எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 31, 2013

நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!

துணிமணிகள், பாத்திரம், பண்டம்னு வாங்கியாச்சு.  அடுத்து முக்கியமான ஒன்று திருமணம் நடைபெறப் போகும் இடம்.  முன்னெல்லாம் வீடுகள் பெரிதாக இருக்கும்.  ஒரு வீடு எனில் வாசல் திண்ணை இருபக்கமும், உள்ளே ரேழி, ரேழியில் ஒரு அறை, சில வீடுகளில் ரேழியில் இருந்தே மாடிக்குச் செல்லும்படிகள், பின்னர் கல்யாணக் கூடம், கூடத்தில் எதிரும் புதிருமாக இரு அறைகள், பின்னர் இரண்டாம் கட்டுக்குச் செல்லும் இன்னொரு ரேழி, அங்கேயும் வருஷாந்திர சாமான்களை வைக்க நெல்லுக்குதிரோ(சிலர் பத்தாயம் என்பார்கள்) அல்லது சின்னதாக சாமான் அறையோ இருக்கும்.  வருஷத்துக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அந்த அறையில் வைக்கப்பட்டு ஒரே மளிகைக்கடை வாசனை வந்து கொண்டிருக்கும்.  அதன் பின்னர் இரண்டாம் கட்டு, அங்கேயும் ஒரு அறை இருக்கும், இரண்டாம் கட்டுத் தான் அநேகமாய் வீட்டினர் அனைவரும் சாப்பாடுக்குக் கூடும் கூடமாகவும் இருக்கும்.  அது தாண்டி, முற்றம், சமையலறை என அமைந்திருக்கும்.  இரண்டாம் கட்டில் இருக்கும் முற்றம் சாப்பிட்டுக் கை  அலம்புவதற்காகவும், கூடத்தில் வெளிச்சம் வருவதற்காகவும் திறந்த முறையில் அமைக்கப்பட்டு, மேலே அழிக்கம்பிகளால் மூடப் பட்டுக் காணப்படும்.  அதைத் தாண்டித் தாழ்வாரம் என்னும் ஒரு சிறிய கூடத்தைத் தாண்டித் தான் சமையலறை.  இந்தத் தாழ்வாரம் தான் கறிகாய் நறுக்க, மாவு அரைக்க இயந்திரம், கல்லுரல், அம்மி போன்றவை இருக்கும் இடமாக இருக்கும்.

இதைத் தாண்டிச் சமையலறையில் கிழக்கே அடுப்புப் போட்டிருப்பார்கள்.  ஒரு பெரிய அடுப்பும், பக்கத்தில் கொடி அடுப்பு என்னும் துணை அடுப்புமாகக் காணப்படும்.  சமையலறை தாண்டிக் கொல்லையில் கிணற்றடி, முற்றம், பாத்திரங்கள் தேய்க்கும் இடம், துணிகள் தோய்க்கும் இடம், குளிக்கும் அறை, குளியலறை வாசலில் வெந்நீருக்கு என நிரந்தரமாக ஓர் அடுப்பு, அதற்கருகே கோட்டை அடுப்பு என்னும் பெரியதொரு அடுப்பு எல்லாம் இருக்கும்.  அநேகமாய் இது இல்லாத வீடுகளே இருக்காது.  ஆகவே வீட்டு வாசலிலேயே எப்போதும் போட்டிருக்கும் பந்தலைக் கொஞ்சம் பெரிதாகப் பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் போட்டுவிட்டு, அலங்காரங்கள் செய்வார்கள்.  அதோடு வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வாசல் சுவரில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பார்கள்.  பின்னர் இது வீடு முழுதும் அடிக்காவிட்டாலும், கூடத்திலும், வாசலிலும் மட்டும் அடிக்கும் வழக்கம் இருந்து பின்னர் சத்திரங்களில் கல்யாணம்னு ஆனதும் அதுவும் போயாச்சு! :))))கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள்.  இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும்.  மேலே இருந்து காற்றும் வீசும்.  இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க.  கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் நான் சின்ன, ரொம்பச் சின்ன வயசா இருக்கிறச்சே நடந்தது.  கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே!  அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும்.  மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க.  அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க.  கல்யாணச் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறிகள், பழங்கள் எல்லாம் சமையல் நடக்கும் வீட்டிலேயே ஒரு அறையை ஒழித்து அதிலே சேர்த்து வைப்பார்கள்.  பொறுப்பாக ஒருத்தரிடம் மட்டும் அதற்கான சாவியைக் கொடுத்து வைப்பார்கள். கல்யாணத்திலே சமையல்காரர்களுக்கு மட்டுமல்லாது, இப்போ போல் அல்லாமல் அந்தக் காலத்திலே உண்மையாகவே சுற்றமும், நண்பரும் ஒரு மாதம் முன்னராகவே போயிடுவாங்களா, அன்றாடமே சில கல்யாண வீடுகளில் ஐம்பதிலிருந்து நூறு பேருக்குள்ளாகச் சாப்பிடுவாங்க. அப்போலே இருந்தே இந்த சாமான் அறையைப் பார்த்துக்கும் முக்கியஸ்தருக்கு வேலை ஜாஸ்தியாயிடும்.

தஞ்சை ஜில்லாவில் இதை உக்கிராணம் என்று அழைக்கின்றனர்.  சமையல்காரர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த உக்கிராண அறைப் பொறுப்பைக் கொடுப்பதுண்டு.  இது சில சமயம் நன்மை என்றாலும் பெரும்பாலும் சரியாக வந்ததில்லை என்பதே என் கருத்தும் அனுபவமும்.  கல்யாணம் நடக்கும் வீட்டில் கல்யாணத்துக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னராவது முஹூர்த்தக்கால் நடுவது என்னும் விசேஷம் நடைபெறும்.  பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ப ஒரு நல்லநாளைப் பார்த்துப் புரோகிதரைக் கூப்பிட்டு, வீடு முழுதும் புண்யாஹவசனம் செய்து, பின்னர் மூங்கிலில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடித்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  ஒரு சிலர் கல்யாண முருங்கை என்றும் சொல்கின்றனர்.  நுனியில் மாவிலைக்கொத்து வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நுனியிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி வைத்திருக்கும்.  அநேகமாய் ஈசான்ய மூலையில் தான் முஹூர்த்தக்காலை நடுவார்கள்.  சில வீடுகளில் முஹூர்த்தக்கால் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் பால் ஊற்றுகின்றனர்.  சிலர் புண்யாஹவசன நீரை ஊற்றுகின்றனர்.  காசுகளும் போடுவதுண்டு.  இதெல்லாம் அவரவர் வீட்டு வழக்கம் போல் செய்வார்கள்.  முஹூர்த்தக்காலை நட்டானதும்,அதையும் சேர்த்தே பந்தல் போடுவார்கள்.  திருமணம் நடைபெறுவதற்குள்ளாக அது துளிர்க்கவும் ஆரம்பிக்கும்.  இப்போதெல்லாம் இந்த வழக்கம் மறைந்து வருகிறது.  பெரும்பாலான சத்திரங்களில் பந்தல் எப்போதுமே இருக்கிறது.  அதோடு சேர்த்து ஒரு காலை முஹூர்த்தக்காலாக நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள்.  அதுவே போதும் என்பதே பெரும்பாலானோர் எண்ணம்.

இதற்கு உறவினர்கள் அனைவரையும், முக்கியமாகப் பெண்ணுக்கு மாமா, அத்தை போன்றோரை அழைப்பதுண்டு.  பின்னர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்.  சில வீட்டு வழக்கப்படி முஹூர்த்தக்கால் நட்ட பிறகு கல்யாணப்பெண் வெளியே எங்கும் செல்லக் கூடாது.  தங்கக் கூடாது என்பார்கள்.  பொதுவாகவே திருமணம் நிச்சயம் ஆனதும் விரைவில் திருமணத்தை நடத்துவது நலம் என்றாலும் தற்காலங்களில் சத்திரம், சமையல் கேட்டரர் என்பவர்களின் செளகரியத்தைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் முஹூர்த்தத் தேதியை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது என்பதே உண்மை.  சரி, இப்போ முஹூர்த்தக்கால் நட்டாச்சு.  அடுத்து என்ன வேலைனு பார்க்கலாம். பக்ஷணங்கள் செய்யணும்.  வடாம், வற்றல் தயாரிக்கணும்.  அப்பளங்கள் தயார் செய்யணும்.  இப்போ எல்லாம் உடனுக்குடன் கிடைத்தாலும் அந்தக் காலத்தில் எப்படிச் செய்தார்கள்னு பார்க்க வேண்டாமா?

இந்தப் பெண், பிள்ளை நிச்சயம் ஆனதும் என்ன செய்யணும் என்பதைக் குறித்தும் பார்க்கப் போகிறோம்.  யாரும் அடிக்க வராதீங்கப்பா! :)))))))

24 comments:

  1. அக்காவின் கல்யாணத்திற்கு வீடு முழுவதும் ஒவ்வொரு அறையை சுற்றி காவிப்பட்டை அடித்த... சந்தோஷ நினைவுகள் ஞாபகம் வந்தது...

    அடுத்து பக்ஷணங்கள்... இனி கொண்டாட்டம் தான்...

    ReplyDelete
  2. (முத்தம் -->முற்றம்) இரண்டு இடங்களில் மாற்ற வேண்டும்...

    ReplyDelete
  3. // கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே! அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும். மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க. அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க. //

    1970...1975 வரைகூட இதுபோலத்தான் கிராமங்களில் பெரிய பந்தலாகப்போட்டு, விவாஹங்கள் நடைபெற்றன.

    அங்கிருந்த ஜனங்களுக்குள் அன்று நல்ல ஒற்றுமை இருந்தது.

    நல்ல பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கோ.

    ReplyDelete
  4. டிடி, மாத்திட்டேன். :)))) கவனிக்கலை. திரும்பச் சரிபார்க்கும் வழக்கம் வரமாட்டேங்குது! :))) மிச்சத்துக்கு அப்புறமா!

    ReplyDelete
  5. கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள். இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும். மேலே இருந்து காற்றும் வீசும். இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க. கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.//

    பாளையங்கோட்டையில் என் தாத்தாவீடு அப்படித்தான் இருக்கும்.மலரும் நினைவுகளை உங்கள் பதிவு ஏற்படுத்தி விட்டது.
    ஊருக்கு போய்விட்டதால் முந்திய பதிவுகளை படிக்க முடியவில்லை.
    இனி எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.(அடுத்தபயணத்துக்குள்)

    ReplyDelete
  6. சிவசங்கரியின் "பாலங்கள்" நினைவுக்கு வந்தது. உங்க நடைல கேக்கறதுக்கு இன்னும் அழகா இருக்கு

    ReplyDelete
  7. ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்துவீட்டுக் கல்யாணத்துக்கு இப்படி செய்தார்கள்.
    என்ன சந்தோஷம்.மொட்டை மாடியில் பந்தல்.மூன்று வீட்டு வாசலை அடைத்து வாழை மரங்கள் கட்டி வெய்யில் தெரியாமல் பக்கவாட்டில் கீற்றுகள் வேய்ந்து திண்ணைகள் நிறைய குழந்தைகள் என் தோழிகள். அருமையான காலம். மிக நன்றி கீதா.

    ReplyDelete
  8. ஒரு கல்யாணம் நடத்துமளவு வீடு... கற்பனையே செய்ய முடியவில்லை! நீங்கள் சொல்லும் வர்ணனையில் சிறிய அளவில் பார்த்திருக்கிறேன்!

    உக்கிராண அறை - கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete

  9. சென்ற வருடம் எங்கள் ஊரைக் காட்டவும் தேரைக்காட்டவும் என் பரிவாரங்களோடு சென்றிருந்தேன். பூர்வீக வீடு விற்றுப் போய்விட்டதால் எனக்கு அழைப்பு கொடுத்தவர் வீட்டில் சிறிது நேரம் தங்கினோம். அந்த வீட்டுக்கு வந்திருக்கும் மருமகளுக்கு முதலில் இவர்கள் சொல்வது ஏதும் புரியலையாம். திண்ணை ரேழி , மித்தம் ( முற்றம்) பத்தாயம் மச்சு இடைக்கட்டு என்பன போன்ற வார்த்தைகள் போகப் போகத்தான் தெரிந்தது என்று கூறினாள். எங்கள் பூர்வீக வீட்டுக்கும் போனோம். நிறைய மாற்றங்கள் தெரிந்தது.

    ReplyDelete
  10. நிறைய விவரங்கள்.. இதையெல்லாம் நினைவு வச்சுருக்கீங்களே!
    இதையெல்லாம் பாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை; கிடைக்கப் போவதுமில்லை!

    ReplyDelete
  11. பழைய வீடுகள் இன்றும் சில இடங்களில் இருக்கின்றன. திருவரங்கத்தில் கூட இப்படி ஒரு வீட்டினை திருமண மண்டபமாக வைத்திருந்தனர் - சமீபத்தில் அதை முழுதும் இடித்து அங்கே மூன்று மாடி வீடுகள் வந்துவிட்டன்! :(

    ReplyDelete
  12. வாங்க டிடி, எங்க வீட்டிலேயும் இம்மாதிரி உறவினர்கள் கல்யாணத்தின் போது காவிப்பட்டை அடித்த நினைவுகள் வருகின்றன. :))))

    ReplyDelete
  13. பேச்சுத் தமிழில் எழுதிட்டேன். நீங்க சுட்டிக்காட்டினதும் மாத்திட்டேன்.

    ReplyDelete
  14. வாங்க வைகோ சார், ஆமாம், 75 வரை கூட இம்மாதிரிக் கல்யாணங்களைப் பார்க்க முடிந்தது. அதுக்கப்புறம் எண்பதுகளின் கடைசியில் கூடப் பார்த்தோம்னு நினைக்கிறேன். தொண்ணூறுகளில் தான் மாற ஆரம்பிச்சிருக்கு. 95 வரை குஜராத்தில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தப்போ கேபிள் டிவி கலாசாரம் ஒரு அதிர்ச்சின்னா, இந்தக் கல்யாணங்களின் கேட்டரிங் விஷயம் இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. :))))

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, காணோமேனு நினைச்சேன். பயணம்னு சொல்லி இருக்கீங்க. :)))

    மதுரை மேலாவணி மூலவீதியில் நாங்க குடி இருந்த வீட்டிலேயே தான் என் பெரியப்பா பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. இன்னொரு பெரியப்பா வீட்டில் சமையல், மளிகை சாமான்கள், இன்னொரு சொந்தக்காரர் வீட்டில் மாப்பிள்ளை இறக்கி, வேறொரு நண்பர் வீட்டில் சாப்பாடு சமையல் நடந்தன. எல்லாம் அந்தத் தெருவுக்குள்ளேயே தான். இப்போ மேலாவணி மூலவீதியே வணிக மயமாகி விட்டது. :((((

    ReplyDelete
  16. வாங்க அப்பாவி, சிவசங்கரி, எங்கே! நான் எங்கே! :))))

    ReplyDelete
  17. வாங்க வல்லி, ஆமாம், மாடிப்படிக் கைப்பிடிச்சுவருக்குக் கொஞ்சம் மேலே கீற்றுக் கட்டி மறைப்பார்கள். என் கல்யாணத்தின் போது அந்த மாதிரி மறைத்த மொட்டை மாடியில் நான் உட்கார்ந்து சாப்பிடுகையில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் (அங்கே தான் பிள்ளை வீட்டுக்காரர்கள் கிட்டத்தட்ட 200 பேர் இறங்கி இருந்தனர்) என் கணவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். இங்கேருந்து பார்த்து என் சொந்தக்காரப் பொண்ணுங்க எல்லாரும் அவரை வம்பிழுக்க, அங்கிருந்து அவரோட நண்பர்கள் குதிக்க, எல்லாம் நேற்று நடந்தாற்போல் இருக்கு! :))))

    ReplyDelete
  18. வாங்க ஸ்ரீராம், வைகோ சார் சொல்றாப்போல் 70, 75 களிலே கூட அம்மாதிரி வீடுகள் மதுரையில், தஞ்சையில் இருந்திருக்கின்றனவே!ம்ம்ம்ம்ம்ம்ம்??? 76-ஆம் வருஷம் கூட நான் ஆறுமாதம் மதுரையில் தான் இருந்தேன்; இரண்டாம் குழந்தை பிரசவம். அப்போக்கூட மதுரை மாறவில்லை. :))) இப்போப் பார்த்தா மதுரையா இதுனு தோணுது! அந்நியமாத் தெரியுது! :(

    ReplyDelete
  19. வாங்க ஜிஎம்பி சார், என் கணவரோட பூர்வீக வீடு நல்ல வேளையா இரண்டு கைகள் மாறியும் மாற்றப்பட வில்லை. நல்லாவே பராமரிக்கிறாங்க. அதோடு தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) கிராமங்களில் இன்னமும் பழைய மாதிரியான வீடுகளைப் பார்க்க முடியும்.

    ReplyDelete
  20. அப்பாதுரை, எங்க வீட்டில் பல கல்யாணங்கள் இம்மாதிரி வீடுகளிலேயே நடந்தவை தான். என் கல்யாணமே கூட இம்மாதிரிப் பழைய வீடாக இல்லாட்டியும், புது வீடு தான், என் மாமா வீட்டில் மதுரை டிவிஎஸ் நகரில் இரு பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு நடந்தது. வாசலில் தான் கல்யாணம். பந்தல் அலங்காரமே பிரமாதமா இருக்கும். :)))))

    ReplyDelete
  21. வாங்க வெங்கட், நானும் சித்திரை, உத்திர வீதிகளில் பல பழைய வீடுகளைப் பார்க்கிறேன். நினைவுக்காகவாவது விட்டு வைக்கணும்.:(

    ReplyDelete
  22. இந்த மாதிரி வீட்டோட ப்லான்/ப்லூப்ரின்ட் யாராவது வச்சிருப்பாங்களா?

    ReplyDelete
  23. விசாரித்துப் பார்க்கிறேன் அப்பாதுரை, தஞ்சை ஜில்லா வீடுகளின் மாடல்களில் கிடைக்கலாம். நான் சொல்லி இருப்பது மதுரை, திருநெல்வேலிப்பக்கங்களின் வீடுகள். தஞ்சை ஜில்லா வீடுகள் எனில் வாசல் ரேழி தாண்டி உள்ளே நுழைகையிலே கூடத்திலேயே நட்ட நடுவில் முற்றம் இருக்கும். கூடம் சுற்றிலும் காண முடியும். ரேழியிலிருந்து கூடத்துக்குச் செல்லும் நடைபாதைக்கு அருகே இருக்கும் இரு சின்னக் கூடத்துத் திண்ணைகளையும் திண்ணை,அல்லது தாழ்வாரம் என்பார்கள்.

    ReplyDelete
  24. பந்தல்கால் என்பது நமது பக்கங்களில் முன்னைய காலங்களில் மாப்பிள்ளை வீட்டில் தாலிக்கு பொன் உருக்கி சாப்பாடு போடுவார்கள். அன்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொண்டுவந்து பெண்வீட்டில் கல்யாண முருங்கை நாட்டுவார்கள்.

    திருமணங்களும் வீடுகள் அல்லது கோவில்களில்தான் நடந்தன. சாப்பாடு வீட்டில் போடுவார்கள்.

    தொடருங்கள் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete