எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 30, 2019

விட்டல, விட்டல, ஜெய ஜெய விட்டல, பண்டரிபுரம் தொடர்ச்சி!


புரந்தரதாசருக்கு அருளிய விட்டலன்  முந்தைய பதிவின் சுட்டி.

அப்பண்ணா முகத்தில் புரந்தரதாசர் வெந்நீரை ஊற்றியது வரை சென்ற பதிவில் பார்த்தோம்.  அப்பண்ணா அங்கிருந்து அகன்று விட்டான் போலும்.  அதன் பிறகு சப்தமே இல்லை. புரந்தரதாசருக்கோ தான் செய்தது தவறு எனப் புரிந்து விட்டது. பொறுக்க மாட்டாத கால்வலியால் தனக்கு இவ்வளவு கோபம் வந்தது எனப் புரிந்தாலும். அப்பண்ணாவின் மேல் வெந்நீரைக் கொட்டியது மாபாவம் என்பதை உணர்ந்தார். இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தார். விடிகாலை வேளையில் எழுந்து அப்பண்ணா படுத்து இருக்கும் இடம் சென்று அப்பண்ணாவை எழுப்பித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எழுந்து புரந்தர தாசர் சொன்னதைக் கேட்ட அப்பண்ணாவுக்கோ எதுவும் புரியவில்லை. தான் இரவு படுத்தது தான் தெரியும் என்றும், இப்போது தாசர் எழுப்பித் தான் எழுந்திருப்பதாகச் சொன்னான். தாசருக்கும் ஏதும் புரியவில்லை. அப்போ இரவில் வந்த அப்பண்ணா யார்?

பீமா நந்தியில் நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைக் காணச் சென்றார் தாசர். பாண்டுரங்கன் சந்நிதியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்ன விஷயம் என விசாரித்த தாசருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  பாண்டுரங்கன் முகம் முழுவதும் தீக்கொப்புளங்கள். தீப்பட்டாற்போலவோ அல்லது கொதிக்கும் வெந்நீரோ, எண்ணெயோ கொட்டியது போல் முகம் முழுவதும் காயங்கள்!  அதைக் கேட்ட தாசர் கதறி விட்டார்! "என்னப்பா! பாண்டுரங்கா! இரவில் நீ தான் அப்பண்ணாவாக வந்தாயா? உன்னையா நான் காயப்படுத்தினேன்! இது என்ன லீலை அப்பா!  நீ யாரென அறியாத பாபியான என் கோபத்தை அடியோடு ஒழிக்க நீ செய்த திருவிளையாடலோ? உன் அழகான முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய் விடுமோ! இந்தப் பாபியை மன்னித்துக்கொள் பாண்டுரங்கா! நான் செய்தது மாபெரும் தவறு! அது நீயானால் என்ன? அப்பண்ணாவானாலென்ன? கொதிக்கும் வெந்நீரைக் கொட்டியது நான் செய்த தவறு தானே!" எனப் புலம்ப ஆரம்பித்தார்.  "உன் அழகுத்திருமுகத்தை எங்களுக்குக் காட்டு!" எனக் கதறி அழ ஆரம்பித்தார்.

கண்ணன் முகமும் புரந்தரதாசரின் உருக்கமான வேண்டுகோளில் முன்போலானது. அந்த அழகிய முகத்தைக் கண்டு மயங்கிய புரந்தரதாசர் அந்தத்தூணருகேயே உட்கார்ந்து கொண்டு பாண்டுரங்கன் மேல் பல்வேறு கீர்த்தனைகளைப் பாடினார்.  அந்தத் தூணுக்குப் புரந்தர தாசர் தூண் என்றே பெயர் என்பதோடு வருபவர்கள் அனைவரும் அதைக் கட்டிப்பிடித்து ஆசிகளை வாங்கிக் கொண்டே செல்கின்றனர்.  மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளும் மஹாபாரதக் கதைகளில் சிலவும் இந்தத் தூணில் சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. இந்தத் தூணைத் தாண்டிச் சென்றால் சில படிகள் மேலேறிச் சென்றால் கருவறை செல்லும் சிறிய பாதையில் துவாரபாலகர்களான ஜய, விஜயர்களுக்குச் சற்று முன்னால் வேத நூலும் துகாராமின் பாதுகைகளும் கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் தான் கருவறைக்குள் நுழைய வேண்டும்.

இங்கே ஜாதி, மதம், இனம், குலம் , கோத்திரம் போன்ற எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி அனைவரும் பண்டரிநாதனைக் கிட்டே இருந்து தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகின்றனர்.  அன்று புண்டரீகன் போட்ட செங்கல்லின் மீது நின்ற பாண்டுரங்கன் அப்படியே சுயம்புவாக ஆவிர்ப்பவித்திருப்பதாக ஐதிகம். ஆனால் இப்போதுள்ள சிற்பம் மணற்கல்லால் உருவானதாகச் சொல்கின்றனர். எனக்கே நான் முன்னர் பார்த்ததற்கு இப்போ (பத்து வருஷங்கள் முன்னர் பார்த்தது) பாண்டுரங்கன் தேய்ந்து இளைத்தாற்போல் தோன்றினான்.காலின் கீழ் இருக்கும் பீடமும் மணல் கல் என்றே சொல்கின்றனர். தலையில் சிவலிங்க வடிவத்தில் கிரீடம் எனச் சொன்னார்களே எனத் தலையை உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அப்புறப்படுத்தப்பட்டேன் என்பதே உண்மை! பாதங்களில் கைகளை வைத்துத் தலையை அவன் பாதத்தில் கிடத்திவிட்டு நிமிரும் முன்னரே காவல்துறைப் பெண்மணி ஒருவர் அங்கிருந்து என்னை அப்புறப்படுத்தினார்.  என்னை மட்டுமல்ல. எல்லோரையும் அப்படித் தான் அப்புறப்படுத்துகிறார். கோலாப்பூரில் காலை வேளையில் கருவறையில் பத்து நிமிஷங்களுக்கும் மேல் நிற்க முடிந்தது. ஆனால் இங்கே நிற்க முடியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன். மெதுவாக நம்மவரும் அவனுக்குக் கொண்டு போன கார் அவலைச் சமர்ப்பித்துவிட்டு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து ருக்மாயியின் சந்நிதி சென்று அங்கே தரிசனம் செய்தோம். ருக்மாயிக்குப் பெண் அர்ச்சகர் ஒருவரே எல்லா வழிபாடுகளையும் செய்து வருகிறார். ரெகுமாயிக்குக் குங்கும அர்ச்சனை விசேஷம். குங்குமப் பிரசாதம் கேட்டோம்.  அவருக்கு என்னமோ அவர் தலையில் ஓர் பெரிய கிரீடத்தைச் சுமந்து கொண்டிருப்பதாக எண்ணம். யாரையும் லட்சியமே செய்யாமல் விரட்டிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து ராதா சந்நிதி, சத்யபாமா சந்நிதி போன்ற  கோயிலின் மற்ற பாகங்களையும் பார்த்துக் கொண்டே மறுபடி முக்கிய வாயில் வழியாக வெளியே வந்தோம். வெளியே வந்ததும் தான் ஆட்டோக்காரப் பையரை எங்கே பிடிப்பது என்னும் கவலை வந்தது! ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாகத் தான் வெளியேறி வரவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஆட்டோக்காரப் பையர் அங்கே வந்து காத்திருந்தார். இப்போ எங்க செருப்புக்களைக் கண்டு பிடிக்க வேண்டும். வழி தெரியவில்லை. ஆட்டோக்காரரிடம் கேட்டுக் கொண்டு, ஏனெனில் ஆட்டோ அங்கே வராது! நாங்களே நடந்து சென்றோம். ஒருவழியாகத் தேடிக் கண்டுபிடித்துச் செருப்புக்களோடு ஆட்டோவுக்கு வந்தோம்.

இப்போ நம்மவருக்கு வேறு ஒரு எண்ணம் உதித்திருந்தது. கோயிலில் தரிசனத்துக்கு நின்றபோது காலை எத்தனை மணிக்கு தரிசனம் ஆரம்பம் எனக் கேட்டிருந்தோம். எல்லோருமே காலை எட்டரைக்குத் தான் தரிசனம் ஆரம்பிக்கும் என்றனர். எங்களுக்கோ எட்டரைக்குக் கிளம்பவேண்டும். அப்போக் கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆகிடும்.அங்கிருந்து பதினோரு மணி இருபது நிமிடத்திற்குக் கிளம்பும் புனே வண்டியைப் பிடிப்பது கடினம். ஆகவே காலை தரிசனம் செய்யாமல் அன்றிரவே புனே கிளம்பிச் சென்று விடலாம் என்னும் எண்ணம் தான் அவருக்குத் தோன்றியது. ஆகவே வண்டியில் ஏறியதும் ஆட்டோக்காரரிடம்முதல்வேலையாக அங்கிருந்து புனே செல்லும் தனியார் பேருந்தில் இடம் இருக்கானு பார்க்கலாம்னு சொல்லவே அந்த ஆட்டோக்காரரும் சரினு அங்கே இருந்த பிரபலமான ட்ராவல்ஸ் கம்பெனிக்கு வண்டியை விட்டார். அங்கே கேட்டதுக்கு இரவு தினசரி வண்டி இருப்பதாகவும் அன்றைய வண்டி முழுவதும் நிரம்பிக் கிளம்பப் போகிறது எனவும் இனி மறுநாள் இரவு தான் தங்கள் வண்டி எனவும் சொல்லிவிட்டார்.

மறுபடி குழப்பம். அப்போ அங்கே இருந்த இன்னொரு ட்ராவல்ஸ்காரரின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதேனும் கார் கேட்கலாம் என நினைத்து நம்மவரும், அந்த ஆட்டோக்காரரும் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்றனர். அங்கே போனவங்க திரும்பி வர முக்கால்மணிக்கும் மேல் ஆகிவிட்டது! என்னனு புரியாமலேயே நின்று கொண்டே இருந்தேன். கடைசியில் ஒருவழியாகத் திரும்பி வந்து மறுநாள் விடிகாலை ஆறு மணிக்கு அந்த ட்ராவல்ஸ்காரரின் ஒரு பேருந்து புனே செல்வதாகவும் அதில் எங்கள் இருவருக்கும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து விட்டதாகவும் சொன்னார். முதலில் அங்கே அலுவலகத்தில் இருந்தவர் மறுத்து விட்டாராம். ஆனால் அந்த ட்ராவல்ஸைச் சேர்ந்த இன்னொருவர் நேரே கம்பெனிக்காரருக்கே தொலைபேசி எங்கள் நிலைமையைத் தெரிவிக்கவே அவரும் இரண்டு இடம் இருப்பதால் அதை எங்களுக்குக் கொடுக்கச் சொல்லி இருந்திருக்கார்.  இதை எல்லாம் நம்மவர் என்னிடம் விளக்கினார். என்றாலும் என் மனம் என்னமோ நிறைவாக இல்லை.

அவ்வளவில் அங்கிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தருகே அந்த ஆட்டோக்காரர் சொன்ன உணவு நிலையத்துக்குச் சென்றோம். அங்கே குஜராத்தி தாலி நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். ஆனால்! என்ன துரதிருஷ்டம்! சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது படிகள் மேலே ஏறவேண்டும் என்பதோடு ஒவ்வொரு படிக்கும் ஒன்றரை அடி உயரம்!  அதைப் பார்த்த நான் சாப்பாடே வேண்டாம். லங்கணம் பரமஔஷதம் எனச் சொல்லிவிட்டுக் கீழேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அதை அந்த ஆட்டோ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு. திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்தார்.  நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டு  நம்ம ரங்க்ஸை நீங்க போய்ச் சாப்பிட்டு வாங்கனு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன். கூட்டமான கூட்டம். பண்டரிபுரத்து மக்கள் அத்தனை பேரும் அன்று அந்த ஓட்டலுக்கு வந்து விட்டார்களோ என்னும்படிக்குக் கூட்டம். சாட், தஹி சாட்,மசாலா பூரி, சமோசா, பாவ் பாஜி, பாவ் வடா எனக் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவற்றின் நிறமே என் வயிற்றைக் கலக்கியது. கொஞ்சம் யோசித்த நம்மவர் அங்கே தோசை போட்டுக் கொண்டிருந்தவரிடம் எங்களுக்கு ஆளுக்கு ஒரு தோசை சொல்லிவிட்டு வந்தார். மருந்து எடுத்துக்கணுமே! ஆகையால் அந்த தோசை என்னும் முறுக்கை நொறுக்கிச் சாப்பிட்டுவிட்டு மன ஆறுதலுக்கு ஒரு ஃபலூடாவும் சாப்பிட்டோம். ஃபலூடா இங்கே ரொம்பவே நன்றாக இருந்தது இன்னொரு ஆறுதல். பின்னர் அங்கிருந்து கிளம்பி அறைக்கு வரப் பத்து மணிக்கும் மேல் ஆகி விட்டது. ஓட்டல் கிட்டத்தட்டப் பூட்டி இருந்தது. எல்லோரும் தூங்கி விட்டார்கள். ஏசிக்கு என்னடா செய்யறதுனு நினைக்கும்போதே உள் அறையிலிருந்து எழுந்து வந்த பார்த்த ஓர் ஓட்டல் ஊழியர் எங்க அறைக்கான ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார்.

41 comments:

  1. //ருக்மாயிக்குப் பெண் அர்ச்சகர் ஒருவரே எல்லா வழிபாடுகளையும் செய்து வருகிறார்.ரெகுமாயிக்குக் குங்கும அர்ச்சனை விசேஷம். குங்குமப் பிரசாதம் கேட்டோம். அவருக்கு என்னமோ அவர் தலையில் ஓர் பெரிய கிரீடத்தைச் சுமந்து கொண்டிருப்பதாக எண்ணம். யாரையும் லட்சியமே செய்யாமல் விரட்டிக் கொண்டிருந்தார்//

    குங்குமம் கொடுத்தால் என்ன? பெண் அர்ச்சகர் கோபமாகத்தான் இருப்பார்களா?

    முக்திநாத்திலும் பெண் அர்ச்சகர் அவரும் இப்படித்தான் எல்லோரையும் விரட்டிக் கொண்டு இருந்தார். வெளியே இருந்தும் பார்க்க அனுமதிக்கவில்லை, மறைத்துக் கொண்டு கதவை ஒரு பக்க கதவை மூடி என்று எல்லாம் அட்ட்டகாசம் செய்தார் ஏன் அப்படி என்று தெரியவில்லை.

    இறைவனைப்பார்க்க எவ்வளவு தூரத்திலிருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள் அன்பாக புன்னகை காட்டி நடந்து கொண்டால் என்ன? கூட்டம் இருந்தாலும் விரட்டினால் பரவாயில்லை, நாங்கள் போனபோது கூட்டமும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சென்றபோது, அதற்கு முன்பே, அவங்களுக்கு கோதுமை மாவு பொகாராவில் 'விருப்பமுள்ளவர்கள்' வாங்கிக்கொண்டு சென்று, அவங்கள்ட கொடுக்கலாம் என்று எங்கள் கைடு சொல்லியிருந்தார். அதன்படி பலர் அப்படிச் செய்தனர்.

      சில நாட்களில் சிலர் மூடு அவ்வளவாக நன்றாக இருக்காது. அல்லது டூரில் வந்த யாரேனும் தொந்தரவு செய்திருக்கலாம்.

      நாங்கள் சென்றபோது இறைவன் காலடியில் இருந்த பெரிய சாளக்கிராமத்தை எங்கள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தனர், ஒரு பிரதட்சணம் (கர்ப்பக்ரஹத்தில்) வருவதற்கும் அனுமதித்தனர். எங்களுக்கு முன்பு (மொத்தம் மூணு பேட்ச்) சென்றிருந்தவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கர்பக்க்ரஹத்திலேயே உட்கார்ந்துகொண்டு, மற்றவர்கள் தரிசனத்துக்கு இடையூறு செய்தனர் என்று கேள்விப்பட்டோம். (சுயநலமாக நடந்துகொண்டனர்)

      Delete
    2. வாங்க கோமதி, நேபாளில் பல கோயில்களிலும் பெண்களே வழிபாடுகள் செய்து பிரசாதம் கொடுப்பார்கள். நாங்க முக்திநாத் போனப்போவும் அங்கே இருந்த "குமாரி"என்னும் பெண் எங்களுக்கு சடாரி சாதிக்கவும், தீர்த்தம் கொடுக்கவும் மறுத்து விட்டார். என்ன செய்ய முடியும்! நாங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மனம் இரங்கவில்லை.

      Delete
  2. பாண்டுரங்கன் தரிசனம்.... நிறைவான இடுகை. ஆனால் படம் போட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? இணையத்திலிருந்தாவது லவட்டி இருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, இணையத்திலிருந்து ஒரே மாதிரிப் படம் எத்தனை முறை போடுவது?

      Delete
  3. 11 மணிக்குத் தூங்கி (ஏசியில்) அரக்கப்பரக்க காலை 6 மணி பஸ் பிடிக்கணும்னா, 5 மணிக்கே ஹோட்டலைவிட்டு வெளியே போயிருக்கணுமே.... பயணமே கஷ்டம்தானா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, பொதுவாகவே நான் இரவில் அசந்து தூங்க மாட்டேன். என்னிக்கானும் தான். ஆகவே இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை.

      Delete
  4. 50 படிகளா? திருப்பதியில் பலமுறை நடந்து சென்றவனுக்கு இப்போ படிகளைக் கண்டா கொஞ்சம் வெறுப்பாத்தான் இருக்கு... சீக்கிரமே போகவேண்டிய கோவில்களுக்கெல்லாம் போகணும்னு நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஒடுக்கமான மாடிப்படிகள்! அதில் ஏறி மேலே போய்ச் சாப்பிடணுமாம். அந்த ஆட்டோக்காரர் சாப்பாடு என்றால் நான் எவ்வளவு படியானாலும் ஏறுவேன் என நினைச்சிருக்கார்! நான் சாப்பாடே வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் எவ்வளவோ சொன்னார். ம்ஹூம்!

      Delete
  5. விட்டலா. உன் கருணையே கருணை.
    கீதாமா. அங்கேயும் ஜருகண்டி வந்துவிட்டதா. ஆனால் தரிசனமும், தலை தாழ்த்தி
    வணங்கவும் முடிந்ததே.
    பெரிய முயற்சி அம்மா இது.
    ஏன் மலை மேல் உணவு விடுதி வைக்கிறார்கள். புரியாத புதிர்.
    உடல் நலத்தோடு இருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஹாஹாஹா, மலை எல்லாம் இல்லை. சாதாரணக் கட்டிடம் தான். அதன் முதல் தளமே அத்தனை உயரம்! லிஃப்ட் எல்லாம் இல்லை! எங்கேயும் கருவறையில் விரட்டத்தான் செய்கின்றனர். பொதுமக்கள் எனில் கருவறையில் வழிபாடுகள் நடத்துபவர்களுக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே இளக்காரம்!

      Delete
  6. தொடர்ந்து வாசிக்கிறேன்.

    ReplyDelete
  7. புரந்தரதாசர் கதை உருக்கம். இவர் நாமறிந்த புரந்தரதாசர்தானே?

    ReplyDelete
    Replies
    1. தாசர் ஒருத்தர் தான் ஶ்ரீராம்.

      Delete
  8. திருப்பதி போல அங்கேயும் தள்ளல் வைபவமா? கஷ்டம்தான்.

    //எனக்கே நான் முன்னர் பார்த்ததற்கு இப்போ (பத்து வருஷங்கள் முன்னர் பார்த்தது) பாண்டுரங்கன் தேய்ந்து இளைத்தாற்போல் தோன்றினான்.//

    //தலையை உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அப்புறப்படுத்தப்பட்டேன் என்பதே உண்மை!//

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சிலையை மாற்றி விட்டார்கள் என்று அர்த்தமா? அல்லது தேய்ந்துக்கொண்டே வருகிறது என்று பொருளா?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் - சர்வர் சுந்தரம் படத்தை நினைவுகூறுங்கள் - என்ன வடை சின்னதா இருக்கு? ரூமை பெருசு பண்ணியிருக்கோம். இது மாதிரி இதற்கும் யோசியுங்கள்.

      Delete
    2. ஶ்ரீராம், பாண்டுரங்கன் தலையில் ஈசனின் சிவலிங்கம் கிரீடம் போல் தெரியும் என்றனர். அதைத் தான் உற்றுப் பார்த்துக் கண்டுபிடிக்க முயன்றேன். தள்ளிட்டாங்க! மற்றபடி பாண்டுரங்கனை நன்றாகப் பார்த்தேன். மணல் கல்லால் ஆனவன் தானே! தேய்ந்து தான் போய்க் கொண்டிருக்கிறான். :( சிலையை எல்லாம் அப்படி எளிதாக மாற்ற முடியாது.

      Delete
  9. ஆட்டோக்காரர் காத்திருக்கும் பட்சத்தில் ஒன்று செருப்புகளை அவர் ஆட்டோவிலேயே விட்டு விட்டுச் சென்றிருக்கலாம். அவரும் உள்ளே வந்து விடுவார் செருப்புகளை பாதுகாப்பு இருக்காது என்று சொல்லும் பட்சத்தில் அவரிடம் கேட்டு அவர் சொல்லுமிடத்தில் வைத்திருக்கலாம். இன்னும் எளிதாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டோக்காரர் எங்களை விட்ட வாயில் ஒரு இடம்! அங்கே கொஞ்ச தூரம் இல்லை, நிறைய தூரம் நடந்து போய்த் தான் தரிசனம் செய்ய உள்ளே நுழையும் இடம் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பி வந்தது இன்னொரு இடம். அங்கே சாலைகள் இருந்தன. அந்தச் சாலைகள் வழியாக ஆட்டோக்கள் யாத்ரிகர்களை தரிசனத்துக்கு இறக்கி விட அனுமதி இல்லை. ஆகவே நாங்கள் ஆட்டோவில் போய் இறங்கிச் சில, பல படிகள் மேலே ஏறி இன்னொரு சாலைக்கு வந்து அங்கிருந்து நடந்து சென்று ஓர் கடை வாயிலில் செருப்புக்களை விட்டுவிட்டுப் பின்னர் தரிசனத்துக்குச் சென்றோம்! இரண்டும் அருகருகே உள்ளதெனினும் தூரம் அதிகம்! பார்த்தால் தான் புரியும். ஆட்டோக்காரர் கை காட்டிய கடையில் தான் செருப்புக்களை வைத்திருந்தோம். நம்ம ஊர் மாதிரி ஆட்டோ அல்லது காரிலேயே செருப்புக்களை விட்டு விட்டுச் செல்ல முடியாது. கோலாப்பூரிலும் அப்படித் தான் இருந்தது. ஆனாலும் நாங்கள் ஆட்டோவில் செருப்புக்களை விட்டு விட்டுத் தான் போனோம்.

      Delete
    2. இங்கே சமயபுரம் கோயிலில் தரிசனத்துக்கெனச் செல்லும் வழியில் சென்றால் செருப்புக்களை அங்கே உள்ள கடைகள் ஏதேனும் ஒன்றில் தான் விட்டுவிட்டுப் போக வேண்டும். திரும்பி வருகையில் பேருந்து நிறுத்தம் அருகே வெளிவரவேண்டும். அங்கே இருந்து நாம் வந்த வண்டிக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்தால் அவங்க ஓர் அரைமணியில் நாமிருக்கும் இடம் வந்து அழைத்துச் செல்வார்கள். அப்போச் செருப்புக்களைத் தேடி நாம் போய் விட்டால் வண்டி ஓட்டுநர் தேடுவார். ஆகவே நாங்க சமயபுரம் போனால் செருப்புக்களை வண்டியிலேயே விட்டு விட்டு அந்தச் சூட்டிலும் காலில் கல்குத்துவதையும் பொறுத்துக் கொண்டே போக வேண்டி வரும். இப்போ எப்படியோ தெரியலை! போய்விட்டு வந்து 3,4 வருஷங்கள் ஆகிவிட்டன.

      Delete
  10. மாமா மட்டும் மேலே ஏறிப்போனாலும் உங்களுக்கு பார்சல் வாங்கி வந்திருக்கலாமே... சரி, எப்படியோ சாப்பாடு ஆச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், மாமாவும் மேலே ஏறிச் சென்று சாப்பிட விரும்பவில்லை. இருவருக்குமே சேர்த்து தோசை சொன்னார் என்று சொல்லி இருக்கேனே! தோசையா அது! முறுக்கு மாதிரி நொறுங்கிப் போய் விட்டது! ஒரு கைப்பிடிதான் இருந்தது!

      Delete
  11. உங்கள் கால்வலி புதிய மருந்துகளுக்கு கட்டுப்படுகிறதா?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அரசமரக் கதை நினைவுக்கு வருது! நேத்துத் தான் போய்க் காட்டி விட்டு மருந்து வாங்கி வந்திருக்கேன். நேற்றிரவு ஒரு வேளையும் இன்று காலை ஒரு வேளையும் சாப்பிட்டிருக்கேன். குறைந்தது ஒரு வாரமாவது ஆக வேண்டாமா?

      Delete
  12. வணக்கம் சகோதரி

    புரந்தரதாசருக்கு அருள் புரிய வந்திருப்பது விட்டலவன்தான் என சந்தேகம் புரிந்து விட்டது. மஹான்கள் இதற்காகவேதான் மறுபடி பிறவி எடுக்கிறார்கள். பாக்கி இடங்களை பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டேன்.இந்த மாதிரி சில பிரசித்தி பெற்ற கோவில்களில் நிறைய எதிர்பார்ப்போடு நாம் செல்வோம். உள்ளை சென்றதும் ஏதோ இடர்பாடினால், சில விநாடிகள் கூட நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாததாகி விடும். மறுபடியும் போய் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததா? விபரங்கள் அறிய காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, மறுபடி தான் போய் தரிசனம் செய்ய வேண்டாம்னு தீர்மானித்துப் புனே செல்ல முன்பதிவு செய்துட்டு வந்துட்டோமே! காலை எட்டரை வரை அங்கே தங்க முடியாது என்பதாலும் சாப்பாடு மற்ற வசதிகள் ஏதும் சரியா இல்லை என்பதாலும் புனே திரும்பினால் போதும் என்று இருந்தோம்.

      Delete
  13. ///ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாகத் தான் வெளியேறி வரவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஆட்டோக்காரப் பையர் அங்கே வந்து காத்திருந்தார். ///

    அவர் அக்கோயில் பற்றிப் பழக்கப்பட்டவராக இருப்பார்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதிரடியாரே! பொதுவாக உள்ளூர் ஆட்டோக்காரர்கள் இது எல்லாம் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் தான். ஆனால் நாங்க திருநெல்வேலியில் செப்பறை போனப்போ அந்தக் கார் ஓட்டுநருக்கு உள்ளூர் விஷயமே தெரியலை! :( புதுசு புதுசாச் சொல்றீங்களே மேடம்னு கேட்டார்.

      Delete
  14. சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது படிகள் மேலே ஏறவேண்டும் என்பதோடு ஒவ்வொரு படிக்கும் ஒன்றரை அடி உயரம்! அதைப் பார்த்த நான் சாப்பாடே வேண்டாம்./////

    ஆவ்வ்வ்வ்வ் அதுவும் கோயில் தரிசனம் முடிச்ச கையோடெனில் எவ்ளோ களைப்பாக இருக்கும். நீங்க எப்பவும் உங்கள் காண்ட் பாக்கில் கொஞ்சம் பிஸ்கட்ஸ், ரஸ்க்.. இப்படியான வை வச்சிருக்கோணும் கீசாக்கா.. ஆபத்துக்கு உதவும்.. பிளாஸ்க்கில் கொஞ்சம் ரீ அல்லது சுடுநீராவது.

    ///எனச் சொல்லிவிட்டுக் கீழேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அதை அந்த ஆட்டோ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு.///

    இல்ல, நீங்க சாப்பிடாமல் இருக்கிறீங்களே கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் ஏறிச் சாப்பிடுவீங்க என நினைச்சிருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அதிரடி, இரவு எட்டு மணிக்கெல்லாம் "ரீ" குடிக்கும் வழக்கம் இல்லை. சாயங்காலத்திலேயே 4 மணிக்கு மேல் "ரீ" "காஃபி" எதுவும் குடிக்க மாட்டேன். மற்றபடி பிஸ்கட்டெல்லாம் இருந்தது தான். ஆனால் மத்தியானமே கோலாப்பூரில் நான் சாப்பிடவே இல்லை! ஆகவே அப்போதைய தேவை உணவு தான் என்றிருந்தது. அதோடு அந்த ஆட்டோக்காரர் உண்மையிலேயே என்னால் ஏற முடியும் என நினைத்துக் கொண்டிருந்தார். சொல்லவும் செய்தார். என்ன அம்மா சாப்பிடக் கூட ஏற மாட்டேனு சொல்றீங்களேனு கேட்டார். அதனால் தான் சொன்னேன். சாப்பாடு என்றால் நான் ஏறிடுவேன்னு அவர் நினைச்சிருக்கார் என!

      Delete
  15. எங்கே கில்லர்ஜியைக் காணோமே? உடம்பு சரியில்லையா? அல்லது பதிவு போரடிக்குதேனு வராமல் இருந்துட்டாரா?

    ReplyDelete
  16. புரந்தரதாசர் கதை தெரிந்து கொண்டே அக்கா. என்ன இது இங்கும் ஜர்கண்டியா....முன்பெல்லாமப்படி இல்லையே அக்கா. இப்போத்தான் போல...நான் சொல்வது 16 வருடம் முமன்பு...

    ஆட்டோக்காரருக்கு எல்லாம் பழக்கமாக இருப்பதால் கரெக்டாக வந்துவிட்டார் நீங்கள் வரும் இடத்திர்கு. ஹோட்டல் கூட நல்ல ஹோட்டல்தான் காட்டியிருக்கார் ஆனால் படிகள் உங்களுக்குக் கஷ்டமாச்சே உங்களுக்கென்றில்லை...இப்போதெல்லாம் பலருக்கும் அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் ஆழமான படிகள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ஓட்டல் ஒண்ணும் நல்ல ஓட்டல் இல்லை. சாப்பிடச் சொன்னதைச் சொல்றீங்களா? அது நல்ல ஓட்டலாக இருக்கலாம். ஆனால் யாரால் அத்தனை படிகள் ஏற முடியும்? ஏறி இறங்கிச் சாப்பிட்டு வருவதை நினைத்தால் சாப்பாடே வேண்டாம்னு ஆயிடுத்து!

      Delete
  17. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு. //

    இதை முதலில் வாசித்ததும் சிரித்துவிட்டேன் கீதாக்கா...சாப்பாடுனா ஏறிடுவேன் இதியப் பார்த்துத்தான் சிரித்தேன்...அப்புறம் சே பாவம் கீதாக்கா முடியாமல் உட்கார நான் சிரிக்கிறேனே என்று நினைத்துக் கொண்டேன்....ஏதோ கிடைத்ததே அக்கா மாத்திரை சாப்பிட....

    அடுத்து உங்களுக்கு அடுத்த நாள் பேருந்தில் புக் செய்தது ஏணோ உங்களுக்கு மன நிறைவாக இல்லைன்னு...ஏன் கீதாக்கா ....அடுத்த பகுதியில் ஏதேனும் வருமோ..

    கீதா

    அக்கா துளசி அவர் மகன் மருத்துவப்படிப்பிற்கான பரீட்சைகள் எழுதுவதால் பிரயாணம் அப்புறம் பட எடிட்டிங்க் அது இது என்று வேலை என்பதால் தளம் எதுவும் வாசிக்க இயலவில்லை என்று சொன்னார். 5 நீட் தேர்வு முடிவுகள் வேறு வருதாம். எனவே அதுவரை கவுன்ஸலிங்க் வருமோ எங்கே என்று தெரிவது வரை ..அப்புறம் தளம் பக்கம் வரமுடியும் என்று சொல்லியிருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, துளசியை முகநூலில் பார்த்து வருகிறேன். அதிகம் கருத்துச் சொல்லுவது இல்லை நானும். அப்புறமா அந்த ஆட்டோக்காரர் மட்டுமில்லை எங்க உறவினர் சிலர் கூட என்னால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாது என்றால் புரிஞ்சுக்க மாட்டாங்க! சும்மா உட்காரு, பார்த்துக்கலாம் என்பார்கள்! இன்னும் சிலர், போதும்டி! ரொம்பவே அலட்டாதே! நாங்கல்லாம் கண்ணை மூடிக்கறோம். நீ உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்துக்கோ என்பார்கள். கீழே உட்கார்ந்து ஒரு கவளம் வாயில் போட ஆசைதான்!ஆனால் முடியாது! அதை யாரும் புரிஞ்சுக்கறதும் இல்லை! அதோடு கட்டிலாக இருந்தாலும் கூட பெரிய கட்டிலாக இருந்தால் அதில் உள்ளே தள்ளிப் போய்ப் படுக்க முடியாது! கீழே இறங்குவது கஷ்டம்! கீழே இறங்க கால்களை மடக்கிக் கொண்டு கீழே நகரணும்! அது என்னால் முடியாது! ஆகவே கட்டிலின் ஓரத்தில் தான் கீழே இறங்க வசதியாகக் கால்களை வைத்துக் கொண்டு படுப்பேன்! இங்கே நம்ம வீட்டில் பிரச்னை இல்லை. வசதியான தனித்தனிக்கட்டில்! நான் பாட்டுக்குப் படுத்துக் கீழே இறங்கலாம்!

      Delete
    2. இதுக்குத் தான் வெளியே போறதுன்னா தங்குமிடத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டு போகவேண்டி இருக்கு. கொஞ்சம் அசௌகரியம் என்றாலும் கால்வலியோ அல்லது வேறே ஏதேனும் உடம்போ வந்துடும்! போன இடத்தில் தொந்திரவாக இருக்கக் கூடாதே! பல கல்யாணங்களுக்குச் செல்வதையும் அதனாலேயே நிறுத்தி விட்டோம்.

      Delete
  18. மன்னிக்கவும் அன்றே படித்து விட்டேன் கருத்துரை எழுத மறந்து விட்டேன் போல...

    ஒவ்வொரு ஐதீகங்களும், சடங்குகளும் மனிதர்களின் வாழ்வுக்கு நல்வழிபடுத்துவதற்காகவே நமது முன்னோர் வகுத்து வைத்தனர்.

    ஆனால் இன்றைய மக்களின் புரிதல் வேறுகோணமாகவே இருக்கிறது.

    ஆட்டோவிலேயே செருப்புகளை விட்டுச் செல்லலாமே....

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! மன்னிப்பெல்லாம் எதுக்கு? உங்களைக் காணோமேனு நினைச்சேன். ஆட்டோவில் செருப்புக்களை விடாததன் காரணத்தை மேலே சொல்லி இருக்கேன்.

      Delete
  19. பந்தர்பூர் கதை அறிய முடிந்தது. புரந்தர தாசருக்கே கோபம் இப்படி வந்து வெந்நீரைக் கொட்டினால், சாதாரணர்கள் கோபத்தில், ஆத்திரத்தில் ஏதேதோ செய்வார்கள்தான். அவர்களும் புரிந்துகொள்ளும் நேரம், காலம் விட்டலனின் அருளால் வரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், "பெண்"களூர் தானே நீங்க இருப்பதும்! தாசர் பின்னால் பாண்டுரங்க பக்தன் ஆனாலும் அவருடைய அகம்பாவம், கோபம் எல்லாமும் மிகவும் பிரபலம். கன்னடக்காரர்கள் சொல்லுவார்கள். கூடவே அவர் பாட்டுக்கு உருகவும் செய்வார்கள்.

      Delete