எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 05, 2014

எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்தது ஒரு பரிசு!

பரிசு விபரம்

கதைக்கான சுட்டி



"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது.  ஆனால் நம்   கதாநாயகர் ராமசுப்புவுக்குத் தான் தெரியவில்லை. எலிகளோடு குடித்தனமே நடத்திக் குப்பை  கொட்டி இருக்கோம். ராஜஸ்தானுக்குப் போனபோது தான் எலிகளில் இத்தனை சாமர்த்தியசாலிகள் இருப்பதே தெரிய வந்தது.  முதல் வருடம் கொலு ஆரம்பித்ததும் கொலுப்படி கட்டிப் புதிதாய் வாங்கிய பொம்மைகளை வைத்துவிட்டு அன்றிரவு படுத்தோம்.  மறுநாள் பார்த்தால் படிகள் காலி! பொம்மைகளை எல்லாம் இரவில் விஜயம் செய்த எலிக்குடும்பம் அகற்றிவிட்டிருக்கிறது. நல்ல வேளையா எல்லாம் உடையாத பொம்மைகள். :))) அதுக்கப்புறமா கொலு வைக்கும்போது கடைப்பிடிக்கும் நியமங்கள், கட்டுப்பாடுகளை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டுப் பகலில் பொம்மைகளை வைத்துவிட்டு இரவு படுக்கப் போகும்போது  நினைவாக எடுத்து பீரோவில் வைப்போம். ஒன்றா, இரண்டா, ஒரு பெரிய குடும்பமே இருந்தது. நான் சமைக்கிறச்சே கூட உப்புப் போடறது சரியா இருக்கா, காரம் சரியாப் போடறேனானு எலிகளே கவனிச்சுக்கும். குறுக்கும், நெடுக்குமாகப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் எனக்குச் சரிசமமாக அதுங்களும் வேலை பார்க்கும்.

அம்பத்தூரிலும் கேட்கவே வேண்டாம். இப்படிப்போகும் இடமெல்லாம் எலிகளோடேயே வாழ்ந்த எனக்கு இங்கே ஶ்ரீரங்கம் வந்து ஒரு நாள் அது கண்ணில் பட்டதோடு சரி. அதுவே நாலாம் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.  அப்புறமாப் பார்க்கலை.  எங்கேயோ போயிடுச்சுங்கனு நினைச்சா, எங்கேயும் போகலைங்க.  திருச்சியிலேயே உள்ள "எலி"சபெத் டவர்ஸுக்குத் தான் போயிருக்கு. ஒன்றா, இரண்டா, எடுத்துச் சொல்லனு பாட்டுப் பாடறாப்போல் திருமதி ராமசுப்புவுக்கு எத்தனை எலினு தெரியலை.  சுண்டெலியா, பெரிய எலியா, பெருச்சாளியானு எதுவும் தெரியலை.  கண்ணில் காணாத எலிக்கே அரண்டுட்டாங்க.  அலுவலகம் சென்ற கணவனைத் துணைக்கு அழைச்சுட்டாங்க.  நாங்கல்லாம் சின்னக் குழந்தைங்களை வைத்துக் கொண்டே எலிகளையும் சமாளிச்சிருக்கோமாக்கும்.  அந்தக் காலத்தில் தொ"ல்"லைக்காட்சியே இல்லை.  டாம், ஜெரி பத்தி யாருக்குத் தெரியும்!  ஆனாலும் நாங்க இந்த எலிங்களை எல்லாம் ஜெரியாகவே நினைச்சுக் குழந்தைகளுக்கு உயிருள்ள பொம்மையாக இதை வைச்சு விளையாட்டுக் காட்டி இருக்கோம்.  குழந்தைங்களுக்கும் பழகிப் போச்சா! பிரச்னை இல்லை.  ஆனால் இங்கே பாருங்க "எலி"சபெத் டவர்ஸின் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் ஆன ராமசுப்பு அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு எலியை வேட்டையாடப் போகிறார்.  வெற்றி வீரராக வேலையை முடித்தாரா?  ம்ஹூம் இல்லைங்க!

வாசலில் காவலுக்கு நின்றிருந்த வாட்ச்மேனையும் ஏமாற்றிவிட்டுப் புதுக்குடித்தனக்காரங்க மூலமா வந்திருக்குமோ என்று ஐயப்படும் எலியார்  அந்தக் குடியிருப்பு நலச்சங்கச் செயலாளர் ராமசுப்பு என்பதையும் லக்ஷியமே செய்யாமல் அவர் வீட்டுக்கே குடி வந்துவிட்டது. எலியை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தன்னைப் பழிவாங்க யாரேனும் சதி செய்திருப்பார்களோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவர், உள்ளே நுழையும்போதே அந்த அவசரத்திலும் யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டே படுக்கை அறைக்குச் சென்று பாதுகாப்பாகக் கட்டிலின் மேல் ஏறிக்கொள்கிறார். நண்பரை ஆலோசனை கேட்டும் பலனில்லை. எலியால் வீட்டில் சமையல் நடக்காததால் வெளியே போய்ச் சாப்பிட்டு வருகையில் தான் இதற்கு அயனான தீர்வு கிடைக்கிறது ராமசுப்புவுக்கு. வேறொரு நண்பர் மூலமாய் எலிப்பொறி கிடைக்கச் சுவையான மசால்வடையும் வாங்கி நண்பரின் ராசியான கைகளினாலேயே (பின்னே, எலி பிடிபட வேண்டாமா) அதை வைக்கச் சொல்லி எடுத்து வருகிறார்.

ஆனால் பால்காரர் பேச்சைக் கேட்டுக் கொண்டு எலிப்பொறியைச் சுத்தம் செய்ய நினைத்து வடையை வெளியே எடுத்ததில் வடை தூள்தூளாக ஆக, ராமசுப்புவும் அவர் மனைவியும் மசால்வடையைப் போலவே நெஞ்சம் தூள்தூளாக ஆகித் தவிக்கின்றார்கள். வீட்டுக்கு வந்தால் விருந்தாளி வேறு மைத்துனன் உருவத்தில் பயமுறுத்த என்றுமில்லா அதிசயமாக ராமசுப்பு துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் மைத்துனனுக்கு நல்வரவு கொடுக்க, ஶ்ரீமத் எலிமஹாப்புராணம் கேட்ட மைத்துனன் கோவிந்து, எலியை விரட்டக் கமிஷனாக பஜ்ஜி, கெட்டிச் சட்னியோடு, டிகிரி காஃபியும் தன் அக்காவிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு சமையலறையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று எல்லாச் சாமான்களையும் எடுத்துப் பரத்த, உதவி செய்யப் போன ராமசுப்பு எதிர்பாராமல் எலி தாக்குமோ என்ற அச்சத்தில் இருமல் மருந்து பாட்டிலை உடைத்து விட்டுத் தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்.

ராமசுப்பு  எலிப்பொறியைச் சுத்தம் செய்ய நினைத்து அதைத் தூள்தூளாக்கி, மீண்டும் உடைந்த மனதை ஒட்ட முடியாமல் தவிக்க, வீட்டை விட்டு "எலி"யேறினால் போதும். ச்சே ச்சே, வெளியேறினால் போதும்னு ராமசுப்பு எலிப்பொறி வாங்கவும், அவர் மகன் ட்யூஷன் சாக்கிலும் வெளியேறுகின்றனர்.  எலிப் பொறி வாங்கச் சென்ற ராமசுப்பு எலியின் வகையறாக்கள் தெரியாமல் அல்லல்படுகிறார். எலியின் அளவு தெரியாமல் எந்தக் கூட்டை வாங்குவது என முழிப்பவருக்கு  கூட்டிலும் சைவம், அசைவம் என இருப்பது புரியவர மயக்கமே வருகிறது. சாதாரணமாக சைவக்கூட்டில் பிடிக்கும் எலியை எங்காவது விட்டுட்டு வருவோம்னு போய் விட்டுட்டு வந்தால், அந்த எலி நமக்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பி இருக்கும்.  நாம பேருந்து பிடிச்சு, பேருந்து நிறுத்தத்திலே இருந்து வீட்டுக்கு வருவதற்குள்ளாக அது வந்துடும். ஆகவே நாங்க அதை முயல்வதே இல்லை.  எங்க மாமியார் வீட்டிலே அசைவக் கூடு தான்.

எலியார் தானே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கறாப்போல் அமைப்பு.  அதிலேயும் நாங்க எலிகளைப் பிடிச்சிருக்கோம். மருந்தும் வைச்சிருக்கோம். கோதுமை மாவை நெய்விட்டுப் பிசைந்து அதிலே எலி மருந்தையும் சேர்த்து எலியார் வரக்கூடிய இடங்களிலே வைச்சுடுவோம்.  எலியார் வந்து அந்த மாவு உருண்டையைத் தின்னுட்டு உயிரை விட்டுடுவார். அப்படி ஒரு முறை உயிரை விட்ட எலியாரின் உடல் மறைந்த விதம் தான் இன்னி வரை மர்மம்.  ஆனால் நம் இளகிய மனம் படைத்த ராமசுப்பு இதெல்லாம் வேண்டாம்னு சைவக்கூடாகவே இரண்டு வாங்கிடறார்.   ஒரு கூடு ராமசுப்புவுக்கும், இன்னொண்ணு நண்பரோட கூட்டை உடைச்சதுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கும். ஆனால் திருப்பிக் கொடுக்கிறச்சே தான் அந்த அம்மா போட்டாங்களே ஒரு போடு! அவங்களோட பழைய கூடு முன்னோர்கள் பயன்படுத்தியதால், "ஆவி" வந்ததாம். எத்தனை எலிகளோட ஆவியோ!

2 டஜன் மசால்வடைகளோடு வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டில் எலி எங்கே இருக்குனு கண்டுபிடிக்கவே முடியலை. எலிக்குப் பதிலாக மைத்துனனே எலியாக மாறி மசால்வடைகளைக் காலி செய்ய, இரவு நிம்மதியற்ற மனதோடு படுத்தவருக்கு எலி வந்து தன்னைத் தொந்திரவு செய்வது போலவே இருந்தது. மைத்துனனின் குறட்டை கூட எலி கடிக்கும் சப்தமாகத் தெரிந்தது. தோள் கண்டார் தோளே கண்டார்னு கம்பராமாயணத்தில் வந்தது போல ராமசுப்புவின் எலியாயணத்தில் எலி கண்டார், எலியே கண்டார்னு ஆகிப்போய் மறுநாள் அலுவலகத்திலும் வேலை ஓடாமல் தவிக்கிறார்.  அதோடு அவரை எலியோடு தன்னந்தனியாக மல்லுக்கட்ட விட்டுவிட்டு அவர் மனைவியும், பையரும், கோவிந்துவோடு மண்ணச்சநல்லூருக்குத் தப்பிச் சென்றுவிடுகின்றனர். அன்றைய ராசிபலனும் வக்ரமாயும், உக்கிரமாயும் இருப்பதாய்ச் சொல்லத் தவிக்கும் ராமசுப்புவுக்கு  மாம்பழச் சாலையில் ஒருவன் செத்த எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வீரனாக நடந்து செல்வதையும் Pied Piper of Hamelinஐத் தொடர்ந்து சென்ற சிறுவர்களைப் போல் இவனையும் சிறுவர்கள் தொடர்வதையும் பார்த்துப் பாதியிலேயே பேருந்தை விட்டு இறங்கி அவனோடு ஓர் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு முன்பணமும் கொடுக்கிறார்.

இப்போத் தான் சற்றும் பொருத்தமில்லா விஷயம் நடக்கிறது.  ராமசுப்பு வீட்டில் யாருமில்லாத சந்தோஷத்தைக் கொண்டாட க்வார்ட்டர் அடிக்கிறாராம்.  இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியலை!  எல்லா ஆண்களுமே இப்படித்தானா?  ஆனால் இந்தக் கதையிலேயே ராமசுப்புவோட வக்ரமான ராசியைக் குறித்துச் சொல்லி இருக்கிறாப்போல் இது கொஞ்சம் வக்ரம்னு நினைச்சுட்டு வேறு வழியில்லாமலேயே மனசைச் சமாதானம் செய்துக்க வேண்டி இருக்கு. :(  மறு நாள் அந்த Pied Piper  ரங்கன் ராமசுப்புவோட "எலி'சபெத் குடியிருப்புக்கு வருகிறான். கையில் ஏற்கெனவே செத்த எலி ஒன்றையும் அவர்கள் முன்னேற்பாட்டின்படி மறைத்துக் கொண்டு வர, குடியிருப்பில் அனைவரையும் அவரவர் வீட்டு வாசலுக்கு அழைத்து அவர்களுக்கெதிரே ரங்கனை அந்தச் செத்த எலியைத் தூக்கிச்செல்லும்படி செய்கிறார் ராமசுப்பு.  முன்னேற்பாட்டின்படி எல்லாம் நடைபெறுகிறது.

எல்லோருடனும் (எங்கே செத்ததோ அந்த எலியார்) எலியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ரங்கனுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டுக் குடித்தனக்காரர்களின் பாராட்டு மழையைச் சுமக்கமுடியாமல் சுமந்து அதில் நனைந்தபடி  வீட்டுக்கு வந்த ராமசுப்புவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு ஜெரிகள்  சாப்பாட்டு மேஜையில் விளையாட்டு. ஹாஹா, இரண்டும் சுண்டெலிகள். டாம் அன்ட் ஜெரியில் எப்போதும் ஜெயிப்பது ஜெரிதானே. தலை சுற்ற நின்ற ராமசுப்பு வீட்டையே காலி பண்ணி வேறே வீட்டுக்குப் போக முடிவெடுத்ததோடு மைத்துனனையும் நிரந்தரமாகத் தன்னோடு தங்க வைக்க முடிவெடுக்கிறார். "எலி"ய விஷயம் தான்.  ஆனால் ராமசுப்புவைப் பாடாய்ப் படுத்தி விடுகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்றிலே பயம். நம் ராமசுப்புவுக்கு எலியாரிடத்தில் பயம். எலியாரோ யாரைக் கண்டும் பயப்படவே இல்லை.  ராமசுப்பு வீட்டில் எங்கேயோ ஒளிந்து கொண்டு தன் வாழ்க்கையைச் சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எலித் தொந்திரவு சனிதசையில் அதிகமாய் இருக்கும் என்பார்கள்.  பொதுவாக எலித் தொந்திரவுக்கு  அசைவ எலிப்பொறியில் வடை வைத்து அதுவே சுருக்கு மாட்டிக்கும்படி செய்யலாம். அல்லது எலி மருந்து வைக்கலாம். இன்னொண்ணு எலியை அங்கேயே ஒட்டிக்கும்படி செய்யும் ஒரு மருந்தும் இருக்கிறது.  அது சரியாய் வரதில்லை.  ஏனெனில் எலிக்குப் பதிலா நாம தான் அதிலே மாட்டிக்கும்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை எலி ஒரு தொந்திரவு தான் என்றாலும் ராமசுப்பு மாதிரி மனம் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும். ராமசுப்பு வெற்றியடைந்தாரோ இல்லையோ கதாசிரியர் கதை சொல்லும் சாமர்த்தியத்தில் வெற்றி அடைந்து விட்டார்.  இந்த "எலி"யேனின் வாழ்த்துகள்.

 இங்கே

இங்கே

இங்கே

இங்கே

மேற்கண்ட சுட்டிகளில் எங்கள் எலிமஹாப் புராணங்களைப் படிக்கலாம். 

16 comments:

  1. ஒரு விமர்சனத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா? அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையாக விமர்சனம் எழுதி உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியுள்ளதற்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    அதைத் தனிப்பதிவாக தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ளதற்கும் என் நன்றிகள்.

    இதிலும் எந்தக்கதைக்கான எந்தப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றீர்கள் என்ற விபரமே யாருக்கும் தெரியாத வண்ணம் இணைப்பு ஏதும் கொடுக்காமல் எலிபோல ஓடவிட்டு எழுதியுள்ளீர்கள்.

    கதைக்கான இணைப்பையும், தாங்கள் பரிசுபெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட இணைப்பையும் சேர்த்துக்கொடுத்தால் புதிதாகத் தங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கு விஷயம் புரியவரும்.

    தங்களுக்கே பிற்காலத்தில் ஒரு back reference தேவைப்பட்டாலும் கூட அதுவே தங்களுக்கும் உதவியாக இருக்கும். அதற்காக மட்டுமே இதை நான் வலியுறுத்திச்சொல்கிறேன்.

    மற்றபடி எனக்கொன்றும் இதில் ஆட்சேபணையே இல்லை.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், ரத்தினச் சுருக்கம். :)

    ReplyDelete
  4. தளிர் சுரேஷ், நன்றி, பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், சேர்த்துட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க! :))) அது என்னமோ பழக்கமே வரலை! :))))

    ReplyDelete
  6. //"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது. ஆனால் நம் கதாநாயகர் ராமசுப்புவுக்குத் தான் தெரியவில்லை. //

    ஆரம்ப இந்த இரண்டு வரிகள் தாம் ஒரு விமரிசனக் களையே கொடுத்திருக்கோ? :))

    ReplyDelete
  7. Geetha Sambasivam said...
    \\வாங்க வைகோ சார், சேர்த்துட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க! :))) அது என்னமோ பழக்கமே வரலை! :))))\\

    பொதுவாகவே ஏழைக்கோயிலாக இருந்தாலும் பிள்ளையாருக்கு ஒரு பழைய பாடாவதி வஸ்திரமாவது சுற்றி வைப்பார்களே தவிர, பணக்காரப் பிள்ளையார் கோயில்களிலும் கூட, அவரின் வாஹனமாகிய எலியாரை வஸ்திரம் ஏதும் இல்லாமல் அம்மணமாகவே தான் வைத்திருப்பார்கள். அதுதான் உலக வழக்கம்.

    அது என்னமோ பழக்கமே வரலை! :)))) என எழுதியதால் நானும் இதனை எழுதியுள்ளேன்.

    இப்போ எலிக்கு ஜோரா 9X5 வேஷ்டியையே பஞ்சக்கச்சம் கட்டியதுபோல பிரமாதமாக இருக்கு. மிக்க மகிழ்ச்சி.

    புதிதாகத் தாங்கள் இப்போது சேர்த்துள்ள 2 இணைப்புகளையும்
    தான் நான் 9x5 வேஷ்டி/பஞ்சகச்சம் எனப்புகழ்ந்து சொல்லியுள்ளேன்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  8. //"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது. // என்ற ஆரம்ப வரிகளைப்போட்டு, எதற்குமே அசைந்துகொடுக்காத உயர்திரு நடுவர் அவர்களையே அசைய வெச்சுட்டீங்க போலிருக்கே. சபாஷ் !

    ’பச்சை விளக்கு’ என்ற அந்தக்கால சினிமாப் படத்தில் வரும் அருமையான பாடல் அல்லவா !

    ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது ....... :)

    ReplyDelete
  9. எலி தந்த பரிசுக்கு வாழ்த்துக்கள் மேடம். உங்கள் வீட்டு எலிமஹா புராணங்கள் படிக்கிறேன் மேடம்.

    ReplyDelete
  10. அப்பப்பா.....எலி ஓடும் வேகத்தில் இந்த எலிபுராண கதையின் ஓட்டம்.

    ReplyDelete
  11. சிரிக்க வைத்த கதைக்கு சிரிக்க வைக்கும் விமரிசனம். சிரிரங்க வீட்டில் எலி கிடையாதா?

    ReplyDelete
  12. ஆஹா! எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்த பரிசுக்கு வாழ்த்துக்கள்! விமர்சனம் ஹாஹஹஹஹ! அருமை! விமர்சனமே ஒரு இடுகை போன்று சுவாரஸ்யமாக .....நகைச் சுவையாக....கலக்குறீங்க போங்க! இந்த எலியோர்களின்....ஓ! ஸார்! எலி எலி என்று படித்ததின் விளைவு! இந்த எளியோர்களின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. எனக்கும் ராமசுப்பு க்வார்ட்டர் அடித்தது பிடிக்கவில்லை. எலியும் சேர்ந்து சாப்பிட்டிருந்தால் தூக்கிப் போட வசதியாக இருந்திருக்கும். பிரமாத விமர்சனம் கீதா. பெரிய புராணம் மாதிரி எலிப் புராணமே அமித்துவிட்டீர்கள். நல்ல சுவையான் நகை விமர்சினம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஹா...ஹா.... எலியார் அமர்களம்.

    ReplyDelete
  15. அன்புள்ள அய்யா,

    வணக்கம்.
    எலியார் மயம் நன்றாக ஒடுகிறது...
    வாழ்த்துகள்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete