எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 24, 2013

மதுரை மல்லிகைப்பூ இட்லியின் கதை!

எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் ஹோட்டலில் சாப்பிடறதைப் பத்தி எழுதினதும் பல மலரும் நினைவுகள்.  என் தம்பி பிறக்கும் வரையிலும் நாங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பெரியப்பா(அப்பாவோட அண்ணா)  வீடுகளிலேயே மாறி மாறி இருந்ததால் எப்போவோ பார்க்கும் அப்பாவை, "மாமா" என்றே கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவும், நானும் மாமானு கூப்பிட்டதை வேறு வழியில்லாமலோ என்னமோ அப்பா அநுமதித்திருந்தார். :))) ஆனால் தம்பி பிறந்ததும் அவரும் மாமானு கூப்பிடப் போறாரேனு நினைச்சு எங்களை "அப்பா" னு கூப்பிடச் சொல்லி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அப்போத் தான் அம்மா கல்யாணமான இத்தனை வருடங்களில் முதன் முதலாகத் தனிக் குடித்தனம் வைத்திருக்கிறாள்.  தம்பி கைக்குழந்தை.

அண்ணாவை சூரிய நாராயணா பள்ளியில் இருந்து வடக்காவணி மூலவீதியில் இருந்த(இருக்கும்??) பொன்னு ஐயங்கார் பள்ளியில் எனக்குத் துணைக்காகவும் சேர்த்து விட்டாச்சு.  ரெண்டு பேரும் ஸ்கூலிலேயும் போய் அப்பாவை மாமானு சொல்லப் போறாங்களேனும் அப்பாவுக்குக் கவலை.  அப்பானு கூப்பிடப் பயிற்சி கொடுத்த எங்க அப்பா எங்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் தயாரானார்.  அப்பானு கூப்பிட ஆரம்பித்தால் ஸ்வீட், காரம் வாங்கித் தருவேன்னு வாக்குறுதி கொடுத்தார்.  அதுவும் நரசிம்மன்னு ஒருத்தர் கிட்டே தவலை வடை வாங்கித் தருவதாகவும் வீட்டிலேயே அம்மாவை அல்வா பண்ணித் தரச் சொல்வதாகவும் ஆசை காட்டினார்.  நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மசிந்து கொண்டிருந்தோம்.  நடுவில் பெரிய குளத்திலிருந்து அத்தை, அத்திம்பேர் வந்து ராஜாபார்லியில் வெண்ணை பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அப்பாவுக்காகப் பிரசாரம் செய்தார்கள்.  ராஜாபார்லி வெண்ணை பிஸ்கட்னா அடிச்சுக்க வேறே கிடையாது.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(

திடீர்னு ஒரு நாள் முனிசிபாலிடியில் சுகாதார இன்ஸ்பெக்டராக இருந்த அம்மாவின் அத்தை பிள்ளை நரசிம்மன் என்பவர் வந்தார்.  அவரை, "நரசிம்மா," என்று பெயரெல்லாம் சொல்லிக் கூப்பிட்டு அப்பாவும், அம்மாவும் ஏதேதோ பேசிட்டு, தம்பிக்கும் எனக்கும் அம்மைப் பால் வைக்கச் சொன்னாங்க.  அவர் வந்திருந்ததே அதுக்குத் தானாம். நான் பிறந்ததும் ஒரு இடமாக இல்லாமல் அங்கே இங்கேனு அம்மா சுத்திட்டு இருந்ததிலே இந்தத் தடுப்புக்கள் எதுவுமே  செய்யலைனு தம்பி பிறந்தப்போ தான் வைச்சாங்க.  அவர் பெயர் நரசிம்மன்னு தெரிஞ்சதும், நானும் இவர் தான் தவலை வடை சப்ளையர்னு நினைச்சுட்டு, அசடு மாதிரி நாக்கில் ஜலம் ஊற அம்மை குத்திக் கொண்டேன்.  வந்த வேலை முடிஞ்சதும் அவர் கிளம்ப, நான் ,"அம்மா, அம்மா, தவலை வடை கொடுக்காமப் போறார், பாருனு" கத்த, அப்பாவும், அம்மாவும், அந்த நரசிம்மனும் ஒரு கணம் திகைக்க, அப்பா, அம்மா விஷயம் புரிந்து சிரிக்க, நரசிம்மன் திருதிரு.  அப்புறமா அம்மா அவரிடம் விஷயத்தை விளக்கிவிட்டு என்னிடம் இவர் அந்த நரசிம்மன் இல்லை.  அவர் வேறேனு சொல்லி விளக்கம் கொடுத்தாள்.

அதுக்கப்புறமாத் தவலை வடை நரசிம்மன் வந்து தவலை வடையும், காராவடையும்(இது மதுரை ஸ்பெஷல், மத்த ஊர்களில் பார்க்க முடியாது) கொடுத்துவிட்டுப் போனார்.  நாங்களும் வடைகளும், அல்வாவும் சாப்பிட்டுவிட்டு, மெல்ல மெல்ல அப்பாவை அப்பானு கூப்பிட ஆரம்பித்தோம்.  பொதுவாக அப்போல்லாம் ஜாஸ்தி ஹோட்டலுக்குப் போக மாட்டாங்க.  கல்யாணம் ஆகாதவங்க தான் ஹோட்டலில் சாப்பிடுவாங்க.  குடும்பமாக ஹோட்டலில் போய் சாப்பிடுவதை அப்போல்லாம் பார்க்கவே முடியாது.  இத்தனைக்கும் பெண்கள்/குடும்பம்னு போட்டுத் தனியாகவே அறை ஒதுக்கி இருப்பாங்க.  அப்படியும் யாருமே ஹோட்டலுக்குப் போய்ப் பார்த்ததில்லை. ஹோட்டலில் இருந்து எப்போவானும் அப்பா வாங்கி வருவார்.  வீட்டுக்குத் தான்.  வீட்டில் வைத்துச் சாப்பிட்டிருக்கோம்.  அதுவும் அம்மாவுக்கு முடியலைனா எட்டணாக் கொடுத்து சாம்பார் தான் ஜாஸ்தி வாங்குவாங்க.  அந்த டேஸ்டே தனி.  நல்லாவே இருந்தாலும் சாதத்தோடு சாப்பிட அத்தனை ருசிக்காது.  என்றாலும் நாங்க அந்த சாம்பாருக்கு தேவுடு காத்துட்டு இருந்து சாப்பிட்டிருக்கோம். ஆனால் அப்பாவும் ஒரு சமயத்தில் எங்களை ஹோட்டலுக்கு அழைத்துப் போக ஆரம்பித்தார்.

தானப்ப முதலி அக்ரஹாரத்திலிருந்து பிரியும் கருகப்பிலைக்காரச் சந்தில் ஒரு மாமா வீட்டிலேயே இட்லி போட்டுவிட்டு அதைத் தூக்கி வந்தும் கொடுப்பார்.  பஞ்சகச்சத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு தோள் துண்டை மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, முடிந்த குடுமியோடு தோளில் துண்டின் மேல் ஒரு போசியில்(இப்போல்லாம் குத்தடுக்குனு சொல்றாங்க) இட்லிகளைப் போட்டுக் கொண்டு இடக்கையால் அதைப் பிடித்துக் கொண்டு, வலக்கையில் ஒரு தூக்கில் அடியில் தேங்காய்ச் சட்னியும், மேலே ஒரு கிண்ணத்தில் நைசாக அரைத்த மிளகாய்ப்பொடியில் எண்ணெயை ஊற்றியும் கொண்டு வருவார்.  அணாக்கள் புழக்கத்தில் இருந்த சமயம் அரை அணாவுக்கு இரண்டு அல்லது மூன்று இட்லிகள் வரை கிடைத்தது.  தொட்டுக்கச் சட்னி, அல்லது மிளகாய்ப் பொடி ஏதேனும் ஒன்று.  பைசா புழங்க ஆரம்பித்ததும், ஐந்து பைசாவுக்கு இரண்டு இட்லியாகப் பண்ணினார்.  எப்படி இவ்வளவு நினைவு இருக்குன்னா, ஐந்து பைசாவோடு ஒரு பைசாவைச் சேர்த்தால் ஆறு பைசாவை ஓரணா என்று அப்போச் சொல்லுவாங்க.  அரை அணாவுக்கு இரண்டு இட்லி கொடுத்தது போய் இப்போ ஆறு பைசாவுக்கு நான்கு இட்லினு கணக்குப் பண்ணினாக் கூட ஐந்து பைசாவுக்கு மூணாவது கொடுக்கணுமேனு அப்பா அவரிடம் வாக்குவாதம் பண்ணுவார்.


அவர் வீட்டுக்குப் போனால் நல்ல வாழையிலை போட்டு எண்ணெய், மிளகாய்ப் பொடி, சட்னி, சாம்பார்னு எல்லாத்தோடயும் கொடுப்பார்.  அதோட அங்கே கல்தோசையும் வார்த்துக் கொடுப்பார். தோசையை வீட்டுக்கு வேணும்னா அங்கே போய்த் தான் வாங்கிக்கணும்.  இட்லியோடு சேர்த்துக் கொண்டு வர மாட்டார்.  இவர் அப்புறமா அந்த வட்டாரங்களுக்குள்ளேயே பல வீடுகள் மாறி என் கல்யாணம் ஆனப்புறம் கூட நம்ம ரங்க்ஸுக்கும் அவர் கையால் இட்லி, தோசை என் தம்பி கூட்டிப் போய் வாங்கித் தந்திருக்கிறார்னா பார்த்துக்குங்க.  அப்போவும் இட்லி விலை அதிகம் இல்லை.  ஒரு ரூபாய்க்கு நான்கு இட்லிகள் தான்.   இப்போ கேரளாவின் ராமசேரி இட்லி ரொம்பப் பிரபலம்னு பேசிக்கறாங்க. அது பார்க்கக் கல்தோசை மாதிரித் தான் இருக்கு. :)))

இட்லி கூகிளார் கொடுத்தார்.  தவலை வடை நம்ம கைப்பக்குவம் தான்,  யோசிக்காமல் சூடா எடுத்துக்குங்க. :))))

27 comments:

  1. //இட்லி கூகிளார் கொடுத்தார். தவலை வடை நம்ம கைப்பக்குவம் தான், யோசிக்காமல் சூடா எடுத்துக்குங்க. :))))//

    முதல் வடை சுடச்சுட எனக்கே எடுத்துக்கொண்டேன். மகிழ்ச்சி.

    ருசியோ ருசியான பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //எட்டணாக் கொடுத்து//
    ஹும் அது ஒரு காலம். 8 அணாவுக்கு ஒரு மதிப்பு இருந்தது.....

    ReplyDelete
  3. எடுத்துக்கொண்டோம்.
    இதை பாத்துட்டு, வசந்தை நகர் முருகன் கடையும், கனிமேரா ஓட்டலும் விளம்பரம் ப்ளீஷ் என்று கொஞ்சுவார்கள்.

    ReplyDelete
  4. OMG !! ஆசையா இருக்கே! பொடில எள்ளும் உண்டா?இந்த ஆசைக்கு இன்னொருதரம் பிறக்க வேண்டாம் இப்பவே பண்ணி அனுப்பிசுடுங்கோ

    ReplyDelete
  5. ஹோட்டல் நினைவுகளான இந்தப் பதிவுக்கு நான்தான் காரணமா....ஆஹா...தன்யனானேன்!

    கோபு ஐயங்கார்க் கடை பற்றிச் சொல்வீர்கள் என்று நினைத்தேன்! தவளை வடை....ஆ! இது என் வசன கவிதையில் வந்திருந்தது! ஸோ, ரெண்டாக எடுத்துக் கொண்டேன்!

    ReplyDelete
  6. என்னப்பா இருக்கு இட்லிங்க! அப்படி ஒருகடை மதுரையில் உண்டு.
    என் கணவர், என் தம்பி இருவரும் ஒரு முறை சாப்பிட்டு விட்டு புகழ்ந்து கொண்டு இருந்தார்கள். மல்லிகைப்பூப் போல் இடலி, தொட்டுக் கொள்ள நாலுவகை சட்னி,சாம்பார் எல்லாம் நன்றாக இருந்தது என்றார்கள்.

    கருவேப்பிலைக்காரசந்தில் இட்லி, வடை ,போழி, எல்லாம் நன்றாக செய்வார் ஒருவர்.

    பாரதி நகரில் இப்போதும் கேழ்வரகுபுட்டு, பச்சரசிபுட்டு, கொழுக்கட்டை, பனியாரம், பருப்புவடை, உளுந்துவடை, பஜ்ஜி, தேங்காய் போழி, கடலைப்பருப்புபோழி,எல்லாம் கிடைக்கிறது. சுத்தமாய் , சுகாதாரமாய்.
    உங்கள் மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது.
    தவலை வடை சூடாய் எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  7. இப்பவே பசிக்க ஆரம்பிக்குதே...

    ReplyDelete
  8. எனக்குப் பிடித்ததில்  அலுக்காதது என்றால் இட்லி தான். இனிப்பில்லாத பஞ்சு மிட்டாய் மாதிரி இட்லி செய்தால் பிடிக்கும்.  நேத்து செஞ்சேன். சட்னி சாம்பார் செய்யப் பொறுமையில்லாம சல்சாவுடன் சாப்பிட்டேன். சுகம்.

    எனக்குத் தெரிந்த ஒருவர் ரெண்டு இட்லியை தட்டில் போட்டு இன்னொரு கையில் ஒரு இட்லியை வைத்திக் கொண்டு 'இட்லி  நல்லா இருக்கா?' என்பார். அடுத்த இட்லி குறி தவறி பட்டு விடுமென்ற பயத்தில் 'ஆகா!' என்பேன். இதில் பாவம் என்னவென்றால் அவர் இட்லியைப் பற்றி அவருக்குப் பெருமை பிடிபடாது. அவங்க செஞ்ச இட்லி அவங்களுக்கு பஞ்சு மிட்டாய் :)

    அப்பாவை அண்ணா என்று வருடக்கணக்கில் கூப்பிட்டு வந்தான் என் குரோம்பேட் நண்பன். 
    என் பாட்டியை இன்றைக்கும் சித்தி என்கிறேன்.  தொலைந்து போன கூட்டுக் குடும்ப சுவாரசியங்கள்.

    ReplyDelete
  9. தவலை வடை தவளை வடை ஆனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! :))))

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், முதல் ஆளா வந்து சூடா வடை எடுத்துண்டதுக்கு நன்றி. :))))

    ReplyDelete
  11. வாங்க வா.தி. எட்டணாவுக்கு ஒரு பெரிய தூக்கு சாம்பார் கிடைக்கும். ஹிஹி, இப்போல்லாம்??? :))))

    ReplyDelete
  12. வாங்க "இ"சார், அவ்வப்போது வருகை தருவது எனக்குப் பெருமை சேர்க்கிறது. வசந்தை நகர் முருகன் இட்லிக்கடையெல்லாம் இப்போ வந்தது! கனிமேரா என்ன பிசாத்து! இதுக்கு முன்னாடி நிக்க முடியாத்!!! :)))))

    ReplyDelete
  13. வாங்க ஜெயஶ்ரீ, எள்ளுப் போட்ட மிளகாய்ப் பொடியா நினைவில் இல்லை. ஆனால் ரொம்ப நைசாக இருக்கும். அதை எண்ணெயில் குழைத்திருப்பது பார்த்தால் மி.பொ.னே சொல்ல முடியாது. சட்னி மாதிரி அவ்வளவு நைசா! இத்தனைக்கும் அவங்க மனைவி கையால் சுத்தும் இயந்திரத்தில் தான் அரைப்பாங்களாம்.

    ReplyDelete
  14. வாங்க ஸ்ரீராம்,

    "தவளை"க்கு இம்பொசிஷன் கொடுக்க இருந்தேன். அதுக்குள்ளே என்ன அவசரம் திருத்த??? கோபு ஐயங்கார் பத்தி ஏற்கெனவே நிறைய எழுதி இருக்கேன். :))))

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, நீங்க சொல்லும் கடை எழுபதுகளில் வந்திருக்கலாம். எழுபதுகளில் நான் மதுரையை விட்டுக் கிளம்பியாச்சு! :)))) ஆகவே அப்புறமா வந்ததெல்லாம் அவ்வளவாத் தெரியாது.

    கருகப்பிலைக்காரச் சந்தில் இந்த மாமாவாத் தான் இருக்கும் போளி, வடை போட்டது. சாயந்திரமா தவலை வடை போடுவார், தெரியும். எங்க வீட்டிலே அம்மா பண்ணுவது இன்னும் நல்லா இருக்கும். ஆகவே அதெல்லாம் அப்புறமா வாங்கினதே இல்லை.

    ReplyDelete
  16. வாங்க டிடி, இட்லி, இருக்கு, தவலை வடை இருக்கு, எடுத்துக்கலாமே! :))))

    ReplyDelete
  17. வாங்க அப்பாதுரை, எங்க அப்பா, பெரியப்பாக்களும் அவங்க அப்பாவை "அண்ணா"னும், அம்மாவை "மன்னி"னும் கூப்பிட்டிருக்காங்க. நாங்க எங்க மாமாக்களை எல்லாம் அண்ணானும், அம்மாவின் அப்பாவைத் தான் பல வருஷங்கள் வரை அப்பானே நினைச்சிட்டு இருந்தோம். அவரைத் தான் அப்பானும் கூப்பிட்டோம். தாத்தானு கூப்பிட ஆரம்பிச்சப்போ எனக்குப் பத்து வயசுக்கும் மேல் ஆச்சு! :))))

    ReplyDelete
  18. ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருந்தாலும் இம்பொசிஷன் கொடுத்தாச்சு. ஒரு லக்ஷத்துப் பதினாயிரத்து முப்பத்து மூணு தரம் எழுதுங்க. தவலை வடைனு.:))))))

    ReplyDelete
  19. "தவலை வடை" (ப்ளீஸ், ஒரு லட்சத்துப் பதினாயிரத்து முப்பத்தி மூணு தரம் படித்துக் கொள்ளவும்!) :))))))

    ReplyDelete
  20. இதைப் படித்துவிட்டுப் போய்விட்டேன். மறதி.பின்னூட்டம் இட மறந்துவிட்டேன்.

    பதிவைப் படித்து தவலை வடையையும் எடுத்துக் கொண்டேன்.பசியைக் கிளப்பிவிட்டீர்கள் அழகான வார்த்தைகளால். மிக மிக நன்றி.
    மதுரைக்குப் போய் வந்த திருப்தி கிடைத்தது.

    ReplyDelete
  21. இட்லியும் தவலைவடையும் ரொம்ப சுவைத்தது. மலரும் நினைவுகள்.

    ReplyDelete

  22. சென்னையில் ‘முருகன் இட்லிக் கடை ‘ புகழ் வாய்ந்தது.தொட்டுக்கொள்ள பலவித சட்னிகளும் பொடிகளும். அண்மையில் மதுரை சென்றபோது என் மகன் அங்கும் ஒரு முருகன் இட்லிக் கடை பிரசித்தம் என்றான். பலரிடம் கேட்டுமந்தக் கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இட்லி மிருதுவாக இருந்தால்தான் சாப்பிட ருசிக்கும். இல்லையென்றால் வீடு கட்டக் கல்லாக உபயோகிக்கலாம்.

    ReplyDelete
  23. ஶ்ரீராம், அதெல்லாம் முடியாத், ஒரு லக்ஷத்துப் பதினாயிரம் முறை எழுதியே ஆகணும். :))))

    ReplyDelete
  24. வாங்க வல்லி, எனக்கும் இப்படி நேரிட்டது உண்டு. பதிவைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்க மறந்தும் போயிருக்கேன். சில சமயம் கூகிளார் பிடிவாதத்தாலே முடியாமலும் போயிடும். :))))

    ReplyDelete
  25. வாங்க மாதேவி, நன்றி.

    ReplyDelete
  26. ஜிஎம்பி சார், இந்த முருகன் இட்லிக்கடையைப் பத்தி ஒரு கதையே இருக்கு. நீங்க கேட்கிற கடை மேலமாசி வீதியிலே இருக்கு. பெருமாள் கோயில், நன்மை தருவார் கோயிலுக்கு முன்னாடியே வந்துடும்.

    ஆரம்பத்தில் விளக்குத்தூண் பக்கம் ஒரு சின்ன வீட்டுத் திண்ணையிலே தான் ஆரம்பிச்சது. பின்னாலே பெரிசா ஆயிடுச்சு. இதைத் தவிர மதுரையிலேயே தளவாய் அக்ரஹாரத்திலும் முருகன் இட்லிக்கடை இருக்கு. சரவண பவன் ஹோட்டல்காரங்க இவங்களைப் பார்த்துத் தான் சட்னி பலவிதமாகக் கொடுக்க ஆரம்பிச்சதாச் சொல்வாங்க.

    ReplyDelete
  27. ஆஹா... லஞ்சம் அப்பவே ஆரம்பிச்சாச்சா மாமி... எனக்கும் இப்ப வடை, அல்வா, ஜாமூன் எல்லாமும் சாப்பிட தோணுதே... டயட் இருக்கறப்ப இப்படி எழுதி...ஹ்ம்ம்

    ReplyDelete