எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 29, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 5

தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி!

இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.

அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகப்புரத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!

Wednesday, November 28, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 4



பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.

"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:
பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.

இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.

Tuesday, November 27, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் -3

சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.

மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.

"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார். இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று.

மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.

ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர். இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.

Monday, November 26, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 2



மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?

"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:

"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.
"பூரணைக்கு இறைவா ஓலம்!
புஷ்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறை மேல் கொண்டு
வரும் பிரான் ஓலம்!"
எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.

சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.

தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!

சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!

புலி ஐயப்பன் படங்களைப் புலியின் மேல் இருக்கும் படமும் அனுப்பி வச்சிருக்கு. வரும் நாட்களில் போடுகிறேன். புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை???????

Saturday, November 24, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 1



ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில்
சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப்
போவோமா???
******************************************************************************
பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச்
செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து
போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான
மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன்.
அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச்
செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும்
சாதாரணமாய் எழக் கூடியது!!

தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி
பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம்
என்ற தண்டனை!! மஹிஷி என்ன ஆனாள் நாளை பார்க்கலாமா????

சபரி மலை ஐயப்பன் படம் எடுக்க முடியவில்லை, ஆனால் ஐயனார் படம் போட்டுள்ளேன். ஐயனாரும், ஐயப்பனும் ஒண்ணே, அதுவும் பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமி என்று சொல்பவரும், ஐயப்பனும் ஒன்றே. மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமியின் தீர்ப்பை இன்றளவும் மீறி நடப்பவர்கள் இல்லை. கறுப்பு காவல் தெய்வம் என்றும், தவறுகளைத் தண்டிக்கும் என்னும் எண்ணமும் இன்றளவும் தென்மாவட்ட மக்களிடம் அதிகமாய் உண்டு. இந்தப் பதினெட்டாம்படிக்கு உள்ள முக்கியத்துவமும், கறுப்பு தான் காவல் தெய்வமான "சாஸ்தா" "சாத்தன்" என்பதும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாய்க் கிடைக்கும்.

Friday, November 23, 2007

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!



அனைத்து மாதங்களிலும் கார்த்திகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அனைவரும் கொண்டாடும் தீபத் திருவிழா மட்டுமின்றி, இந்த மாதமே சிவனுக்கு உரித்தானதாய்க் கார்த்திகை சோமவாரம் விரதமும் அனுசரிக்கப் படும். "சோமன்" என்றால் சந்திரனைக் குறிக்கும். சந்திரனுக்கு விநாயகரை எள்ளி நகையாடிய காரணத்தால் தேய்ந்து போவாய் எனச் சாபம் கிடைத்தது. போதாத குறைக்கு மாமனான தட்சனின் 27 பெண்களில் ஒருத்தியிடம் மட்டுமே பிரியம் கொண்டிருந்ததால் மாமனும் சபித்தான். சந்திரனை க்ஷயம் பீடித்தது. இது நீங்குவதற்காகச் சந்திரனை சிவனைத் தஞ்சம் அடைந்தான். சிவபூஜை செய்து வந்தான். அவனின் பக்தியால் மகிழ்ந்த மகேசர் அவனின் நோயைப் போக்கியதோடு அல்லாமல் அவனை நவகிரஹங்களில் ஒருவனாயும் ஆக்கி, அவன் பெயராலேயே ஒரு கிழமை வழங்குமாறும் அருளினார். அவன் பூஜித்தது ஒரு கார்த்திகை மாதத்தில், அந்த நாள் தான் "கார்த்திகை சோமவார விரதம்" எனச் சொல்லப்படத் தொடங்கியது. இவை யாவும் நிகழ்ந்தது கார்த்திகை மாதத்தில். ஆகவே கார்த்திகை சோமவார விரதம் பிரசித்தியும் அடைந்தது. பொதுவாய் அப்போது மழைக்காலம், உடல்நலக் கேடு உண்டாகும். சீக்கிரமே இருட்டி விடும்,. எங்கும் ஈரப் பதமாய் இருக்கும்.

இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். வளர்பிறைப் பெளர்ணமி அன்றோ ஈசன் தன் அடிமுடி காட்ட மலையாக உருவெடுத்துத் தானே ஒரு அக்கினிமலையாகத் தோன்றிய நாள். அன்னை பராசக்தியானவள், தவம் புரிந்து ஈசனின் உடலில் ஒரு அங்கமாகிய திருநாள் ஆகும். இதை நினைவூட்டவும் இன்றளவும் திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப் படுகிறது, இது மிகப் பழங்காலத்தில் இருந்து கொண்டாடப் பட்டு வந்த ஒரு பெருவிழா என்பதைத் திருஞான சம்மந்தர் இவ்விதம் கூறுகிறார்:

"தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்"

என்று பூம்பாவையை, அவளின் எலும்புகளைப் பெண்ணாக மாற்றும்போது பாடிய பதிகத்தில் கூறுகிறார்.

அடிமுடி காணச் சென்ற பிரம்மாவும், விஷ்ணுவும் காணமுடியாமல் திரும்ப பிரம்மாவோ தாழம்பூவைச் சாட்சிக்கு வைத்துக் கொண்டு பொய் சொல்லுகிறார் முடியைக் கண்டதாய். அன்றிலிருந்து சிவபூஜைக்குத் தாழம்பூ ஏற்பதில்லை என்பதோடு, பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க மகேசன் தன் ஜோதி வடிவை அப்படியே மலை வடிவாக்குகிறார். மலையே அக்கினி வடிவம். அதில் ஒவ்வொரு திருக்கார்த்திகை அன்றும் உச்சியில் ஜோதி காட்டப் படுகிறது. இந்த ஜோதியைத் தரிசிப்பவர்களுக்கு 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என அருணாசல புராணம் சொல்லுகிறது.

"கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோரு தலைமுறைக்கு
முக்தி வரம் கொடுப்போம்!"

என்பது ஐதீகம். மனித மனத்தைத் துயரங்களில் இருந்து ஒரு சிறிதேனும் விடுவிக்கும் இத்தகைய பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

Monday, November 19, 2007

இந்த அநியாயம் எங்கேயானும் உண்டா???

வேதாவின் பதிவுகளுக்கான விமரிசனத்தைத் தனியாக எழுதிக் கொண்டால், பின்னால் எடிட், செய்யறதுக்கும், (இது வரை என் பதிவுலக வரலாற்றிலேயே நான் செய்யாதது), பிழை திருத்தவும் வசதியாக இருக்கும் என்று, நோட்பாட் ஓபன் பண்ணி எழுத ஆரம்பிச்சேன். கொழுப்பு, எனக்குத் தான் வேறே யாருக்கு?வொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே "ஸேவ்" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம்? முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ! இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி? இப்படி எல்லாம் கூட ஆச்சரியமா நடக்குமா எல்லாருக்குமே?

மற்றப் பத்திகள் எல்லாம் சரியாக வந்திருந்தன. இது என்ன பேராச்சரியம் என்று வியந்து கொண்டே, சரி, நம்ம ப்ளாகில் ட்ராப்டாகப் போட்டு வச்சுக்கலாம், அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே! மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ! ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, "ஸேவ்" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது! வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி! அரைகுறையாய். என்னத்தைச் சொல்ல? நான் அனுப்பற மெயில் எதுவும் இத்தனை வேகமாப் போனதில்லை. இது மின்னல் வேகத்தில் போய்ச் சேர்ந்துடுச்சு!

இந்த ப்ளாக்கரும் இப்படித்தான் சதி பண்ணும், சரியா பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்தில், could not connect to blogger.com. publishing and saving may fail அப்படினு பயமுறுத்திட்டே இருக்கும். சரினு முயற்சி செய்து தான் பார்க்கலாமேனு பப்ளிஷ் அழுத்தினால் ஒண்ணு, பப்ளிஷ் ஆகும், அல்லது மொத்தமும் காணாமல் போகும், காக்கா கொண்டு போயிடும். அதனால் எப்பவுமே நான் பப்ளிஷ் செய்யறதுக்கு முன்னாலே அதை ஒரு ஜி3 பண்ணிக் கொண்டே தான் பப்ளிஷ் செய்யறதுனு வச்சிருக்கேன், இல்லாட்டி மறுபடி, மறுபடி, எழுதினதையே எழுதறாப்பலே ஆகிறதோட இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வந்து தொலைக்கும். அது சரி, இது எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? எல்லாருக்கும் இப்படி நடக்கும்கிறீங்க?

ஒருவேளை ஜி3 மறுபடியும் என் கிட்டே கோவிச்சுக்கிட்டாங்களோ? :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா? இப்படியா பழி வாங்கறது? :P உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை! ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா?? இப்போ விமரிசனம் பத்தின ஒரு விமரிசனம்.

மத்ததெல்லாம் கூட வேதாவை அவ்வளவு டிஸ்டர்ப் செய்யலை. கடைசி இரண்டு "கவிட்டுரை"க்கும் நான் கொடுத்திருக்கும் விமரிசனம், அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதின கவிட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்,
"நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்."
இவை அவரை மிகவும் தொந்திரவு செய்ததாய் உணர்ந்தேன். என்னைப் பொறுத்த வரை காதல் என்ற உணர்ச்சிக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சக தோழிகள் மூலம் அறிந்து புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் ஒரு பார்வை, ஒரு சின்னப் புன்னகை, ஒரு அதிர்ச்சி, ஓரத்து விழி நீர் இவற்றின் மூலமாய் சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். மற்றவர்கள் மாதிரி பீர் பாட்டிலும் கையுமாய், தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரியாமல் இம்மாதிரியான ஒரு நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு பிரியவும் பிரியாமல், தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது? ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.

என்றாலும் இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அது என்னனு புரியலை. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு. ஆனால் நேற்று வேதா சொல்லும்போதே சந்தேகமாத் தான் இருந்தது. 10-00 மணிக்கெல்லாம் முடியாதேன்னு. இப்போத் தான் வர முடிந்தது. அந்த கவிட்டுரையின் விமரிசனத்துக்கு யார் யாருக்கு என்ன கேட்கணுமோ இங்கே வந்து சொல்லுங்க, கேட்டுக்கறேன். மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.

Sunday, November 18, 2007

கூட்டணியால் ஏற்பட்ட ஏறுமுகம்!!!!!!!!!

அ.இ.அ.தி.மு.க. அல்லது தே.தி.மு.க. அல்லது பா.ஜ.க. அல்லது ல.தி.மு.க அல்லது தி.மு.க. அல்லது பா.ம.க. அல்லது கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ், ஃபார்வர்டு ப்ளாக், ராஜீவ் காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இப்படி எதுவோ ஒண்ணு, இன்னொரு கட்சியோட வச்சுக்கிட்ட அல்லது வச்சுக்கப் போற கூட்டணினு நினைச்சு வந்த உங்க எல்லாருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக் கொள்கிறேன்.

இது அது எதையும் பத்தி அல்ல, அல்லவே அல்ல. கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அதைப் பாடிட்டு இதோ விட்டேன் ஜூட், யாருக்கு என்ன சொல்லணுமோ சொல்லிக்குங்க, நான் மெதுவா வந்து பார்த்துக்குவேன், இன்னிக்குத் தான் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து எழுதற அளவுக்கு உடம்பு பரவாயில்லை. போன ஞாயிறு அன்று உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சாதாரண ஜலதோஷக் காய்ச்சல்னு தான் நினைச்சேன். அதென்னமோ எங்க குடும்ப டாக்டருக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாவே இருக்கும். ஏன் என்றால் ஜுரம் வரும்போதே எனக்கு 103*-க்கு மேலே தான் போகுமே ஒழிய, சாமானியத்தில் கீழே இறங்காது. ஒவ்வொரு முறையும் அவர் இது சாதாரண ஜுரம்னு சொல்லத் தான் ஆசைப் படுவார். ஆனால் அது நடக்காது.

வியாதிகள் என் உடலில் கூட்டணி அப்படி அமைத்துக் கொள்ளும். சும்மாவே அக்டோபர் மாசம் பிறந்தாலே எனக்கு பிராங்கைடிஸ் ஜூரம் வந்துடுமேனு பயந்துட்டே நடமாடுவேன். பத்தாக் குறைக்குச் சின்ன வயசிலே கூட இல்லாத டான்சில்ஸ் இப்போ 3 வருஷமாத் தொந்திரவு கொடுத்துட்டு இருக்கு. ஆபரேஷன் வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். அதனாலே அப்போ அப்போ அது கொடுக்கிற தொந்திரவு வேறே. இத்தோட ஸ்டமக் இன்ஃபெக்க்ஷன், யூரின் இன்ஃபெக்க்ஷன் என்று எல்லாம் சேர்ந்து ஒரே கூட்டணி அமைத்துக் கொண்டு இம்முறை பல்முனைத் தாக்குதல் நடத்திவிட்டது. க்ளீன் போல்ட்!!!!! சாப்பாடு எல்லாம் வீட்டில் சமைப்பதை மறந்துட்டு வெளியிலே வாங்க ஆரம்பிச்சு,அது ஒத்துக்காமப் போய் டாக்டரையே சாப்பாடு போடறீங்களானு கேக்கலாம்னு நினைச்ச சமயம் நேத்திலே இருந்து அரை மனசாய் வெளியேறி இருக்கு ஜுரம். இன்னும் கொஞ்சம் தொண்டைப் புண்ணும், வீக்கமும் இருக்கு, சரியாப் பேச முடியலை. முழுங்க முடியலை. இருந்தாலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மருந்துகளின் உதவியாலே கொஞ்சம் நடமாட்டமும், ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றமும் இருக்கு. இந்த வருஷக் கோட்டா இத்தோட முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசமும், நவம்பர் மாசமும் கடக்கிறது தான் எனக்குப் பெரிய விஷயமா இருக்கு.

வீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் இன்னும் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கலை. அவ்வளவுக்கு இன்னும் தெம்பு வரலை. கூடிய சீக்கிரம் வரும்னு நம்பிக்கையுடன்

வந்தேனே, வந்தேனே, வந்தேன், தேன், தேன்!!!!!

என் உடல்நிலை பற்றி விசாரித்த வேதா, பங்களூரில் இருந்து தொலைபேசிய மெளலி, சென்னையில் இருந்து தொலைபேசி விசாரித்த நானானி, திரு திராச. ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. தினமும் வர முடியாட்டாலும் எழுதி ட்ராஃப்ட் போட்டிருப்பதையாவது பப்ளிஷ் பண்ண முடியுமா பார்க்கிறேன்.

Monday, November 12, 2007

ரொம்பக் காய்ச்சலா இருக்கு!

உடம்பு சரியில்லை, அதனால் 2,3 நாளுக்கு எல்லாரும் கொண்டாடலாம்!!!!!! :))))))

@மெளலி, @ கணேசன், எனக்கு வேண்டிய தகவல்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து விட்டது.

Friday, November 09, 2007

test

ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்!



இன்று காலை தற்செயலாய் ஜெயா டிவியின் "காலை மலர்" நிகழ்ச்சியினைக் கேட்க நேர்ந்தது. பேராசிரியர் திரு டி.என்.கணபதி என்பவர் பேசிக் கொண்டிருந்தார். தலைப்பு என்னவெனத் தெரியாவிட்டாலும், (பாதியில் தான் கேட்க ஆரம்பித்தேன்) ஆன்மீகம் பற்றியும், மதங்களைப் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். வேதங்களில் இறை வழிபாடு பற்றிக் குறிப்பிடப் படவில்லை எனத் தெளிவாய்ச் சொன்னார். அதே சமயம் நம் சித்தர்களும் அதைக் குறிப்பிட்டிருப்பதாயும் சொன்னார். வேதங்களில் இயற்கையாக நாம் தினசரி பார்க்கும், சூரியன், சந்திரன், மழை, காற்று, நெருப்பு, நீர் போன்ற பஞ்ச பூதங்களின் சக்தியையே குறிப்பிட்டிருப்பதாயும்,சொன்ன அவர், சித்தர்கள் குறிப்பிடும் "சிவம்" என்னும் பரம்பொருள், தற்சமயம் வழிபாட்டில் இருக்கும் சைவ ஆகமங்கள் குறிப்பிடும், பரமசிவன், எனவும், சிவபெருமான் எனவும் நாம் குறிப்பிடும் சிவனும் அல்ல, ருத்ரன் எனப்படும் கடவுளும் அல்ல என்றார்.

பொதுவான ஒரு பரம்பொருளை "அது" எனக் குறிப்பிடுவோம் என்கிறார் அவர். இந்த "அது" வே "சிவம் எனச் சித்தர்களால் குறிப்பிடப் பட்டது எனக்கூறும் அவர், சித்தர்கள் எந்தக் குறிப்பிட்டக் கடவுளையோ, கோவில்களையோ, ஊர்களையோ, நீர்நிலைகளையோ குறிப்பிட்டுப் பாடியதில்லை எனவும் சொல்கிறார். இந்த வகையில் பார்த்தால் "பட்டினத்தார்" ஒரு சித்தரே அல்ல, சிவனடியார் எனவும் சொல்கின்றார். மேலும் சித்தர்கள் பதினெட்டு என்ற கணக்கும் சரி அல்ல என்கின்றார். பதினெட்டுக்கு மேல் சித்தர்கள் இருப்பதாயும், பொதுவாய் "நவகோடி சித்தர்கள்" எனச் சொல்லுவதாயும் கூறுகின்றார். அடையவேண்டிய சித்திகள் பதினெட்டு எனவும், அவற்றை அடைந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனப் பெயர் பெற்றதாயும் சொல்கின்றார். கீதையிலும் இந்தச் சித்திகளைப் பற்றிக் கூறும்போது கண்ணன், அர்ஜுனனிடம், "அர்ஜுனா! சித்திகள் மொத்தம் பதினெட்டு! என்னிடம் பத்தும், உலகத்துக்கு என எட்டும் உள்ளன. இந்த எட்டைக் கடந்து, என்னிடம் உள்ள பத்தையும் கடந்தால் சித்தன் ஆவாய்!" என்று கூறியதாயும் அதற்கான ஸ்லோகத்துடன் எடுத்துச் சொன்னார். (ஸ்லோகம் தேடவில்லை)

நம் உடலில் உள்ள சஹஸ்ராரங்களையுமே ஆறுமுகன் என்று சொல்லும் இவர் இந்த ஆறுமுகமும் இணைந்து செயல்படும் சக்தியே, வித்தே, "ஸ்கந்தன்" "முருகு" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளதாயும் சொல்கின்றார். ஆறுமுகம் ஆனதுக்கு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பொருள் என நான் நினைத்துக் கொண்டிருக்க அவர் மூலாதாரத்தில் இருந்து, சஹஸ்ராரம் வரை உள்ள ஆறு ஆதாரங்களையும் சொல்லி, இந்த சித்தர்களின் "முருக வழிபாடு" என்பதே யோகத்துடன் சம்மந்தப் பட்டது எனவும், இதைப் "பர்யாங்க யோகம்" எனச் சொல்லுவார்கள் என்றும் இந்த யோகத்தின் முடிவின் விளைவே "ஸ்கந்தன்" எனப்படும் ஆனந்தத்தின் பிறப்பு என்கின்றார். திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பற்றி விளக்கி இருப்பதாயும் கூறுகின்றார். மனதை அடக்கிக் குண்டலினியை மேலெழுப்பிப் பின் அதற்கும் மேல் பதினெட்டு நிலைகள் இருப்பதாயும் அவற்றையும் கடந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனவும் கூறுகின்றார். ஆகவே தான் சித்தர் வழிபாட்டில் முருகனுக்குத் தனி இடம் எனவும் இது முழுக்க முழுக்க யோக முறை, தனியொரு கடவுளுக்கு இல்லை எனவும் கூறினார்.

காலையில் இருந்து "பர்யாங்க யோகம்" பற்றி அறிய அலையாய் அலைந்தும் ஒண்ணும் தேறவில்லை. விக்கிக் கொண்டும், விக்காமலும் தேடியாச்சு. ஸ்ரீபீடியாவில் ஹயக்ரீவ ஸ்தோத்திரம் விளக்கத்தில் "பாரா வித்யா" என 32 இருப்பதாயும் அதில் விளக்கம் இல்லாமல் பேர்கள் மட்டும் போட்டுப் பத்தொன்பது வித்யைகளையும் போட்டு அவற்றில் பதினெட்டாவது வித்யை "பர்யாங்க வித்யை" எனப் போட்டிருக்கிறது. மெளலியோ, கணேசனோ தான் உதவ வேண்டும். :((((


1.Madhu Vidhyai

2.Gaayathri Brahma Vidhyai. This one is
particularly appropriate on this day after
Gaayathri Japam to reflect upon.

3.Koukshaya JyOthir Vidhyai

4.SaanDilya Vidhyai

5.Kosa Vij~Nanam

6.Purusha Vidhyai

7.Raigva Vidhyai

8.ShOdasa Kalaa Brahma Vidhyai

9.PrANa Vidhyai

10.PanchAgni Vidhyai

11.VaisvAnara Vidhyai

12. Sadh Vidhyai

13. BhUma Vidhyai

14.Dahara Vidhyai

15. PurushAthma Vidhyai

16.BaalAki Vidhyai

17. MythrEyi Vidhyai

18. Paryanga Vidhyai

19.Pradhardhana Vidhyai et al

Tuesday, November 06, 2007

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வலை உலகத் தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த நாள் இனிய நாளாக மலர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!

Friday, November 02, 2007

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!



இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க், பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!

அம்பத்தூர் "மாநரகாட்சி"

சந்தோஷப் பட்டுட்டு இருக்கும் அம்பிக்கு வசதியாக இங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு மணிக்கணக்காய் அமலில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் அம்பத்தூரை "மாநரகாட்சி"யாக மாற்றப் போறாங்களாம், காலையில் பேப்பர் பார்த்தேன். வருமானமே இல்லை, நீங்களே தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து மழைத் தண்ணீரை இறைச்சுக்குங்க, ரோடில் ரப்பிஷைப் போட்டு மூடிக்குங்க என்று சொல்லும் கவுன்சிலர்கள் இருக்கும் நகராட்சியை மாநரகாட்சிக்கு எப்படித் தேர்வு செய்தாங்கனு புரியவே இல்லை. சென்னையின் வடக்கு, மேற்குப் பகுதிகள் மட்டும் ஏன் இப்படினும் புரியவே இல்லை! என்ன பாவம் செய்தாங்க அந்த மக்கள் எல்லாம்? நேற்றுத் தென்சென்னைப் பகுதிக்குப் போக நேர்ந்தது. அங்கெல்லாம் இப்படி இல்லை, பலவிதங்களிலும் முன்னேறியுள்ளது தென் சென்னை. ஒருவேளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நபர்கள் யாராவது வடக்கு, மேற்குப் பகுதிகளில் குடியிருக்கணுமோ என்னமோ? இங்கே அதிகம் வசிப்பது தொழிற்சாலைகளிலும், ரயில்வே, மத்திய அரசுப்பணிகளிலும் இருக்கும் அடிமட்ட, நடுத்தர வர்க்க மனிதர்கள் தானே! அதனால் தான்னு நினைக்கிறேன். சொல்லிட்டு இருந்தால் தினமும் சொல்லிட்டே தான் இருக்கும்படியா இருக்கும். நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான் அப்படினு மனசைத் தேத்திக்கணும்.

திரு ஜே.சி.டி. பிரபாகரன் ஒருத்தர் தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமயம் பலவிதமான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ததோடு அல்லாமல் அடிக்கடி நடைப்பயணமும் மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு அறிவார். இப்போ அவர் இருக்கும் இடமே தெரியலை! :(((( ஒரு வேளை "மாநரகாட்சி"யாக அம்பத்தூர் மாறினாலும் கூட வீட்டு வரி, சொத்து வரி போன்ற இன்ன பிற வரிகளின் உயர்வைத் தவிர வேறு உயர்வு ஏதும் வரும்னு தோணவில்லை. இன்னிக்குக் காலையில் 9-30 க்குப் போன மின்சாரம் இப்போ 12-15க்குத் தான் வந்திருக்கிறது. ஃபோன் பண்ணினால் ஒண்ணு ஃபோனை எடுக்கிறதில்லை, அல்லது, தொலைபேசி இணைப்புத் தாற்காலிகமாய்த் துண்டிக்கப் பட்டுள்ளது என அறிவிப்பு வரும். முன்னால் சொல்லிட்டாலாவது அதுக்குத் தகுந்தாற்போல் நம்ம வேலைகளைச் செய்து கொள்ளலாம். அதுவும் அறிவிக்கிறது இல்லை! எப்போ மாறும்னு புரியவே இல்லையே! :((((((((( ஒவ்வொரு வருஷமும் இது பத்தி நிறையவே சொல்லியாச்சு, அதனாலே நம்ம வேலையை மட்டும் தான் நாம் கவனிச்சுட்டுப் போகணும் போலிருக்கு. :((((((