எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 21, 2012

அழகிய சிங்கமும், அன்ன காமாட்சியும்!


ரெண்டு நாளா உம்மாச்சி தரிசனத்துக்குப் போயிடறேன்.  நேத்திக்குக் காலம்பர பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டுட்டு பூஜை எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டு ஓய்வு எடுக்கறச்சேயே 1 மணி ஆயிட்டது.  அதுக்கப்புறமாக் கோவிலுக்குப் போக முடியாதுனு சாயந்திரமாப் போனோம்.  ஸ்ரீரங்கநாதர் கோயில் மதியம் இரண்டு மணியிலிருந்தே பார்க்கலாம். ஆனாலும் வெயிலில் போக முடியலை.  சாயந்திரமாப் போகலாம்னு நினைச்சோம். சாயந்திரம் திடீர்னு சிங்கத்தைப் பார்க்கணும்னு ஆசை வந்தது.  ரங்கனார் தூங்கட்டும், தொந்திரவு செய்ய வேண்டாம், சிங்கத்தைப் பார்த்துட்டு வந்துடலாம்னு போனோம்.  முன்னாலே காடாகவே இருந்த இடம்.  இப்போக் காட்டை அழிச்சு ஒருவழி பண்ணியாச்சு.  யானைங்க நிறையவே வருமாம்.  அது எப்போவோனு சொன்னாங்க.  காட்டு யானைங்க அட்டகாசம் சமாளிக்க முடியாமல் அவங்களை அடிச்சும் விரட்ட மனசில்லாமல் என்ன செய்யறதுனு யோசிச்ச மக்கள் காட்டு ராஜாவான சிங்கத்தை உதவி கேட்டிருக்காங்க.


நம்ம சிங்கனாருக்கும் கேட்கணுமா!  அழகிய சிங்கராச்சே.  இடத்தொடையில் மஹாலக்ஷ்மியையும் உட்கார்த்தி வைத்துக்கொண்டு இந்தக் காட்டைப் பார்த்து வந்து உட்கார்ந்துட்டார். அதுக்கப்புறமா யானைகளின் தொந்திரவும் குறைந்ததாம்.  காட்டு ராஜாவுக்கு முன்னாடி பிரஜைகள் பணிந்து தானே ஆகணும்!  என்ன! திருதிருனு முழிக்கிறீங்களா? காட்டழகிய சிங்கரைப் பார்த்துட்டு வந்தோம்.  நேத்து ஆடி வெள்ளிக்கிழமை, முதல் வெள்ளிக்கிழமை வேறே.  அகிலாண்டத்தைப் பார்க்கலாம்னா கூட்டம் தாங்காது.  நமக்கா நிக்க முடியாது.  சாதாரண நாளிலே வரேன்னு சொல்லிட்டு ரங்கனாரைப் பார்க்கலாம்னு நினைச்சுக் கடைசியிலே சிங்கனாரைப் பார்த்தோம்.  கோயிலுக்குப் போற வழி திருவானைக்கா எல்லையிலே வருது.  போற வழி இப்போக் கொஞ்சம் பரவாயில்லை.  நிறைய வீடுகள் வந்திருக்கு.  ஆனால் கோயில் அதே பழமையோடு கொஞ்சம் கூடப் பழமை மாறாமல் காணப்பட்டது.  நுழைவாயிலில் அரை வட்ட வளைவு வைத்துக் காட்டழகிய சிங்கர்னு எழுதி இருக்காங்க.  நுழைகையில் வலப்பக்கம் உள்ள வன்னி மரத்தடியில் தான் நவராத்திரி விஜயதசமிக்கு  ஶ்ரீரங்கம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வந்து மண்டகப்படி கண்டருளிவிட்டு அம்பும் போடுவாராம்.

கொஞ்சம் தள்ளி அர்ச்சனை சாமான்கள் கடை. இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம். நீண்ட நடைபாதை, முன் மண்டபம் தாண்டிச் சென்றால் உள்ளே இடப்பக்கமாய்ப் போக வேண்டும்.  பத்துப்படிகள் மேலே ஏறிச் சென்றால் உள்ளே பிரம்மாண்டமாக சுமார் எட்டுஅடிக்குக்குறையாமல் அழகியசிங்கர் தொடையில் மஹாலக்ஷ்மியைத் தொடையில் அமர்த்திய வண்ணம் அமர்ந்திருக்கிறார்.  அவரே உற்சவரும் கூட. அதிசயமாக மேற்குப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்.  இடக்கையால் லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டும், வலக்கையால் அபயம் காட்டிக் கொண்டும் காட்சீ அளிக்கிறார்.  நரசிம்மரின் நக்ஷத்திரமான சுவாதி நக்ஷத்திரம் இங்கே விசேஷம்.  கேட்டவரம் கொடுப்பவர் என்றும் தீராத நோய்களைத் தீர்ப்பவர் என்றும் சொல்கின்றனர்.  நரசிம்மர் பிரதோஷ காலத்தில் ஹிரண்ய வதம் செய்ததால் அந்த நேரம் வழிபாடு செய்தல் விசேஷம் என்று கூறப்படுகிறது.  ஶ்ரீராமானுஜாசாரியாரின் சீடரான பிள்ளை லோகாசாரியார் இக்கோயிலில் இருந்து ஶ்ரீவசந பூஷணம் முதலான பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இங்கே தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பி வரும் வழியில் அன்ன காமாட்சி என்ற அம்மன் கோயில் இருப்பதாகவும், அம்மனை தரிசனம் செய்துட்டுப் போகும்படியும் உறவினர் சொன்னார்கள்.

சரினு அந்தக் கோயிலுக்கும் போனோம்.  திருவானைக்கா செல்லும் பாலத்தடியில் உள்ள தெருவில் உள்ளது.  இங்கேயும் கோயிலின் சூழ்நிலை அடர்ந்த மரம், செடிகொடிகளோடு காணப்பட்டது.  அன்ன காமாட்சியைத் தவிர காசி விச்வநாதரும் இருப்பதாகச் சொன்னார்கள்.  பாலாலயம் எழுப்பி இருக்காங்க. அன்ன காமாட்சியைத் தரிசிக்க முடிந்தது.  நல்ல வேளையாக் கூட்டம் அதிகம் இல்லை.  ஒரு இருபது பேர் இருந்தாங்க.  நாங்க தரிசனம் செய்ய முடிந்தது.  நின்ற வண்ணம் ஹொரநாடு அன்னபூரணி மாதிரிக் காட்சி அளிக்கிறாள் அம்மன்.  ஶ்ரீசக்ர அன்னகாமாட்சி என்று சொல்கிறார்கள்.  கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை.  நுழைவாயில் வளைவில் இருந்து நேரே சென்றால் ஒரு வீடு மாதிரியான இடத்தின் ஒரு அறையில் அம்மன் குடி கொண்டிருக்கிறாள்.  கோயிலின் வரலாறு யாருக்கும் சொல்லத் தெரியலை.  இனிமேல் தான் யாரையானும் விசாரிக்கணும்.  இங்கே வந்து எதிர்த்த குடியிருப்புக்காரங்க கிட்டே கேட்டப்போ அவங்களுக்கு இந்தக் கோயில் பத்தியே தெரியலை.

அம்மனுக்குப் பூப்பாவாடையும், பூவினால் அலங்கரித்த மேற்சட்டையுமாக அலங்கரித்திருந்தார்கள்.  நேரே நின்று பேசுவது போல் இருந்தாள் அம்மன்.  நல்ல தரிசனம் கிடைத்து அங்கு பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே நவகிரஹங்களையும் சுத்திவிட்டுப் பின்னர் வீடு வந்து சேர்ந்தோம்.

8 comments:

  1. ஏதாவது கல்யாணம் காட்சி என்று ஸ்ரீரங்கம் பக்கம் வைத்தால் அங்கேயும், அப்படியே திருவானைக்காக் கோவிலும் பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் அருகில் கோவில்கள் இருக்கின்றன என்பது இப்படி நீங்கள் பார்த்து வந்து எழுதினால்தான் தெரிகிறது.

    ReplyDelete
  2. உங்க கூடவே நாங்களும் தரிசனம் செய்தோம் நன்றி

    ReplyDelete
  3. அடுத்த முறை அங்க போய்ட வேண்டியதுதான்

    ReplyDelete
  4. My favourite temple! very peaceful place...

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், இன்னும் நிறையவே இருக்கு. உறையூர் வெக்காளி அம்மன் கோயில், இங்கேயே சுத்துவட்டாரத்தில் உள்ள இன்னும் சில ரங்கநாதர் கோயில்கள்னு இருக்கு. இப்போத் தானே வெயில் குறைஞ்சிருக்கு. கொஞ்சம் கொஞ்சமா வெளிக்கிளம்பணும். :)))))

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, நன்றி.

    ReplyDelete
  7. வாங்க எல்கே, கட்டாயமாய்ப்போய்ப் பாருங்க. சுற்று வட்டாரமே அழகாய் இருக்கு.

    ReplyDelete
  8. வாங்க மாதங்கி, ஆமாம், ஆனால் இப்போக் கொஞ்சம் கூட்டம் வருது. :(( அக்கம்பக்கமும் வீடுகள் நிறைய ஆயிடுச்சு.

    ReplyDelete