எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 07, 2014

குக்கரா, வெண்கலப்பானையா? சாதம் வடிக்கச்சிறந்தது எது? ஒரு பட்டி மன்றம்!

எல்லோரும் குக்கர் சமையல் எப்போ ஆரம்பிச்சீங்கப்பா?  தெரியலை.  ஆனால் நான் கல்யாணம் ஆனதுமே ஒரு சில மாதங்களில் 3,4 மாசங்களுக்குள்ளாக ஆரம்பிச்சுட்டேன்.   இத்தனைக்கும் அப்போ காஸ் வாங்கவில்லை.  ஸ்டவ் அடுப்புகளும், குமுட்டியும் தான்.  அப்போ மண்ணெணெய் தெருவிலேயே கூவிக் கொண்டு விற்றுக் கொண்டு போவாங்க.  மதுரையிலே எல்லாம் மண்ணெண்ணெய் அல்லது சீமை எண்ணெய் னு சொல்லி விப்பாங்க. பார்த்திருக்கேன். ஆனால் நம்ம அருமைச் சென்னை மாநகரிலே முதல் முதல் மண்ணெண்ணையைக் "கிருஷ்ணாயில்" என்று விற்றதைக் கேட்டதும் இது ஏதோ புதுசு, கோவிலுக்குனு அதுவும் பெருமாள் கோவிலுக்குனு விப்பாங்க போலனு நான் நினைச்சது எனக்குப் பத்துப் பனிரண்டு வயசிலே முதல் சென்னை விஜயத்தின் போது.  அதுக்கப்புறமா வங்கிப்பரிட்சை எழுத சென்னை வந்த போதெல்லாம் சில, பல மாதங்கள் தங்கினதில் கிருஷ்ணாயில் என்பது கெரசின் ஆயில் என்பதன் திரிபு என்பதைப் புரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டேன்.  சென்னையைப் பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் கிடைச்சது. :)

விதி யாரை விட்டது? கல்யாணம் ஆகி நேரே புனே சென்றிருக்க வேண்டிய என்னை அங்கே பயமுறுத்தின வாடகை வீட்டுப் பகடித் தொகையால் அரண்டு போன நம்ம ரங்க்ஸ் (பின்னே பகடி கொடுத்து வீடு பிடிச்சால் அப்புறமாத் தம்பி, தங்கைகளைக் கரையேத்துவது எப்படி? குடும்பம் நடத்துவது எப்படி?) சென்னைக்கு மாற்றல் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பம் போட்டிருக்கார்.  எட்டு ஆண்டுகளாகப் புனே வாசத்தில் இருந்தவருக்கு அவரோட மேலதிகாரி கல்யாணம் பண்ணிக்கோ, மாற்றல் வாங்கித் தரேன்னு விளையாட்டாச் சொல்ல, அதை நம்ப முடியாமல், என்னைப் புகுந்த வீட்டிலேயே அம்போனு விட்டுட்டு, தான் மட்டும் புனேக்கு ரயிலேறினார்.   புனேயின் புறநகர்ப்பகுதியான கடக்வாசலாவுக்கு மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே ராணுவக் குடியிருப்பில் வீடு கிடைக்கும் என்பதால் என்னை அதன் பின்னர் அழைத்துச் செல்ல முடிவு.

ஆனால் ரங்க்ஸ் ஒன்று நினைக்க நம்ம வெங்க்ஸ் அதாங்க திருப்பதி வெங்கடாசலபதி!  அவருக்குத் தான் எங்க அப்பா, அம்மா வேண்டிட்டு இருந்தாங்க, பொண்ணு சீக்கிரம் குடித்தனம் வைக்கணும்னு!  அந்த வெங்க்ஸ் இவர் புனே ரயிலில் ஏறும்போதே நண்பர் ஒருவர் மூலமாச் சென்னைக்கு மாற்றல் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்ல சந்தோஷமாய்ப் புனே சென்ற ரங்க்ஸ் அங்கே இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சாமான்களையும் எடுத்துக் கொண்டு, போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற கதையாய்க் கிராமத்துக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டார். வரும்போதே சென்னையில் வில்லிவாக்கத்தில் வீட்டையும் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார்.  வில்லிவாக்கம் வந்து குடித்தனமும் போட்டாச்சு.  ஒரே மாசத்தில் வில்லிவாக்கம் பிடிக்காமல் அம்பத்தூருக்கு மாறவும் மாறியாச்சு.  நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.  அதுக்கெல்லாம் பார்க்கவும் பழைய பதிவுகளை!

அப்போல்லாம் மண்ணெண்ணெய் நிறையக் கிடைச்சதால் ஸ்டவ் சமையல் தான்.  குமுட்டியும் வைச்சிருந்தேன்.  இரண்டு ஸ்டவ், ஒருகுமுட்டி.  ஸ்டவ்வில் சாதம் வைத்துக் குழம்பு, ரசம் பண்ணி, காய்கள் பண்ணினால் குமுட்டியில் பருப்பை வேகப் போட்டு வைப்பேன்.  நடு நடுவில் இரண்டாம், மூன்றாம் காஃபி கலக்கும் வேலையும் குமுட்டியிலே!  வேலைக்கும் போய்க் கொண்டு வெண்கலப்பானையில் சாதம் வைத்துக் கொண்டு மனைவி கஷ்டப்படுவதைக் கண்டு சகிக்காத நம்ம ரங்க்ஸ் திடீரென ஒரு நாள் குக்கர் வாங்கி வந்துவிட்டார்.  எனக்கே அதெல்லாம் தெரியாது.  வாங்கப் போறார்னு எல்லாம் நினைக்கவே இல்லை. நான் தண்டையார்ப்பேட்டையிலிருந்து ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணி ஆகிடும்.  அவர் நாலு மணிக்கே வருவார்.  வந்து பார்த்தால் சமையலறையில் குக்கர்.


கரெக்டா டிகாக்‌ஷன் மட்டும் ரங்க்ஸ் போட்டு வைப்பார். நான் வந்ததும் தான் காஃபி கலக்கலே.  காஃபிக்கடை முடிஞ்சதும், ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க நான் குக்கரை அடுப்பில் ஏற்றினேன்.  ப்ரெஸ்டிஜ் குக்கர் தான்.  காஸ்கெட்டைப் போட்டுட்டு அழுத்தி மூடக் கூட முடியாமல் அழுகையே வந்தது.  பேசாம வெண்கலப்பானையில் களைந்து போட்டோமா, அரிசி வெந்ததானு பார்த்தோமானு இருக்காமல் இப்படிப் படுத்தறாரேனு ஒரே கோபம். ஆவி வந்ததும் தான், (சேச்சே கோவை ஆவி எல்லாம் இல்லைங்க, குக்கர் ஆவி) வெயிட் போடணும்னு சொல்லி இருந்தாரா?  ஆவி வந்ததும் வெயிட்டை எப்படிப் பார்க்கிறது? மெஷின் இல்லையேனு ரங்க்ஸைக் கேட்க, தலையிலே அடிச்சுக் கொண்டு குக்கர் வெயிட்டை எடுத்து நீட்டினார். அப்போல்லாம் இப்போ மாதிரி மூணு சத்தம், நாலு சத்தமெல்லாம் போடாது குக்கர். ஒரே விசில் தான்.  நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகக் கொடுக்கும்.  சாதம் வாசனை வந்தால் குக்கரை இறக்கிடலாம்.   உடனே திறக்க முடியாது.  காத்திருக்கணும்.  அதுக்குள்ளே இங்கே குழம்போ, ரசமோ கொதித்துப் பருப்புக்குக் காத்திருக்கும்.  அடுப்பை அணைச்சு வைக்கணும்.  சில சமயம் வாசனை வந்து இறக்கினதும்  உள்ளே திறந்து பார்த்தால் குக்கருக்குள்ளே சாதமாக இருக்கும். (இப்போவும் தான்)  குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால் அந்தச் சாதத்தைச் சாப்பிடவும் முடியாது. தூக்கிக் கொட்டணும்.

பருப்பும் சேர்ந்து விழுந்திருந்தால் கேட்கவே வேண்டாம். தினம் தினம் காலை குக்கரோடு மல்யுத்தம் நடக்கும்.  எல்லாத்தையும் செட் பண்ணி  வைச்சுட்டு மூடுனு ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க, செட் பண்ணி வைச்சுட்டு மூடும்போது என்னால் அழுத்தி மூட முடியாமல் எல்லாமும் உள்ளே கொட்டிக் கலந்து ஒண்ணாய் மண்ணாய் ஆக, ஒரே ரகளை தான்.    இப்போ வர காஸ்கெட்டெல்லாம் அவ்வளவு வலுவாக இல்லை தான்!  இந்தக் கூத்தைப் பார்த்தால் சாதமாய் வடிக்கிறதா, மஞ்சப் பொங்கலாய்ப் பொங்கிடலாமானு கோபமாய் வரும்.  குக்கரைத் தூக்கிக் கடாசிட்டு வெண்கலப் பானையிலேயே சமைச்சுட்டுப்போயிருக்கேன். வசதி பண்ணிக் கொடுத்தாலும் அனுபவிக்கத் தெரியலையேனூ ரங்க்ஸ் சொல்ல, எனக்கு அதிர்ஷ்டமில்லைனு நான் சொல்ல ஆஃபீஸுக்கு முகம் மூணுபடி வெண்கலப் பானையாக ஆக்கிக் கொண்டு போவேன்.

17 comments:

  1. கட்டுரை பாதியிலேயே பப்ளிஷ் ஆயிடுச்சோ.... அம்போன்னு நிற்கிறது! :)))

    நாங்க எப்போ குக்கர் வாங்கினோம்? ம்ம்ம்.. 80 களிலோ... நினைவில்லை! ஆனால் வெங்கலப்பானையில் நான் ஆறாவது படிக்கும் காலத்திலேயே அமர்க்களமாக சாதம் வடிப்பேனாக்கும். ஒருமுறை கூட கஞ்சியைக் காலில், கையில் கொட்டிக் கொண்டதில்லை! இருங்க... இங்க ஒரு ஆக்கும் விட்டுப் போச்சு! .....கொட்டிக்கொண்டதில்லையாக்கும்!

    ReplyDelete
  2. எங்க வீட்டுலேயும் குக்கரோட மல்லுகட்டி இப்போ வெண்கலப்பாணைதான்! சுவையான பகிர்வு! நன்றீ!

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், அம்போனு எல்லாம் நிக்கலை. உட்கார்ந்திருக்கு! :)

    ReplyDelete
  4. ஆமாம், சுரேஷ், பாதி சாதம் வீணாகிறதைப் பார்த்தால் வெண்கலப்பானைக்கெ என்னோட ஓட்டு! ஆனால் ரங்க்ஸ் சம்மதிக்கலை. :(

    ReplyDelete
  5. கீதா மேடம், நான் மீண்டும் வெங்கலப்பானை வைத்து சாதம் வடிக்க ஆரம்பித்து விட்டேன். எல்லாம் " சர்க்கரை "யின் உக்கிரத்தை குறைக்கக் தான்.

    ReplyDelete
  6. ருக்மணி குக்கரோட தான் குடித்தனம் ஆரம்பம். பிறது 68இல குக்கர் காஸ் எல்லாம் வந்தாச்சு. நான் இருந்த சேலம் வீட்டில் குக்கர் சாதம் மேலே சீலிங்ல நிறைய நாள் கோலம் போட்டு இருக்கு. சீக்கிரம் பழகிவிட்டது. கும்முட்டி அடுப்பு சாதம் பருப்பு எல்லாமே சூப்பர். நானும் அதை அம்மாவீட்டில் செய்திருக்கிறேன். சிரமம் இல்ல.

    ReplyDelete
  7. நல்ல தமாஷ். வெயிட் பாக்குறது.. ஹிஹிஹி...

    சில நேரம் வெயிட்டை தூக்கியடிக்கும் குக்கர்.. சிக்சருக்கு போன வெயிட்டை தேடுறதா வாரியிறைக்கும் ஆவி சோறு நிறுத்த வழி பார்ப்பதா என்று அம்மா விழிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க ராஜலக்ஷ்மி, எனக்கும் வெண்கலப்பானையில் வடிக்க ஆசைதான். ரங்க்ஸ் தான் ஒத்துக்கலை. :(

    ReplyDelete
  9. மத்ததெல்லாம் கல்சட்டி, ஈயச் செம்புனு வைச்சுப் பண்ணறேன். இரும்புச் சட்டியில் தான் காய்களை வதக்குவேன். :)

    ReplyDelete
  10. வாங்க வல்லி, ருக்மிணி குக்கர்னு சொல்லிக் கேள்வி. பார்த்ததே இல்லை. :))))

    குமுட்டி அடுப்பின் சுகம் வேறெதிலும் இல்லை தான். :))))

    ReplyDelete
  11. ஹாஹா, அப்பாதுரை, இந்தியாவிலேன்னா பரவாயில்லை. நமக்கு யு.எஸ்ஸில் கூட அப்படி ஆயிடுச்சு. அதைச் சுரண்டி எடுக்கறதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் பட்ட பாடு! அதுக்கப்புறமா சமையலறைக்குப் போறதுக்கே பயம்மா இருக்கும். ஆனால் பொண்ணு ரைஸ் குக்கர் வாங்கிட்டா! பருப்பை நேரடியாப் போட்டுடுவேன். :))))

    ReplyDelete
  12. /// குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால்... //

    ...! இது புதிய தகவல் அம்மா...!

    ReplyDelete
  13. அட??? டிடி, இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழைய சமையல் குறிப்பாச்சே. இப்போல்லாம் புளியும் பொங்கிப் பருப்பு, சாதத்திலே கலந்து விடுவதால் லெமன் சால்ட் தான் போடுகிறேன். (சிட்ரிக் ஆசிட் க்ரிஸ்டல்கள்) ஆனால் குக்கர் உள்ளே வழவழப்புத் தன்மை போய் விடுகிறது. :))))

    ReplyDelete
  14. வெண்கலப் பானையிலும் சாதம் வைத்ததுண்டு நெய்வேலியில்..... அதன் பின் குக்கர் பழகிவிட்டது......

    வெயிட் போடணும் - செம.

    ReplyDelete
  15. ப்ளீஸ் confirm me that, வெங்கலப்பானை சாதம நன்னா காணுமா அல்லது குக்கர் சாதமா? Pls

    ReplyDelete
    Replies
    1. உடம்புக்கு வெண்கலப்பானை சாதமே சிறப்பு. அரிசியை நன்கு கழுவி விட்டு அரை மணி நேரமாவது ஊற வைத்த பின்னர் குக்கரோ, வெண்கலப்பானையோ எதில் வேண்டுமானாலும் சாதம் வடிக்கலாம். இரண்டுமே நன்றாய்க் காணும்.

      Delete
    2. குக்கர், ரைஸ் குக்கர் எல்லாம் இருந்தாலும் நான் நேரடியாகவே சாதம் வடிக்கிறேன். குக்கர் சாதம் வேண்டாம் என்பதால், பல வருடங்கள் ஆகி விட்டன. அவசரத்துக்குக் குக்கரை எடுப்பது உண்டு.

      Delete