
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. (2)
குழந்தையைத் தான் யசோதைக்குக் கொடுக்கும்போது தன் பாதக் கட்டை விரலைச் சப்பிக் கொண்டிருந்ததையே நினைத்துக் கொண்டிருந்தாள் தேவகி. கர்காசாரியார் வந்து அவளிடம் குழந்தையின் பெயர் சூட்டுவிழா நன்கு விமரிசையாக நடந்ததையும், குழந்தையை நந்தனும், யசோதையும், (யசோதை என்னமோ தான் பெற்ற குழந்தை எனவே நினைத்தாள், அவளுக்கு விஷயம் தெரியாதே!) மிக மிக அன்புடனும், பாசத்துடனும் வளர்ப்பார்கள் என்றும் அவளிடம் சொல்லுகின்றார். தன்னிரு கைகளையும் கூப்பிக் கொண்டு அந்தப் பரம்பொருளை வேண்டிக் கொண்டு தன் மகனுக்கு எவ்வித ஆபத்தும் நேரக் கூடாது எனப் பிரார்த்தித்துக் கொண்டாள் தேவகி. கையில் அந்த கரும்பளிங்குச் சிலையை எடுத்துக் கொண்டு, தன் மகனின் முகத்தையே அதில் காணவும் முயற்சித்தாள்.
குழந்தை யசோதையிடம் நன்கு வளர்ந்து வந்தது. அதன் ஒவ்வொரு விளையாட்டும் யசோதைக்குப் பூரிப்பைக் கொடுத்து வந்தது. அதற்குப் பாலூட்டும்போதும், தாலாட்டும்போதும் குழந்தையின் அழகையும், நிறத்தையும் பார்த்துப் பார்த்து வியந்தாள் யசோதை. அவளோடு கோபியர்களுக்கும் இந்தக் குழந்தையின் விளையாட்டும், சிரிப்பும், அழகும் அலுக்கவில்லை.

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே

ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7
குழந்தைக்குக் குளிப்பாட்டிச் சீராட்டி, நாக்கு வழித்தால் குழந்தையின் வாயினுள்ளே அகில உலகத்தையும் காண்கின்றாள் யசோதை. கோபியர்களோ இவன் சாதாரணக் குழந்தை அல்லவென்று சொல்கின்றார்கள். அந்த பரம்பொருள் ஆன வாசுதேவனே நந்தன் குழந்தையாக வந்து பிறந்திருக்கின்றான் என்றும் எண்ணுகின்றனர். குழந்தையின் ஒவ்வொரு விளையாட்டும் அவர்களுக்குப் புதுமையாகவும், அழகாயும் இருக்கின்றது. தங்களை உய்விக்க வந்த கடவுள் இவன் தான் என்றும் பேசிக் கொள்ளுகின்றனர்.
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.
குழந்தையின் அழுகை அவர்களுக்கு இனிய சங்கீதமாய் ஒலிக்கின்றது. அது முகம் பார்த்து அழுது, சிரித்து, குப்புற விழுந்து, பின் நீந்தித் தவழ்ந்த போதோ, ஆஹா, இதோ கண்ணன் கைவிரல்களின் அடையாளம் இங்கே, இதோ, கால் விரல்கள் அடையாளம் இதோ, முழங்கால் இப்படி அழுந்துகின்றதே, என் கனையாவுக்கு வலிக்குமோ என்றெல்லாம் பேசிக் கொள்கின்றனர்.
************************************************************************************
மதுராவில் கம்சனுக்கோ மனதில் நிம்மதி என்பதே இல்லை. பூதனையிடம் அவன் சந்தேகம் வலுக்கின்றது. அந்த சிராவண மாதத்தில் வ்ரஜபூமியிலும், சுற்றியுள்ள ஊர்களிலும் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்லுமாறு ஆணையிட்டிருந்தாலும், அவள் அதைப் பூரணமாய் நிறைவேற்றவில்லை. திரும்பத் திரும்ப ஒன்பது குழந்தைகள் மட்டுமே பிறந்ததாயும், அவை விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாயும் சொல்லுகின்றாள். எங்கோ, ஏதோ, தவறு நேர்ந்திருக்கின்றது. பூதனை அன்று பூராவும் தேவகியின் அருகில் தான் இருந்தாளா?? அவள் என்னமோ அப்படித் தான் சொல்லுகின்றாள். ஆனால்??? தேவகிக்குப் பிறந்ததாய்ச் சொல்லப் படும் அந்தப் பெண் குழந்தை?? அது தன் கையிலிருந்து நழுவிய விதம் இன்னும் கம்சனைத் திகிலடைய வைத்தது. அந்தக் "க்றீச்" என்னும் ஓலம். இதோ இப்போது கூடக் காதில் ஒலிக்கின்றதே? அதே போல் அந்த மாயக் குரல்?? இதோ காதில் விழுகின்றதே! "உன்னைக் கொல்லப் போகின்றவன் பிறந்துவிட்டான்." கம்சன் தன்னை அறியாமல் காதைப் பொத்திக் கொண்டான்.
பூதனையோ கம்சனிடமிருந்து மறைத்தாள் தான் அன்று தேவகியிடம் இல்லாத விஷயத்தை. திரும்பத் திரும்ப பெண் குழந்தையே பிறந்தது என்றும் சொன்னாள். மேலும் சிராவண மாதத்தில் பிறந்த குழந்தைகளைத் தேடிப் பிடித்து கொன்றதில் ஈடுபட்ட பூதனைக்கு, இப்போது சாமானிய மக்கள் மட்டுமன்றி, தன் உறவினர் கூட தன்னைக் கண்டு அஞ்சுவதைக் கண்டாள். அவள் தெருவில் சென்றாலே கதவுகள் மூடப் பட்டன. "குழந்தைக் கொலைகாரி வருகின்றாள்" என்று அவள் காதுபடவே அனைவரும் பேசிக் கொள்கின்றனர். குழந்தைகள் உள்ள மற்றச் சில தாய்மார்கள் இந்த விஷயம் தெரிந்ததுமே மதுராவை விட்டு வெகு தூரம் அனுப்பப் பட்டனர். இந்நிலையில் ஒரு நாள் கம்சனைக் கண்டு தன் கப்பத்தைச் செலுத்த வந்தான் நந்தன்.
நந்தன் வருவதற்கு முன்பே கம்சனின் உளவாளிகள், பல வருடங்கள் சென்ற பின்னர் நடுவயதை எட்டி இருந்த யசோதைக்குப் பிறந்த குழந்தையைப் பற்றிக் கம்சனிடம் சொல்லி இருந்தனர். நந்தன் எப்படிச் சாதாரணமாய் இருக்கின்றான் என்பதையும், யசோதையையும் சாதாரணப் பெண்மணி என்பதையும் சுட்டிய அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையின் சாமுத்திரிகா லட்சணங்கள் அரசகுமாரனையும் விஞ்சி இருப்பதையும், குழந்தையின் நிறம், அதன் விளையாட்டுகள், தெய்வீகம் அனைத்துமே ஷூரர்களாலும், வ்ரஜபூமியின் மக்களாலும், கொண்டாடப் படுவதையும், அந்தக் குழந்தை தனித் தன்மையோடு இருப்பதாகவும் சொல்லி இருந்தனர்.
இந்நிலையில் நந்தன் வருகின்றான் கம்சனைக் காண.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;))
ReplyDeleteகதை சூடு பிடிக்கிறது..;))