எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 18, 2014

நான் சிரித்தால் தலை தீபாவளி - பகுதி 2

அடுத்த ரயில் எப்போன்னு பார்த்தால் எட்டேகாலுக்குப் பாண்டியன் கிளம்பும்னு சொன்னாங்க.  அதுக்குள்ளே ரங்க்ஸ் டிக்கெட் கான்சலுக்குப் போக, அவங்க இந்த டிக்கெட் மவுன்ட்ரோடில் வாங்கினதால் அங்கே தான் கான்சல் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.  கொஞ்ச நேரத்தில் பாண்டியன் நடைமேடைக்கு வந்தும் விட்டது.  அப்போது தான் அறிமுகம் செய்திருக்காங்க.  சில மாதங்கள் அல்லது வருடம் தான் ஆயிருக்கும்.  ஆனால் மதுரைக்குக் காலை ஏழரைக்குத் தான் போகுமாம். பரவாயில்லை, மறுநாள் இரவு, அதுக்கடுத்த நாள் காலை தான் நரக சதுர்த்தசி ஸ்நானம் என்பதால் ஏழரைக்காவது போயிடுமேனு சந்தோஷம்.  இந்த டிக்கெட்டில் போக முடியாது என்பதால் டிக்கெட் வாங்கக் கவுன்டருக்குப் போனோம்.  கூட்டமோ கூட்டம்.

சின்ன வயசு என்பதாலும், உடலில் தெம்பு இருந்ததாலும் வரிசையில் நிற்க முடிஞ்சது.  அவர் ஒரு பக்கமும், நான் இன்னொரு பக்கமுமாக நின்றோம்.  கடைசியில் நான் நின்ற வரிசையில் டிக்கெட் கிடைச்சது.   நல்ல வேளையா இப்போ உள்ள கூட்டம் அப்போது இல்லையோ, பிழைச்சோம்.  வண்டி கிளம்பப் பத்து நிமிடங்களுக்குள் தான் இருக்கும்.  மறுபடி அவசரம் அவசரமாக முதலாம் நடைமேடைக்கு வந்தோம்.  அப்போல்லாம் ஸ்லீப்பர் கிடையாது. ரயிலில் ஒரு பெர்த்தில் நான்கு பேர் உட்கார முன் பதிவு செய்வாங்க.  இதில் நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் உட்காருபவர் ராத்திரி ஒன்பது மணி ஆனால் மேலே அவர் முன் பதிவு செய்திருக்கும் படுக்கைக்குப் போயிடுவார்.  வேறு யாரும் காத்திருப்பவங்களுக்கு அந்த சீட்டை டிடிஆர் கொடுப்பார்.  அதுக்கு முன்பதிவு இல்லை.  உடனடிப் பதிவு என்பதால் அப்போ ஒரு ரூபாய் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.  முன் கூட்டியே முன்பதிவு செய்தால் அமரும் இருக்கைக்கு ஒரு பயணச் சீட்டுக்கு எட்டணாத் தான் வாங்கினார்கள்.  பின்னர் ஒரு ரூபாய் ஆகி, அதற்கும் பின்னர் அந்த முறையே எடுக்கப்பட்டு எல்லாமே படுக்கும் வசதி கொண்டதாக மாறியது எல்லாம் எண்பதுகளின் பின்னரே.

அதற்கு முன்னால் படுக்கும் வசதி தொலைதூர ரயில் வண்டிகளில் மட்டும் குறிப்பிட்ட அளவு  படுக்கும் வசதி கொண்ட இருக்கைகளோடு இருக்கும்.  இதில் ஜனதா என்றொரு வண்டி உண்டு.  அதில் முதல், இரண்டாம் வகுப்புகளே இல்லாமல் எல்லாமே மூன்றாம் வகுப்புப் பயணிகளுக்காக என்றிருக்கும்.  மதுரைக்கும் கும்பகோணம், மாயவரம் வழியாகச் சென்னைக்கு ஜனதா இருந்தது.  சென்னையிலிருந்தும் மதுரைக்கு ஜனதா இருந்தது.  ஆனால் அது தாமதமாக மதுரைக்குப் போகும்.  பாண்டியன் அப்போதே விரைவு வண்டி என அறிமுகம் ஆகி இருந்தது.  இந்த முன்பதிவுப் பெட்டி ஒன்றில் ஏறிக் கொண்டு யார் மேலே போகப் போறாங்கனு (ஹிஹிஹி, படுக்கத் தான்) என்று பார்த்துக் கொண்டு இருந்தோம்.  கடைசியில் இரண்டு உட்காரும் இருக்கை எதிரும் புதிருமாகக் கிடைத்தது.

நான்கு பேர் அமரும் இருக்கையில் படுப்பது ரொம்பக் கஷ்டம்.  கீழே தான் படுக்க வேண்டும்.  என்னைக் கீழே படுக்கச் சொல்லி ரங்க்ஸ் சொல்ல நான் மறுத்துவிட்டேன்.  இருவரும் உட்கார்ந்து கொண்டே தூங்கி வழிந்தோம். காலையில் திருவனந்தபுரம் மெயிலில் எங்களை அழைத்துச் செல்ல வந்த என் தம்பி அந்த ரயிலில் நாங்கள் வரவில்லை என்றதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்.  கூட வந்த அவர் நண்பரை வீட்டுக்கு அனுப்பித் தகவல் சொல்லச் சொல்லிவிட்டு அடுத்துப் பாண்டியனிலோ ஒன்பது மணிக்கு வரும் ஜனதாவிலோ வரேனானு பார்க்க வேண்டி ஸ்டேஷனிலேயே காத்திருந்தார்.

ஏழரைக்கு (அப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுமில்ல!) வண்டி வந்ததும் தம்பியை நாங்கள் ஸ்டேஷனில் எதிர்பார்க்காததால் நேரே வீட்டுக்குச் செல்லவேண்டி வெளியே செல்லும் வாயிலுக்குச் செல்கையில் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது. "அக்கா, அக்கா" என்று தம்பியின் குரல். வண்டி முழுதும் தேடிக் கொண்டு வந்த தம்பி எங்களைப் பார்த்துவிட, அவர் முகத்தில் கண்ட மகிழ்ச்சி இப்போதும் என் கண்களில் தெரிகிறது.  அப்புறமா வெளியே சென்று வீட்டுக்குச் செல்ல சைகிள் ரிக்‌ஷாவில் ஏறினோம். அப்போதெல்லாம் சைகிள் ரிக்‌ஷா தான்.  ஆட்டோவெல்லாம் பார்த்ததே இல்லை.   வீட்டில் கவலையாக உட்கார்ந்திருந்த அம்மாவும், அப்பாவும் எங்களைக் கண்டதும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

உடனடியாகக் குளித்துக் காலை ஆகாரம் சாப்பிட்டதும் அப்பா புடைவை எடுக்கக் கூட்டிச் சென்றார்.  பட்டுப்புடைவை நிறைய இருந்ததால் நான் உல்லி உல்லி என்னும் புடைவை 644 என்றும் சொல்வார்கள்.  அதைத் தான் வேண்டும்னு எடுத்துக் கொண்டேன். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்னு மூன்று நிறங்களிலும் பூக்கள் நிறைந்த புடைவை.  அப்போல்லாம் இந்த உல்லி உல்லி தான் பிரபலம்.  இதிலே ப்ளெயினும் உண்டு.  நீண்ட டோரியாக் கோடுகளோடு இருந்தால் நல்ல தரமானது என்று சொல்வார்கள்.  ப்ளெயின் வேண்டாம்னு நான் டிசைன் போட்டது எடுத்துக் கொண்டேன்.

அப்புறமா தீபாவளி முடிஞ்சு  பக்ஷணங்களோடு சென்னை வந்து சேர்ந்தோம்.




படம் வழக்கம் போல் கூகிளார் கொடுத்தது. 

12 comments:

  1. த்ரில் பயணம்தான்.

    பாண்டியனில் டிக்கெட் காஸ்ட் எவ்வளவுன்னு சொல்லலையே? நினைவில்லையா? :))

    உல்லி உல்லி ஸாரி போலவே மோஷி மோஷி கூட பிரபலம் இல்லை? :)))

    ReplyDelete
  2. ஆமாம் நீங்கள் சொல்வது போல் உல்லிஉல்லி புடைவை நானும் வாங்கி இருக்கிறேன். உங்கள் தலை தீபாவளிப் பதிவு அந்தக்கால் ரயில் பிரயாணம் பற்றியும் சொல்லிச் சென்றது. ரயில் பயணம் என்றதும் தண்ணீர் கூஜாவும் எனக்கு நினைவு வந்தது. பழைய நினைவுகளுக்குள் சென்று விட்டேன்.

    ReplyDelete
  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  4. எப்படியோ நல்லபடியாக தலை தீபாவளி கொண்டாடி விட்டீர்கள்.
    அக்கா அக்கா என்ற பாச அழைப்பு அருமை.
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல வேளை பாண்டியனில் இடம் கிடைத்ததே...

    ReplyDelete
  6. சுவையான அனுபவம்தான்! நன்றி!

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், திருவனந்தபுரம் மெயிலில் ரயில் சார்ஜ் 19 ரூபாய் னு நினைவில் இருக்கு. ஏனெனில் திரும்பப் பணம் வாங்குகையில் 3 ரூபாய் பிடித்துக் கொண்டு கொடுத்தாங்க! ரங்க்ஸ் புலம்பல்! :)))))) ஆகவே பாண்டியன் அதிவேக விரைவு வண்டி என்பதால் 20 அல்லது 21 ரூபாய்க்குள் இருக்கலாம். :))))) அப்போல்லாம் மூன்றாம் வகுப்புத் தானே! ஆனால் நாங்க எல்டிசி பயன்படுத்தினால் முதல் வகுப்பு உண்டு. ரங்க்ஸ் கும்பகோணம் வரைதான் அலுவலகத்தில் கொடுத்திருந்தார். மதுரைக்கு எல்டிசியில் போக முடியாது. :)

    ReplyDelete
  8. வாங்க ராஜலக்ஷ்மி, அப்போ டெரி வாயில், டெரி காட்டன், ஃபுல் வாயில்னு புடைவைகள் உண்டு. நான் ஜாஸ்தி கட்டினது ஃபுல் வாயிலும் டெரி வாயிலும். மில் புடைவைகளில் அர்விந்த், கடாவ் மில்ஸ் புடைவைகள் டிசைனும், கலரும் மனதை ரொம்பவே கவரும். அர்விந்த் புடைவைகள் துவளும்! :))) இப்போல்லாம் வருதானு தெரியலை. அர்விந்த் மில்ஸே இல்லை போலிருக்கே. அதே கோவை லக்ஷ்மி மில்ஸ் காட்டன், ஃபுல் வாயில் புடைவைகளும் நன்றாக இருக்கும். கலர் தான் கொஞ்சம் டல்லடிக்கும்.

    ReplyDelete
  9. வாங்க காசிராஜலிங்கம், நன்றி.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, ஆமாம் கொண்டாடியாச்சு, விடமாட்டோமுல்ல! என் தம்பி என்னை அக்கானு கூப்பிடுவதில் உள்ள பாசத்தை நிறையப் பேர் சொல்லி இருக்காங்க.

    ReplyDelete
  11. வாங்க வெங்கட், அது இல்லைனா ராத்திரி ஜனதா! :))) இல்லைனா செங்கோட்டா பாசஞ்சர்! செங்கோட்டா பாசஞ்சர்னு பேரே தவிர சரியான நேரத்துக்குப் போகும் வண்டி அது! :))))

    ReplyDelete
  12. வாங்க சுரேஷ், ரசனைக்கு நன்றி.

    ReplyDelete