எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 05, 2015

ரங்குவைப் பார்க்க முடியலை! :(


ரொம்ப நாட்கள் ஆச்சு ரங்குவைப்பார்த்து. ஒரே திருவிழாக் கொண்டாட்டங்களில் இருந்தார். அதுவும் நம்பெருமாளைப் பத்திக் கேட்கவே வேண்டாம். சும்மாவே ஊர் சுத்துவார். இப்போ உற்சவம்னா கேட்கவே வேண்டாம். கடைசியா வசந்தோத்சவம் முடிஞ்சு ஓய்வா இருக்கார். இனிமேல் பவித்ரோத்சவம் தான்னு நினைக்கிறேன். அப்போ பெரிய ரங்குவுக்குத் தைலக்காப்புப் போட்டுமார்பு வரை மூடிடுவாங்க. ஆகையால் இரண்டு பேரையும் ஒரே இடத்தில் பார்த்துடலாமேனு போனோம் இன்னிக்கு. விபரீதத்துக்குக் காலம்பரப் போக முடிவெடுத்தோம். சாதாரணமாக இதுக்கு ஏகப்பட்ட ஆக்ஷேபணைகளை எழுப்பும் நானே இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவே நேற்றுக் காலை ஊரிலிருந்து வந்த தம்பியையும் அவர் மனைவியையும் இன்று காலை ஊருக்கு அனுப்பி விட்டு நாங்க ஒரு எட்டரை மணி போல வீட்டை விட்டுக் கிளம்பினோம். அதிசயத்திலும் அதிசயமாக நம்ம ரங்க்ஸ் ஆட்டோவில் போகலாம், வண்டி வேணாம்னு சொன்னார். எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒரு மாதிரியாவே இருந்தது. என்றாலும் ஆட்டோவுக்குக் காத்திருந்து ஆட்டோ பிடித்து ராஜகோபுரம் அருகே இறங்கிக் கொண்டு அங்கிருந்து நடந்து போனோம். நல்ல வெயில் என்பதால் அப்போவே களைப்பாக வந்து விட்டது. 

அதையும் மீறிக் கொண்டு உள்ளே பெருமாள் சந்நிதிக்குப் போகும் இடம் சென்றால் அங்கே 50 ரூ டிக்கெட்டிலேயே ஏகக் கூட்டம் இருந்தது. என்னடா இது சோதனைனு நினைச்சால் நம்ம ரங்க்ஸே அதிசயமாக 250 ரூக்குப் போவோம்னு சொன்னார். ஆனால்! என்ன ஏமாற்றம்! அங்கேயும் கூட்டம் அதோடு ரங்குவுக்குச் சாப்பாட்டு நேரம். கொட்டு முழக்கங்களோடும், மேள, தாளங்களோடும், எக்காளங்கள் முழக்கத்தினிடையிலும் ரங்குவுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றனர். அதெல்லாம் முடிஞ்சு உள்ளே போனவங்க எல்லோரும் வெளியே வந்தப்புறமாத் தான் இங்கே நிற்கிறவங்களை உள்ளே விடுவாங்க. நமக்கு ரங்குவோட சாப்பாடு நேரம்னு தெரியாமப் போச்சு! தெரிஞ்சால் கொஞ்சம் தாமதமாகவே வீட்டை விட்டுக் கிளம்பி இருக்கலாம். அங்கே கூட்டத்தில் நடுவில் மாட்டிக் கொண்டால் வெளியேறுவது கடினம் எனத் தோன்றவே, என்னால் அதிக நேரம் நிற்க முடியாது என்பதாலும் அங்கிருந்து வெளியேறி தாயார் சந்நிதியை நோக்கி நடையைக் கட்டினோம்.

இப்போக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தாயார் சந்நிதிக்குச் செல்லும் பாட்டரி கார் ஓடுவதில்லை.  அதே போல் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கும் பாட்டரி கார் ஓடுவதில்லை. ஆகவே தாயார் சந்நிதிக்குப் போறதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுது!  என்றாலும் அதையும் மீறிக் கொண்டு போனோம். போகும்போதே வழியில் கொட்டாரம் என்னும் இடத்தின் சுற்றுச் சுவரை இடித்திருந்தார்கள். பழமையான கட்டிடம் என்பது செங்கற்களின் அமைப்பிலிருந்தே தெரிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்தபோது மேலப் பட்டாபிராமர் சந்நிதிக்கும் இந்தக் கொட்டாரத்துக்கும் நடுவே கீழ்க்கண்ட நெல் பத்தாயங்கள் காட்சி அளித்தன. மிக மிகப் பெரியவை. பிரம்மாண்டமான பத்தாயங்கள். மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஏணி மேல் ஏறி உள்ளே நெல்லைக் கொட்டுவார்களாம். அப்படி எனில் அப்போதைய மனிதர்கள் எவ்வளவு உடல் பலத்தோடு இருந்திருக்க வேண்டும்! ஆச்சரியமாக இருந்தது. மொத்தம் 6 நெல் பத்தாயங்கள் இருந்தன. அவற்றைக் கைபேசியின் உதவியோடு படம் எடுத்துக் கொண்டேன். கீழே பார்க்கலாம்.சில இடங்களில் துணியால் மூடி இருக்கின்றனர். செருப்பு இல்லாததால் கிட்டே போக முடியவில்லை. காலில் மண்ணும், கல்லும் குத்தி ஒரே அவஸ்தை! :(

இந்தப் பத்தாயத்தைப் பார்த்தால் அந்தக்காலத்தில் இவ்வளவு நெல் விளைந்திருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது.  நெல் குதிர், நெல் களஞ்சியம் என்றும் சொல்லலாம். 






பின்னர் அங்கிருந்து தாயார் சந்நிதிக்குச் சென்றால் அங்கேயும் ஒன்பதே முக்காலுக்குத் தான் நடை திறப்பாங்களாம். சரினு அது வரை உட்கார்ந்து இருந்தோம். நான் தாயார் சந்நிதியின் வெளியே வரும் வாயிலில் உள்ள படிகளில் உட்கார்ந்தேன். அப்போது தான் இந்த வில்வமரம் காட்சி அளித்தது. மொகலாயர் படை எடுப்பின் போது தாயாரை வில்வமரத்தடியில் தான் புதைத்து வைத்தார்கள். அந்த வில்வ மரமும் தாயார் சந்நிதிக்கு வெளியே இருந்ததாகத் தான் சொல்கிறார்கள். ஆகவே இதுவாக இருக்குமோனு ஒரு சந்தேகம். எத்தனை வருஷங்கள் வில்வமரம் இருக்கும்னு தெரியலை. ஆனாலும் இதுவும் மிகப் பழமையான வயதான மரம் தான்.



வில்வமரத்தின் அருகே ஒரு துளசி மாடமும் காணப்பட்டது. அதையும் படம் எடுத்துக் கொண்டேன். இங்கேயும் தாயாருக்குச் சாப்பாட்டு நேரமாக இருந்தது. ஆனாலும் சீக்கிரம் திறந்து விட்டார்கள். அப்புறமா உள்ளே போய்த் தாயாரைப் பார்த்தோம். அங்கிருந்து மீண்டும் பெருமாளைப் போய்ப் பார்க்கலாம் எனில் நம்ம ரங்க்ஸுக்குக் கொஞ்சம் சந்தேகம். கூட்டம் இருந்தால் நிற்க முடியாது என்று வேண்டாம், இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டார். அங்கிருந்து சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப்போய் அவரைச் சந்தித்து எங்கள் குறைகளைச் சொல்லிவிட்டுப் பின்னர் கிளம்பி வந்தோம். அதுக்கே பதினோரு மணி ஆகிவிட்டது. வந்து தான் சமைத்துச் சாப்பாடு.



காமிராவெல்லாம் கோயிலுக்குப் போறச்சே எடுத்துப் போறதில்லை. கைபேசியில் தான் படம் எடுத்தேன். சுமாரா வந்திருக்கும் படங்களை மட்டும் பகிர்ந்துக்கறேன். தொ.நு.நி. மன்னிக்கவும்.


11 comments:

  1. எவ்வளவு பெரிசா இருக்குமா இந்த பத்தாயம். கி ரா நாவலில் வரும் குறும்புகள் நினைவுக்கு வருகின்றன. சோழ நாடு சோறுடைத்துன்னு தானே சொல்லி இருக்காங்க. அன்னம் இருக்கும் இடத்தைப் பார்த்தால் அன்ன தாதாவைப் பார்த்த மாதிரிதான். ரங்கன் இன்னோரு தடவை அழைப்பான். கவலை வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, முதலில் இதைப் பார்த்துவிட்டுக் கோட்டைக் கொத்தளச் சுவர் என்றே நினைத்தோம். அப்புறமாத் தான் மேலுள்ள திறப்புகளைப் பார்த்ததும் புரிந்தது. கோயில் ஊழியர் ஒருவரும் உறுதி செய்தார். இன்னிக்கே ரங்கு வந்துட்டுப் போனு தான் சொன்னார். நாங்க தான் இன்னொரு நாள் வரலாம்னு வந்துட்டோம், ரொம்பவே களைப்பாகப் போய் விட்டது.

      Delete
  2. படங்கள் அருமை. விவரங்களும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. போக முடியலை! ஆனால் கல்வெட்டுக்கள் எழுதி இருக்கும் சுவற்றில் எல்லாம் வெள்ளை அடிக்கின்றனர். யார் சொல்றது? நாமெல்லாம் கொசு மாத்திரம்! :(

      Delete
  3. பல தகவல்களை அறிய முடிந்தது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நிறையத் தகவல்கள் இருக்கின்றன. காவிரி இந்தக் கோயிலின் ராஜகோபுரத்துக்கு அருகேயே போய்க் கொண்டிருந்துவிட்டுப் பின்னரே திசை மாற்றி இருக்கிறார்கள். அது குறித்த தகவல்களும் சேகரித்து வருகிறேன்.

      Delete
  4. அடுத்த முறையாவது ரங்கதரிசனம் கிடைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும் ஐயா. இன்னிக்குப் போனது அதுவும் காலை நேரம் போனது தப்பு. :)

      Delete
  5. அந்த நெல் குதிர்கள் (இப்படியும் சொல்லலாம் இல்லையா?) இருக்குமிடத்தில் செங்கமலத் தாயார் சந்நிதி இருக்கிறதே, அது எங்கள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் பிறந்த வீட்டு சீதனம். பாட்டியின் ஞாபகம் வருகிறது.
    அதே வில்வமரம் என்று எங்கள் மாமி சொல்வார். அங்குதான் தாயாரைப் புதைத்து வைத்திருந்தார்கள் என்றும் சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. //நெல் குதிர், நெல் களஞ்சியம் என்றும் சொல்லலாம். //
      சொல்லலாம்னு மேலே சொல்லி இருக்கேன் ரஞ்சனி, கவனிக்கலையோ? செங்கமலத் தாயார் சந்நிதிக்கு அடுத்துத் தான்! அதைச் சொல்லி இருக்கணும்னு நினைக்கிறேன். :) வில்வமரம் அதே தானா? ஆச்சரியம் தான்! இத்தனை வருடங்கள் இருக்கிறது பேராச்சரியம்! தகவலுக்கு நன்றி.

      Delete
    2. //அது எங்கள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் பிறந்த வீட்டு சீதனம்.//

      இதைக் குறித்தும் நீங்க சொன்னதாக அரைகுறை நினைவு இருக்கிறது. முடிஞ்சால் விபரமாக எழுதுங்கள். நன்றி.

      Delete