எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 24, 2017

மனதைப் பாதித்த சித்தப்பாவின் மரணம்!




சித்தப்பா காலம் ஆன செய்தியை உடனடியாகத் தெரிந்து கொள்ளவில்லை! :( அப்போது இங்கே காலை ஒன்பதரை மணி இருக்கும்! ஆகவே வழக்கமான குளியல், சமையல் என்று இருந்துவிட்டேன். கணினியைத் திறக்கவே இல்லை. :( பின்னர் இங்கேயே இருக்கும் எங்க பொண்ணு தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தாள். அதன் பின்னர் தான் சென்னைக்குத் தம்பிக்குத் தொலைபேசி எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டோம். சித்திக்கும் வயது ஆகி விட்டது. சமீபத்தில் தான் மூத்த தம்பியின் இன்னொரு பெண்ணின் திருமணம் நடந்தது. அதற்காகக் காத்திருந்தாற்போல் சித்தப்பா திருமணம் முடிந்ததும் இறந்து விட்டார்.  அநாயாசமான சாவு! இரவு உணவு முடித்துக் கொண்டு படுத்திருக்கிறார். உயிர் பிரிந்திருக்கிறது.

எனக்கு விஷயம் தெரிந்து சித்தியுடன் பேசுவதற்குள்ளாக முகநூல் முழுவதும் செய்தி வந்து விட்டது. என் வாழ்க்கையை முக்கியமாய்த் திருமண வாழ்க்கையை நிர்மாணித்தது சித்தப்பாவும், சித்தியும் தான். இன்று இம்மாதிரியான ஒரு வாழ்க்கையை நான் வாழக் காரணமானவர்கள் அவர்கள் இருவருமே! கடைசி வரை சித்தப்பா எங்களிடம் மாறாத அன்பு கொண்டிருந்தார். நான் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு பிதற்றுவதை எல்லாம் படித்து ரசித்திருக்கிறார்.  நாங்கள் சித்தப்பாவைக் கடைசியாகப் பார்த்தது அவரின் இரண்டாவது பேத்தியின் திருமண நிச்சயதார்த்தத்தில் தான். அதன் பின்னர் அந்தப் பேத்தியின் திருமணம் போன வாரம் நடந்த போது உறவுகள் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் மூலம் பார்த்தோம். உண்மையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் அருமையான கதாசிரியர் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.

அவருக்கு வரும் பல புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கிறார். கடைசியில் பார்த்தப்போக் கூடப் புத்தகங்கள் கேட்கணும்னு நினைச்சுட்டுக் கேட்காமல் விட்டு விட்டேன்.  இலக்கிய உலகுக்கு மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்திலும் ஓர் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. ஈடு செய்ய முடியாத இழப்பு. திரு பாரதி மணி சொல்லி இருக்கிறாற்போல் அவருக்குச் சாவு என்பதே இல்லை தான். அவர் புத்தகங்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.


நேற்று இருந்த மனக்குழப்பத்தில் சித்தப்பாவின் பெயரைக் குறிப்பிடாமல் பதிவைப் போட்டு விட்டேன். அதிலும் பாதி தான் எழுதி இருந்தேன். ஏதோ ஒரு மனநிலையில் வெளியீடும் ஆகி விட்டது. "அசோகமித்திரன்" என்ற புனைப்பெயரில் எழுதி வந்த என் சித்தப்பா திரு தியாகராஜன் அவர்கள் நேற்று மாலை இந்திய நேரப்படி இரவு எட்டுமணிக்கு இறைவனடியைச் சேர்ந்தார்.  இங்கே அமெரிக்கா வந்த இந்த மூன்று மாதத்தில் எங்களுக்கு நேர்ந்திருக்கும் இரண்டாவது இழப்பு என்பதாலும் இந்தச் சமயம் இங்கே இருக்கும்படி நேர்ந்திருக்கிறதே என்னும் வருத்தத்தாலும் என்னால் சரியாக யோசிக்கக் கூட முடியவில்லை! :( அதோடு பெரும்பாலான நண்பர்கள், என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஓர் ஆறுதலான விஷயம்!

25 comments:

  1. சேதி தெரிஞ்சதும் உங்க நினைப்புதான் வந்தது.

    எழுத்தாளனுக்கு மரணம் இல்லை !

    எங்கள் அஞ்சலிகள்.

    ReplyDelete
  2. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
    எனது அஞ்சலிகளும்...

    ReplyDelete
  3. எங்கள் வருத்தங்களை பதிவு செய்கிறோம். வயது ஒரு தடை என்றில்லாமல் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தவர். சமீபத்தில் கூட, கல்கி தினமணி கதிரில் அவர் சிறுகதைகள் பார்த்த நினைவு. சில வருடங்களுக்கு முன்னால் கல்கி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் என்றும் நினைவு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

    ReplyDelete
  4. மிகவும் வருத்தம் தந்த செய்தி,
    பெரிய இழப்பு.இறையடிசேர்ந்த அவரின் அடிதொட்டு வணங்குகிறேன்.ஆழ்ந்த இரங்கல்கள் கீதா

    ReplyDelete
  5. ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  6. அவர் தங்களின் சித்தப்பா என்பது, எனக்கு நம் ஜீவி ஸார் மூலம், சென்ற 2016-ம் ஆண்டு தான், அதுவும் அகஸ்மாத்தாக எங்களின் ஓர் மின்னஞ்சல் உரையாடலின் மூலம் மட்டும்தான் தெரிய வந்தது.

    தங்களின் வருத்தங்களில் நானும் சேர்ந்து பங்கு கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  7. //சில வருடங்களுக்கு முன்னால் கல்கி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் என்றும் நினைவு. - ஸ்ரீராம்//

    ‘அசோகமித்திரன்’ என்ற இவரின் பெயருக்காக மட்டுமே, இவரின் அந்த சிறுகதைக்கு கல்கியால், பரிசு ... அதுவும் முதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என அந்தப்போட்டியில் அன்று கலந்துகொண்டவர்களில் பலரும், (அந்தப்போட்டியில் கலந்துகொள்ளாத என்னிடம்) புலம்பியதும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

    ReplyDelete
  8. ஆம்..எழுத்தாளருக்கு மரணம் இல்லை..என்றும் அவர் எழுத்து நிலைத்து இருக்கும்...

    எங்கள் அஞ்சலிகளும்...

    ReplyDelete
  9. உங்கள் சித்தப்பா அவர்கள் இறந்த செய்தி கிடைத்ததும் உங்கள் பதிவில் உங்கள் திருமணத்தை அவர்கள் நடத்தி வைத்தார்கள் நீங்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.
    அவர்கள் எருத்துக்கள் மூலம் வாழ்வார்கள் என்றும்.
    எங்கள் அஞ்சலிகள்.
    இங்கு இருந்தால் நீங்கள் போய் பார்த்து இருப்பீர்கள்.

    ReplyDelete
  10. Hearty condolences Maami. I remember u mentioning about him in your wedding related posts. Read his stories, grt writer. As Thulasi'ma said, no end to a writer like him. May his soul rest in peace

    ReplyDelete
  11. உங்கள் சித்தப்பாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும். (மன்னிக்கவும். மரியாதை நிமித்தம் நீங்கள் உங்கள் சித்தப்பாவின் பெயரை இந்த பதிவினில் சொல்லவில்லை என்றபோதிலும், என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்வதற்காகவாவது, அவரது பெயரையும் எழுத்துப் பணியையும் இங்கே குறிப்பிட்டு இருக்கலாம்)

    ReplyDelete
  12. பெயர் போட்டு அஞ்சலிக் கட்டுரை எழுதியிருக்க வேண்டாமா? அதுதானே சரியான அஞ்சலிக் கட்டுரையாக இருந்திருக்கும். பின்னூட்டமிட்டவர்களும் பெயர் எழுதவில்லை.

    ReplyDelete
  13. அவரது ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள். .

    ReplyDelete
  14. எங்கள் அஞ்சலிகள்! அவரது ஆன்மா இறைவனடியில் அமைதியாய் இருந்திட பிரார்த்தனைகள். அவர் தன் எழுத்தின் மூலம் வாழ்வார். மாபெரும் இழப்புதான்...

    கீதா: மேற் சொன்ன கருத்துடன் சமீபத்தில் அவரது பேட்டி கூட வாசித்தேன். அப்போது கூட எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  15. நமக்குத்தான் மறதி என்னும் வரம் இருக்கிறதே ஆழ்ந்த இரங்கல்கள் யார் என்ன என்று பெயர் குறிப்பிட்டு இருக்கலாம்

    ReplyDelete
  16. பதிவு என்பது பின்னாலும் எல்லோரும் திரும்பிப் படிப்பது. அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.

    இரண்டு நாட்களுக்கு முன்னர், இராய செல்லப்பா அவர்களின் தளத்திலிருந்து காலச்சுவடி சென்று முன்பு வந்திருந்த அசோகமித்திரன் அவர்களின் முழுப் பேட்டியையும் படித்தேன். கல்கி மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றின அவரது எண்ணங்கள் மற்றும் அவர் கதைகளின் கட்டமைப்பு போன்ற பலவற்றையும் தெரிந்துகொண்டேன். இவருடைய எளிமையைப் பற்றி ரவி பிரகாஷ் முன்பு எழுதியிருந்த கட்டுரையையும் படித்திருக்கிறேன்.

    எழுத்தாளர்களின் மிகப்பெரிய வரம் (அதாவது நல்ல எழுத்தாளர்களின்) அவர்களின் காலத்திற்குப் பின்பும் இலக்கிய உலகில் அவர்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

    புகழ் வாய்ந்த எழுத்தாளர், வாழ்க்கையின் முதிர்வு நிலைக்குப் பின் மறைந்திருக்கிறார். உங்களுக்கும் அவரை இழந்துவாடும் உற்றவர்களுக்கும் எங்களின் அனுதாபங்கள்.

    பொதுவாக புகழ்பெற்றவர்களின் உள் வாழ்க்கையில் சோகம் அல்லது இழப்புகள் தவிர்க்க முடியாது. எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்காது. ஒவ்வொன்றிர்க்கும் ஒரு விலை இருக்கும். இதை அருமையான ஓரங்க நாடகமாக, ராமானுஜர் வாழ்க்கையை வைத்து இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதியிருப்பார்கள். (அவர் மனைவி சொல்வதுபோல்). எனக்கு அவரது பேட்டிகளைப் படித்தபோதெல்லாம், அவருடைய எளிமைதான் கண்ணுக்குத் தெரிந்தது. எழுத்தையே ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கல்கள் கீதாம்மா!.. தங்கள் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது...முக நூலிலும், குழுமத்திலும் மடல்கள் கண்டவுடனேயே, அயல்நாட்டில் தற்போது இருக்கும் தாங்கள், இதை மன பலத்துடன் எதிர் கொள்ள வேண்டியே பிரார்த்தித்தேன்!...இறைவன் தங்கள் சித்தப்பாவின் ஆன்மாவுக்கு நிலைத்த அமைதியை அருள வேண்டுகிறேன்!!..

    ReplyDelete
  18. அசோகமித்திரனைப் போன்ற எழுத்தாளர்கள் இனி படிக்க கிடைப்பார்களா? அவருக்கு மரணம் கிடையாது. நம் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    ReplyDelete
  19. அசோகமித்திரனைப் போன்ற எழுத்தாளர்கள் இனி படிக்க கிடைப்பார்களா? அவருக்கு மரணம் கிடையாது. நம் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

    ReplyDelete
  20. ஆழ்ந்த இரங்கல்கள் ..முதலில் இவர்தான் மதிப்பிற்குரிய ஐயா அசோகமித்திரன் அவர்கள் உங்கள் சித்தப்பா என்று தெரியாமலே வாசித்தேன் ..may his soul rest in peace ..

    ReplyDelete
  21. இரண்டு நாட்களாக மனசே சரியில்லை. எனது 'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலுக்காக உங்கள் சித்தப்பா எழுத்துக்களை ஆழ்ந்து படித்தேன். தோய்ந்து போனேன். தமிழ் எழுத்தாளர்களில் அவர் ஒரு வித்தியாசமான எழுத்தாளர். என்ன வித்தியாசம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். நான் அறிந்த வித்தியாசத்தை இது வரை யாருமே அறியவில்லை என்பது அவருக்கும் எனக்குமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் என்னன்னவோ சொல்ல மனசு ஏங்குகிறது. தமிழின் பழம்பெரும் எழுத்தாளர்களின் அருகாமை முற்றிலும் முடிந்தே போய்விட்ட துயரத்தில் இருக்கிறோம். இனி, அவரின் படைப்புகள் தாம் அவராக நமக்குத் தோற்றம் தரப் போகிறார். அந்த மட்டில் எழுத்தாளர்கள் விசேஷமானவர்கள். நமக்காக ஏகப்பட்டதை விட்டு விட்டுப் போகிற விசேஷம்.

    எதிர்பாராத செய்தி. என் ஆழ்ந்த இரங்கல்கள் கீதாம்மா.

    ReplyDelete
  22. வருத்தம் தந்த செய்தி. தெரிந்த உடனேயே உங்களைப் பற்றி தான் நினைத்தேன் - நீங்கள் இங்கே இல்லையே என்று தோன்றியது.

    ReplyDelete

  23. 60-களின் பிற்பகுதியில் நான் கல்கத்தா விலிருந்து சென்னை (அந்தக்காலத்தில் மதராஸ் ) விடுப்பில் வந்த பொழுது , அவருடைய வீட்டிற்கே ( தி நகர் பஸ்ஸ்டாண்ட் சமீபம் )சென்று , அவருடைய சிறுகதைத் தொகுப்பு "வாழ்விலே ஒரு முறை ",வாங்கிச் சென்று , கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தில் அந்தப் புத்தகத்தை review செய்யும் வாய்ப்பு பெற்றேன்..

    அவர் நான் பெரிதும் மதிக்கும் , விரும்பிப்படிக்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர்...வெகு சமீபத்தில் என் நண்பர் ஒருவர் 'அசோகமித்திரன் -அந்தரங்கமானதொரு தொகுப்பு " என்கிற புத்தகத்தை எனக்கு அளித்தார்.. படித்துக்கொண்டிருக்கிறேன் ..
    சமீபத்தில் தான் அவருடைய 'எலி ' என்ற ஒரு சிறு கதையை
    மாதங்கி இடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன் ...

    என்னுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் ...

    மாலி

    ReplyDelete
  24. எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  25. ஆழ்ந்த இரங்கல்கள். விகடனின் ‘தடம்’ இலக்கிய இதழில்(ஃபெப்ருவரி 2017) அவரது நேர்காணலை ரசித்துப்படித்துக்கொண்டிருந்தேன். நல்ல படங்களும் வெளியாகியிருந்தன. அதுதான் கடைசி நேர்காணலோ அவருக்கு?

    ReplyDelete