எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 11, 2017

எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், ஏற்பட்டிருக்கும் (ஏ) மாற்றங்கள்!

மாற்றங்கள் வந்தே தீரும். வேறு வழியில்லை. என்றாலும் எல்லா நாடுகளும் பழமையையும் பாதுகாக்கின்றன. நாமோ நம்மிடம் இருக்கும் பழமையான கலாசாரத்தைக் கூடப் பாதுகாப்பதில்லை. நம் முன்னோர்களின் திறமையால் கட்டப்பட்ட கோயில்களைப் பாதுகாப்பதில்லை. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பொக்கிஷம்! அவற்றின் கலைச் செல்வங்களுக்கு ஈடு இணை இல்லை. பழைய காலக் கட்டிடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிப்பதில்லை. கோயில்களில் திருப்பணி செய்தால் அங்குள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை மாற்றாமல் புதுப்பிப்பதே இல்லை. அதோடு இப்போதெல்லாம் கோயில்களில் கல்லால் ஆன தளங்களை நீக்கி விட்டுப் புதுசாக க்ரானைட் அல்லது டைல்ஸ் போடுகிறார்கள்.

கோயில்களில் கல்லால் தளம் போடுவதின் முக்கிய நோக்கமே நடப்பவர்கள் கால் மற்றும் பாதத்துக்கு அவை வலுச் சேர்க்கும் என்பதால் தான். பாதங்கள் கல் தளத்தில் பதிய நடந்தால் அவை கிட்டத்தட்ட அக்கு பங்க்சர் மருத்துவ சிகிச்சை போல் செயல்படும். கோயில் தூண்களைச் சுத்தம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு sand blasting முறையில் மணலைத் தண்ணீர் போல் தூண்கள், சுவர்கள், சிலைகள் மேல் பீய்ச்சி அடிப்பதால் சிலைகள் அழிவதோடு, சுவரில் உள்ள பல பழமையான கல்வெட்டு ஆதாரங்களும் அழிந்து போகின்றன. சுவரும் இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் மேலிருந்து பெயர்ந்து உடைந்து விழக்கூடிய நிலையில் ஆகிவிடுகின்றன. சில கோயில்களில் உட்பிரகாரத்தை ஒட்டி வரும் சுற்று மண்டபத்தில் சில முக்கியமான ஸ்வாமிகளைப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அப்படிச் செய்பனவற்றில் நவகிரஹங்களும் இருக்கும்.

நாலைந்து கல்லால் ஆன படிகள் மேல் ஏறிப் போக வேண்டி இருக்கும் அந்த சந்நிதிகளுக்கு. இப்போது அந்தக் கல்படிகளைப் பெயர்த்து எடுத்து விட்டு க்ரானைட் அல்லது டைல்ஸில் படிகளைப் பதிக்கின்றனர். ஏற்கெனவே இருந்த கருங்கல்படிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்று சொல்கின்றனர். சில ஊர்க்கோயில்களின் மண்டபங்களையே இப்படிப் பெயர்த்து எடுத்து அனுப்பவதாகவும் சொல்கின்றனர். இதை எல்லாம் நாம் கவனிப்பதில்லை. இந்த க்ரானைட் அல்லது டைல்ஸ் படிகளில் மேலே ஏறும்போதும், இறங்கும்போதும் வழுக்கும். எட்டுக்குடியில் ரங்க்ஸ் விழுந்த கதை
இதுவே கல்லால் ஆன படிகள் எனில் இவ்வளவெல்லாம் வழுக்காது. பிடிப்பு இருக்கும். இப்படியாக மாற்றங்கள் தேவையானவை தேவையானவற்றுக்கு மட்டும் வரவேண்டியது நம் நாட்டில் முற்றிலும் மாறிப் போய்ப் பழமையான கோயில்களிலும் கை வைக்க ஆரம்பிச்சாச்சு! ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் திருப்பணியின் போது எவ்வளவு புகார்கள் வந்தன என்பது படிப்போருக்குத் தெரிந்திருக்கும். அடுத்துக் கோயில் செல்கையில் அணியும் உடை விஷயம். இதுக்காக இன்று பலரும் கொடி பிடிக்கிறார்கள். ஆனாலும் கோயிலுக்குச் செல்லும்போது அணியும் உடை கொஞ்சமானும் நாகரிகமாக இருக்க வேண்டாமா?  ஒரு கம்பெனியில் நாம் பணிபுரியும்போது அந்தக் கம்பெனிக்கு எனத் தனிச் சீருடை இருந்தால் அதைத் தான் அணிந்து செல்லவேண்டி இருக்கும். நம் இஷ்டத்துக்கு அணிய முடியுமா?  அதே போல் நம் நாட்டு ஜனாதிபதியைச் சந்திக்கப் போனால் அதற்கேற்றாற்போல் உடை உடுத்துவோம். இப்படி ஒவ்வொரு சந்திப்புக்கும் நாம் உடை அணிகையில் கோயிலுக்குச் செல்லும்போது மட்டும் பாரம்பரிய உடையை அணிய மறுப்பது ஏன்? இத்தனைக்கும் பாவாடை, தாவணி, புடைவையோடு சேர்த்து சல்வார் குர்த்தாவையும் அணியலாம் என்றே சொல்கின்றனர். என்ன ஒன்று மேலே அணியும் துப்பட்டா அவசியம். இதில் என்ன தப்பு இருக்கு?

 தமிழ்நாட்டு இளம்பெண்களின் பாரம்பரிய உடை பாவாடை, தாவணி தான். அதை அணிபவர்களே இன்று இல்லை என்னும்படியாக அந்த உடை வழக்கொழிந்து போய்விட்டது. வடநாட்டவர்கள் நம்மை ஆள்கின்றனர்;  வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. வடமொழியில் பேசவோ, படிக்கவோ கூடாது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நாம் (ஹிஹிஹி, நான் எப்போவுமே புடைவை தான், யோகா நேரம் தவிர) அணிவதோ வடநாட்டு உடையான சல்வார், குர்த்தா, சுடிதார்,குர்த்தா, லஹங்கா எனப்படும் வேலைப்பாடுகள் செய்த பாவாடை, திருமண ரிசப்ஷனில் குஜராத்தியர்களின் சேலைக்கட்டு, வடநாட்டு மெஹந்தி எனப்படும் மருதாணி வேலைப்பாடு, இவை பெண்களுக்கு என்றால் ஆண்கள்?

ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல. அவங்களும் திருமணம் என்றால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேலைப்பாடுகள் நிறைந்த பைஜாமா, குர்த்தா போட்டுக் கொள்கின்றனர். அதிலும் இப்போது எல்லோருமே பான்ட், சட்டைக்கு மேல் வட இந்தியர் அணிவது போன்ற மேல் கோட் எனப்படும் கையில்லாத குர்த்தா அணிகின்றனர். இது அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளில் வரும் செய்தி வாசிப்பவர்களிலிருந்து கலந்துரையாடல் நடத்தும் நபர்கள் வரை, அனைவரும் இப்படித் தான் உடை அணிந்து வருகின்றனர்.  இதெல்லாம் நம் தமிழ்க் கலாசாரத்தில் இருந்ததா என்ன? தேவை ஏற்படுகையில் நம் வசதிக்கேற்ப மாறித் தானே வருகிறோம்! அப்படி இருக்கையில் வடமொழியையோ மற்ற வட மாநிலத்து மொழியையோ விரும்பிக் கற்பவர்கள் கற்கட்டுமே! மற்றவற்றில் எல்லாம் மாறும் நாம், நம் விருப்பத்துக்கேற்ப செயல்படும் நாம் இந்த மொழி விஷயம் வந்தாலே உணர்ச்சி வசப்படுகிறோம்.

நாம் குடிப்பது கோக், பெப்சி. சாப்பிடுவது கேஎஃப்சி, பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை. பயன்படுத்தும் இரு சக்கர, நாலு சக்கர வாகனங்கள் வெளிநாட்டுத் தயாரிப்பு. அலைபேசி வெளிநாட்டுத் தயாரிப்பு. பலரும் போக ஆசைப்படும் நாடு அமெரிக்கக் கண்டத்தின் யுஎஸ் அல்லது இப்போதைய ரசனைப்படி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள்.  ஐடியில் வேலை பார்க்கும் பலரும் வேலை செய்வது வெளிநாட்டுக் கம்பெனிகளில் தான். எந்த விவசாயியும் தன் பிள்ளையும் ஒரு விவசாயி ஆக விரும்புவதில்லை. தன்னைப் போல் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்றே நினைக்கிறார்கள்.  ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையோ, பெண்ணோ படித்துவிட்டு விவசாயத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அடுத்த தலைமுறைகள் அதைத் தொடர வாய்ப்பே இல்லை! ஆக மொத்தம் மனம் விரும்பியே விவசாயத்தைத் தொழிலாகப் பலரும் தேர்ந்தெடுப்பதில்லை. லாபம் இல்லை என்பது மட்டும் காரணம் அல்ல! கஷ்ட, நஷ்டங்களும் சிரமங்களும் அதிகம். எங்கள் வீடே சிறந்த உதாரணம். எண்பதுகளில் என் மாமனார் நிலங்களை விற்று விட்டார். ஆகவே அதன் பின்னர் நாங்கள் கிராமத்துப்பக்கம் போவது என்பதே குலதெய்வத்துக்குச் செய்வதற்குத் தான்! இம்மாதிரிப் பல குடும்பங்கள் இன்று விவசாயத்தை விட்டு விட்டு நகர்ப்பக்கம் வந்து விட்டன.  ஆனால் விவசாயத்தை அழித்தது ஜெர்சி பசுவின் வருகையால், ஜல்லிக்கட்டுத் தடையால் என்போம். பல பெண்களும் விரும்பி மணப்பதும் வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தான்!  உள்நாட்டு மாப்பிள்ளைகள் விலை போவது கடினமாக இருக்கிறது என்பது அந்தப் பிள்ளையைப் பெற்ற பெற்றோருக்குத் தான் தெரியும்! ஆக மொத்தம் நம் விவசாயம் அழிந்ததுக்கோ, தண்ணீர்ப் பற்றாக்குறைக்கோ, அரசாங்க நிர்வாகம் சரிவர இல்லை என்பதற்கோ முழுமுதல் காரணம் நாம் தான். இந்தப் பதிவை எழுதும் என்னையும் சேர்த்து!

எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் கோக், பெப்சி, மிரின்டா, பொவொன்டோ போன்ற பானங்களை வாங்கி அடுக்குவதில்லை. இன்னும்சொல்லப் போனால் குடிநீர் கூட வைப்பதில்லை. மண்பானையில் தான் நீர் நிரப்பிக் குடிப்போம். வீட்டுக்கு வரவங்களுக்குக் குளிர்பானம்னு கொடுப்பதில்லை. காஃபி, டீ, பால் தான். அந்தப் பாலும் நாங்க வாங்குவது பாக்கெட் பால் இல்லை. கறந்த பால் தான்.  விதி வசத்தால் பெண், பிள்ளை இருவருமே வெளிநாட்டில் வேலை நிமித்தம் வர வேண்டிய சூழ்நிலை! எங்க குடும்பத்தில் மற்ற எல்லோருமே உள்நாட்டில், இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அதுவே எங்களுக்கு வருத்தம் தான். வேறே வழி இல்லை என்று தான் பொறுத்திருக்க வேண்டி வருகிறது. 

18 comments:

  1. அனைத்திற்கும் காரணம் நாம் தான்.. இதில் சந்தேகேமேயில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாமே தான் காரணம். கீழே தில்லையகத்து கீதாவும் சொல்லி இருப்பதைப்படியுங்கள்.

      Delete
  2. //கோயில்களில் கல்லால் ஆன தளங்களை நீக்கி விட்டுப் புதுசாக க்ரானைட் அல்லது டைல்ஸ் போடுகிறார்கள்.//

    தமிழ்நாட்டிலா, வடஇந்தியாவிலா? சமீபத்தில் மீனாக்ஷி அம்மன் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றி இருந்த விதானத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்தார்களோ..

    //சில ஊர்க்கோயில்களின் மண்டபங்களையே இப்படிப் பெயர்த்து எடுத்து அனுப்பவதாகவும் சொல்கின்றனர். //

    அடப்பாவிகளா...

    //தொலைக்காட்சிகளில் வரும் செய்தி வாசிப்பவர்களிலிருந்து கலந்துரையாடல் நடத்தும் நபர்கள் வரை, //

    ஒன்று சொல்லலாம். மக்கள் தொலைக்காட்சியில் எப்போதும் வேஷ்டி - சட்டைதான்.

    ReplyDelete
    Replies
    1. அதான் எட்டுக்குடிக் கோயில் உதாரணத்துக்கு லிங்க் கொடுத்திருக்கேனே ஶ்ரீராம்! அதோடு இல்லாமல் பல கோயில்களிலும் திருப்பணி செய்கையில் கல் தளங்களை அகற்றி அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு டைல்ஸ் போட்டுவிடுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலே உள்ள மண்டபம் குறித்த தகவலுக்கு நசியனூர் என்று கூகிளில் தேடிப் பாருங்க. தமிழ் இந்து தளத்தின் கட்டுரை ஒன்று படிக்க முடியும். (தமிழ் த கிந்து தினசரி இல்லை) :))))

      Delete
  3. இப்போதுதான் கோக் பெப்ஸி வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாய் மாறும் என்று எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம்! அவங்க மாறுகிறார்களா என்று. கஷ்டம் தான்! :)

      Delete
  4. எங்கள் வீட்டில் இப்போதும் கேரளத்து/ எங்கள் வீட்டு உணவு முறைதான். வெளி உணவு என்பதே அபூர்வம். அப்ப்படியே போனாலும் கூடியவரை நம்மூர் உணவுதான். வீட்டில் ட்ரிங்க்ஸ் வாங்கி வைப்பதோ, குளிர் தண்ணீர் குடிப்பதும் இல்லை. ஜீரக/கரிஙஞாலிப் பட்டை போட்ட தண்ணீர்தான்....கொதிக்கவைத்து...குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதுமில்லை. இன்னும் நகர வாழ்க்கைக்கு நாங்கள் அவ்வளவாக மாற வில்லை. கறந்த பால் என்று பலவும் உள்நாட்டுத் தயாரிப்புகளே..நாடன் பழங்கள் என்று அப்படியே பழகிவிட்டதால் வட இந்திய உணவுகள் கூட வீட்டில் செய்வதில்லை.

    கீதா: எந்த விவசாயியும் தன் பிள்ளையும் ஒரு விவசாயி ஆக விரும்புவதில்லை. தன்னைப் போல் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்றே நினைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையோ, பெண்ணோ படித்துவிட்டு விவசாயத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அடுத்த தலைமுறைகள் அதைத் தொடர வாய்ப்பே இல்லை! ஆக மொத்தம் மனம் விரும்பியே விவசாயத்தைத் தொழிலாகப் பலரும் தேர்ந்தெடுப்பதில்லை. //

    யெஸ் இதைத்தான் எனது மெரினா போராட்டம் பற்றிய பதிவில் சொல்லியிருந்தேன். காளையைக் காக்கணும்னு சொல்றாங்க. அங்க போராடியவர்களின் குடும்பம் வேண்டுமென்றால் விவசாயக் குடும்பமாக இருக்கலாம். அவர்களில் சில பெற்றோர் வேண்டுமானால் இப்போதும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யலாமாக இருக்கலாம்...ஆனால் இந்தத் த்லைமுறை இங்கு ஐடி யில் வேலை பார்த்துக் கொண்டு மீண்டும் கிராமம் சென்று விவசாயம் செய்வார்களா? கிராமம் செல்ல வில்லை என்றாலும் தங்களது பூர்வீக நிலங்கள அவர்கள் பெற்றோர் காலத்திற்குப் பிறகு காப்பாற்றி ஆட்கள் போட்டேனும், குத்தகைக்கு விட்டேனும் விவசாயத்தைப் பின்பற்றுவார்களா? அதற்கும் ஆள் இருப்பார்களா? கிராமத்தை நோக்கி நகரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கிராமத்து மக்களும் நகரவாசிகளாகி வருகிறார்கள். அப்படியிருக்க என்ன பிரயோசனம்?

    இதற்குத்தான் காந்தியின் பொருளாதாரம் கொஞ்சமேனும் கொண்டு வர வேண்டும் என்று சொல்லுவது. கதர் வேண்டாம் அட்லீஸ்ட் கிராமம் சார்ந்த அவரது கொள்களையேனும் பின்பற்றலாமே. அன்று காந்தியின் பொருளாதாரம் ஏளனமாகப் பார்க்கப் பட்டது. இதோ இன்றும் தொடர்கிறது.

    அதே போன்றுதான் நீங்கள் சொல்லும் பிற பொருட்களும்...உலகமயமாக்க ல் தேவைதான் ஆனால் எதில் எவ்வளவு தூரம் என்பது மிக மிக முக்கியம். கானடா நாடு இன்றும் விவசாயத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலை நாடுகளில் விவசாயிகள் துண்டு நிலங்களை வைத்துக் கொண்டு பட்ஜெட்டில் துண்டு விழும்படி நடத்தவில்லை. ஏக்கர் கணக்கில் ஒரு சிறு கிராமம் அளவு நிலங்களும், குறைந்தது 250 மாடுகள் வைத்துத்தான் விவசாயம் செய்கிறார்கள். இங்கு நம் விவசாயிகளுக்கு ஒரு சிறு வீடு அளவுதான் நிலமே இருக்கும் அதுவும் கூட நன்றாக ஆராய்ந்தால் பூமிதான் மூவ்மென்ட் வினோபா வினால் தொடங்கப்பட்ட போது பெரிய மிராசுதார்கள் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் அளித்த சிறு சிறு நிலங்களே. எனவே நம்மூரில் மாற்றம் வர வேண்டுமென்றால் புல்லின் வேரிலிருந்து வர வேண்டும். கிராமங்களிலுருந்து தொடங்க வேண்டும்..இப்படி நிறைய சொல்லலாம்...

    நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே....எங்கல் வீட்டிலும் நோ ஏரேட்டட் டிரிங்க்ஸ். கூடியவரை பன்னாட்டு நிறுவன சாதனங்களை வாங்குவதில்லை.

    நம் கையில்தான் இருக்கிறது....ஒரு சில அரசின் கையில் இருந்தாலும்....

    ReplyDelete
    Replies
    1. நீண்ட விளக்கமான பதிலுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் அரசின் கைகளை எதிர்பார்ப்பது என்பது கடந்த நாற்பது, ஐம்பது வருடங்களில் ஏற்படுத்தப்பட்டது! :( ஆகவே இன்றைய தலைமுறை அரசைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

      Delete
  5. //(ஹிஹிஹி, நான் எப்போவுமே புடைவை தான், யோகா நேரம் தவிர)//

    ஆஹா ...... :)))))

    //பல பெண்களும் விரும்பி மணப்பதும் வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தான்! உள்நாட்டு மாப்பிள்ளைகள் விலை போவது கடினமாக இருக்கிறது என்பது அந்தப் பிள்ளையைப் பெற்ற பெற்றோருக்குத் தான் தெரியும்!//

    இங்கு இப்போதெல்லாம் பிள்ளைகளுக்குப் பெண்ணே கிடைப்பதில்லை.

    //ஆக மொத்தம் நம் விவசாயம் அழிந்ததுக்கோ, தண்ணீர்ப் பற்றாக்குறைக்கோ, அரசாங்க நிர்வாகம் சரிவர இல்லை என்பதற்கோ முழுமுதல் காரணம் நாம் தான். இந்தப் பதிவை எழுதும் என்னையும் சேர்த்து!//

    ஒவ்வொன்றையும் நன்கு அலசி ஆராய்ந்து மிகப்பெரிய கட்டுரையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார்/ உள்நாட்டுப் பிள்ளைகளுக்குத் தான் பெண் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

      Delete
  6. ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஏதோகாரணமிருக்கும்போல

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே காரண, காரியத்துடன் தான்! நன்றி ஜிஎம்பி சார்.

      Delete
  7. கலாச்சாரம் காக்கப்படல் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  8. நாகரிகம் என்ற பெயரில் ஒவ்வொன்றாய் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். உடல் நலனை வீணாக்குகின்றோம் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா. முன்னேற்றமா, பின்னேற்றமா என்றே சந்தேகமாக இருக்கிறது.

      Delete
  9. "சில ஊர்க்கோயில்களின் மண்டபங்களையே இப்படிப் பெயர்த்து எடுத்து அனுப்பவதாகவும் சொல்கின்றனர்" - இது 1980களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. சென்னை வி.ஜி.பி இடங்களில் நீங்கள் தென் மாவட்டங்களில் (திருநெல்வேலி) களவாடப்பட்ட பல சிலைகளையும் தூண்களையும் பார்க்கலாம். அது பத்திரிகைகளில் வர ஆரம்பித்ததும், இந்தச் செயல் நிறுத்தப்பட்டது.

    பழைய கோவில்களின் பழமை கெடாமல் புதுப்பிக்கவேண்டும். இதற்கான தெளிவு, தமிழ்'நாட்டில் இல்லை (அதாவது பழைமையை அழிக்கக்கூடாது என்பது). நிறைய கோவில்களில், பழைய ஓவியங்களின்மேல் வெள்ளை அடிப்பதும், சாய்ந்திருக்கும் தூண்களை அப்புறப்படுத்தி இரும்பு கர்டர்கள் வைப்பதும் நடந்துகொண்டிருக்கின்றன. (சோழர் கால பல கற்றளிகளுக்கும் பள்ளிப்படைகளுக்கும், குறிப்பாக குந்தவை பள்ளிப்படைக்கும், ராஜராஜன் மகிஷிகளின் பள்ளிப்படைக்கும் இந்த நிலைமை வந்துவிட்டது)

    "உடை கொஞ்சமானும் நாகரிகமாக இருக்க வேண்டாமா?" - இது உண்மைதான். 2008ல் முக்தினாத்துக்கு டிரௌசரில் சென்றது (மலை ஏறவேண்டியிருக்கும் என நினைத்து) இப்போதும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பாரம்பர்யம் இருக்கிறது.

    "முழுமுதல் காரணம் நாம் தான்" - உண்மைதான். நாம் எல்லோரும் சுயநலமாகச் சிந்தித்து எப்போது கிராம வாழ்க்கையை விட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்தோமோ, அப்போதே மற்றவர்களும் சுயநலமாக நடந்துகொள்வதைத் தவிர்க்க இயலவில்லை. எல்லோருக்கும் நஷ்டம்தான். பலர், தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வது, கோவில் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும்தான். நான் விளையாடிய கிராமம் இப்போது ஆள் நடமாட்டமில்லாமல் ஆகிவிட்டது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பமும் இப்போது அங்கு இல்லை.

    "விதி வசத்தால் பெண், பிள்ளை இருவருமே வெளிநாட்டில் வேலை நிமித்தம் வர வேண்டிய சூழ்நிலை" - தம் தம் கிராமத்தை விட்டு வெளியில் வர ஆரம்பித்தபிறகு எல்லா இடங்களும் ஒன்றுதானே. சோழ தேசத்திலிருந்து, பல்லவதேசம், அதற்கு அப்பால் கலிங்க, மற்றும் பல தேசங்களுக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். உங்கள் வாரிசுகள் வேறு கண்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். (இதுதான் பல குடும்பங்களில்). இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? நாம் நம்முடைய கலாச்சாரம் என்று நம்பி வாழ்ந்தது (நம் காலத்தில்) - அதுவே ரொம்ப மோசமாகிவிட்டது நிலைமை என்று நம்மைப் பார்த்து நம் முன்னோர்கள் சொல்லியது - நம் வாரிசுகளின் வாரிசுகளுக்குக் கொஞ்சம் அன்னியமாகப் போகிறது என்பதுதான் இதில் வருத்தத்துக்கு உரியது.

    மாற்றம் என்பது மானிதத் தத்துவமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஹிந்து தளத்தில் பாருங்கள் நெல்லைத் தமிழன், இதற்கு நான் எழுதிய பதில் என்ன காரணமோ தெரியலை, வரவே இல்லை. தமிழ் தி கிந்து தினசரிப் பேப்பர் இல்லை. நசியனூர் என்னும் ஊர்க் கோயில் பத்திய பதிவு. இது தவிரவும் நிறையக் கேள்விப் படறேன். அவ்வப்போது செய்திகள் வருகின்றன. https://tinyurl.com/gmpj6jc தமிழ் இந்து தளத்தின் சுட்டியைக் கொடுத்திருக்கேன். மாற்றங்கள் தேவை தான் என்றாலும் கலாசார மாற்றம் தேவையா? :(

      Delete