எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 19, 2017

தாத்தாவின் பிறந்த நாள்!

 உ.வே.சா பிறந்த தினம் க்கான பட முடிவு

சற்றேறக் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவி புரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரஹாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்க்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்மகர்த்தாவும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையைப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக்கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டாரென்று ஊகித்தேன். அக்காலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும்போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடையணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார்:"வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.

யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்துகொண்டு நின்றனர். பிரசாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு சித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை, அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப் பட்டவரென்றோதான் தீர்மானித்திருக்கவேண்டும்.

தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார். ஆனாலும் அவர் அதைக்காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர்பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரசாதங்களும் கிடைத்தன.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப் போல் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக்கண்டதில்லை. ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதாயிருக்கிறதே;என்ன?" என்று கேட்டேன். "அதுதான் செண்டு" என்றுஅவர் கூறினார்."செண்டா" என்று சொல்லி அப்படியே நின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.

கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரெளபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற ஒரு கருவியில் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத்தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைகளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக்காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.

அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிர குமாரர், கரிகாலன், ஐயனரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னதுதானென்று அறியும்படியும் செய்தது.

"ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள், பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டை நான் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்," என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.

"இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.

"சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்." என்று கூறி விடை பெற்றுக் கொண்டேன்.

அன்று முதல் என் சந்தேகம் பறந்து போய்விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யச் செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்கும் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். "செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்" என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண்டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.


காலம்பரயே போட்டிருக்கணும். என்னமோ நேரமே வாய்க்கலை. மேலே இருப்பவை தாத்தாவின் நினைவு மஞ்சரியில் செண்டலங்காரர் என்னும் கட்டுரையின் ஒரு பகுதி! இங்கே இன்னும் பதினெட்டாம் தேதி தான் என்றாலும் கணினி ஞாயிற்றுக்கிழமையைத் தான் காட்டுகிறது. தாமதமான இடுகைக்குப் பொறுத்துக் கொள்ளவும்! :(

20 comments:

  1. தாத்தாவின் பிறந்த நாளுக்கு சுவாரஸ்யமான இடுகை. செண்டாயுதம் பற்றி சமீபத்தில் எங்கள் ப்ளாக்கிலும் ஒரு பதிவு எழுதி இருந்தோமே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், நினைவு இருக்கு! அதிலேயும் இதைக் குறிப்பிட்ட நினைவும் இருக்கு!

      Delete
  2. தமிழ்த்தாத்தாவினை நினைவுகூறியது சிறப்பு. அவருடைய தன் வரலாறு மூலமாகத்தான் 18ம் நூற்றாண்டில் எப்படி இயைந்து வாழ்ந்தனர் என்பதனை அறியமுடிந்தது. சுவடிகளைத் தேடி அவர் அலைந்த வரலாறையும் பதிவு செய்திருப்பார். அவர் எழுதிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் போன்றோரின் வரலாற்றுப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத் தமிழன். சென்னை திருவான்மியூர் அல்லது பெசன்ட் நகர் எங்கேனு தெரியலை. உ.வே.சா. நூலகம் இருக்கு. அதிலே மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்களின் சரிதம் உ.வே.சா. எழுதியது கிடைக்கும். அவருடைய சுய சரிதையும் மற்ற நூல்களும் கிடைக்கும்.

      Delete
  3. இன்று தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் பிறந்தநாள். அகமும் புறமும் என தமிழ் இலக்கியம் தமிழர்கள் கையில் தவழ அவர் செய்த தமிழ்த் தொண்டினை யாரும் மறக்கவோ மறுக்கவோ இயலாது. அவரை மறக்காமல் ஒரு பதிவைத் தந்திட்ட (ஒவ்வொரு வருடமும் என்று நினைக்கிறேன்) உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @தமிழ் இளங்கோ ஐயா, ஆமாம், இணையத்துக்கு வந்ததில் இருந்து தவறாமல் போட்டு வருகிறேன்.நன்றி.

      Delete
  4. தமிழ்த்தாத்தாவின் படம் அவரின் நினைவலைகளையும், தமிழுக்கான அவரின் கடும் உழைப்பினையும் என் கண்முன் கொண்டுவந்தன. மிக்க மகிழ்ச்சி.

    செண்டலங்காரப் பெருமாள் பற்றிய அனைத்துச் செய்திகளிலும், தங்களின் தனிப்பாணி எழுத்துக்களால், ‘சென்ட்’டின் நறுமணம் கமழ்ந்துள்ளது. பாராட்டுகள்.

    மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி சந்நதிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரேயொருமுறை சென்று வந்துள்ளேன்.

    [அப்போது தமிழக முதலமைச்சராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தார் என ஞாபகம் உள்ளது :) ]

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் மன்னார்குடி போனப்போப் பார்த்தோம். அதே போல் வடுவூரிலும் பார்த்தோம். உ.வே.சா. பார்த்த ஆறுபாதியைத் தான் பார்க்கலை! இத்தனைக்கும் ஆறுபாதியில் சொந்தங்கள் நிறைய! :)

      Delete
  5. ஆஹா! என்னவொரு அற்புதமான பதிவு! நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete

  6. மன்னார்குடி குடமுழுக்கு மலரில் இந்த அறிய ' தாத்தாவின்' பதிவு படித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் ..சாதாரணமாக மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி ' மாடுமேய்க்கிற ' திருக்கோலத்தில் இருப்பதால் , நமக்கு தரிசனம் செய்து வைக்கும் பட்டர்கள் இந்தச் செண்டை காண்பித்து பெருமாள் கையில் 'சாட்டை வைத்திருக்கிறார் என்று கூறுவதை ..'புன்முறுவலோடு' கேட்டுக்கொண்டிருப்பேன் !

    மாலி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், யாருக்கும் வித்தியாசம் புரியறதில்லை! :)

      Delete
  7. தாத்தாவின் பிறந்த நாளில் எங்களுக்கு அருமையான பதிவு கிடைத்தது. அவரைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்தோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர் ஐயா!

      Delete
  8. தமிழ்த்தாத்தாவின் அரிய தகவலொன்றை இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தில்லையகத்து கீதா!

      Delete
  9. சிறந்த பதிவு
    அருமையான நினைவூட்டல்
    பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்!

      Delete
  10. வருட வருடம் உங்கள் பதிவு வந்து விடும் . நானும் என் மாமவின் திதிக்கு கோவை போய் விட்டதால்
    இப்போதுதான் படித்தேன்.
    அருமையான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! உ.வே.சா. அவர்களை மறந்தால் தமிழையே மறந்தாற்போல் அல்லவா! மறக்க முடியுமா?

      Delete