்.

    ""ஒரு யோகியின் சுயசரிதை" விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, எவ்வளவு வேலைகள் பார்த்திருக்கோம்னு நினைச்சால் ஆச்சரியமாத் தான் இருக்கு. இப்போவும் நான் செய்யும் வேலைகள் சின்னப் பெண்களால் செய்ய முடிவதில்லை! :))))))) ஆனாலும் அடுத்தடுத்து வேலைகளால் இப்போதெல்லாம் உடல், மனம் இரண்டும் தளர்ந்து விடுகிறது.

      Delete
  8. ஆஹா... புத்தக விமர்சனமும் வந்துவிட்டதே.... நல்லா எழுதியிருக்கீங்க.

    தலைப்பு, 'ஒரு யோகியின் சுயசரிதை' என்று போட்டிருக்கீங்க. ஆனால் இந்தத் தலைப்பில்தான் முதல் முதலில் ஒரு புத்தகம் வந்தது. அதன் பிறகு இந்தப் புத்தகம், 'இமயமலையில் இதய குரு'. அடுத்த புத்தகம் சுவாமி இராமாவின் சுய சரிதம்.

    இந்த மாதிரி புத்தகங்கள் படிக்கும்போது, அவங்க குறிப்பிடும் யோகிகளைப் பற்றி மற்றவங்களும் குறிப்பிட்டிருப்பாங்க, எழுதியிருப்பாங்க. அதையெல்லாம் ஒப்பிடும்போது புத்தகத்தின் உண்மைத்தன்மை புரிந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் பரமஹம்ச யோகாநந்தர் எழுதினது நெல்லை. அதன் ஆங்கில மூலம் என்னிடம் உள்ளது. சுவாமி ராமாவின் சுயசரிதம் எல்லாம் வாசித்ததில்லை. இந்த யோகிகளில் சிலர் பற்றி எங்கள் ஆன்மிக குருவும் குறிப்பிட்டிருக்கார்.

      Delete
  9. அங்கு மின்சாரப் பிரச்சனை இருக்கா? வெயில் காலத்தில் மின்சாரம் இல்லைனா கஷ்டமாச்சே.

    ReplyDelete
    Replies
    1. மின்சாரப் பிரச்னைனு எல்லாம் இல்லை, நெல்லை! நேற்று என்னமோ திடீர்னு மின்சாரம் இல்லாமல் போனது.

      Delete
  10. தேரோட்டம் போன்றவை ஆரவாரமில்லாமல் நடட்தப்படுவதும் நல்லதுதான். இல்லைனா, மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் நோய் அதிகமாகப் பரவினதற்குக் காரணம் நம் மக்களின் அரகன்ஸ்தான் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, தமிழர்களுக்கு எப்போவும் தாங்கள் மற்றவர்களை விட உயர்வானவர்கள், புத்திசாலிகள், வீரம் மிகுந்தவர்கள் என்னும் நினைப்பு அதிகம். ஆனால் ஒன்றுமே இல்லாததுக்குத் தான் அமர்க்களம் ஜாஸ்தியா இருக்கு! யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான் இருப்போம் என்பவர்களைக் காவல்துறை கூடக் கண்டிக்க முடியவில்லை! எல்லாவற்றையும் மீறிக்கொண்டு தான் மக்கள் சுற்றுகின்றனர்.

      Delete
  11. //காரே இல்லை, ஆனால் காருக்கான இன்சூரன்ஸுக்குப் பிரிமியம் கட்டச் சொல்லி மட்டும் கேட்டுட்டே இருக்காங்க. முதல்லே காருக்கான பணத்தைக் கொடுத்தாங்கன்னா பரவாயில்லை.///

    போனாப்போகுது கீசாக்கா ஒரு கார் வாங்குங்கோ... அப்போதான் மார்கட் போகலாம் மாமாவோடு:).. ஸ்கூட்டர்ல கூட்டிப்போக மாட்டாராமெல்லோ:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானவில்லி/ சே, வல்லி, கார் எப்போவோ வாங்கி இருக்கணும். தொண்ணூறுகளிலேயே அலுவலகத்தில் கார் அலவன்ஸ், பெட்ரோல் அலவன்ஸ் எல்லாம் கொடுத்தாங்க. வேண்டாம்னு குறுக்கே விழுந்து தடுத்துட்டேன். வண்டியும் 3 வண்டிகள் இருந்தன. நம்மவரோடது இரண்டு, ஸ்கூட்டர் ஒன்று, டிவிஎஸ் வண்டி ஒன்று. பையருடையது ஒன்று என. வீட்டிலே வராந்தாவை அடைத்துக் கொண்டு இருந்தன. ஒவ்வொன்றாக விற்று விட்டோம். டிவிஎஸ் மட்டும் பயன்படுத்த எளிது என்பதால் வைச்சிருக்கோம். எங்கேயாவது போனால் உள்ளூருக்குள் என்றால் ஆட்டோ, வெளியூர் எனில் ட்ராவல்ஸ் கார். இதுக்கு மேலே என்ன வேண்டும்! :)))) மாமா எப்படியும் என்னை மார்க்கெட் கூட்டிச் செல்ல மாட்டார். அவர் மட்டும் போனால் கத்திரிக்காயிலே 3 தினுசு வாங்குவார். வயலட் கத்திரிக்காய், பச்சைக் கத்திரிக்காய், கோடு போட்ட கத்திரிக்காய் என! நான் போனால் ஏதேனும் ஒரு கத்திரிக்காய் தான் வாங்குவேன். :))))) போன வாரம் வாங்கிய கத்திரிக்காய் இன்னமும் இருக்கு. நேற்று மறுபடி கத்திரிக்காய் வாங்கி வந்திருக்கார். :))))))

      Delete
    2. இதுக்குத்தான் தன் கெத்து காட்ட, கத்திரிக்காயில் பத்து வகையில் விதவிதமாக பண்ணியிருக்கக்கூடாது என்பது. பேசாம, எனக்குத் தெரிந்தது கத்தரி வதக்கல் மட்டும்தான் இல்லைனா குழம்புல தான் என்று இருந்தால், இப்படி கத்தரி கிலோ கிலோவாக வீட்டிற்கு வருமா?

      Delete
    3. உங்களுக்கு கீரைக்கட்டு இரண்டோ இல்லை வாழைப்பூ இரண்டோ வாங்கிக்கொடுத்திருந்தால் உணவுக்கு தயார் பண்ண எவ்வளவு நேரம் எடுத்திருக்கும். கத்திரிக்காய்தானே. சதக் சதக்னு விரைவாட் திருத்திவிடலாமே. பாஜிடிவ் ஆ திங் பண்ணுங்கோ

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் டங்கு ச்லிப்பாகக்கூடா ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)..

      இப்போ கத்தரிக்காய்தான் கீசாக்காவுக்குப் பிரச்சனையா?:)).. நீங்க பாவம் எண்டுதான் மாமா ஈசியான கத்தரிக்காய் வாங்கி வாறார்.. சுரக்காய், பிசுக்கு, கருணைக்கிழங்கு ஏன் பயற்றங்காய் கூட மினக்கெட்டு வெட்டி வதக்கி ரைம் எடுக்கும்.. இது ஈசியாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மாமா நல்லதை நினைச்சு செய்தாலும் திட்டுறா கீசாக்கா:))..

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) அன்று நீங்க குறுக்கே விழாமல் இருந்திருந்தால், இன்று காரில போய்க் காவேரியைப் படமெடுத்திருக்கலாமெல்ல்லோ:))

      Delete
    5. நெல்லைத்தமிழரே! கல்யாணம் ஆனப்போக் கத்திரிக்காயே பிடிக்காது மாமாவுக்கு! இப்போத் தான் கத்திரிக்காயா வாங்கித் தள்ளறார்! :P

      Delete
    6. இப்போத்தான் ஒரு கீரைக்கட்டு வாங்கி 2 நாட்களுக்குச் சமைச்சேன். அதோடு முருங்கைக்கீரை சூப் வேறே தினமும் மிளகு, ஜீரகம் போட்டுக் குடிக்கிறோம். வாழைப்பூவும் வாங்கி வந்தார். கள்ளனை ஆய்ந்து கொடுத்திருந்தாங்க. உள்ளே எல்லாம் ஒரே கன்னங்கரேல்னு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இனிமேல் கள்ளன் உள்ளதா வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டேன்.

      Delete
    7. வானவில்லி/வல்லி, சுரைக்காய் சாப்பிட மாட்டோம். கருணைக்கிழங்கு முந்தாநாள் தான் மசியல். கத்திரிக்காயை ஸ்கொட்லாண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். தினம் தினம் கத்திரிக்காயாச் சாப்பிட்டுட்டு இருங்க!

      கார் வாங்குவதில் சில/பல பிரச்னைகள் இருந்தன அப்போ! அதோடு காரை தினமும் சுத்தமாகத் துடைச்சு, வாரம் ஒரு முறையாவது ஓட்டிப் பார்க்கணும். பராமரிப்பை நினைத்தே வேண்டாம்னு விட்டுட்டோம். பையர் கூடப் பல முறை சொன்னார். கார் வாங்குங்க, இல்லைனா நான் வாங்கித் தரேன்னு. ரெண்டும் வேண்டாம்னுட்டோம்.

      Delete
    8. ஆஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் சொன்னதையே நானும் சொல்லியிருக்கிறேன், கீசாக்கா கொமெண்ட்ஸ் பப்ளிஸ் பண்ணாமல் வச்சிருந்தமையால தெரியவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    9. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிஞ்சு வானவில்லி/வல்லி, இஃகி,இஃகி, எல்லாத்தையும் உடனே போட்டு பதிலும் சொல்லி இருக்கேன். நீங்க இப்போத் தான் சாவகாசமா வரீங்க! :P:P:P:P

      Delete
  12. ///ஒரு நாளைக்குப் பத்துப்பேருக்கு மேல் சமைத்தது எல்லாம் பொய் என்னும்படி இப்போ ஆகிவிட்டது!//

    கீசாக்கா.. பத்துப் பேருக்கு சமைப்பதும் இருவருக்கு சமைப்பதும் வேலை ஒன்றுதான், வெட்டும் நேரம் மட்டுமே அதிகமாகும் மற்றும்படி கத்தி கரண்டி பாத்திரம் எல்லாமே ஒரே அளவுதானே தேவைப்படும்..
    சோறுக்கு ஒன்று, ஒவ்வொரு கறிக்கும் ஒன்று பின்பு கழுவோணும் இப்படி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வானவல்லி, வேலை என்னமோ ஒண்ணுதான்! ஆனாலும் இப்போக் கொஞ்சம் அலுப்பும், சலிப்புமாக இருக்கு. :( சூழ்நிலையும் காரணம்.

      Delete
  13. ஆஆஆ நெ தமிழனின் யோ சு படிச்சிட்டீங்களோ... அருமை... வாழ்த்துக்கள் கீசாக்கா.
    எனக்கு ஸ்கூல் காலத்தில்கூட அதிக நேரம் இருந்ததைப்போல இருக்கு ஆனா இப்போ நேரமே போதவில்லை கர்ர்ர்ர்ர்ர்:)..

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, புத்தகம் இருந்தால் எனக்குச் சாப்பாடே வேண்டாம். இணையம் மூலம் படிப்பது தான் கொஞ்சம் சிரமம். ஆனாலும் அதற்கும் நண்பர்கள் சிலர் புத்தகங்களை அனுப்பிப் படிக்கச் சொல்லிக் கருத்துக் கேட்கின்றனர். ஆகவே இணையம் மூலமும் படிக்கிறேன். என்றாலும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு படிப்பது போல் சுகம் வேறே எதுவும் இல்லை.

      Delete
  14. கார் ப்ரீமியம் - :) அனைவருக்கும் இது போல வந்து கொண்டு தான் இருக்கிறது. உங்கள் காரை விற்க வேண்டுமா என்று கூட அலைபேசி அழைப்புகள் வருகின்றன. :)

    புத்தகம் - நெல்லைத் தமிழன் இந்தப் புத்தகம் பற்றி எப்-யிலும் எழுதி இருந்தாரே.... வாசிப்பு - நானும் நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

    கொரோனா - விரைவில் சூழல் சரியாக எல்லாம் வல்ல ஆண்டவன் வழிவகை செய்யட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஒரு நாளைக்குப் பத்து மெயில்கள் இப்படித்ஹ்டான் வருகின்றன. ஆமாம், இந்தப் புத்தகம் பற்றியும் இன்னும் இரு வேறு புத்தகங்கள் பற்றியும் நெல்லை எ.பி.யில் பகிர்ந்திருந்தார். கொரோனா தொடர்பாகப் பிரார்த்தனைகள் தவிர வேறே ஏதும் இல்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ பாஸை நிறுத்திட்டாங்க எனத் தொலைக்காட்சிச் செய்தி சொல்கிறது.

      Delete
  15. திடீர் மின்வெட்டும் திடீர் தண்ணீர் வெட்டும் சோதனியானவை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அசோசியேஷன் நல்லமுறையில் செயல்பட்டால் - அப்படிச் செயல்பட உறுப்பினர்கள் ஆதரவளித்தால் - இவற்றை எளிதாகக் கையாள முடியும். பெரும்பாலும் அப்படி நேராது என்பதே உண்மை.

    யோகியாரின் சுயசரிதம் உலகப் புகழ் பெற்ற நூலாகும். பலமுறை படிக்கலாம். அலுக்காது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லப்பா சார், தனி வீடுகளிலும் இந்தப் பிரச்னை ஏற்படும்/ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கிணற்றை மூடாமல் வைத்திருந்தோம் என்பதால் தண்ணீருக்குப் பிரச்னையே வந்ததில்லை. இங்கேயும் போர் குழாயில் தண்ணீர் வந்தது. காவிரித் தண்ணீர்க்குழாயில் தான் தண்ணீர் வரலை.

      Delete
  16. புத்தக விமர்சனம் அருமை...

    நிலைமை எங்குமே சரியில்லை... மனதும் பலவித குழப்பங்களில்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். நிலைமை விரைவில் சீரடையப் பிரார்த்திப்போம். குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கவும் பிரார்த்திக்கிறோம்.

      Delete
  17. விட்டு விடுதலையாகி நிற்பாய்... - என்று மகாகவி பாடியதற்கு இணங்க...

    எல்லா பிரச்னைகளில் இருந்தும் விலகி இருப்போம்... நல்லவர்க்குத் துன்பமில்லை...

    நலம் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. சரியாய்ச் சொன்னீங்க துரை. விட்டு விடுதலையாகித் தான் நிற்கணும் இப்போ!

      Delete
  18. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஆன்மிக புத்தக விமர்சனம் அருமையாக இருக்கிறது. இந்த புத்தகத்தைதானே சகோதரர் நெல்லைத் தமிழர் எ. பி.யில் ஒருதடவை விமர்சித்திருந்தார் என நினைக்கிறேன். உங்கள் விமர்சனமும் அழகாக மனதில் படியும்படி உள்ளது.

    கோவில்களில் நடத்தும் வழக்கபடியான வருடாந்திர விழாக்களைக் கூட தடைகள் செய்யும்படி இந்த தொற்று படுத்துகிறது. அந்த கடவுள்தான் இதிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

    கார் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை. நாங்களும் இன்னமும் கார் வாங்கவில்லை. இப்போதுதான் வீட்டை விட்டு வெளியே போகும் எண்ணத்திற்கே இந்த கொரோனா தடை செய்துள்ளதே..!இருக்கும் இரண்டு டூவீலரையே முறையாக பயன்படுத்த இயலவில்லை.

    இந்த கரண்டு கட்டினால்தான் நானும் இந்த தடவை உங்கள் பதிவுக்கு வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நேற்று மாலை வேலை முடிந்ததும் ஒரு கருத்து எழுதினேன். அதை அனுப்புவதற்குள், பத்து தடவை கரண்ட் போய் வந்து எழுதிய கருத்தும் கைதவறி எங்கோ போய் விட்டது. மழை வேறு.. அதற்கு துணைப் புரிந்தது.

    இட்லிக்கு ஊறப் போடவே எனக்கும் கை வரவேயில்லை. நீங்கள் எப்படியோ இவ்வளவு இடர்பாடிலும் அரைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    நான் தாமதமாக வந்ததற்கு மீண்டும் வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை கமலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தான் முக்கியத்துவம். நேரம் எப்போவானால் என்ன? உங்கள் வசதிப்படி வாங்க! உங்கள் முதல் கருத்தை நன்கு ஆராய்ந்து தேடிப் பார்த்துட்டேன். ஸ்பாமில் கூட இல்லை. இங்கே மின்சாரம் அவ்வப்போது போவதும் வருவதுமாய் இருக்கு. நேற்று மத்தியானத்திலிருந்து ஒரே மேகமூட்டம். இப்போப் பனிரண்டு மணிக்குப் பின்னர் தான் வெயில் காய்கிறது. என்னோட மோர்மிளகாய் காத்துக்கொண்டு இருக்கு வெயிலுக்கு. இன்னிக்கு இனிமேல் முடியாது. நாளை தான் பார்க்கணும். :))))) நம்ம ராசி!

      Delete
  19. அன்பு கீதாமா,
    உங்கள் வேலைப்பட்டியலும் தண்ணீருக்கான தொந்தரவையும் படிக்கும் போதே சஞ்சலம் மேலிடுகிறது.
    இத்தனை சங்கடங்களுக்கும் நடுவில்
    இங்கு பொறுமையாகப் பதிந்திருப்பதுதான் அருமை.

    யோகியின் சரிதை எனக்கும் பரிசாக துபாயில் கிடைத்தது. துபாய் தமிழ் வலைப்பதிவாளர்கள்
    அழைத்து விருந்து கொடுத்துப் பரிசும் அளித்தார்கள்.
    மறக்க முடியாத நினைவுகள்.
    அருமையான புத்தகம்.
    உங்களது விமரிசனமும் அருமை.
    சீக்கிரம் பிரச்சினைகள் தீரட்டும்.

    எனக்கும் இத்தனை நேரம் வரமுடியவில்லை.
    ஆளுக்குப் பாதி செய்தால் தானே வீட்டு வேலை முடியும்.
    தள்ளத்தான் இல்லை. சமாளிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கீதா சாம்பசிவம் மேடத்திடம் நான் வியக்கும் குணம், ஒவ்வொண்ணுக்கும் நேரம் ஒதுக்கி அதுக்கு ஏற்றபடி வேலை செய்வது. 1 மணி நேரம்தான் கணிணியில் என்றால் அவ்வளவுதான். இந்த மாதிரி நேரத்தை ஒழுங்குபடுத்தி வேலை செய்வது என்பது அபூர்வம். பாராட்டவேண்டிய குணம்.

      Delete
    2. நன்றி நெல்லைத்தமிழரே! :))))

      Delete
  20. Excellent. Really enjoyed

    ReplyDelete