எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 16, 2014

சாம்பாரா வேண்டாம்ப்பா! ஓடிடறோம்! :)

என்னோட பிறந்த வீட்டில் சாம்பார் என்றால் அரைச்சு விட்டுச் செய்யறது தான். ஆனால் மாமியார் வீட்டிலோ பொடி போட்டுக் கூட சாம்பார் செய்வாங்க என்பதோடு தினம் தினம் சாம்பார் தான். :) நமக்கோ சாம்பார் என்றாலே அலர்ஜி!  ஆனால் அப்போல்லாம் வத்தக்குழம்பு சாப்பிடுவேன்.  இப்போப்புளி போட்ட எந்தச் சமையலும் பிடிக்கிறதில்லை. பொரிச்ச குழம்பு, மோர்க்குழம்பு, கலந்த சாதம் வகையறா என்றால் கொஞ்சம் உள்ளே இறங்குது.  ஆகவே மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சுத் தான் செய்வேன்.  நம்ம ரங்க்ஸுக்கு முன்னாடி எல்லாம் எது சாப்பிட்டாலும் சாம்பார் தான் வேண்டும்.  குடித்தனம் வைச்ச முதல் மாசம் என்னோட அம்மாவும், அவரோட அம்மாவும் இருந்தாங்க.  அப்புறமா அவங்க கிளம்பிட்டாங்க.  நாங்க ரெண்டு பேர்  தான்.

"என்ன சமைக்க"னு கேட்டதுக்கு சாம்பார் வை, ஆனால் எனக்கு ரசமும் வேணும் கட்டாயமா!" னு சொன்னார்.  அப்பாடானு இருந்தது.  ஏன்னா கிராமத்திலே அவரோட அம்மா ரசமே வைக்க மாட்டாங்க.  எல்லோரும் சாம்பார் சாதமே 2, அல்லது 3 முறை சாப்பிட்டுடுவாங்க.  நமக்கு  ஒரு தரமே இறங்காது. அதனால் இவருக்கும் ரசம் பிடிக்காதுனு நினைச்சேன்.  ரசம் வைனதும் அப்பாடானு ஒரு நிம்மதி.  மாமியார் சாம்பார் வைத்தால் பொடி போட்டுவிட்டு உப்பு, குழம்புக்குப் போடும் தான் எல்லாத்தையும் புளி ஜலத்திலே சேர்ப்பாங்க. எங்க வீட்டில் பொடி போட்டு சாம்பார்னு இல்லை என்பதால் அரைச்சு விட்டு வைச்சேன்.  நல்லா இருந்தது என்றாலும் அவருக்குப் பொடி போட்ட சாம்பார் தான் வேணும் போல!  கடவுளே!  அது எப்படி வருமோனு பயந்துட்டே மறுநாள் வைச்சேன். நினைச்சாப்போலே சரியா வரலை.  ஏதோ கூட்டுச் சேர்க்கை சரியில்லைனு புரிஞ்சது.  அதோட இல்லை.  அவங்க எல்லாம் மாவு கரைச்சு ஊத்துவாங்க.  நான் மாவே கரைச்சு விடமாட்டேன்.  அரைச்சு விட்டுப் பருப்பும் போட்டுச் சேர்ந்து கொதிக்கையில் வருவது தான்.  ரொம்ப கெட்டியாவும் இருக்காது.  தண்ணியாவும் வராது.  அது என்னமோ குழம்பு, கூட்டில் எல்லாம் மாவை விட்டால் உண்மையான ருசி போய் மாவு ருசி வராப்போல் எனக்கு ஒரு எண்ணம். :)))

சரினு மறு நாளைக்கு எங்க வீட்டில் வைக்கிறாப்போல் பருப்புக் குழம்பு வைச்சேன்.  இதுக்கு அடியிலே தாளிக்கணும்.   நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், மி.வத்தல், ப.மி.கருகப்பிலை போட்டுக் கொண்டு தானையும் போட்டு வதக்கிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டுப் பொடியையும் போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க விடணும்.  அப்புறமா வெந்த து.பருப்பைக் கொஞ்சமாச் சேர்க்கணும், இது சாம்பாரும் இல்லை, வத்தக்குழம்பும் இல்லை.  பருப்புக் கம்மியாகச் சேர்ப்போம்.  அதனால் பருப்புக் குழம்பு!  ஹிஹிஹி, இதை வைச்சதும் கேட்டாரே ஒரு கேள்வி!  என்ன இது , வத்தக்குழம்பிலே வத்தல் போடறதுக்கு பதிலா முருங்கைக்காயைப் போட்டுப் பருப்பும் போட்டு வைச்சிருக்கே!  உங்க வீட்டிலே இப்படித் தான் வைப்பாங்களா?" னு கேட்டார்.  நான் திரு திரு! பின்னே சாம்பார் பொடி போட்டு வைக்க வரலைனு சொல்லிக்க கௌரவம் இடம் கொடுக்க வேணாமா?

இன்னி வரைக்கும்  சாம்பார்  சரியா வராதுங்கறது வேறே விஷயம். அதனாலேயே என்னமோ ரங்க்ஸ் சாம்பார் ஆசையையே விட்டுட்டார். இப்போல்லாம் தோசைக்கு, இட்லிக்கு, அடைக்கு சாம்பார் கேட்கிறதில்லை. தோசைக்குச் சட்னி, தக்காளித் துவையல்னு எதானாலும் போட்டுக்கிறார். ஒண்ணும் இல்லைனா மிளகாய்ப் பொடியோடு திருப்திப் பட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஹிஹிஹிஹி!!!  உப்புமாவுக்கெல்லாம் ஊறுகாய் கூடத் தொட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.   தெனாலிராமன் குதிரையாட்டமாப் பழக்கிட்டோமுல்ல!  ஆனால் நம்ம பொண்ணு இதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டா! எல்லாம்  பரம்பரை தான் காரணம். நம்ம பரம்பரை சாம்பார்னாலே ஓடற பரம்பரையாச்சே!  

@ஶ்ரீராம், திருத்தியாச்சு! :))))

19 comments:

  1. இன்னி வரைக்கும் சாம்பார் சரியா வராதுங்கறது வேறே விஷயம். அதனாலேயே என்னமோ ரங்க்ஸ் சாம்பார் ஆசையையே விட்டுட்டார்.

    ~ ஓ! முதல் தடவை அவரை பாத்தப்போதே நினச்சேன், 'முற்றும் துறந்த முனி புங்கவன் போல இருக்கிறாரே என்று!

    ஜோக் அபார்ட், வஸந்தாவுக்கு அரைச்சுப்போட்ட சாம்பார் தான். வேகவைத்த பருப்பை மத்தால் கடைந்து, 'குஷ்பூ நிகல்னேகா பாத்' தான் கொதிக்கும் சாம்பாரில் கலக்கி, நம்மை கலக்குவாள். ரங்க்ஸ்க்கு போட்டிருக்கலாம். அவரும் என்ஜாய் செய்திருப்பார். அவளுக்கு ரசம் மஸ்ட். அவளோட அப்பாவுக்கு டைய்லி சப்ளை. நான் தான் எடுத்துச்செல்வேன். ஆனால், கடைசியில் ரசம் சாதம், தயிருடன். அதான் லாஸ்ட் டிஷ். ஏதோ ஞாபகங்களை தருவித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. ஜெமினி புராணம். அதான், சாம்பார் புராணம்.

    சாம்பார் சாதமே 23 முறை சாப்பிடுவாங்கன்னு படிச்சு பயந்து போயிட்டேன். ஹிஹிஹி... அப்புறம்தான் கமா கண்ணுல பட்டுது!

    ReplyDelete
  3. எங்கம்மா கூட அப்பப்போ மாவு கரைச்சு விடுவாங்க... நான் அம்மா கிட்ட சமையல் கத்துண்டப்போ இதையும் பழகி வச்சிருந்தேன். அப்புறம் விஷயம் தெரிஞ்சு விட்டுட்டேன்.
    எனக்கு அல்லது எங்களுக்கு ஒரு பழக்கம். வெந்தியக் குழம்பு, வத்தக் குழம்புன்னாதான் நல்லெண்ணெய் விட்டு தானையும் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் ஊற்றுவோம். சாம்பாருக்கு உப்பு,பொடி பெருங்காயம் கலந்து வைத்த கலவையை ஊற்றி கொத்தி வரும்போது காய் போட்டு இறக்குமுன் பருப்பு குழைத்துச் சேர்த்து இறக்கித் தாளிப்போம்! நோ நோ எதுக்கு முகவாய்க் கட்டை தோளுக்குப் போறது? :))))

    ReplyDelete
  4. வாங்க "இ"சார், அவ்வப்போது வருவது சந்தோஷம். என் அப்பாவுக்கும் கடைசி தினங்களில் சாப்பாடு சப்ளை செய்யும்படி ஆயிருக்கு! :))))

    //ஓ! முதல் தடவை அவரை பாத்தப்போதே நினச்சேன், 'முற்றும் துறந்த முனி புங்கவன் போல இருக்கிறாரே என்று!//


    ஹிஹிஹி, நீங்க வேறே! :)

    ReplyDelete
  5. //சாம்பார் சாதமே 23 முறை சாப்பிடுவாங்கன்னு படிச்சு//

    தப்பில்லை, சாம்பாரிலேயே குளிப்பாங்க. ஆனாலும் பதிவிலே திருத்திடறேன். :)

    ReplyDelete
  6. பொதுவா சாம்பாருக்குப் போடும் தான் எவ்வகை என்பதைப் பொறுத்து நான் போடுவேன். முள்ளங்கி, வெங்காயம், முருங்கைக்காய் போன்றவற்றைக் கொஞ்சம் போல் ஒரே ஒரு முட்டை எண்ணெய் ஊற்றிக் கொஞ்சம் வதக்கிட்டுவேக வைத்துச் சேர்ப்பேன். முள்ளங்கியை வதக்கறதில்லை. வில்லை வில்லையாக நறுக்கிட்டு வேகவைப்பேன். மற்றவற்றைப் புளித்தண்ணீரிலே நேரடியாகப் போட்டுடுவேன். கொதித்ததும் போட்டால் சில சமயங்கள் வேக நேரம் எடுக்கும். ஆகவே சேர்த்தே போட்டுடுவேன். :)))) கத்தரிக்காய், வெண்டைக்காய் எனில் வதக்கித் தான் சேர்ப்பேன். சீக்கிரம் வேகும். பறங்கி, பூஷணி, குடைமிளகாய் போன்றவற்றை வதக்காமலும் சேர்ப்பேன். தனிக்குடைமிளகாய் சாம்பார்னா வதக்குவேன். :))) சாம்பாருக்கு எனக் குறிப்பிட்ட தான்கள் தான் சேர்ப்பேன்.

    ReplyDelete
  7. மாமியார் வீட்டில் கொண்டைக்கடலை சாம்பார், கொத்தவரைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு சாம்பார், காலிஃப்ளவர் சாம்பார்னு பண்ணுவாங்க. அதெல்லாம் எனக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. :))))

    ReplyDelete
  8. அதோட நான் வைக்கிறது சாம்பாரே இல்லைனு சொல்லிட்டேனே, பருப்புக் குழம்பு. வத்தப்பருப்புக்குழம்புனு வேணா வைச்சுக்கலாம். ஒரு தரம் சாப்பிட்டுப் பாருங்க. விட மாட்டீங்க! :))))

    ReplyDelete
  9. சிலர் சாப்பிட உயிர் வாழறாங்க.பலர் உயிர் வாழச் சாப்பிடறாங்க.நான் இரண்டவது வகை பசி ருசி அறியாது என்பார்கள். பசித்திருக்கும்போது எதுவும் ஓக்கே.

    ReplyDelete
  10. கத்தரிக்காய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னதான் எண்ணெயில் வதக்கிப் போட்டாலும் குழம்பு இறக்கி சாப்பிடப் போகும்போது மாவாக இருந்தால் கடுப்பாக இருக்கும். அதுவும் முழுக் கத்தரிக்காய் போடும்போது அது கொதிக்கத் தொடங்கும்போது போடுவோம்.

    ReplyDelete
  11. பருப்புக் குழம்பு + வத்தப்பருப்புக்குழம்பு - இவைகளை சாப்பிடவே ஒருமுறை வருகிறேன்... ஹா... ஹா...

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், நல்ல பசியில் தான் எதுவும் ருசிக்கும்னு என்னோட அனுபவம். :))))

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், இன்னிக்கு வத்தப்பருப்புக் குழம்பு தான் வைக்கப் போறேன். முடிஞ்சா படம் எடுக்கிறேன். அதெல்லாம் தான் மாவாக ஆகாது. நெத்து, நெத்துனு இருந்தாத் தான் நல்லா இருக்காது. :)))) முழுக்கத்தரிக்காயையும் காம்பு, பாவாடையை விட்டு நான்காக வெட்டி, மஞ்சள் பொடி, உப்பு தடவி வைச்சுட்டுப் பின்னர் குழம்பிலே போட்டுப் பாருங்க. :))))

    ReplyDelete
  14. ஹாஹாஹா, வாங்க டிடி, கட்டாயமா வாங்க. :)

    ReplyDelete
  15. 'சாம்பார் புராணம்' அருமை!... எனக்கும் சாம்பாரே புடிக்காத்!.. ஆனா இங்கே டெய்லி சாம்பார் வைக்கணும். இப்போ கொஞ்சம் கொஞ்சம் மாத்தி, எல்லா குழம்பும் வைக்கிறேன்..வத்தப்பருப்பு குழம்பு செஞ்சு பாக்கறேன்!..முழுக்கத்தரிக்காய் குழம்புக்கு போட்டதில்லை.. சின்ன சின்னதா நறுக்கிப் போடுவேன்.. நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாக்கறேன்!.

    ReplyDelete
  16. வாங்க பார்வதி, முழுக்கத்தரிக்காய் போட்டு ரசவாங்கி தான் பண்ணுவோம் எங்க அம்மா வீட்டிலே எல்லாம். இன்னொரு முறையும் இருக்கு, அது என் மாமியார் வீட்டிலே பண்ணுவாங்க. அப்புறமா விபரம் எழுதறேன். :)

    தஞ்சாவூர்ப்பக்கம் கூட்டை ரசவாங்கினு சொல்லுவாங்க. நாங்க ரசவாங்கினு சொல்றது கத்தரிக்காய் போட்டுத் தான். அதுவும் முழுசா! :)

    ReplyDelete
  17. சாம்பார் புராணம் - ரசமோ சாம்பாரோ எதோ ஒண்ணு - சாப்பிடணும் அது மட்டும் தான்!

    மத்தபடி நல்லா இருக்கு, இல்லைன்னு எப்பவும் சொல்றதில்லை!

    ReplyDelete
  18. சாம்பார் :))

    நம்மவீட்டில் இட்லிநாளில் மட்டும் சட்னியுடன் கதம்ப சாம்பார்.

    ReplyDelete
  19. நாங்களும் மாவு கலந்து விடுவதில்லை சாம்பார். புளிக்குழம்பில் .
    அரைச்சுவிட்ட சாம்பார் ., கிள்ளிப்போட்ட சாம்பார், வறுத்து பொடி செய்த சாம்பார், என்று வித விதமாய் சாம்பார் செய்யலாம்.

    ReplyDelete