எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 03, 2025

என்ன குற்றம் செய்தேன்?

 பலதும் எழுத நினைச்சு ஆனால் ஏனோ எழுதப் பிடிக்காமல் இருக்கேன். என்றாலும் சில நிகழ்வுகள் மனதைப் பாதித்தவற்றை மட்டும் சொல்றேன். சில/பல புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. அதில் எங்கள் ப்ளாக் மூலம் பரிசாகக் கிடைத்த ஆனந்தப் பூங்காற்றே புத்தகம், கடுகு சார் எனக்கு அனுப்பி வைத்த கமலாவும் தொச்சுவும் ரேவதி எனக்குப் பரிசாய் அளித்த அமரதாராவின் இரண்டாம் பாகம் ரங்கதுரையின் கதையும் அடக்கம். இன்னும் சில புத்தகங்களும் உண்டு. மோகன் ஜி அனுப்பிய சாஸ்தாம்ருதம், ஜிஎம்பியின் புத்தகம், வைகோவின் புத்தகம் என இருக்கின்றன. ஒரு மனது போனால் போகட்டும். உனக்கப்புறம் என்ன ஆகுமோ அது இப்போவே ஆகிவிட்டதாய் நினைச்சுக்கோ என்றாலும் இன்னொரு மனசு தவிப்பாய்த் தவிக்கிறது. இதனால் மனஸ்தாபமே வந்து விட்டது. எனக்கு அது தான் ஆச்சரியம். மனிதர்களின் உண்மையான முகம், நாம் அறியாத பக்கம் நன்றாகத் தெரிந்தாலும் அதிர்ச்சியும் மன வருத்தமும் இன்னமும் அடங்கவில்லை. இப்படிக் கூடவா? இப்படிக் கூடவா என மனம் அடிச்சுக்கறது. இத்தனைக்கும் இது நடந்து ஒரு வருஷம் போல் ஆகப் போகிறது. ஆனாலும் நினைத்தாலே மனம் பதறுகிறது. இதனால் எனக்கு வரவேண்டிய கார்த்திகைப் பணமும், கணுப் பணமும் வராமல் போய் விட்டன. நம்ம ரங்க்ஸ் வேறே முடியாமல் இருந்துட்டு இப்போத் தான் கொஞ்சம் எழுந்திருந்து நடமாடும் நேரம் இப்படிச் சீர் வராமல் போனதில் எங்க இரண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம். எங்களைப் பொறுத்தவரை இதனால் எல்லாம் உறவு பாதிக்காது/பாதிக்கக் கூடாது என்பதே! ஆனால் நடப்பதே வேறே மாதிரியா இருக்கே! என்ன செய்வதுனு புரியவே இல்லை. :(

நான் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் போனதே இல்லை. மதுரையில் முன்னெல்லாம் மேலமாசிவீதி, டவுன் ஹால் ரோடோடு சேரும் முக்கில் வண்டியை வைத்துக் கொண்டு சோவியத் யூனியன் புத்தகங்களை விற்பார்கள். தூதரக அலுவலகத்துக்குக் கடிதம் போட்டால் மாதா மாதம் இலவசமாயும் புத்தகங்கள் வரும். அது தவிர ஹனுமந்தராயன் கோவில் தெரு முக்கில் மீனாக்ஷி பதிப்பகம்/புத்தகங்களும் விற்பனை செய்தார்கள் இருந்தது. அங்கே போய்ப் பழக்கப் படுத்திக் கொண்டதில் அவங்க விற்பனைக்கு வந்திருக்கும் புதுப் புத்தகம் ஏதேனும் ஒன்றைப் படிக்கத் தருவார்கள். அப்போல்லாம் எழுத்தாளரைப் பொறுத்து நாலணாவில் இருந்து ஒரு ரூபாய் வரை வாங்கிப்பாங்க. நிறையப் புத்தகம் படிச்சிருக்கேன் அப்படி வாங்கிப் படிச்சதில் அதிகம் ஜெயகாந்தனின் புத்தகங்கள். 

யதேச்சையாக அறிமுகம் ஆன பழைய பேப்பர் காரரின் கூடையில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை. பணமே வாங்கிக்காமல் படிச்சுட்டுக் கொடு பாப்பானு புத்தகங்களைத் தருவார். அதன் பின்னரும் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்கார். அது ஒரு பொற்காலம்னு சொல்லலாம்.  கல்யாணம் ஆகி வவுந்தப்புறமா என்னோட புத்தக ஆர்வத்தைப் பார்த்து மிரண்டு போன நம்ம ரங்க்ஸ் என்னைப் புத்தகக்கடைபக்கமே கூட்டிச் சென்றதில்லை. எத்தனையோ புத்தகக் கண்காட்சி நடந்தும் நான் போனதே இல்லை.சித்தப்பாவிடம் இருந்த புத்தகங்களே நிறையப் படிக்காதவை இருந்ததால் எப்போ டி.நகர் போனாலும் ஐந்தாறு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வருவேன். ரயிலில் அலுவலகம் செல்லும்போதும்/திரும்பி வரும்போதும் அலுவலக ஓய்வு நேரத்தின் போதும் புத்தகங்களே துணை.

24 comments:

  1. புத்தகங்கள் மாதிரி, அதிலும் நல்ல நாவல்கள், நமக்கு உற்ற துணை கிடையாது.

    புத்தகம், நம் பெண்டுகள் போன்றவற்றை இரவல் கொடுத்தால் திரும்ப வராதுன்னு ஒரு வடமொழி பழமொழி இவ்வளவு புத்தகம் படித்தும் உங்கள் ஞாபகத்தில் வரலை போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, இம்மாதிரி ஏமாற்றம் புதுசு இல்லைனாலும் இம்முறை என்னமோ வேதனை அதிகமா இருக்கு. இரவல் எல்லாம் கொடுக்கலை. :(

      Delete
  2. காணாமல் போன புத்தக லிஸ்ட் போட்டிருக்கீங்களே.. ஒருவேளை ஸ்ரீராம்/எபி அவங்க புத்தகம் உங்களுக்கு அனுப்பலாம். கடுகு சார் இனி எங்க அனுப்பறது?

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் அனைத்துமே எனக்கு நண்பர்கள் கொடுத்தவை. ஆனந்தப் பூங்காற்றே புத்தகம் பரிசாக வந்தது. இன்னும் சில பெயர் நினைவில் வரலை. :( ஆனால் எல்லாமும் யார் யாரோ கொடுத்தவை தான் ரிஷபன் கொடுத்தது ஒண்ணும் அதில் அடக்கம்.

      Delete
  3. ​நான் தமிழ் கதைபுத்தகங்கள் அதிகம் வைத்திருக்கவில்லை இருந்த சிலவும் கிண்டில் மற்றும் கம்ப்யூட்டர் களில் உள்ளவை தான். இவை கூகிள் ட்ரைவில் இருக்கின்றன.

    10வருடங்களுக்குப்பின் கிண்டில் படுத்துவிட்டது. ரிப்பேர் செய்ய முடியாது.

    அச்சு புத்தகங்களாக உள்ளவை ஆங்கில கதை புத்தகங்கள் தாம் ஆகவே யார்க்கும் வேண்டாம். ஒரு சில தமிழ் தத்துவ புத்தகங்களை (ரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சத்குரு,நித்யானந்தர்) புத்தகங்கள் இருக்கின்றன.

    மற்றவர்கள் யாராவது எந்த புத்தகத்தையாவது கேட்டால் கொடுத்து விடுகிறேன். கண் சரியில்லை. 50 வருட கம்ப்யூட்டர் வாழ்க்கை கண்ணை கெடுத்து விட்டது. .

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பது போல் கின்டிலிலோ, ஆன்லைனிலோ படிப்பது அத்தனை ரசனையாக இருப்பதில்லை. குழந்தைகளைக் கையில் வைத்துக் கொஞ்சுவது போல்! வீடியோ அழைப்பில் பார்த்தாலும் நேரில் பார்த்துத் தொட்டுப் பேசிக் கொஞ்சுவது போல் வருமா?

      Delete
  4. எப்போதும் புத்தகங்கள் படிப்பது புத்துணர்வைத் தரும்.

    நானும் புத்தகங்கள் வைத்து இருக்கிறேன் எனக்குப் பிறகு அவையெல்லாம் குப்பைக்கு போய்விடும்.

    இதனால் சிலருக்கு கொடுத்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் கில்லர்ஜி. என்றாலும் எனக்கு இன்னமும் மனசு கேட்கவில்லை. நம்மவர் நீ கொடுத்ததாக நினைச்சுக்கோ என்றே சொல்லிக் கொண்டு இருக்கார். :( என் மனம் கேட்கவில்லை.

      Delete
  5. .//  இதனால் எனக்கு வரவேண்டிய கார்திகைப் பணமும், கணுப்பணமும் வராமல் போய்விட்டன //

    :((

    எனக்கும் இதே மாதிரி அனுபவங்கள் உண்டு.  ஆனால் தொலைந்தது புத்தகம் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், மாமா உடம்பு முடியாமல் இருக்கும் இந்தச் சமயத்தில் கார்த்திகை மஞ்சள், குங்குமப் பணமும், கணு மஞ்சள் குங்குமப் பணமும் வராதது வேதனையாவே இருக்கு இன்னமும். நல்லவேளையா அண்ணா ஏதோ அனுப்பி வைத்தாரோ மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்ததோ!

      Delete
  6. எங்கள் அப்பா  வைத்திருந்த பல நல்ல புத்தகங்களைக் காணோம். 

    திருமணம் ஆகி நான் சென்னைக்கு வந்தபின் அப்பா அம்மா தனியாக இருந்த நேரம் நிறைய சிஷ்யப்பிள்ளைகளை சம்பாதித்து வைத்திருந்தார்.  ஸ்கூல் போகும், கல்லூரியில் படிக்கும், வேலைக்குப் போகும் இளைஞர்கள், சில இளைஞிகள். 

    மாதமொருமுறை பொன்மாலைப்பொழுது என்று வீட்டிலேயே இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  அதற்கும் நிறையபேர் வருவார்கள்.  நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்துவை மணந்திருக்கும் பெண் அப்பாவின் சிஷ்யை. 

    அவர்களில் யார் எப்போது எதை எடுத்தார்களோ... 

    போதாக்குறைக்கு அண்ணனின் நண்பர் ஒருவர்..  அண்ணனுக்கு அவர்மேல் அபார நம்பிக்கை...  ஆனால்...

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் நான் தனியாக, அண்ணா தனியாக, தம்பி தனியாகப் புத்தக சேமிப்பு வைச்சிருக்கோம். இதில் அண்ணாவுடையது பெரிய அளவில் இருந்தது கறையான் அரிச்சுப் பாதி போய் விட்டது. நான் மேற்கு மாம்பலத்தில் ஒரு லென்டிங் லைப்ரரிக்குப் பாதிக்கும் மேல் புத்தகங்கள் கொடுத்து விட்டேன். இப்போ இருப்பவை அநேகமாக நண்பர்கள் கொடுத்தவையும் தேவனின் சில/பல புத்தகங்களின் சேமிப்பும் மட்டுமே. நீங்க கொடுத்த புத்தகம் இருக்கு என்னிடம் இன்னமும்.

      Delete
  7. ஆமாம், என்னிடமிருந்து வாங்கிப்போன பைண்டிங் புத்தகம் பத்திரமா இருக்கோல்லியோ....

    :)))

    ReplyDelete
    Replies
    1. சித்தப்பா வைச்சிருந்த பல நல்ல புத்தகங்களை எடைக்குப் போட்டிருக்கார். துரதிர்ஷ்டவசமாக நாங்க அப்போ ராஜஸ்தானில் இருந்தோம். என்றாலும் அதன் பின்னர் பல நல்ல புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கார். உன்னிடம் பத்திரமாக இருக்கும் என்பார்.
      உங்க புத்தகம் வைச்சிருக்கேன் ஸ்ரீராம்.

      Delete
    2. // உங்க புத்தகம் வைச்சிருக்கேன் ஸ்ரீராம். //


      அது என்ன புத்தகம் அக்கா?

      Delete
    3. நீங்க பாசோட வந்தப்போ கொடுத்த எம்விவியின் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய புத்தகம். அதைத் தவிர்த்து நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ எடுத்து வந்த ரா.கி.ரவின் நாவல்கள் உள்ள பைன்டிங், கொஞ்சம் கிழிந்து வரும். ஆனால் முக்கியமான பக்கங்கள் இருக்கின்றன.

      Delete
  8. சிலசமயம் காணாமல் போகிறது என்பதை விட எடுத்தவர்கள் யார் என்று அறியும்போதுதான் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும்.  யு டூ என்று!

    ReplyDelete
    Replies
    1. சரியான பாயின்டைப் பிடிச்சீங்க. அது தான், அது தான் அதே தான் எனக்கும் ஆச்சரியம், அதிர்ச்சி, மன வேதனை, சொத்தை இழந்தாப்போல் சோகம் எல்லாமும் இருக்கு இன்னமும்.

      Delete
  9. எனது கருத்து ???

    ReplyDelete
  10. ஒண்ணு வந்திருக்கு கில்லர்ஜி. மேலே வெளியிட்டு பதிலும் சொல்லி இருக்கேன். வேறே ஏதும் ஸ்பாமில் கூட இல்லை. :(

    ReplyDelete
  11. புத்தகத்தை கேட்டு எடுத்து போனாலும் தருவத்தில்லை, தெரியாமல் எடுத்து போனால் எப்படி தருவார்கள். கோல நோட்டு, மார்கழி மாதம் வாங்கி போவார்கள் கொடுக்கமாட்டார்கள்.
    சீர் வரவில்லை என்று வருத்தபடாதீர்கள். இறைவன் கொடுப்பான். மூன்று சகோதரர்கள் ஒரு தம்பி மட்டும் எப்போதும் பொங்கல் சீர் கார்த்திகை சீர் தருவான். தந்தால் அவர்களுக்குதான் நல்லது. அண்ணன் இல்லை அதனால் அண்ணி தருவது இல்லை, இன்னொரு தம்பி மூன்று வருடம் கொடுத்தான் அப்புறம் கொடுப்பது இல்லை, ஆனால் பார்க்கும் போது செய்வான்.

    உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கிடைப்பது கஷ்டமோனு கவலை தான் கோமதி. அதிலே தான் ரேவதி கொடுத்த அமரதாராவும் கடுகு சாரின் பரிசுப் புத்தகமும் இருக்கு! என்ன செய்ய முடியும்? ஒரு வருஷமாகப் புலம்பிக் கொண்டு இருக்கேன். :( மாமா உடம்பு சரியில்லாத நேரம், இப்போப் போய்க் கார்த்திகைச் சீரும், பொங்கல் சீரும் வரலைனா கஷ்டமா இருக்கு. 10 ரூ கொடுத்திருந்தால் கூடப் போதுமே! :(

      Delete
  12. வணக்கம் சகோதரி

    தங்களுடன் மனவேதனை புரிகிறது. எனக்கும் தாய் வீட்டு சீதனங்கள் வருடாவருடம் வந்து தவறாது கொண்டிருந்தன. பிறகு மணியார்டர் அனுப்பினால் அது எங்கோ போய் விடுகிறதென நான் ஊருக்கு செல்லும் போது ஒவ்வொரு விஷேடத்திற்கக்குமென கையிலேயே பணமாக தந்து விடுவார்கள். அதனால் உங்களின் மன வேதனைகள் எனக்கும் புரிகிறது. ஏதோ வேலையினால் அவர்களுக்கும் சில தாமதங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

    புத்தகங்கள் காணாமல் போவது சற்று அதிர்ச்சிதான்..! வீட்டுக்கு வருகிறவர்கள் படித்தவுடன் எடுத்துப் போகிறேன் என சொல்ல வேண்டாமோ. .? நான் முன்பு சில நாவல்கள் அம்மா வீட்டில் இருந்து இங்கு (சென்னையில்) படிப்பதற்காக வைத்திருந்தேன். பிறகு குழந்தைகள் விடுமுறைக்கென அம்மா வீட்டிற்கு சென்று வந்த போதெல்லாம் பின் அதற்கும் உங்கள் வீட்டு நிலைதான்..! அதனால் புத்தகங்களை சேகரிக்கும் வழக்கம் விட்டுப் போய் விட்டது. பிறகு திருமங்கலத்தில் இருக்கும் போது நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்ததோடு சரி..! இப்போது அதுவுமுல்லை. உங்களிடமிருந்து காணாமல் போனவைகள் என்றேனும் ஒருநாள் திரும்பியும் வரலாம். எடுத்துச் சென்றவர்கள் நினைவாக திருப்பிக் கொண்டு வந்து தரலாம். கவலை வேண்டாம். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சாதாரண நாளாக இருந்திருந்தால் ஒண்ணும் தெரிஞ்சிருக்காது. இது சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்தது. அதன் பின்னர் கூடச் சரியாகவில்லை. டிசம்பரில் கார்த்திகைக்கும், ஜனவரியில் பொங்கலுக்கும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுக் கூட மனசு கொடுக்கச் சம்மதிக்கலை என்பது ரொம்பவே தாங்க முடியாமல் இருக்கு. ஏற்கெனவே அப்பா/அம்மா சொல்லுவாங்க, நாங்க இல்லைனா யாரு செய்யப் போறாங்கனு! ஏனெனில் அப்போ அவங்க செய்தது அதிகமாகத் தெரியும் எல்லோருக்குமே. நான் கடிந்து கொள்ளும்போது அப்பா சொல்லுவார், எனக்கப்புறமும் இதெல்லாம் கிடைக்கணும்னு. இப்போ நினைச்சால் எவ்வளவு உண்மை என்பது புரிகிறது.கடவுளைப் பிரார்த்தனை செய்வதை விட வேறே எதுவும் செய்ய முடியாது. எனக்கு யாரிடமும் பகை இல்லை. அவ்வப்போது பேசித் தீர்த்துடுவேன். பின்னர் மறந்துடுவேன்.

      Delete