எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 21, 2015

கல்லுரலை மீட்ட சுந்தர பாண்டியத் தமிழச்சி!

இம்மாதம் பத்தாம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை சென்னை வாசம். ஒரு உபநயனம், ஒரு சீமந்தம் இரண்டும் சரியாக ஒரு வார இடைவெளியில் வர, எங்களுடைய மருத்துவப் பரிசோதனைக்கான காலமும் ஆகி இருக்க எல்லாவற்றையும் உத்தேசித்துக் கொண்டு சென்னை கிளம்பினோம்.  விடியற்காலையில் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். இறங்கிட்டோம். நல்லவேளையாகத் தம்பியை அந்த அர்த்தராத்திரியில் (அவருக்கு அர்த்தராத்திரி தான்; தூங்க ஆரம்பிக்கவே இரவு ஒரு மணிக்கு மேல் ஆகும்.) அங்கே வரச் சொல்லி இருந்தோம். நல்ல சுமைதூக்கியும் கிடைத்தார். ஆனால் ஆட்டோக்காரர்கள் தான் சரிப்பட்டு வரவில்லை. கடைசியில் ஒருத்தர் கிடைத்தார். வீடு போய்ச் சேர்ந்தோம். அந்த அதிகாலைக் காற்றின் மணத்தை நுகர முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்ற குப்பைகள் மலையாகக் கிடக்க, தெருக்கள் எல்லாம் மேடு, பள்ளங்கள்! :(

எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டும் சென்னை நரகத்தின் (எ.பி.இல்லை) குப்பைகள் கலாசாரம் முற்றிலும் மாறவில்லை.  அதே போல் ஆட்டோக்காரர்களும் மாறவில்லை! :( மீட்டர் என்ற ஒரு கருவி இருப்பதாகவே தெரியவில்லை யாருமே மீட்டர் போடுவதில்லை! சுத்தம்! நாங்க மாம்பலத்திலிருந்து தேனாம்பேட்டை சென்று விட்டு அங்கிருந்து  மயிலையில் இருக்கும் வித்யாபவன் செல்லச் சம்மதித்த ஆட்டோக்களை விட வர மறுத்தவர்களே அதிகம். ஒருத்தர் மீட்டர் போட்டு வருவதாகச் சொல்ல சந்தோஷத்துடன் அந்த ஆட்டோவில் சென்றால், அவர் எங்களுக்கு மயிலை முழுக்கச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடைசியில்  நான் ரொம்பச் சத்தம் போட ஆரம்பித்ததும்  மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயில் வழியாக (!!!!!!!!!!!!!!!!) வித்யாபவன் இருக்கும் கீழ மாட வீதிக்குப் போனார். மீட்டர் 90 ரூபாய் காட்டியது. மயக்கமே வந்துவிட்டது.  லஸ் சர்ச் ரோடிலிருந்து வலப்பக்கம் திரும்புவதற்கு பதிலாக இடப்பக்கம் திரும்பி சுத்தி வளைத்துக்கொண்டு! போதும்டா சாமினு ஆயிடுச்சு!

ஆட்டோ அனுப்பிய ஶ்ரீராம்! 

ஹிஹிஹி! ஶ்ரீராம் ஆட்டோவையே அனுப்பிட்டார். என்ன பார்க்கறீங்க? நீங்க நினைக்கிறாப்போல் ஒண்ணும் இல்லைங்க! அவங்க வீட்டைக் கண்டு பிடிச்சுப் போகக் கஷ்டமா இருக்கும் என்பதால் அவங்க குடும்ப ஆட்டோவை என் தம்பி வீட்டுக்கு அனுப்பிட்டார். குடும்பப் பாட்டுப் பாடித் தான் கண்டு பிடிக்கணுமோனு நினைச்சால் நல்லவேளையாக அந்த ஆட்டோக்காரருக்கு அதெல்லாம் தெரியலை! மாம்பலத்திலிருந்து ஶ்ரீராம் வீடு செல்ல 100 ரூபாய் தான் வாங்கிக் கொண்டார். சென்ற ஞாயிறு அன்று ஶ்ரீராம் வீட்டிலே தான் சாப்பாடு. ஶ்ரீராமின் மாமாவும் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களில் ஒருவருமான  கே.ஜி. சுப்ரமணியம் அவர்களும் இருந்தார். ஒரு சின்ன பதிவர் சந்திப்பாக ஆகி இருக்கணும். ஏனெனில் பெண்களூரில் இருந்து கௌதமன் வர இருந்தார்; அவரால் வர முடியவில்லை. ரஞ்சனி நாராயணன் சென்னையிலேயே இருந்தும் அவர் வேலை மும்முரத்தினால் அவராலும் வர முடியவில்லை.

ஶ்ரீராம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர் குடும்ப ஆட்டோவிலேயே அம்பத்தூர் சென்றோம். கிளம்பும்போது எனக்கு வெற்றிலை, பாக்குக் கொடுத்த ஶ்ரீராமின் பாஸ் நம்ம ரங்க்ஸுக்கு ஒரு டப்பர்வேர் வாட்டர் பாட்டில் பரிசளிக்க ரங்க்ஸ் மிரண்டார். மறுபடி ஸ்கூல் போகச் சொல்றாங்களோனு அவருக்கு சந்தேகம். அப்புறமா அவங்களே இதைப் பயணத்தில் பயன்படுத்திக்கலாம்னு யோசனையும் கொடுக்க ரங்க்ஸ் அப்பாடா! :) அம்பத்தூர் சென்றதும் அண்ணா வீட்டில் இருந்து உறவினர்களைச் சென்று பார்த்துவிட்டு நான் திரும்ப அண்ணா வீட்டுக்கே வந்து விட ரங்க்ஸ் மட்டும் எங்க வீட்டுக்குச் சென்றார். அங்கே குடி இருந்தவங்க காலி செய்ததால் தான் இப்போது சென்னைப்பயணமே ஏற்படுத்திக் கொண்டோம். வீடு ரொம்பவே மோசமாக இருந்திருக்கிறது. எனக்கும் நேரில் சென்று பார்த்துப் படங்கள் எடுத்து வர ஆசை தான். ஆனால் குடி இருந்தவங்களைக் குற்றம் சொல்லும்படி ஆயிடும் என்பதால் படங்களே எடுக்கவில்லை.

திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்களும் ரங்க்ஸுக்கு வீடு சுத்தம் செய்யும் வேலைதான். தூசி மண்டலம் கருமேகங்கள் போல் சூழ்ந்து கொண்டதால் எனக்கு அங்கே செல்லத் தடா! அப்படியும் இப்போ இரண்டு நாட்களாகத் தொண்டை வலி, ஜலதோஷம், லேசாக ஜுரம்! ஓரளவு சுத்தம் செய்தானதும் குளியலறைக்கு மூன்று நாட்களாக ஆசிட் போட்டுச் சுத்தம் செய்தும் சரியாகவில்லை என்பதால் நான் கடைக்குப் போய் வேறே ஏதேனும் கறை நீக்கும் திரவம் வாங்கி வரவா என ரங்க்ஸுக்குத் தொலைபேசினால் உடனே அங்கே வரும்படி எனக்கு உத்தரவு. சென்றால் எங்க கல்லுரல், அம்மியை கிழக்குப் பக்கப் போர்ஷனில் குடி இருந்தவங்க அவங்களோடதுனு சொல்லி இருக்காங்க. நான் நேரில் போய் அடையாளங்களைக் காட்டி, (அவற்றைப் புதைத்திருந்தோம். சிமென்டில் இருந்து எடுத்த அடையாளங்களும், எங்களால் சிவப்புக் குறி போட்ட அடையாளமும் இருக்கும்.) அவற்றைக் காட்டிக் கல்லுரல், அம்மியைக் குழவிகளோடு மீட்டேன்.
கல்லுரல், அம்மி க்கான பட முடிவுகல்லுரல், அம்மி க்கான பட முடிவு


படங்கள் நன்றி கூகிளாண்டவர்
அவற்றைக் கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டுவிட்டு எங்களைக் காணாமல் வாடிக் கொண்டிருந்த தென்னை மரங்களையும், காக்கை, குயில், அணில், தவிட்டுக்குருவிகளையும் விசாரித்துவிட்டு, மைனா எங்கேனு கேட்டு விட்டு உட்கார்ந்தேன். மின் விசிறியே இல்லாமல் அப்படி ஒரு சுகமான காற்று. 32 வருஷம் ஆகிறதே இந்த வீட்டுக்கு. இது வெறும் வீடா? உணர்ச்சிக்கலவை அல்லவோ! ராமர் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் சாமி அலமாரியும், சாமான்கள் இல்லாமல் இருந்த சமையலறையும் கண்ணில் நீரை வரவழைத்தன. ஆங்காங்கே தேங்காய்கள் பறிக்கப்படாமல் கீழே விழுந்து தானாகவே முளைத்துக் கொண்டிருந்தன.  நாங்க நட்டிருந்த ஏலக்கி வாழைமரத்துக்குப் பதிலாக வேறொரு வாழை மரம் இருந்தது. மாமரம் ஒன்று புதிதாக வருகிறது. பழைய மாமரங்களைத் தான் பக்கத்தில் அடுக்குமாடி கட்டும்போது சிமென்ட் கலவையைப் போட்டுச் சாகடித்து விட்டார்களே! :)

அம்பத்தூரின் தெருக்கள் எல்லாம் சும்மா ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வென்று வழுக்கிக் கொண்டு தான் போகிறது. குப்பைகளும் காணவில்லை, எங்க வீட்டுப் பகுதி தவிர. எங்க வீட்டுக்கு மேற்குப் பகுதில் இருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்காரங்க எதைக் குறித்தும் கவலைப் படாமல் கழிவு நீரையும் வெளியே விடுவதோடு அவங்க வீட்டில் மிஞ்சும் சாப்பாடுகள், கழிவுகள் எல்லாவற்றையும் எங்க பக்கம் எங்க சுற்றுச்சுவரை ஒட்டிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தோட்டத்திலும் அவங்க போட்டிருந்த குப்பைகள். முன்னர் இருந்த நாய்களின் குட்டிகள் போல! சின்னச் சின்னதாக நாய்க்குட்டிகள்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் படுத்துக் கிடக்கின்றன. குலைக்கவில்லை. அடையாளம் தெரிந்தாற்போல் வாலை மட்டும் ஆட்டின.  எங்க வீட்டு வாசலில் கிழக்குப் பக்கமாக நிரந்தரமாக ஒரு க்வாலிஸ் வண்டி யாருடையதோ தெரியலை நிற்கிறது. நாம் ஏதானும் வண்டியில் வந்தால் இறங்கி நடந்து தான் போகணும். எல்லாவற்றையும் மௌனசாட்சியாகப் பார்த்துக் கொண்டு அடர்ந்து பரந்து விரிந்து நிற்கிறது வேப்பமரம். 

8 comments:

  1. கல்லுரலும் அம்மியும் இப்போது யார் உபயோகிக்கிறார்கள்? திருசி ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வந்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. //அவற்றைக் கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டுவிட்டு//

      கொல்லைத் தாழ்வாரத்தில் போட்டதாகப் பதிவிலேயே சொல்லி இருக்கேன் ஐயா. அம்மியை நான் அம்பத்தூர் வீட்டில் இருந்தவரை பயன்படுத்தி வந்தேன். எப்போதாவது கல்லுரலும். இன்னும் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் உண்டு. சின்னதாக ஆசனப் பலகை போன்ற ஒரு அடிக்கு ஒரு அடி அம்மி 500 ரூ விற்கின்றனர்.

      Delete
  2. அம்மியை மீட்ட அதிரடி மாமி என்று பட்டம் கொடுக்கிறேன்!

    உடல்நிலை தேவலாமா?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்! இல்லை, உடம்பு இன்னும் சரியாகலை! என்னோட மருத்துவர் இம்முறை பத்து நாட்கள் இருக்கப் போவதால் எச்சரிக்கை செய்தார்! அது போலவே ஆயிடுச்சு! :(

      Delete
  3. வீட்டை மனுசங்களுக்குத் தானே வாடகைக்கு விட்டீங்க?
    அம்மி கல்லுரலைத் திருடுறாங்களா!!

    ReplyDelete
    Replies
    1. மனுஷங்கனு தான் நினைச்சோம். :) பழகின அம்மியோ, கல்லுரலோ கிடைப்பது கஷ்டமே. அதிலும் இந்த அளவு அம்மி கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குப் போகும். கல்லுரலும் ஆயிரத்துக்கும் மேல் போகும். அம்மி செதுக்கறவங்க கிட்டேயே கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்குமே! பணத்துக்கு மயங்காதவர் யாரு? :)

      Delete
    2. சென்னை வந்து விட்டுப் போனீர்களா கீதா. நல்ல நாளிலேயே
      சென்னை ஆட்டோ எல்லாம் வர மாட்டேன் என்று தான் சொல்வார்கள்.
      இப்போது சாலை விதிகள் வேற மாறி இருக்கும். கேட்பானேன். அம்மி உரலை மீட்டது சந்தோஷம்.

      Delete
  4. அடடா..... அம்மி ஆட்டுக்கல். இப்பவும் எனக்கு இவை ஆசைதான். கொண்டுவரத்தான் வழி இல்லை. இந்தியா வந்து இருந்துட்டுத் திரும்பியபோது சென்னையில் இருந்து கிளம்பி இருந்தால் கதையே மாறி இருக்கும். அம்மிக்கல் ஆட்டுக்கல் எல்லாம் கண்டெயினரில் ஏத்தி இருப்பேன். சண்டிகரில் இருந்து கிளம்ப நேரிட்டதை நினைச்சு வருந்தாத நாளில்லை. அழகான சின்ன அம்மி, ரத்னா ஸ்டோர்ஸில் பார்த்தேன். ப்ளாஸ்டிக் கைப்பிடியோடு!

    ReplyDelete