ஒரு வாரமா கடுமையான ஜலதோஷம், மூச்சு விட முடியலை! இருமல்! அதோட நவராத்திரிக்குப் பத்து நாட்கள் முன்னாடி வந்திருந்த அக்கியின் தொந்திரவும் குறையவில்லை. அக்கி உதிர்ந்து விட்டது அப்போவே. ஏழு நாட்கள் தொடர்ந்து மாத்திரைகள். ஒரு நாளைக்கு ஐந்து முறை. அரிப்புக்குத் தனி மாத்திரை! எல்லாம் தான் சாப்பிட்டேன். புண்கள் ஆறினாலும் வலியும் குறுகுறுப்பும், சில சமயங்களில் அரிப்பும் குறையவில்லை. வலிக்குத் தனியா மறுபடியும் மருந்து சாப்பிட்டேன். என்றாலும் இன்னமும் அவ்வப்போது வலி இருக்கு! ஒரு முறை அக்கி வந்தால் அப்புறமா வராதுனு சொல்வாங்க. சொல்றாங்க! ஆனால் நாமதான் அதிசயம் ஆச்சே. நம்ம வழி எந்த வழியிலேயும் சேராதது! போன முறை அக்கி வந்தப்போ (சுமார் 30 வருஷம் முன்னர்) 1987 ஆம் ஆண்டு முதுகு முழுவதும் அக்கி தான்! மல்லாந்தும் படுக்கமுடியாது. ஒருக்களிச்சும் படுக்க முடியாது! ஒரே அவஸ்தை. குப்புறத் தான் படுத்துப்பேன். தூங்க முடியாது! தூக்கமும் வராது. வலி பொறுக்க முடியாமல் இருக்கும். கடுமையான அக்னி நக்ஷத்திரக்காலம். அதோடு தான் சுமார் 15 நபர்களுக்குச் சமைச்சு, காஃபி, டிஃபன் என எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் சமாளிச்சிருக்கேன். புண்கள் உதிரவே ஒரு மாசம் ஆனது. ஒரு மாசமும் விருந்தாளிகள் இருந்தாங்க! என்றாலும் சமாளிச்சேன். எப்படியோ சமாளிச்சிருக்கேன்! எப்பூடி?ஆனால் இப்போ என்னமோ ரொம்பத் தாங்கலை. இரண்டு நாட்கள் சாதம் மட்டும் வைச்சுட்டு, வெளியே சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கினோம். இரண்டு பேருக்கும் ஒத்துக்கலை! அப்புறம் சமைக்க ஆரம்பிச்சாச்சு! அதனாலே கடந்த இரண்டு மாசமாகப் பாத்திரங்கள் கழுவ மட்டும் ஒரு பெண்மணியை உதவிக்கு வைச்சிருக்கேன். இல்லைனா இப்போ இருக்கும் ஜலதோஷம், விடாத இருமலுக்கு இன்னமும் அதிகம் ஆகும்! ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும். நேத்திக்குக் கூட சாயங்காலமா நான் விளக்கு வைக்கையில் எதிரே உள்ள குடியிருப்பில் உள்ள இளம்பெண், "மாமி! ஃப்ரெஷா இருக்கீங்க!" என்று பாராட்டினாள்! இஃகி, இஃகி. என் இந்த மேனி அழகுக்குக் காரணம் குப்பை மேனி! குப்பை மேனின்னா தெரியுமா? தெருக்கள், சாலைகள் ஓரத்தில் கும்பலாக முளைச்சுக் கிடக்கும். அந்தக் குப்பை மேனியோட பவர் சொல்லி முடியாது! எனக்கு எப்போ ஃபோட்டோ அலர்ஜி வந்தாலும், அல்லது துணிகள் ஒத்துக்காமல் அலர்ஜி வந்தாலும் இது தான் கைகண்ட மருந்து. ஆகவே இப்போவும் அக்கித் தழும்புகள் சரியாக வேண்டியும் அரிப்புக் குறையவும் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு நம்ம ரங்க்ஸ் குப்பைமேனியும், வேப்பிலையும் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்தார்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (நீண்ட பெருமூச்சு) அம்பத்தூர் வீட்டில் தோட்டத்திலேயே குப்பைமேனி கிடைக்கும். சிறியா, பெரியா நங்கையிலிருந்து துளசி, தூதுவளை வரை எல்லாமும் கிடைக்கும். இப்போ எங்கே போறது! பொறுக்கித் தான் கொண்டு வரார். :( அதைத் தான் பச்சை மஞ்சளோடு சேர்த்து நன்கு நைசாக அரைச்சுத் தடவிக் கொண்டு குளிக்கிறேன். இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))
இந்த அக்கிக்கும் எனக்கும் என்னமோ தெரியலை! அப்படி ஒரு ராசி! இதோட 3 ஆம் முறையாவோ நாலாம் முறையாவோ வந்திருக்கு! சின்னக் குழந்தையா இருந்தப்போ மதுரையில் சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு சாயபு கிட்டே மந்திரிச்சு எழுதிக் கொண்டு வருவோம். 30 வருஷம் முன்னர் 87-இல் வந்தப்போவும் குயவனிடம் எழுதினது தான். ஆனால் இங்கே இம்முறையில் எழுதிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க! ஆகவே ஆங்கில மருந்துகள் தான்! எழுதற பாரம்பரியத்தில் பிறந்தவங்களுக்குத் தான் அதன் சூக்ஷுமம் தெரியுமாம். பூங்காவிப் பொடியை மஸ்லின் மாதிரியான துணியில் சலிச்சு அதில் என்னவோ சேர்த்து எழுதணும்னாங்க! சரி, இதிலே போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு எடுக்கலை! இப்போவும் மல்லாந்து படுக்கையில் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுது! நாளாக ஆகச் சரியாகும்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே பழைய குருடி, கதவைத் திறடி னு சொல்லிட்டு வீசிங் வந்தாச்சு! எப்படியோ இத்தகைய ரசனையான விஷயங்களுக்கிடையே பொழுது போயிட்டு இருக்கு! ஒரு நாளாவது உடம்பு நல்லா இருக்குனு சொல்ல ஆசை! பார்ப்போம்! :))))
அக்கினு வெளியே யாரிடமும் சொல்லிக்கலை. மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும். எப்போப் பார்த்தாலும் புலம்பறோமேனு தான் எதுவும் சொல்லறதில்லை! ஆனால் இன்னிக்கு மேனி அழகைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் கொட்டிட்டேன். :)))) நாளை ஒரு ஜாலியான பதிவுடன் பார்க்கலாம்! அதிலே ஒரு ஆச்சரியமும் இருக்கே!









