எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 25, 2018

என் மேனி அழகின் ரகசியம் குப்பைமேனியே! :)))))

குப்பை மேனி க்கான பட முடிவு


ஒரு வாரமா கடுமையான ஜலதோஷம், மூச்சு விட முடியலை! இருமல்! அதோட நவராத்திரிக்குப் பத்து நாட்கள் முன்னாடி வந்திருந்த அக்கியின் தொந்திரவும் குறையவில்லை. அக்கி உதிர்ந்து விட்டது அப்போவே. ஏழு நாட்கள் தொடர்ந்து மாத்திரைகள். ஒரு நாளைக்கு ஐந்து முறை. அரிப்புக்குத் தனி மாத்திரை! எல்லாம் தான் சாப்பிட்டேன். புண்கள் ஆறினாலும்  வலியும் குறுகுறுப்பும், சில சமயங்களில் அரிப்பும் குறையவில்லை. வலிக்குத் தனியா மறுபடியும் மருந்து சாப்பிட்டேன். என்றாலும் இன்னமும் அவ்வப்போது வலி இருக்கு! ஒரு முறை அக்கி வந்தால் அப்புறமா வராதுனு சொல்வாங்க. சொல்றாங்க! ஆனால் நாமதான் அதிசயம் ஆச்சே. நம்ம வழி எந்த வழியிலேயும் சேராதது! போன முறை அக்கி வந்தப்போ (சுமார் 30 வருஷம் முன்னர்) 1987 ஆம் ஆண்டு முதுகு முழுவதும் அக்கி தான்! மல்லாந்தும் படுக்கமுடியாது. ஒருக்களிச்சும் படுக்க முடியாது! ஒரே அவஸ்தை. குப்புறத் தான் படுத்துப்பேன். தூங்க முடியாது! தூக்கமும் வராது. வலி பொறுக்க முடியாமல் இருக்கும். கடுமையான அக்னி நக்ஷத்திரக்காலம்.  அதோடு தான் சுமார் 15 நபர்களுக்குச் சமைச்சு, காஃபி, டிஃபன் என எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் சமாளிச்சிருக்கேன். புண்கள் உதிரவே ஒரு மாசம் ஆனது.  ஒரு மாசமும் விருந்தாளிகள் இருந்தாங்க! என்றாலும் சமாளிச்சேன். எப்படியோ  சமாளிச்சிருக்கேன்! எப்பூடி?ஆனால் இப்போ என்னமோ ரொம்பத் தாங்கலை. இரண்டு நாட்கள் சாதம் மட்டும் வைச்சுட்டு, வெளியே சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கினோம். இரண்டு பேருக்கும் ஒத்துக்கலை! அப்புறம் சமைக்க ஆரம்பிச்சாச்சு!  அதனாலே கடந்த இரண்டு மாசமாகப் பாத்திரங்கள் கழுவ மட்டும் ஒரு பெண்மணியை உதவிக்கு வைச்சிருக்கேன். இல்லைனா இப்போ இருக்கும் ஜலதோஷம், விடாத இருமலுக்கு இன்னமும் அதிகம் ஆகும்!  ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும். நேத்திக்குக் கூட சாயங்காலமா நான் விளக்கு வைக்கையில் எதிரே உள்ள குடியிருப்பில் உள்ள இளம்பெண், "மாமி! ஃப்ரெஷா இருக்கீங்க!" என்று பாராட்டினாள்! இஃகி, இஃகி. என் இந்த மேனி அழகுக்குக் காரணம் குப்பை மேனி! குப்பை மேனின்னா தெரியுமா? தெருக்கள், சாலைகள் ஓரத்தில் கும்பலாக முளைச்சுக் கிடக்கும். அந்தக் குப்பை மேனியோட பவர் சொல்லி முடியாது! எனக்கு எப்போ ஃபோட்டோ அலர்ஜி வந்தாலும், அல்லது துணிகள் ஒத்துக்காமல் அலர்ஜி வந்தாலும் இது தான் கைகண்ட மருந்து. ஆகவே இப்போவும் அக்கித் தழும்புகள் சரியாக வேண்டியும் அரிப்புக் குறையவும் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு நம்ம ரங்க்ஸ் குப்பைமேனியும், வேப்பிலையும் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்தார்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (நீண்ட பெருமூச்சு) அம்பத்தூர் வீட்டில் தோட்டத்திலேயே குப்பைமேனி கிடைக்கும். சிறியா, பெரியா நங்கையிலிருந்து துளசி, தூதுவளை வரை எல்லாமும் கிடைக்கும்.  இப்போ எங்கே போறது! பொறுக்கித் தான் கொண்டு வரார். :( அதைத் தான் பச்சை மஞ்சளோடு சேர்த்து நன்கு நைசாக அரைச்சுத் தடவிக் கொண்டு குளிக்கிறேன். இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))

இந்த அக்கிக்கும் எனக்கும் என்னமோ தெரியலை! அப்படி ஒரு ராசி! இதோட 3 ஆம் முறையாவோ நாலாம் முறையாவோ வந்திருக்கு! சின்னக் குழந்தையா இருந்தப்போ மதுரையில் சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு சாயபு கிட்டே மந்திரிச்சு எழுதிக் கொண்டு வருவோம். 30 வருஷம் முன்னர் 87-இல் வந்தப்போவும் குயவனிடம் எழுதினது தான். ஆனால் இங்கே இம்முறையில் எழுதிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க! ஆகவே ஆங்கில மருந்துகள் தான்! எழுதற பாரம்பரியத்தில் பிறந்தவங்களுக்குத் தான் அதன் சூக்ஷுமம் தெரியுமாம். பூங்காவிப் பொடியை மஸ்லின் மாதிரியான துணியில் சலிச்சு அதில் என்னவோ சேர்த்து எழுதணும்னாங்க! சரி, இதிலே போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு எடுக்கலை! இப்போவும் மல்லாந்து படுக்கையில் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுது! நாளாக ஆகச் சரியாகும்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே பழைய குருடி, கதவைத் திறடி னு சொல்லிட்டு வீசிங் வந்தாச்சு! எப்படியோ இத்தகைய ரசனையான விஷயங்களுக்கிடையே  பொழுது போயிட்டு இருக்கு! ஒரு நாளாவது உடம்பு நல்லா இருக்குனு சொல்ல ஆசை! பார்ப்போம்! :))))

அக்கினு வெளியே யாரிடமும் சொல்லிக்கலை. மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும். எப்போப் பார்த்தாலும் புலம்பறோமேனு தான் எதுவும் சொல்லறதில்லை! ஆனால் இன்னிக்கு மேனி அழகைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் கொட்டிட்டேன். :)))) நாளை ஒரு ஜாலியான பதிவுடன் பார்க்கலாம்! அதிலே ஒரு ஆச்சரியமும் இருக்கே!

Saturday, November 24, 2018

கார்த்திகை தீபம்








மண் அகல் விளக்குகள். கீழே உட்கார்ந்து எல்லாம் செய்யும் அளவுக்கு இடவசதியும் இல்லை. உட்காரவும் முடியாது. ஆகவே ஒரு டேபிளின் மேல் கோலம் போட்டு வைச்சாச்சு. பெரிய குத்துவிளக்குகள் கீழே பலகையின் மேலே.

மற்றப் பித்தளை, வெண்கல விளக்குகள் இந்தப்பக்கம் வேறொரு ஸ்டூலில். இரண்டுக்கும் நடுவே அவல் பொரி, நெல் பொரி, அப்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூக்கள். 

எங்க வீட்டு வாசலில் நான் போட்ட கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள். காலையிலிருந்து பெரு மழையாகத் தூறிக்கொண்டே இருந்தது. வெளித் தாழ்வாரத்தில் ஜன்னல் வழியே சாரல் வேறே இருந்தது. கோலத்தைச் சீக்கிரமாய்ப் போட்டால் தான் காயும்னு பனிரண்டரை மணிக்கே போட்டேன். அப்புறமாக் கவலை வந்து விட்டது. மழைத்தண்ணீர் பட்டு அழிஞ்சுடுமோனு! நல்ல வேளையா நான் கோலம் போட்ட சிறிது நேரத்தில் சின்னத் தூறலாக மாறி விட்டது. இப்போக் காலையிலிருந்து எட்டிப் பார்க்காமல் இருந்த சூரியன் பளிச்சென்று முகமெல்லாம் கழுவிக் கொண்டு சுடச் சுட வந்துட்டார். 


எங்க வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வாசல் கோலத்தில் விளக்குகள். கிட்டேப் போய் எடுக்கணும்னா விளக்குகளைத் தாண்டணும். இரண்டு பக்கமும் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் காலை வைத்தால் வழுக்கும் என்பதோடு கோலத்தில் பட்டு இன்னமும் வழுக்கும். விளக்குகளுக்கும் ஆபத்து! அதான் வெளியேயே போகலை! 

Thursday, November 22, 2018

யாரைத் தான் நொந்து கொள்வது!

கஜா புயல் பாதிப்பு க்கான பட முடிவு

சென்னையில் வெள்ளம்னா எல்லோருமே உதவியது போல் இப்போது டெல்டா மாவட்டங்களில் உதவவில்லை என்று ஒரு பொதுவான எண்ணம்/கருத்துப் பரவி உள்ளது. சென்னை தலைநகரம். எல்லா வசதிகளும் பொருந்திய ஓர் இடம். அதோடு ஆளுநர் முதல் முதல்வரில் இருந்து அனைத்துஅமைச்சர்கள் அதிகாரிகள் இருக்கின்றனர். ஆகவே ஒருவரைக் கலந்தாலோசிப்பது எளிது. உடனுக்குடன் முடிவுகள் எடுக்கலாம். ஆனால் இங்கே பாதிப்புக்கு உள்ளானது சுமார் ஐந்து முதல் ஏழு மாவட்டங்கள். இதில் டெல்டாப் பகுதியில் மட்டும் ஐந்து மாவட்டங்கள். ஏகப்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. மின் கம்பங்கள் சரிந்திருக்கின்றன. புயலின் வேகம் வானிலை ஆய்வு மையம் சொன்னதை விட அதிகமாக இருந்திருக்கிறது. ஆனாலும் மெதுவாக வந்தாலும் புயல் தரையைத் தாக்கும்போது வேகம் அதிகரிக்கும் என்று சொல்லி இருந்தனர்.

இப்போது மீட்புப் பணிகளில் தொய்வு என்கிறார்கள். முதலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்திச் சாலையைச் சீரமைத்தால் தான் மீட்புப் பணியாளர்கள் ஒரு நகருக்குள்ளேயோ கிராமங்களுக்கு உள்ளேயோ போகவே முடியும். அதற்கே இரண்டு நாட்கள் ஆகி இருக்கிறது. உள்ளே உள்ள சீர்கேடுகளையும் சரி செய்யணும். முக்கியமாய் மின் கம்பங்கள்! எத்தனை மறுபடி பயன்படும், எத்தனை பயன்படாது என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.குற்றம் சொல்வது எளிது. ஆனால் சென்னை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே பகுதியாக இருந்ததால் மீட்புப் பணிகள் எளிதானது. அதோடு தேவையான சாதனங்கள் ஆள்க் கட்டு அனைத்தும் கிடைத்தன. ஆனால் இங்கே எத்தனை மாவட்டங்கள்!

அதோடு அவற்றுக்கான நிவாரணங்களை அனுப்புவதற்கே வழி சரியாக இல்லாமல் போய்ச் சேர முடியவில்லை. மேலும் ஆட்கள் எல்லோருமே வெளியில் இருந்து வரணும். உபகரணங்கள் அனைத்தும் வெளியே இருந்து வரணும். இத்தகையதொரு அழிவைப் புயல் வருவதற்கு முன்னால் தான் கொஞ்சமானும் புரிஞ்சுக்கவே முடியும். அப்போதும் கூட மரங்கள் விழுவதை நம்மால் தடுக்க முடியுமா? இயற்கையை எதிர்கொள்ள முடியுமா? பல தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள் அழிந்திருக்கின்றன. வாழையாவது ஐந்து வருடங்களுக்குள்ளாகச் சரி செய்து விடலாம். ஆனால் தென்னை மரங்கள்? இதிலிருந்து மீண்டு வர வேண்டியதற்கு ஆவன செய்ய முயலவேண்டும்.  ஆகவே தேவையான உபகரணங்கள் ஆள்க் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்னரே பெற முடியும். தற்காப்பு நடவடிக்கைகள் தான் உடனே செய்யக் கூடியது! மற்றபடி மரங்கள் விழுந்ததுக்கு எல்லாம் அரசு பொறுப்பாகுமா? நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. அது ஒழுங்கா போய்ச் சேருபவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்கள் முன்னர் பட்டுக்கோட்டைப்பகுதிக்குப் போனவர்கள் மூலம் அந்தப் பகுதி கிராமங்கள் மோசமான நிலையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தென்னை மரங்கள் வேரோடிப் போயிருப்பதால் அந்தத் தோப்புகளில் முதலில் மணலுக்குள் வேரோடி இருக்கும் வேர்களை அகற்றி மண்ணுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதன் பின்னரே மறு பயிராக்குதல் பற்றி நினைக்கலாம். வாழைத் தோட்டங்களும் அவ்வாறே என்றாலும் அவற்றைக் குறைந்த பட்சமாக 3 மாதங்களுக்குள் சரி செய்துவிடலாம். வாழைத் தோட்டம் விரைவில் பலனும் அளித்துவிடும். அதற்கான ஆவன செய்யவேண்டியவற்றைப் பற்றி மட்டுமே இப்போது சிந்திக்கவேண்டும்.  ஒரேயடியாக அனைவரும் எல்லா ஊர்களுக்கும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. முதல்வராகவே இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பகுதிக்குத் தான் செல்ல முடியும். எதை முதலில் எடுத்துக்கொள்வது! எதை விடுவது! எல்லோருக்குமே பாதிப்பு! ஆகவே முடிந்தவரை அரசாங்கம் அனுப்பி வைக்கும் நிவாரணத் தொகை மற்றும் மக்களால் அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் சரியான முறையில் பங்கீடு செய்யப்படுகிறதா என்பதைத் தான் நாம் கண்காணிக்கலாம்.

கஜா புயல் பாதிப்பு க்கான பட முடிவு

தேங்காய் விலை ஏறும்போது புரியும்; வாழைப்பழம், காய் கிடைக்கலைனா தெரியும் என்றெல்லாம் மீட்புப் பணிகளுக்காகவும் விவசாயிகள் சார்பிலும்  சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். இங்கே யாரும் வேண்டுமென்று தென்னை மரங்களையோ, வாழை மரங்களையோ வெட்டிச் சாய்க்கவில்லை. பலரும் கடன் வாங்கியே பயிர்த்தொழில் செய்திருப்பார்கள் தான். அவங்களுக்கான நிவாரணத் தொகையை எல்லாம் முறைப்படி தான் கேட்டுப் பெறும்படி இருக்கும்.  உடனடி நிவாரணமாகச் சாப்பாட்டுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், துணி வகைகள் போன்றவை ஆங்காங்கே திரட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றது.  எல்லாம் உடனே நடக்கவேண்டும். பிரதமர் முதல் அனைவரும் உடனே வந்து பார்க்கணும் என்றால் அது இயலாத ஒன்று. மத்திய அரசு ஏற்கெனவே தேவையான உதவிகள் செய்வதாக அறிவித்தாயிற்று. நேற்று முதல்வரும் போய்ப் பிரதமரைச் சந்தித்துப் பேசியாகி விட்டது.  இயற்கையின் கோர தாண்டவம்! அதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தான் பார்க்கணும். எல்லாம் சரியாகக் குறைந்தது ஒரு வருஷம் ஆகலாம். மின்சாரம் முழுவதும் கொடுக்கப்படவும் ஆறு மாசம் ஆகும் என்கின்றனர்.  இதற்கு நாம் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக்கொண்டிருக்காமல் அரசோடு சேர்ந்து உதவிக்கரங்கள் மூலம் எப்படியேனும் இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்தால் போதும். 

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் கிடைத்து நிலைமை சீராகப்பிரார்த்தனைகள் செய்வோம். 

Wednesday, November 21, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 5



அந்தப் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களான உலோபம், அசூயை, சத்வகுணம் ஆகியவற்றில் சிலவற்றுக்கான பொருள்
உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம். ஆனால் எதற்கும் கலங்காமல் நிச்சலனமாக இருப்பவர்களை "சத்வகுணம்" கொண்டவர்கள் எனச் சொல்லலாம். அது தவிர்த்து மென்மையாகவும் இனிமையாகவும் பேசுபவர்களையும் கடுஞ்சொல் பேசாதவர்களையும் சத்வகுணம் உள்ளவர்களாய்ச் சொல்லலாம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது. வேகத்தையும் குறிக்கும் ரஜோகுணம். ஆனால் அந்த வேகத்தோடு விவேகமும் சேர்ந்து இருக்க வேண்டும்.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு
கெளதென் மலை
நாகமலை
சுந்தரமலை
சிற்றம்பல மலை
கல்கி மலை
மாதங்க மலை
மயிலாடும்மேடு
ஸ்ரீபாத மலை
தேவர்மலை
நீலக்கல் மலை
தாலப்பாறமலை
நீலிமலை
கரிமலை
புதுச்சேரிமலை
காளகட்டி மலை
இஞ்சிப்பாறை மலை
சபரிமலை
ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

Tuesday, November 20, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 4

மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா? பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத் தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம் திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள் பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.



"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார்.

காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர் என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்:

ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும் சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.

இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும் இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம்.

இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்ததும் தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன் எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?

பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.

அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்

இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.



ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்
உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்
ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்
மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்
அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்
தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்
காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்
கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்
லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்
மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்
மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்
வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்
அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்
பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்
சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்
சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்
தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்
கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்
அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்
பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்
சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்
மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

அம்பேரிக்காவில் கரோலினா மாநிலம் ராலேயில் வசித்து வரும் மருத்துவ நண்பர் திரு விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம். (மிகப் பழைய பதிவு).

Monday, November 19, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 3

பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.

"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது: பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.



எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.

இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? 

தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. ஏற்கெனவே அவள் பெற்ற வரம், சாபம் படித்தோம்.  அதே மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியமோ அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி!

இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோப்பெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலி வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.

அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

ஐயப்பன் க்கான பட முடிவு

ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகைப்புறத்து அம்மன், என்ற பெயர்களால்  அழைக்கப்பட்ட மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!