எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 27, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

கண்ணனை அழைத்த யசோதை ஒரு கணம் தயங்கினாள். கண்ணனை வாயைத் திறக்கச் சொல்லி வெண்ணெய் தின்றானாஎனப் பார்க்க நினைத்ததை மாற்றிக் கொண்டாள். ஆஹா, அன்றொரு நாள் இவன் மண்ணைத் தின்றானோ என எண்ணி வாயைத் திறக்கச் சொன்னபோது என்ன நடந்தது? யசோதைக்கு அதை நினைக்கையில் மயக்கமே வந்தது. கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.

அம்மா தன் வாயில் என்ன பார்க்கிறாள்? அங்கே என்ன அகில உலகுமா தெரிஞ்சிருக்கப் போகிறது? நிலவையும், விண்மீன்களையும், சூரியனையுமா பார்த்தாள்? யசோதையின் முகத்தை ஏதுமறியாப் பாலகன் ஏறிட்டுப் பார்க்க, விதிர் விதிர்த்த யசோதை, குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள். யசோதையின் நினைவில் அது முட்டி மோத அவள் கண்ணனை அழைத்து உண்மை எதுவெனக் கேட்டாள்.

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

கண்ணா, அப்பா, ஏன் கோபிகளை இப்படிப் படுத்துகின்றாய்? நல்ல பிள்ளையாக நடந்து கொள்" என்று கெஞ்சினாள் யசோதை. கண்ணனோ, " யசோதா அம்மா, நீ எப்போதும் கோபிகள் பக்கமே பேசுகின்றாயே? நான் உன் பிள்ளை அல்லவா? என் பக்கம் பேசவே மாட்டேன் என்கின்றாயே? நீ என்னைப் பெற்றெடுக்கவில்லையா?" என்று கேட்கின்றான். கண்ணன் இவ்வளவு தூரம் பேசுகின்றதைப் பார்த்த கோபியர் அவன் மழலைச் சொற்களில் மகிழ்ந்து போய், "சரி அப்பா, கண்ணா, நீ அரிச்சந்திரன் தான் போ!" என்று பரிகாசம் செய்கின்றனர். "நீ வெண்ணெய் தின்றதை நாங்கள் பார்த்தோமே?" என்று சொல்கின்றனர். "இல்லை, இல்லை," அவசரமாய் மறுத்தான் கண்ணன். "நான் அந்த மரத்தின் மேலே இருந்தேன். பலராம அண்ணன் கூட என்னுடன் தான் இருந்தான்." வேலிக்கு ஓணான் சாட்சி!யசோதை கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, "கண்ணா, உண்மையைச் சொல், உன்னை இப்போது அடிக்கப் போகின்றேன்!" என்று வருகின்றாள். அவ்வளவு தான். கண்ணனின் முகம் வாடி விடுகின்றது. அழுகையில் உதடு பிதுங்குகின்றது. யசோதையின் மனம் துடிக்கின்றது. தன் இரு கைகளையும் தன்னை அறியாமல் நீட்டி, "வா" என அழைக்கின்றாள் கண்ணனை. கண்ணன் ஓடிப் போய்த் தாயின் இடுப்பில் ஏறிக் கொண்டு, அவள் தோளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு இதழ்களில் கள்ளப் புன்னகையுடனும், கண்களில் பொய்யான அழுகையுடனும் கோபிகளைப் பார்க்கின்றான். கண்ணனைத் தன் கால்களில் இட்டு ஆட்டுகின்றாள் யசோதை.

வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.

கோபியர் அனைவரும் இனி நம் குற்றச்சொற்கள் யசோதையின் காதில் ஏறாது எனப் புரிந்து கொண்டு கண்ணனின் சாதுரியத்தை மெச்சிக் கொண்டே அவரவர் வீடு செல்கின்றனர். வீடுகள் அனைத்தும் பூட்டப் படுகின்றன. சாளரங்கள் அடைக்கப் படுகின்றன. எனினும் பலராமன் தோள் மீது ஏறி, சுவர் ஏறிக் குதித்துக் கூரையின் மேலே ஏறி, ஓடுகளைப் பிரித்துக் கண்ணன் கோகுலத்து வீடுகளின் உள்ளே செல்வதும், வெண்ணை, பால், தயிர் போன்றவற்றைச் சாப்பிடுவதும் நிற்கவில்லை. கோகுலத்து மக்கள் அசந்துவிட்டனர் கண்ணனின் சாமர்த்தியத்தால். கோகுலத்தின் சிறு பையன்கள், பெண்கள் அனைவருமே இந்த விஷயத்தில் கண்ணன் கட்சி. அவனைக் காட்டிக்கொடுக்க ஒரு ஈ, எறும்பு கூட அங்கே இல்லை.

தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி
ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4 (குலசேகர ஆழ்வார்)

கொண்டையொண் கண்மட வாளொருத்தி
கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம்
தாமோத ராமெய் யறிவன்நானே 6.2 (குலசேகர ஆழ்வார்)

இத்தோடு மட்டுமா? ஆய்ச்சியர்கள் தயிர் கடையும்பொழுது கண்ணனும் அங்கே சென்று நானும் கடைவேன் எனத் தன் இரு சிறு கரங்களால், முகம் வேர்க்க, இதழ்கள்சிவந்து துடிக்க, தயிர் கிடைக்கும் என்ற ஆசையுடனேயே அவர்களுக்கு உதவும் முகமாய் அவனும் கடைகின்றானாம். எப்பேர்ப்பட்ட பாக்கியவான்கள??? ஆனால் தேவகி? கீழ் வரும் பாடல் சொல்லுகின்றதே அவள் நிலையை! :(

களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே 7.4 (குலசேகர ஆழ்வார்)

யசோதை கண்ட கண்ணனின் முழுநிலா போன்ற முகத்தையும், அழகுத்திருக்கைகளையும், செங்கீரைத் தண்டை ஒத்த சிறு கால்களயும் அவை மிதிக்கும் இன்பத்தையும், குழந்தை பேசும் மழலைப் பேச்சையும், கையில் எடுத்துச் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டும் அனுபவத்தையும் பாவியான தேவகி பெறவில்லை. ஊர், ஊராய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாளே!

6 comments:

  1. சந்தோஷமா சொல்லிக்கிட்டே வந்து, சோகமா முடிச்சிட்டீங்களே :( பாவம்தான் தேவகி :(((

    ReplyDelete
  2. //கையில் எடுத்துச் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டும் அனுபவத்தையும் பாவியான தேவகி பெறவில்லை. ஊர், ஊராய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாளே! //

    பாவமா இருக்கு. :-( ஏன் அப்படி. பூர்வ ஜன்ம சமாசாரம் கதை ஏதாவது உண்டா?

    ReplyDelete
  3. அருமை..கலர் எல்லாம் போட்டு கண்ணன் கதையை கலக்குறிங்க தலைவி ;)))

    ஒரு கேள்வி மனசுல வருது...பட் நான் அதை அப்புறம் கேட்குறோன்.

    ReplyDelete
  4. தேவகியின் நிலைமை பரிதாபத்துக்கு உரியது தானே கவிநயா!

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. //பாவமா இருக்கு. :-( ஏன் அப்படி. பூர்வ ஜன்ம சமாசாரம் கதை ஏதாவது உண்டா?//

    திவா, சொல்லுங்க, கேட்டுக்கறோம்!

    ReplyDelete
  6. @கோபி, என்ன கேள்வினு தனி மெயிலிலாவது கேட்கலாமே? மண்டை காயுது இல்லை, வெயில் வேறே ஜாஸ்தி! :)))))))

    ReplyDelete