எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 23, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 24

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17.


யசோதை மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பூதனை வந்துவிட்டு இறந்து போனதின் பின்னர் அவள் எப்போது அதிக எச்சரிக்கையாகவே இருந்தாள். கண்ணுக்குத் தெரியாத வலையொன்று தன் நீலமேகக் கண்ணனைச் சுற்றிப் பின்னப் பட்டிருப்பதாயும், கூடிய சீக்கிரம் அந்த வலையானது தன் கண்ணனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ எனவும் எண்ணிக் கலங்கினாள். இத்தனை வருஷம் கழித்துக் கர்ப்பம் தரித்துப் பிறந்த பிள்ளை! என் பிள்ளை! ஊரெல்லாம் கொண்டாடும் வண்ணம் அனைத்துக் குணநலன்களும், விளையாட்டுகளும் நிறைந்து அனைவரையும் கவரும் கண்ணன்! இவனைப் போய்க் கொல்லவேண்டுமென யாருக்குத் தோன்றி இருக்கும்? கம்சனுக்கா? எனில் கம்சனுக்கு என் குழந்தையிடம் என்ன பகைமை? தேவகியின் குழந்தை யாரெனத் தெரியாமல் என் குழந்தையைக் கொல்லச் செய்தானா? அல்லது எல்லாக் குழந்தைகளையும் கொன்று வந்த பூதனை இங்கேயும் வந்து இவனைக் கொல்ல நினைத்தாளா?? மடியில் கிடந்த குழந்தை நன்கு உறங்கி கொண்டிருந்தது.

40:
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.

ஆஹா, இவன் தவழ்ந்து மண்ணைத் தின்றபோது வாயிலிருந்து மண்ணை எடுக்கும்போது எனக்கு ஒரு கண நேரம் ஒரு மயக்கம் வந்ததே! உலகு எல்லாம் இவன் வாயில் இருப்பதாய்க் கண்டேனே! அது பொய்யாகவே இருக்க முடியாது! என் கண்ணன் அற்புத சக்தி பெற்றவன் தான். இவன் தான் அனைவரையும் காக்கப் போகின்றான், இப்போது குழந்தையாக இருந்தாலும் காத்தும் வருகின்றான். என்றாலும் எத்தனை அழகான குழந்தை இவன்? முகம் எப்படி ஜொலி ஜொலிக்கின்றது? இந்தக் கண்களின் அழகைச் சொல்ல முடியுமா? சிவந்த அதரங்களால் இவன் என்னை முத்தமிடும்போது, அம்மா, எவ்வளவு ஆனந்தமாய் இருக்கின்றது? இவன் காதில் இந்தக் குழை எத்தனை அழகாய்ப் பொருந்தி உள்ளது? என் பிள்ளை எத்தனை அழகு? இவன் என் கிருஷ்ணன், என் மகன்! யாருக்காகவும், எக்காரணத்துக்கும் இவனை விட்டுப் பிரியவே மாட்டேன்! மடியில் கிடந்த குழந்தையை இறுக்கி அணைக்கின்றாள் யசோதை! அவள் உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஆனால் மதுராவிலோ???உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ. 2.

இங்கே மதுராவிலோ தேவகி, தன் குழந்தையை எண்ணியும், அவனுக்கு வந்த ஆபத்து நீங்கியதையும் நினைத்து ஆறுதல் அடைந்தாலும், குழந்தையைத் தாலாட்டிப் பாலூட்டிச் சீராட்டவில்லையே என்ற தாபம் மேலோங்கி நிற்கத் தன் கையில் இருந்த அந்தக் கருநிற பளிங்குச் சிலையைத் தன் குழந்தையாக எண்ணித் தாலாட்டுகின்றாள். அந்தச் சிலையின் முகத்திலேயே தன் குழந்தையின் முகத்தைப் பார்க்கின்றாள். ஒவ்வொரு ஆபரணமாய்ப் பூட்டி அழகு பார்த்து ரசிக்கின்றாள் மனதிற்குள்ளே! தன் குழந்தை சாட்சாத் அந்த வாசுதேவனே! ஸ்ரீமந்நாராயணனே என்று மனதிற்குள்ளே நிச்சயம் கொண்டிருந்தாள் தேவகி! தன்னையும், தன் கணவரையும் மட்டுமின்றி இந்த உலகையே அவன் தான் காக்கப் போவதாயும், தர்மத்தை நிலைநாட்டவே பரம்பொருள் தன் வயிற்றில் உதித்திருப்பதாகவும் உறுதியாக நம்பினாள் தேவகி. ஆகவே அவளுக்குத் தன் கிருஷ்ணனுக்கு தேவாதிதேவர்கள் அனைவரும் வந்து பரிசுகள் கொடுப்பதாயும், அவனுக்குக் குற்றேவல் புரிவதாயும் தோன்றியது.

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

தன் குழந்தைக்குத் தேவாதிதேவர்களும், அந்த விடைஏறும் ஈசனும் என்ன என்ன கொடுத்து அலங்கரித்தனர் என்று தாலாட்டாய்ப் பாட ஆரம்பித்தாள் தேவகி! வலம்புரிச் சங்கும், சேவடிகளில் ஜல் ஜல் என்று ஒலிக்கும் கிண்கிணியும், கைகளில் வளையலும், இடுப்பில் அரைஞாணும், தேவர்கள் கொடுத்தனர் உனக்கென, ஆகவே என் கண்ணே நீ அழாதே என்று தாலாட்டினாள் தேவகி! குழந்தை எங்கே அழுதது? அதுவும் சிலையாகிய குழந்தை, என்றாலும் அதை உயிருள்ள குழந்தையாகவே நினைத்தாள் தேவகி. அவள் மனமெல்லாம் கோகுலத்தில் இருந்தது.

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ. 8.

இங்கே யசோதையோ எனில் தன் பிள்ளையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவனுக்கு பொற்சுரிகை, காப்பு, வளையல், உச்சியில் சுட்டி, பொற்பூ போன்றவற்றைப் பூட்டி அழகு பார்க்கின்றாள். அவன் பூதனையின் நச்சுப் பாலை அருந்தி அவள் உயிரைப் போக்கியதைப் பாடலாய்ப் பாடி மகிழ்கின்றாள். என்ன இருந்தாலும் கிருஷ்ணனுக்கு வந்த ஆபத்து நீங்கிவிட்டதாய் யசோதை நினைக்கவில்லை. ரோஹிணியிடமும், நந்தனிடமும் எப்போது கண்ணனை கவனித்துக் கொள்ள வேண்டுகின்றாள். ஆனால் கண்ணனையோ கட்டுப்படுத்துவது ரொம்பக் கஷ்டமாய் இருந்தது. எப்போவாவது யசோதையோ, ரோஹிணியோ, நந்தனோ அவனைக் கவனிக்கவில்லை என்றால் நழுவி விடுகின்றான் பலராமனுடன் ஜோடி போட்டுக் கொண்டு. யசோதை அலறித் துடித்துக் கண்ணா, கண்ணா, எங்கேயப்பா போனாய்? என் செல்வமே, என் அரசே, எனக் கூவிக் கொண்டு அங்குமிங்கும் அலையவேண்டி இருக்கிறது. வீட்டில் வேலை எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. இப்போ அதுவா முக்கியம்? என் கண்ணனல்லவோ முக்கியம்!

ஏ, கோபி சாரு, நீ என் கண்ணனைக் கண்டாயோ, ஏ, மாலினி, நீ பார்த்தியா? ரோஹிணி, அக்கா, நீங்கள் கண்டீர்களோ? என்று கூவிக் கொண்டு அலைகின்றாள் யசோதை. அப்ப்பாடா, கடைசியில் கண்டு பிடித்தாயிற்றே, கண்ணனை, சற்றே கோபத்துடன் யசோதை அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, கீழே இறங்க முடியாமல் இறுக்கிக் கொள்ள, கண்ணனோ, அவள் முகத்தைப் பார்த்து வெகு மோகனமாய்ச் சிரித்துக் கொண்டு, தன் சின்னஞ்சிறு கைகளால் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தோளில் தலையைச் சாய்த்துக் கொள்கின்றான். கண்களில் விஷமம் மீதூற, அவன் சிரிக்கும் சிரிப்பைப் பார்த்தால், கோபமாவது, ஒன்றாவது?

சொல்லு மழலையிலே- கண்ணா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
முல்லைச் சிரிப்பாலே- எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்!

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப் போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே-உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

5 comments:

  1. //சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
    அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
    அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
    செங்கண்கருமுகிலே.//

    ரொம்பப் பிடிச்சுப் போன பாடல். அம்மா, போனமுறையும் குலசேகராழ்வாரோடதுன்னு தெரிஞ்சது, ஆனா விளக்கமும் அழகா எழுதியிருக்கீங்கன்னு சொன்னேன் :) இப்பவும் அப்படித்தான். என்னமா ஒன்றிப் போய் ரசிச்சு லயிச்சு எழுதறீங்கன்னு படிக்கிறப்பவே தெரியுது :) மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //போனமுறையும் குலசேகராழ்வாரோடதுன்னு //

    ஹிஹிஹி, இது பெரியாழ்வார்! :)))))))))

    ReplyDelete
  3. பதிவு எழுதறவங்க இதெல்லாம் முன்னாடியே பதிவுல தெளிவா சொல்ல வேண்டாமோ? ஹ்ம்... இப்பவாச்சும் சொன்னீங்களே... நன்றி :)

    ReplyDelete
  4. hats off to you Maami. The way you write ,simply superb. appdiyae naanum kannanai konjalaam pola thonudhu. rasichu ...anubavithu yezhudhugirergal. WoW!

    sorry for the belated wishes for The New year and pongal.

    ReplyDelete
  5. \என்னமா ஒன்றிப் போய் ரசிச்சு லயிச்சு எழுதறீங்கன்னு படிக்கிறப்பவே தெரியுது :) மிக்க நன்றி.
    \\

    கவிநயா அக்கா சொன்னது 100=100 உண்மை..கலக்குறிங்க தலைவி ;)

    ReplyDelete