எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 14, 2014

மூன்றாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்???

முன்னே எல்லாம் வயசானா ஞாபகமறதினு சொல்வாங்க.  இப்போல்லாம் அப்படி இல்லை.  எந்த வயசானாலும் மறதி சகஜமாப் போயிருக்கு.  அப்படி இருக்கும்போது ஐம்பது வயதுக்கு மேலான முகுந்தனுக்குக் கேட்கவே வேண்டாம்.  அவசரக்காரர், படபடப்புக்காரர்.  அதோடு உடல்நலக்குறைவும் கூட. அலுவலகம் எடுத்துச் செல்லும் பொருட்களைக் கூட முன் கூட்டியே தயார் செய்து எடுத்து வைக்கும் பழக்கம். ஆனால் இந்தப் பழக்கம் பெரும்பாலோரிடம் உள்ளது.  பள்ளி செல்லும் குழந்தைகள் முதல்நாளே ஷூவுக்கு பாலிஷ் போட்டு, யூனிஃபார்ம் அயர்ன் பண்ணி எடுத்து வைத்து, மறுநாளையப் பாடத்திட்டத்துக்கு ஏற்பப் புத்தகங்களையும் தயார் செய்து வைத்துவிட்டுப் படுக்கச் சென்றால் தான் மறுநாள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எதையும் மறக்காமல் இருக்க முடியும்.

இங்கே முகுந்தனும் அப்படியே தயார் செய்துக்கிறார்.  கூடவே மாற்று உடைகளும், அதுக்கு இங்கே சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேறாக இருந்தாலும் பல அலுவலகம் செல்லும் ஆண், பெண்களும் இப்படி ஒரு மாற்று உடையை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள் தான். கொஞ்ச நாட்கள் அலுவலகம் போய்க் குப்பையைக் கொட்டியதில் இதை நானும் கண்டிருக்கிறேன்.  உடை கிழிந்து போகும் என்று இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் மட்டுமின்றி, மழைக்காலத்தில் ஈர உடையோடு இருப்பதைத் தவிர்க்கும் வண்ணமாகவும் ஒரு மாற்று உடை கட்டாயமாய் இருக்கும். இவை எல்லாமே நல்ல முன்னேற்பாடுகளே. குறை சொல்ல முடியாதவையே.  ஆனாலும் இந்த அதீத முன்னெச்சரிக்கை அவரை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகுதையா!

ஆனால் இந்த நிகழ்ச்சி நடக்கும் தினம் சனிக்கிழமை அரை நாள் விடுமுறையில் வீட்டுக்கு வரும் முகுந்தன்  மறுநாள் பிள்ளைக்குப் பெண்பார்க்கவேண்டி சென்னைக்குப்பல்லவனில் கிளம்ப வேண்டும்.  பல்லவன்  வண்டி தினமும் காலை ஆறரை மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பும்.  சனிக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு வந்தவர் கொண்டு போகவேண்டிய சாமான்களைச் சரி பார்த்துவிட்டு உணவு உண்டுவிட்டுத் தூங்கப் போகிறார்.  இங்கே தான் எனக்கு முதல்முறையாக இடித்தது.  அவர் தூங்கச் சென்றதோ மதிய நேரம்.  என்னதான் தூங்கினாலும் மணி 5-30 என்று பார்க்கையில் அது காலையா, மாலையா எனப் பார்க்கவில்லை. அவ்வளவு நேரம் தூங்கி இருப்போமா என்னும் சந்தேகம் கூட அவருக்கு எழவில்லை.  அவ்வளவு ஆழ்ந்த நித்திரை.  ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவரும் கூட.  தன்னை மறந்து தன் நிலை மறந்து தூங்கினாரெனில் அவர் மனம் எவ்வளவு நிஷ்களங்கமாக எவ்வித சிந்தனைகளுமின்றி இருந்திருக்க வேண்டும்!  ஆனால் முதல்நாள் மத்தியானம் படுத்தவர் அப்புறமா எழுந்ததாகச் சொல்லவே இல்லையே?  என்ன இருந்தாலும் அத்தனை நேரமா ஒருத்தர் தூங்கி இருப்பார் என எனக்கு சந்தேகம் வந்தது என்னமோ உண்மை!  கிட்டத்தட்டப் பதினேழு, பதினெட்டு மணி நேரமா உறங்கி இருப்பார்!   அதெல்லாம் அவருக்கு இருந்த அவசரத்தில் தோணவே இல்லை.

மெய்ம்மறந்த தூக்கத்திலிருந்து மழைச்சாரல் பட்டு விழித்தவருக்குக் கால நிலை புரியவில்லை.  மணி 5-30 என்பதும், ஊருக்குப் போக வேண்டும் என்பதுமே நினைவில் இருக்கிறது.  முதல்நாள் மதியம் படுத்தோம் என்பதெல்லாம் அவர் நினைவிலேயே இல்லை போலிருக்கிறது.  அதோடு மழைக்கால இருட்டு வேறு வானத்தை மூடி இருக்கிறது. ஆகவே  அன்று தான் கிளம்பவேண்டிய நாள் என நினைத்து, குளிக்கக் கூட அவகாசமில்லை எனப் பல், கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலுக்குத் தயாராகக் கிளம்பி விடுகிறார். செல்லும்போதே மழை தொடரும் என்பதும் தெரியவர, இவ்வளவு நேரம் கழித்துக் கிளம்பி இருக்கும் தாம் திருச்சி சென்றால் ரயிலைப் பிடிக்க முடியாது என்பதால் ஶ்ரீரங்கம் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டி ஆட்டோ பிடித்து ஶ்ரீரங்கம் செல்கிறார். சரியாக ஆறரைக்கே அங்கே சென்று விடுகிறார்.  குளிருக்கு இதமாக காஃபி ஒன்றைச் சாப்பிடுகிறார்.  

6-45 ஆகியிருந்தும் இன்னும் இருட்டாகவே இருந்ததோடல்லாமல் ஸ்டேஷனிலும் யாரும் இருந்திருக்க மாட்டாங்களே!  அதைக் கூடக் கவனிக்கவில்லை இவர் அவசரத்திலும் பதட்டத்திலும். அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் பல்லவன் இந்த ப்ளாட்ஃபார்ம் தானேனு கேட்கவே, அவனோ ராத்திரி ராக்ஃபோர்ட் தான் வருமென்றும், பல்லவன் மறுநாள் காலைதான் எனவும் சொல்லவே தூக்கிவாரிப் போட்ட முகுந்தன் ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தைப் பார்த்தால்.  முன்னிரவு ஏழு மணி என்பதை 19-00 எனக் காட்டிக் கொண்டு சிரிக்கிறது அது.

ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர் போலிருக்கு.  அதனால் அன்றைய தின ராசிபலனில் வெட்டிச் செலவு, அலைச்சல்னு போட்டிருந்தது உடனே நினைவுக்கு வரத் தன்னைத் தானே சமாதானமும் செய்து கொள்ள அது ஒரு காரணமாகவும் ஆகிறது.  தான் பகலில் படுத்துத் தூங்கியதில் எழுந்திருக்கும்போது மாலை  5-30 என்பதை மறுநாள் காலை 5-30 என்று நினைத்துக் குழம்பிவிட்டதையும், மறுநாள் பிடிக்க வேண்டிய ரயிலை முதல் நாளே பிடிக்க வேண்டித் தான் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதையும் நினைத்து அவருக்கு இப்போது அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.  முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை எனத் தான் பாடுபட்டு முன்னெச்சரிக்கையாக இருந்தது ரொம்பவே ஓவராப் போய்விட்டது என்றும் புரிந்தது.  அதுக்கப்புறமா அவர் வீட்டுக்குப் போயிருப்பார்.  கதையில் அதெல்லாம் சொல்லலை தான்.  என்றாலும் நாமே நினைச்சுக்கணும்.  எனக்கு என்ன கவலைன்னா, மறுநாள் பிடிக்க வேண்டிய பல்லவனை அவர் ஒழுங்காப் பிடிச்சாரா என்பது தான்.

அதோடு இன்னொரு விஷயமும் இதிலே இருக்கிறது.  ரயில்வே, பேருந்துப் பயணங்கள், விமானப் பயணங்கள் ஆகியவற்றில் இரவு 12-00 மணியிலிருந்து மறுநாள் தேதி ஆரம்பிப்பதால் இரவு 12--05 என்றால் கூட மறுநாள் தேதியில் தான் டிக்கெட் கொடுத்திருப்பார்கள்.  அதை வைத்து நாம் அந்தத் தேதியன்று இரவு போனோமானால் பயணத்தை மேற்கொள்ள முடியாது.  உதாரணமாக மே ஒன்பதாம் தேதி இரவு 12--05 என்றால் எட்டாம் தேதி இரவே நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் எட்டாம் தேதி இரவு பனிரண்டுக்குப் பின்னர் தேதி ஒன்பது ஆக மாறி விடும்.  இந்தத் தேதிக் குழப்பத்தில் பலரும் விமானப் பயணத்தைக் கூடத் தவற விட்டிருக்கின்றனர்.  ஆகவே இதை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


என்னவோ எழுதறேன்.  சில சமயம் பரிசு கிடைக்கையில் எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும்.  என் விமரிசனத்தின் உண்மையான விமரிசகர்கள் வந்து சொன்னால் தான் இது நல்லா இருக்கா இல்லையானு தெரியும். பொதுவா யாரும் குறை சொல்லக் கூடாது என்பதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்காங்க. :)))) ஆகவே யாரும் குறை சொல்ல மாட்டாங்க.  ஆனால் வைகோ சாரும் இன்னொருத்தரும் வெளிப்படையாகச் சொல்லுவாங்க.  ஏற்கெனவே   வைகோ சார் அவரோட கருத்தை எனக்குச் சொல்லிவிட்டார். அவரைத் தவிர நான் எதிர்பார்க்கும்  ஒரே ஒருத்தர் தான் உண்மையான விமரிசனம் கொடுப்பார்.  அவர் வந்து சொல்றாரானு பார்ப்போம்.  அந்த நபர்


திரு ஜீவி அவர்கள்! :))))))

34 comments:

  1. நல்லாத்தான் இருக்கு. நம்ம கதையை கேளுங்க. 25 வயசுலெ ஞாபகமறதி அதீதம். லாஸ்ட் கால் என்று கூப்பிடும்போது ஓடீ வந்து ஏறும் ஜாதி. அர்ஜெண்டா கோயம்புத்தூர் போகணும். அந்தக்காலத்தில் வாடகை டாக்ஸி தான். எளிதில் கிடைக்காது. எழும்பூர்லெ வது இறங்கி கோவைக்கு டிக்கெட் கேட்டா, அவர் சிரிக்கிறார். ஓடி வந்தா டாக்ஸி கிளம்பிடுத்து. எப்படியோ அதிலெ தொத்திக்கிணு செண்ட்ரலில் இறங்கி, லாஸ்ட் வண்டிலெ ஏறின வுடனே, குப் குப் குப்… நினெச்சா இப்பக்கூட மூச்சு இறைக்கிறது.

    ReplyDelete
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அதை இங்கு தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  3. //சில சமயம் பரிசு கிடைக்கையில் எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும். //

    எங்களுக்கு குறிப்பாக எனக்கு இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

    நன்றாகவே எழுதித்தள்ளுகிறீர்கள்.

    தங்கள் எழுத்துகள் உயர்திரு நடுவர் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக அமையும்போதெல்லாம் தங்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது என்பது எனது அபிப்ராயம்.

    தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கோ.

    எங்கள் ஊர்க்காரரான தாங்கள் மேலும் மேலும் பல பரிசுகள் பெற நானும் ஆவலாகவே உள்ளேன்.

    பார்ப்போம்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  4. // பொதுவா யாரும் குறை சொல்லக் கூடாது என்பதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்காங்க. :)))) ஆகவே யாரும் குறை சொல்ல மாட்டாங்க.//

    எழுத்துலகம் குட்டிசுவராகப் போய்க்கொண்டிருப்பதற்கும், ஒருசிலர் ப்திவு என்ற பெயரில் ஏதேதோ கிறுக்கி வருவதற்கும் இதுவே முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  5. // ஆனால் வைகோ சாரும் இன்னொருத்தரும் வெளிப்படையாகச் சொல்லுவாங்க. ஏற்கெனவே வைகோ சார் அவரோட கருத்தை எனக்குச் சொல்லிவிட்டார். //

    அடடா ! நான் எப்போ சொன்னேன்? எப்படிச்சொன்னேன்? என்ன சொன்னேன்? என்பதெல்லாம் முன்னெச்சரிக்கை முகுந்தன் போலவே மறந்து போய்ட்டேனே !

    ஆண்டவா, நீ தான் என்னைக் காப்பாத்தணும்.

    VGK

    ReplyDelete
  6. எதுவென்றாலும்....

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  7. உங்கள் மனசுக்குப் பட்ட விமர்சனத்தைத்தான் எழுதி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இந்த டைம் மாறி பஸ் விட்ட அனுபவம் எங்கள் வீட்டிலும் உண்டு. என் மாமியாரும் மனைவியும் ஹோசூர் செல்ல ஒரு முறையும், மாமனார் மதுரை டிரெயினைக் கோட்டை விட்ட சம்பவமும்! நான் நாள் மாடி சினிமா பார்க்கச் சென்றது ஏற்கெனவே எழுதி இருக்கேன்! அது நான் சொன்ன நாளில் நண்பன் ரிசர்வ் செய்திருப்பான் என்ற நம்பிக்கையில் ஏமாந்தது.

    ReplyDelete
  8. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete

  9. குழப்பத்துக்கும் ஞாபக மறதிக்கும் நெருங்கின உறவு - சுவாரசியமா இருக்கு விமரிசனம். இந்தக் கதையைப் படிக்கத் தவறிப்போச்சே?

    ReplyDelete

  10. ஞாபக மறதிக்கு இன்னொரு காரணம் உண்டு. ஒரு செயலில் நம் மனம் ஈடுபடவில்லையானால் ஞாபக மறதி வரும் YOU FORGET BECAUSE YOU JUST DON'T CARE என்று என் பிள்ளைகளை நான் கடிந்து கொள்வது உண்டு. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்புள்ள கீதாம்மா,

    உங்களது இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்த்தேன்.

    தாங்கள் என் விமரிசனங்களின் மேல் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி.ஒரு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்.

    இந்த விமரிசனத்திற்கான கதையை
    படித்து விட்டு என் மனத்தில் படுவதை மறைக்காமல் சொல்கிறேன்.

    அதற்குள் நீங்கள் அடுத்த பதிவுக்கு போகாமல் இருக்க வேண்டுமே என்பது தான் என் கவலை. :))


    ReplyDelete
  12. வாங்க "இ" சார், எனக்கு ஞாபகம் இருக்கிறது தான் பிரச்னையே! போன ஜென்மத்து நினைவெல்லாம் வைச்சுண்டு என்னைப் படுத்தறியேனு ரங்க்ஸ் முறைக்கிறார். :)))

    ReplyDelete
  13. எப்படியோ வண்டியைப் பிடிச்சீங்க இல்லை "இ" சார், அது போதுமே!

    ReplyDelete
  14. நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  15. எங்கே எழுதித் தள்ளறேன். அதுக்குள்ளே நீங்க இரண்டு முறையாவது எழுதலையானு கேட்டிருப்பிங்க. என்னமோ கிறுக்கித் தள்ளறேன்னு வேணாச் சொல்லலாம். :)

    ReplyDelete
  16. ஆமாம், பலரும் குறைகள் இருந்தால் கண்டுக்கறதே இல்லை. இது என் எழுத்துக்கு மட்டுமில்லை; மத்தவங்க எழுத்திலும் குறைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. பல சமயங்களில் நான் எழுத நினைச்சு, வேண்டாம் வம்புனு விட்டிருக்கேன். நெருங்கியவங்களுக்கு மட்டும் சொல்றதுனு வைச்சிருக்கேன். :))))

    ReplyDelete
  17. ஹாஹா, சொன்னிங்க, சொன்னீங்க! :)))))

    ReplyDelete
  18. வாங்க டிடி, வாழ்த்துக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  19. ஶ்ரீராம், நல்லா இருக்குனு நீங்க சொன்னாலும் எனக்கு என்னமோ குறையாத் தான் தெரியுது! :) நாங்க நல்லவேளையா இதை முன் கூட்டியே தெரிஞ்சு வைச்சிருந்ததாலே, பஸ், ரயில், ஃப்ளைட் எதையும் தவற விடலை! :)

    ReplyDelete
  20. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  21. வாங்க அப்பாதுரை, நீங்க விமரிசனம் எழுத ஆரம்பிச்சிருந்தா எல்லாக் கதைகளுக்கும் பரிசு உங்களுக்கே கிடைச்சிருக்கும். :)))) நல்லா இருக்குனு சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  22. ஜிஎம்பி சார், சில விஷயங்களில் நமக்கு ஆர்வம் இல்லைனாலும் அது மறந்துடும். இது என்னைப் பொறுத்தவரை ஒரு பழக்கமாவே ஆகி இருக்கிறது. எனக்கு ஆர்வம் இல்லாத விஷயங்களை நான் உடனடியாக மறந்துடுவேன். :)

    ReplyDelete
  23. வாங்க ஜீவி சார், நான் இப்போ பதிவுகள் போடுவதை நிறையவே குறைச்சிருக்கேன். நிறைய இடைவெளி கொடுக்கிறேன். எழுத ஒண்ணும் இல்லைனு இல்லை. உடல்நலம், ரொம்ப நேரம் கணினியில் உட்கார இடம் கொடுக்கிறதில்லை. இன்னிக்குத் தான் தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்தேன். :))))

    ReplyDelete
  24. ஜீவி சார், நீங்க சொல்வதற்குள்ளாக இன்னொரு பதிவு வராது என்று உறுதிமொழி கொடுக்கிறேன். :))))

    ReplyDelete
  25. Shift basis ல வேலை பார்த்த பொழுது எனக்கு இந்த அனுபவம் இருந்திருக்கிறது .

    இந்த பன்னிரண்டு மணி பஸ்சும் - அனுபவப்பட்டிருக்கிறேன் .

    ReplyDelete
  26. நானும் அந்தக் கதையை முன்னாலேயே படித்து அதற்கு பின்னூட்டமும் போட்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது உங்களுக்காக அந்தக் கதையை மீண்டும் படித்தேன்.

    ஒரு விஷயம் தெரிந்தது.

    1.முன் எச்சரிக்கை முகுந்தன் போன்ற ஒருத்தர் வை.கோ. சாருக்கு பழக்கமாகி இருக்கலாம்.

    2. இல்லை, முன்னெச்சரிக்கை முகுந்தனின் குணாதிசயங்களின்
    பாதிப்பு அவரில் இருந்திருக்கலாம்.

    இரண்டாவது சொன்னதை யூகிக்கிற அளவுக்கு அவர் முன் எச்சரிக்கை முகுந்தனின் நடவடிக்கைகளை அனுபவித்து தன்னுள் ரசித்திருப்பது தெரிகிறது.

    சரி. அதீத முன்னெச்சரிக்கையால் விளையும் நன்மைகள் அல்லது அசட்டுத்தனங்களைச் சொல்ல வேண்டும். முன் எச்சரிக்கை என்பதால் கதாநாயகனின் பெயரின் முன் எழுத்திலும் ஒரு 'மு' வருகிற மாதிரி முகுந்தன் என்று அவனுக்கு பெயர் வைத்தாயிற்று.

    அடுத்தாற் போல் ஒருவனின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நகைச்சுவையாக சொல்கிற மாதிரி
    அந்த கதாபாத்திரத்தை--முகுந்தனை- உலவ விடுவதற்கு ஒரு கதை வேண்டும். அதுக்கான ஒரு கதை?... அதை யோசித்ததில் தான் இந்தக் கதை அவர் மனசில் உருவாகியிருக்கிறது.

    சொல்லப் போனால் ஒரு ஒன் லைன் கதை.

    அதிகாலையில் பயணிக்க வேண்டிய ரயில் பயணத்திற்காக முதல் நாள் மாலையே ரயில் நிலையத்திற்கு போய் விடுவதாக முகுந்தனை-- சாரி, அவ்வளவு முன் எச்சரிக்கை யோடு முன் எச்சரிக்கை முகுந்தன்-- இருந்திருக்கிறார் என்று காட்ட வேண்டும்.

    அதை பிறர் நம்பும்படியாகவும் சொல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்ததில் தான் கொட்டோ கொட்டென்று கொட்டிய அந்த மழையும், மழைபெய்கிற உணர்வே இல்லாமல் அடித்துப் போட்ட மாதிரியான அவரின் மதியத் தூக்கமும்.. அயர்ந்து தூங்குகிற மனுஷனை எழுப்பத்தான் அவர் படுத்த இடத்திற்கு அருகிலிருக்கிற ஜன்னலை திறந்து வைத்த சாமர்த்தியமும்.

    கனத்த மழையில் தெரு வீடு எல்லாம் ஒரு சேர இருண்டு கிடக்கிறது. விழிப்பு வந்து சடாரென்று எழுந்திருந்த பொழுது
    மலங்க மலங்க விழித்த நினைவுலகத்திற்கு வந்ததும்
    நிகழ்வுலகத்தின் நினைப்பு தானே எவருக்கும் வரும்?.. போதாக்குறை க்கு மனுஷன் ரயிலுக்குப் போக வேண்டும் என்கிற நினைப்போடையே தூங்கியிருக்கிறார்.

    அந்த நினைப்பு மனசில் உரைத்ததும் தான் வாரிச் சுருட்டிக் கொண்டு பதறி எழுந்து தயாராக வைத்திருந்த பயணப் பொருட்களை எடுத்துக் கொண்டு ரயிலடிக்கு ஜூட்!

    இந்தக் கதையில் வரிக்கு வரி
    கொஞ்சம் கூடப் பிசகாமல்-- கடைசியில் கூட ஸ்ரீரங்கம் ரயிலடிக்குப் போன அவனது முன் எச்சரிக்கை உணர்வை-- அழகாக இப்படி ஒரு நிகழ்வு நிஜமாக நடந்தது போலவே முகுந்தனின் நடவடிக்கைகளை வை.கோ. சார் வர்ணித்தது அழகோ அழகு!

    நகைச்சுவையாய் எதையும் சொல்வதில் கைதேர்ந்தவர் ஆயிற்றே! கேட்க வேண்டுமா?மனிதர் தன் கைவண்ணத்தைக் காட்டி விட்டார்!

    இப்பொழுது உங்கள் விமரிசனத்திற்கு வருவோம். அந்தக் கதைப் போட்டியின் நடுவர் குறிப்பையும் படித்தேன். நடுவர் சொல்லியிருக்கிற மாதிரி அவரவர் எழுத்துக்கு அவரவரே நீதிபதி!

    கதையை நீங்களும் மறுபடியும் இன்னொரு தடவை உங்கள் விமரிசனத்தில் விவரித்ததைத் தவிர்த்து அந்தக் கதையை விமரிசிக்கறதாய் நீங்கள் எண்ணக் கூடிய வரிகளை மட்டும் ஒரு தனிக் காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

    இப்பொழுது உங்கள் விமரிசத்திற்கான நீதிபதியாக உங்களையே வரித்துக் கொள்ளுங்கள்.

    அவ்வளவு தான்.

    பி.கு: சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் பின் மாலையில் அசதியில்
    தூங்கி விட்டேன். சுழலும் மின்விசிறி சுழன்றபடி இருக்க தூக்கமான தூக்கம். அப்படியொரு தூக்கம். எனக்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்று அறையின் கனவை வேறு சாத்தி வைத்திருக்கிறார்கள்.

    எதேச்சையாய் என் மனைவி என்ன இவ்வளவு நேரம் தூங்குகிறார் என்கிற யோசனையில் அறைக்கு வந்திருக்கிறார்கள். அந்த சலனத்தில் சடக்கென்று நான் விழித்துக் கொண்ட பொழுது, "காப்பி கலந்து கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார்கள்.

    "இரு. பல் தேய்த்து விட்டு வருகிறேன்.." என்று சடக்கென்று நான் எழுந்ததைப் பார்த்து வீடு பூராவும் சொல்லிச் சொல்லி சிரிப்பான சிரிப்பு!

    முகுந்தன் மட்டுமில்லை; ஒருவிதத்தில் நாம் எல்லோருமே
    அப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இந்த மாலை- அதிகாலை மயக்கத்தை தத்ரூபமாக வர்ணித்திருக்கும் வை.கோ.சாரை பாராட்டத் தான் வேண்டும்.

    ReplyDelete
  27. ஜீவி said...

    வாங்கோ திருவாளர் ஜீவி ஐயா அவர்களே! தங்களுக்கு அடியேனின் அன்பு நமஸ்காரங்கள்.

    //நானும் அந்தக் கதையை முன்னாலேயே படித்து அதற்கு பின்னூட்டமும் போட்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது உங்களுக்காக அந்தக் கதையை மீண்டும் படித்தேன்.

    ஒரு விஷயம் தெரிந்தது.........
    ...............................
    ...............................//

    என்று ஆரம்பித்து ஒரு மிகப்பெரிய விமர்சனமே இங்கு கொடுத்து அசத்தியுள்ளீர்களே !

    வியந்து போனேன். ;)

    இந்த திருமதி கீதா சாம்பசிவத்திற்காகவாவது என் சிறுகதையை தாங்கள் மீண்டும் வாசித்து மிக நீண்ண்ண்ண்ண்ண்ட கருத்துக்கள் சொல்லும் பாக்யம் எங்களுக்குக் குறிப்பாக எனக்குக் கிட்டியுள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    இதனை நான் இன்று என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டப்பகுதியில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டேன்.

    அதன் இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-01-03-first-prize-winners.html

    தங்களின் அற்புதமான கருத்துக்களை அறியத்தந்து உதவிய திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  28. ஜீவன் சுப்பு, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  29. ஜீவி சார், வரவுக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.

    ஆனால் மதியம் அத்தனை நேரம் தூங்கி எழுந்த பின்னர் பல்லைத் தேய்ப்பதில் தப்பில்லை என்பது என் கருத்து. :))))))) காலை, மாலைக் குழப்பம் ஏற்பட்டால் சிரிப்பாங்க தான். :)

    ReplyDelete
  30. வைகோ சார், மீள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  31. வை.கோ. சார்!

    தங்கள் மகிழ்வுக்கு ஒரு காரணமாய் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. வை.கோ. சார்!

    தங்கள் மகிழ்வுக்கு ஒரு காரணமாய் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  33. அவரது தளத்தில் உங்கள் விமர்சனம் படித்தேன்.....

    மூன்றாம் பரிசு பெற்றதற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  34. இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete