எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 08, 2014

மதுரைக்குப் போயிட்டு வந்தேன்!

நேற்றுத் திடீரென மதுரை போக வேண்டி வந்தது. என் உறவினர் குடும்பம் மதுரை சமயநல்லூர் அருகே சாலை விபத்தில் கண்டமேனிக்கு அடிபட்டுப் படுத்து, எழுந்து அறுவை சிகிச்சைகள் முடிந்து வந்து ஒரு மாதமே ஆகிறது.  அவங்களைப் போய்ப் பார்க்கவே முடியலை.  இன்னமும் சரிவர நடக்க முடியாமல், கையில் எடுத்துச் சாப்பிட முடியாமல், கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் என் அண்ணாவும், மன்னியும் பார்த்ததுமே அழுதுவிட்டார்கள்.  அவங்க இருவரும் மாப்பிள்ளை, பெண், பேரனோடு, மன்னியின் வயதான அம்மாவை சமயநல்லூரில் பார்க்கப் போகும்போது முன்னே சென்ற வண்டியை முந்திச் செல்ல இவர்கள் சென்ற வண்டி முயன்றிருக்கிறது.  எதிரே பேருந்து வருவதை முந்துவதற்காகக் கொஞ்ச தூரம் வந்ததுமே  புரிந்து கொண்ட வண்டி ஓட்டுநர் உடனேயே வரப்போகும் விளைவைத் தெரிந்து கொண்டு தலையைக் குனிந்து கொண்டு கதவைத் திறந்து வெளியே குதித்து விட்டாராம்.  அருகே அமர்ந்திருந்த அண்ணாவுக்கும், பின்னால் அமர்ந்திருந்த என் மன்னிக்கும் எக்கச்சக்கமாக அடி!  அதிலும் வலப்பக்கமாகவே பட்டிருக்கிறது.  நடுவே அம்ர்ந்திருந்த அவ்ர்கள் பெண்ணுக்குக் கை முறிவு.  அதுவும் வலக்கை.  ஓரத்தில் குழந்தையோடு அமர்ந்திருந்த மாப்பிள்ளை வண்டி ஓட்டுநர் குதிப்பதைப் பார்த்துத் தன்னையும் அறியாமல் அவரும் குழந்தையோடு வண்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

அதிர்ச்சிக் காயங்களைத் தவிரக் குழந்தைக்கும் அவருக்கும் வேறு ஒன்றும் இல்லை.  வழியோடு போன மற்றப் பேருந்துக்காரர்கள் உதவியுடன் இவர்களை அவசர உதவிப் பேருந்தை வரவழைத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.  அடிபடாவிட்டாலும் அதிர்ச்சியில் மாப்பிள்ளைக்குப் பேச்சே வராமல் போகக் குழந்தை விடாமல் அழுதிருக்கிறான்.  குழந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.  அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பத்துநாட்களுக்கும் மேல் இருந்திருக்கின்றனர்.  என் மன்னிக்கு மூக்கே பிய்ந்து வந்திருக்கிறது.  நெற்றி, புருவம், கண்ணுக்கு அருகே, முகத்தில் எல்லாம் எப்படினே தெரியாமல் கண்ணாடி குத்திக் கிழித்திருக்கிறது. அண்ணாவுக்கு வலக்கை மணிக்கட்டில் நரம்பு கிழிபட்டு ரத்தம் சேதம்.  ஆக மொத்தம் பிழைத்ததே புனர் ஜனமம் தான்.

நான் கூட முதலில் தற்சமயம் மதுரை வரை இணைக்கப்பட்டிருக்கும் புதிய பைபாஸ் சாலையில் தான் விபத்து நேரிட்டிருக்குமோ என நினைத்தேன்.  ஆனால் நேற்றையப் பேருந்துப் பயணத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.  பின்னர் நேரில் பார்த்து விசாரித்ததில் தான் புரிந்தது.  இப்போதெல்லாம் எங்கேயும், எதற்கும் போட்டி தான்.  முந்திச் செல்லவேண்டும் என நினைப்பவர்கள் பெரும்பாலும் இம்மாதிரி வாடகைக்கார் ஓட்டிகளாகவும், இரு சக்கர ஓட்டிகளாகவுமே இருக்கின்றனர்.  அதிலும் சென்னைக் கடற்கரைச் சாலையை அதிர வைக்கும் இரு சக்கர ஓட்டுநர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வண்டியில் பறக்கின்றனர். இதனால் சமீபத்தில் ஓர் இளைஞன் சுவற்றில் மோதி மரணம் அடைந்தான் அவன் பிறந்த நாளிலேயே.  அதற்காகப் பெற்றோர் கொடுத்த பரிசான அந்த வண்டியே அவன் உயிரையும் குடித்துவிட்டது.

ஓரிரு நிமிடங்கள் தாமதித்தால் என்ன குடிமுழுகிடும்?  ஏன் தாமதிக்க மறுக்கிறோம்?  முதலில் சென்று சாதிக்கப் போவது என்ன?  வண்டியிலிருந்து குதித்த ஓட்டுநரும் இவர்களோடு அதே மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்துவிட்டுப் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கஷ்டப்படுவது வயதான என் அண்ணா, மன்னி, கைக்குழந்தையுடன் என் அண்ணா பெண் ஆகியோர் தான்.  அண்ணா பெண்ணுக்கு இப்போது ஓரளவு குணம் என்றாலும் இன்னமும் கையை நீட்ட, மடக்க முடியவில்லை.  காலை உதவிக்கு ஒரு செவிலியர் பெண், மாலை உதவிக்கு இருவர் என வருகின்றனர்.  அன்றாடக் காரியங்களைக் கூட இவர்கள் உதவியோடு தான் முடித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிரக் கைகால்களுக்குப் பயிற்சி கொடுக்கத் தனியாக வருகின்றனர். எப்படியும்  அவர்கள் உடல்நிலை முன்னேற்றம் அடைய இன்னும் ஓரிரு மாதம் ஆகலாம். அப்போதும் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கையான உபகரணங்களின் உதவியுடனேயே இனி வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.  ஒரு கண அலக்ஷியத்தின் விளைவு இது!

மதுரையில் வேறெங்கும் செல்லவில்லை;  செல்லும் மனமும், நேரமும் இல்லை.  ஆனால் மதுரை தன் கிராமிய முகத்தில் மஞ்சளுக்குப் பதிலாக ஃபவுன்டேஷனும், உடையில் புடைவை, பாவாடை, தாவணிக்குப் பதிலாக லெக்கீஸ், ஜீன்ஸ், டீஷர்ட், குர்த்தியுடனும், ஆனால் அதே சமயம் ஒற்றைப் பின்னலுடனும், தலையில் வைத்த பூவுடனும், நெற்றிப் பொட்டுடனும், காதில் தொங்கட்டானுடனும் காட்சி அளிக்கிறாள். இந்த இரண்டுங்கெட்டான் நிலையையே புதுமை எனவும் எண்ணிக் கொள்கிறாள். :(

14 comments:

  1. goodness! அனைவரும் நலம்பெற வேண்டுகிறேன்.

    பொறுப்பில்லாத டிரைவர். வண்டியில் பயணிகள் இருந்தால் அவர்கள் நலத்திற்கு நாம் பொறுப்பு என்பதை உணராவிட்டால் வண்டி ஓட்டுவானேன்? இதை நிறைய இடங்களில் பார்க்கிறேன். கார் என்றில்லை டூ வீலர்களில் போகிறவர்கள் கூட பறக்கிறார்கள்.. இஷ்டத்துக்கு வளைத்து வளைத்து ஓட்டுகிறார்கள். சமீபத்தில் இப்படிக் காட்டுத்தனமாக டூவீலர் ஓட்டிக் கொண்டிருந்தவரின் பின்புறம் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு பெண் ஏறக்குறைய தொங்கிக் கொண்டே வந்ததைப் பார்த்த திகில் இன்னும் போகவில்லை.

    ReplyDelete
  2. இந்த விபத்துக்கள் சங்கடம் அளிக்கின்றன. என் சகலை ஒரு மோட்டார் சைக்கிளால் தூக்கி எறியப் பட்டு காலில்பலத்த எலும்பு முறிவு இருந்தது.உள்ளே ப்லேட் வைத்து ஓரளவுக்கு நடக்கத் துவங்கிய நேரம் அவரது மனைவி, ( என் மச்சினி ஒரு தண்ணீர் லாரியில் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் ப்லாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்தும் நடப்பதில் மிகுந்த பிரச்சனை.செலவும் சில லட்சங்களைத் தொட்டு விட்டது இது நடந்த சில மாதங்களில் என் சகலை உயிர் துறந்தார். ஏன் தான் ஜாக்கிரதையைத் தொலைக்கின்றனரோ. வேகம் உயிர் குடிக்கும் என்று இவர்களுக்குத் தெரிவதில்லையே. உங்கள் உறவினர் நலமாக வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. அடக் கொடுமையே...

    என்ன கொடுமை? மாப்பிள்ளைக்குப் பேச்சு வந்ததா இல்லையா? மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

    சீக்கிரம் சரியாகப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அனைவரும் விரைவில் உடல்நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்..

    நீங்கள் சொல்வது நிஜம் தான். அதுவும் இருசக்கர வாகன ஓட்டிகள், அதிலும் இளைஞர்களுக்கு எங்கும் வேகம் எதிலும் வேகம் தான். நான் இப்போதெல்லாம் ரோடு க்ராஸ் பண்ணவே பயப்படுகின்றேன். சிக்னல்களில் தான் க்ராஸ் செய்கின்றேன். கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் அலக்ஷியமாக வாகனங்களில் பறக்கின்றனர். எதிரே யார் வந்தாலும் ஒரு தூக்கு தூக்க தயங்குவதேயில்லை.. இந்த நிலை எங்கு போய் முடியும் என்று நினைத்தாலேயப் பயமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. கீதா நேரில பார்த்தபோது சொல்லலியே. இது மெட்ராஸ் அண்ணாவா.பெரியப்பா பிள்ளையா. இப்படி வேகமாக ஓட்டும் வண்டி ஓட்டிகளைத் தவிர்த்துவிடுகிறேன். கும்பகோணத்திலிருந்து திருச்சி வரும்வழியில் வரும் லாரி யமனகளையும் ,பேருந்துகளையும் பார்த்த திகில் இன்னும் ஓயவில்லை.சீக்கிரமா குண்மாகணும்.மிக வருத்தமா இருக்குமா.

    ReplyDelete
  6. வாங்க அப்பாதுரை. பொறுப்பில்லாத ஓட்டுநர் தான்! :( கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தொங்கிட்டுப் போறாங்க. குழந்தையின் நிலையை நினைத்தால் கவலை அதிகரிக்கிறது. :( வேறென்ன செய்ய முடியும்! ஒரு முறை எச்சரிக்கை கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் உண்டு. நம்ம ரங்க்ஸோ உனக்கு எதுக்கு ஊர் வம்பெல்லாம்னு அலுத்துக்கிறார்.

    ReplyDelete
  7. வெள்ளிக்கிழமை மதுரையிலிருந்து திரும்பி வருகையில் பேருந்தில் எங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம்பெண் பழத்தை உரித்துச் சாப்பிட்டுவிட்டுத் தோலை அப்படியே நடைபாதையில் போட்டிருந்தாள். வண்டியைச் சிறிது நேர ஓய்வுக்கு நிறுத்தியபோது கழிவறைக்குச் செல்லவேண்டி எழுந்த நாங்களும் இன்னும் சிலரும் அதில் சறுக்க இருந்தோம். அந்தப் பெண்ணிடம் சொன்னதுக்குக் கோபமாக ஒரு முறை முறைத்துவிட்டுக் காதில் இயர் ஃபோனை அழுந்த மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்க ஆரம்பித்துவிட்டாள். ஓட்டுநர் கிட்டேயும் காணிபித்தோம். அவரும் கண்டுக்கலை. கடைசியில் பயணிகளில் ஒருவரே அந்தக் குப்பையைத் திரட்டி ஒரு பக்கமாய் ஓரமாய்க் குவித்து வைக்க நேர்ந்தது. அதையும் அந்தப் பெண் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். இப்படியான குடிமக்களை வைத்துக்கொண்டு தூய்மையான இந்தியாவா? அது கனவு தான் என்றே தோன்றுகிறது. :(

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார், நீங்கள் பகிர்ந்திருக்கும் செய்தியும் வருத்தமாக இருக்கிறது. நேரம் தான். வேறென்ன சொல்வது!

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், இரண்டு நாட்கள் கழித்து மாப்பிள்ளை பேச ஆரம்பித்திருக்கிறார் என்றாலும் மனதளவில் பாதிப்பு இன்னமும் யாருக்கும் போகவில்லை. :(

    ReplyDelete
  10. வாங்க பார்வதி, அக்கறையின்மையைச் சுட்டிக் காட்டக்கூட இயலவில்லை இப்போதெல்லாம். சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஒரு கட்டுப்பாடற்ற காட்டு வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். :(

    ReplyDelete
  11. வாங்க வல்லி, ஏற்கெனவே நான் தான் என்னோட பிரச்னைகளை எல்லாம் சொல்லிப் புலம்பிக் கொண்டு இருக்கேனே! அதோடு உங்களை நேரில் பார்த்தப்போ உங்கள் உடல்நிலை குறித்தே கவலையாக இருந்தது. ஊர் போய்ச் சேரும் வரை நல்லபடியாக இருக்கணுமேனு நினைச்சுட்டு இருந்தோம். நீங்க கும்பகோணத்தில் இருந்து திருச்சி வரும்போது கல்லணை வழியாக வந்திருந்தால் போக்குவரத்து அதிகமாகவே இருந்திருக்கும். நாங்கள் அந்த வழியில் செல்வதில்லை. தஞ்சாவூர் வழியில் புறவழிச்சாலையில் செல்கிறோம். இரண்டு, மூன்று கிலோ மீட்டர் அதிகம் என்றாலும் கல்லணையில் மணல் லாரிகள் சுற்றி வர ஆக்கிரமிக்கும்போது ஏற்படும் திகில் உணர்வு இங்கே வராது. :(

    ReplyDelete
  12. படிக்கும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது.

    நிதானமாகச் சென்றால் ஐந்து அல்லது பத்து நிமிடம் லேட்டாகச் செல்வார்கள். அவ்வளவுதான். அந்த ஐந்து நிமிடங்களை சேமிப்பதற்காக உயிரைத் துறக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதே பலருக்குத் தெரிவதில்லை...

    ReplyDelete

  13. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  14. உறவினர்கள் நலம்பெற வாழ்த்துக்கள். தினம் தினம் இது போன்ற செய்திகளை படிக்கும் போதும் வாடகை காரில் பயணிக்கும் போதும் வயிறு கலங்குவது உண்மை.

    ReplyDelete