எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 30, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்

உடனேயே இருவரும் குந்தியைச் சென்று கண்டு ஆறுதல் சொல்ல எண்ணினார்கள். குந்தியின் நிலைமையை வர்ணிக்க முடியவில்லை. மாத்ரியின் இரு பாலகர்களும் சின்னஞ்சிறுவர்கள். குந்தியின் புதல்வர்கள் மூவரும் சிறுவர்களே எனினும், இவர்கள் இருவரையும் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இந்தக் குழந்தைகளை வளர்க்கவேண்டி குந்தி உடன் கட்டை ஏறவில்லை என்றால் என்ன ஆச்சரியம்? மாத்ரி மட்டும் ஏன் தன் குழந்தைகளை விட்டு விட்டு உடன் கட்டை ஏறினாள்? குந்தி ஏன் உடன்கட்டை ஏறவில்லை? வசுதேவருக்கும், தேவகிக்கும் குழப்பம் மேலிட்டது. மெல்ல மெல்லக் குந்தி விளக்கினாள். முனிவர் ஒருவரின் சாபத்தினால் பாண்டுவிற்கு மனைவியைத் தொட முடியாது எனவும், அத்தகைய நிலையிலேயே அவர்கள் மூவரும் காட்டிற்கு வாழ வந்ததாகவும், இருவருக்கும் ஐந்து குழந்தைகள் பிறக்கும் வரை அனைத்தும் சரியாகவே இருந்ததாயும் சொன்னாள் குந்தி. இப்போது வசந்தம் வந்து எங்கேயும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் புஷ்பங்களையும், காட்டு மிருகங்களின் அந்யோந்யங்களையும் கண்ட மன்னன் பாண்டுவிற்கு ஒரு கணம் தன்னுடன் வந்த மாத்ரியிடம் ஆசை மூண்டு அவளைத் தொட நினைத்ததையும், அவன் எண்ணம் ஈடேறாமல் மாத்ரியின் கரங்களிலேயே அவன் மரணமடைந்ததையும் கூறினாள் குந்தி.

மன்னனுடன் இருவருமே உடன்கட்டை ஏறத் தயாராய் இருந்தார்கள். ஆனால் மாத்ரியோ குந்தியை உடன்கட்டை ஏறவிடவில்லை. தவறு தன்னால் ஏற்பட்டது என்பதால் குந்தி உடன்கட்டை ஏறவேண்டாம் எனவும், தான் மட்டும் மன்னனுடன் உடன்கட்டை ஏறுவதாயும், குந்தி தன் மூன்று குழந்தைகளுடன், மாத்ரியின் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து வளர்க்கவேண்டும் எனவும் உறுதிமொழி வாங்கிக் கொண்டு மாத்ரி உடன்கட்டையில் விழுந்துவிட்டாள். குழந்தைகளிடம் இயல்பாகவே அதிகம் பிரியம் வைத்திருக்கும் குந்தி இப்போது தன் மூன்று குழந்தைகளோடு மாத்ரியின் இரு குழந்தைகளும் சேர்ந்து ஐந்து பேருக்கும் தாயானாள். ஐவரையும் ஒரே வயிற்றில் பிறந்த தன் புதல்வர்களாகவே நினைக்கத் தலைப்பட்டாள். அங்கே இருக்கும் ரிஷி, முனிவர்கள் பாண்டு இறந்த செய்தியையும், மாத்ரி உடன்கட்டை ஏறின செய்தியையும் ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, குந்தியையும், ஐந்து குழந்தைகளையும் தங்களில் பொறுப்பானவர்கள் அழைத்து வந்து ஹஸ்தினாபுரம் சேர்க்கப் போவதாயும் பீஷ்ம பிதாமஹருக்குச் செய்தி அனுப்பி விட்டார்கள். ஆகவே குந்தி தன் ஐந்து குழந்தைகளுடன் ஹஸ்தினாபுரம் பிரயாணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

செய்தி கேட்ட வசுதேவரும், தேவகியும் தாங்களும் மதுரா திரும்பப் போவதாயும், செல்லும் வழியில் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் குலகுருவான வேத வியாசரைச் சென்று தரிசித்துவிட்டே செல்லப் போவதாயும் சொன்னார்கள். குந்தியும் வியாசரைத் தரிசிக்க விரும்பினாள். அதிலும் ஹஸ்தினாபுரம் செல்லும் முன்னர் வியாசரைத் தரிசித்துவிட்டே செல்லவேண்டும் என்று எண்ணினாள். ஆகவே அவளும் வசுதேவருடன் குருக்ஷேத்திரம் வருவதாய்ச் சொன்னாள். தேவகி குந்தியைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னாள். தன் கணவனோடு சேர்ந்த அனைத்து உறவினர்களும் இவ்வாறு துன்புறுவதைக் கண்ட தேவகி மனம் உடைந்தாள். ஆனால் குந்தியோ, “மாத்ரி அதிர்ஷ்டம் செய்து விட்டாள்.நான் துர்ப்பாக்கியசாலி.” என்று அழுதாள். தேவகி அவளைச் சமாதானம் செய்தாள். ஆனால் குந்தியோ ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்குமோ? காந்தாரி என்ன சொல்லப் போகின்றாளோ என அஞ்சினாள். பீஷ்மபிதாமஹர் நம் பக்கம் பேசுவாரா தெரியவில்லையே என ஏங்கினாள். ஆனால் தேவகியின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. அவள் குந்தியைப் பார்த்துப் பொறாமை கொண்டாள்.

ஆம், குழந்தைகள் ஐவரும் மிக மிக உரிமையுடனும், சந்தோஷத்துடனும் தாய் மடியில் போட்டி போட்டுக் கொண்டு அமர்ந்து விளையாடினார்கள். ஒரு குழந்தை மடியில் அமர்ந்தால் மற்றது அதைத் தள்ளிவிட்டுத் தான் அமர்ந்தது. மற்ற மூவரும் தாயின் பின்னால் சுற்றி நின்று கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினார்கள். குந்தியின் முகத்தில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷமும், ஆனந்தமும், திருப்தியும் மேலோங்கியது. தேவகி பெற்றது ஏழு அல்ல எட்டுக் குழந்தைகள். ஒன்றையாவது அவளால் கொஞ்ச முடிந்ததா? ஆறு குழந்தைகள் இறந்தே விட்டன. ஏழாவது குழந்தையோ நிர்ணயிக்கப் படும் நாள் முன்னாகவே பிறக்கவைக்கப் பட்டுக் கண்காணாமல் கொண்டு போகப் பட்டான். எட்டாவது குழந்தையையோ பார்த்தது சில கணங்களே. அவன் நிறம் மட்டுமே நினைவில் உள்ளது. என் கண்ணா, கண்ணா, மகனே, யார் மகனாய் வளர்கின்றாய் அப்பா நீ இப்போது? என்ன பாவம் செய்தேனடா நான்? தேவகியின் மனம் பொங்கித் தளும்பியது, கண்ணிலிருந்து மழையாக வர்ஷிக்க ஆரம்பித்தது.

குந்தியோ எனில் அவள் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. தேவகி தன் கணவனுடன் சேர்ந்து வந்திருப்பதையும் தீர்த்த யாத்திரைக்குக் கணவனோடு சென்று வந்திருப்பதையும் கண்டு மனம் நொந்து புழுங்கினாள். தன் கணவனோடு இவ்விதம் சென்றுவரத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என எண்ணி ஏங்கினாள். தன் மகன்களைக் கண்டு தேவகி தன் இழந்த மகன்களின் நினைவினால் குமுறுவதையும் புரிந்து கொண்டாள். அவளுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்லுவது எனத் தெரியாமல் திகைத்தாள். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். ஒருத்தர் அணைப்பில் மற்றவர் ஆறுதல் காணவும் முனைந்தனர். துர்பாக்கியசாலிகளான இரு பெண்மணிகளும் இவ்வாறு மனம் ஆறுதல் காண முனைந்தனர். யுதிஷ்டிரரைக் கண்ட தேவகி இவன் நம் பலராமனைவிடக் கூடப் பெரியவன் அல்லவோ. இதோ இருக்கின்றானே, பலசாலியான இரண்டாம் பிள்ளை, பீமசேனன். பலராமனும் இவனுக்கு ஈடாக இருப்பான் அல்லவோ. இதோ மூன்றாம்பிள்ளை வெண்மை நிறத்தவன் ஆன அர்ஜுனன். இவனைவிட நம் கண்ணன் சற்றே பெரியவன் அன்றோ? எனினும் இருவரும் நல்ல தோழர்களாய் இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. மாத்ரியின் புதல்வர்கள் இருவருமே குழந்தைகள். தேவகி ஒவ்வொருத்தரையும் பார்த்துவிட்டுத் தன் மக்களை தூரத்தில் இருந்தாவது காண ஏங்கினாள்.

Wednesday, April 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்


இந்தக் கண்ணன் வந்தான் தொடர் பற்றி எழுதும்போது அதனுடன் தொடர்புள்ளவையாகச் சில நிகழ்வுகள் நடப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சி ஒன்றில் மஹாபாரதத் தொடரில் ஸ்ரீகிருஷ்ணர் சரித்திரம் காட்டும்போது, முன்ஷி அவர்களின் இந்த கிருஷ்ணா தொடரை அடிப்படையாக வைத்தே எடுக்கப் பட்டிருக்கிறதை பரோடாவில் இருந்தபோது காண நேர்ந்தது. ராதையுடன் கண்ணன் சம்பந்தப் பட்ட இடங்களும், கோகுலத்தில் இருந்து பிருந்தாவனம் மாறுவது, அங்கிருந்து மதுரா செல்வது, கண்ணன் கம்சன் வதம் செய்யும் நிகழ்வுகளும், என அனைத்துமே முன்ஷிஜியின் இந்தக் கிருஷ்ணாவதாரம் புத்தகக் கதையின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டிருந்தன. இப்போது தமிழ்த் தொலைக்காட்சியிலும் ஸ்ரீகிருஷ்ணா தொடர், இதுவும் ஹிந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப் பட்டதே என்றாலும் கொஞ்சம் விட்டலாசாரியாவின் பாணியில் ஆன அதிசய நிகழ்வுகளோடு காட்டப் படுகின்றது.

இது தவிர தொலைக்காட்சிகளில் வரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் கேட்க முடிகின்றது. எல்லாவற்றுக்கும் மேலே சென்ற வாரம் கல்கி பத்திரிகையில் வ்ரஜபாஷை பற்றியும், செளராஷ்டிரர் பற்றியும் ஆய்வு செய்த திரு கே.ஆர்.சேதுராமன் என்பவர் எழுதிய தமிழ்நாட்டில் செளராஷ்டிரர்: முழு வரலாறு என்னும் புத்தகத்தின் விமரிசனத்தில், அநேகம் வரலாற்றுக் குறிப்புகளும், கஜினி காலத்தில் சோம்நாத்திற்கு ஏற்பட்ட அழிவில் இருந்து செளராஷ்டிரர் இடம் பெயர நேரிட்டதையும், பல்வேறு இடங்களில் குடியேறியதையும், நெசவுத்திறனையும், போர்க்கலையின் வல்லமை பற்றியும், பக்தி பற்றியும், மன்னர்களால் செளராஷ்டிரர் இனமே போற்றிக் கெளரவிக்கப் ப்பட்டு வந்ததையும், இன்னும் அதிகமாய் அவர்கள் மொழி தான் வ்ரஜ பாஷை எனவும், ஸ்ரீகிருஷ்ணர் பேசியதும் இந்த வ்ரஜ பாஷை என்றும் சொல்லப் பட்டிருக்கிறது எனப் படித்தேன். செளராஷ்டிர மொழி தான் விரஜ பாஷை என்றும், ஸ்ரீகிருஷ்ணரும் அதே பேசினார் என்றும் அறிய நேரிட்டால் நம் கூடல் குமரனுக்கும், சிவமுருகனுக்கும் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கும். அல்லது அவங்களுக்கு ஏற்கெனவேயே இது தெரிந்திருக்கலாம். ஆனால் மதுரையில் செளராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் என்ற ஒன்று உண்டு. இப்போ என்னோட சந்தேகம், மதனகோபால ஸ்வாமி கோயிலும், இதுவும் ஒண்ணா, வேறே, வேறேயானு. ரொம்ப வருஷமாச்சா அந்தப் பக்கமே போய், சரியா நினைவில்லை. ஆதாரபூர்வமாய்ப் பல வரலாற்றுக் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கிறதாய் விமரிசனம் சொல்லுகின்றது. ஏற்கெனவே இரு பதிப்புகள் விற்றுப் போய் மூன்றாம் பதிப்பு வந்திருக்கும்போது விமரிசனமும் வந்திருக்கு. நான் இப்போத் தான் பார்க்கிறேன். படிக்கணும், புத்தகம் கிடைச்சால்.
********************************************************************************************
கண்ணனைச் சற்று ராதையைப் பற்றி நினைக்கத் தனிமையில் விடுவோமா?? தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அவனைப் பெற்ற பெற்றோர்களின் நிலையைப் பற்றிக் கொஞ்சம் அறியலாமா? கிட்டத் தட்ட ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன வசுதேவரும், தேவகியும் தீர்த்த யாத்திரையை ஆரம்பித்து. இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் மேற்கே செளராஷ்டிரத்தில் சூரியனின் நிரந்தர வாசஸ்தலமாய்க் கருதப் படும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்து, புனித கங்கையில் நீராடி வாரணாசி என்னும் காசி க்ஷேத்திரத்தில் தரிசனம் செய்து கொண்டு பலவேறு இடங்களிலும் கங்கைக்கரையில் சென்று தரிசித்துவிட்டுக் கடைசியாக மகா புண்ய க்ஷேத்திரம் எனப்படும் பதரிகாசிரமம் செல்லும் வழியில் நவரத்தினங்களும் கிடைக்கும், இமயமலைப் பகுதியையும் தரிசித்தனர். இரவில் கீதம் இசைக்கும் அலக்நந்தா நதிக்கரையிலும் தங்கிக் கொண்டு அங்கே, ஒரு ஆசிரமத்தில் தன் இரு மனைவியருடனும் இருந்த அஸ்தினாபுரத்து அரசன் ஆன பாண்டுவையும், அவன் மனைவியும், வசுதேவரின் சொந்த சகோதரியும் ஆன குந்தியையும், பாண்டுவின் மற்றொரு மனைவி ஆன மாத்ரியையும் சென்று பார்த்தார்கள்.

வழியில் பூக்களின் சொர்க்கமாய்த் திகழும் இமயப் பகுதியையும் கண்டு பூக்களின் ஆனந்தத்தையும், நறுமணத்தையும் ஒருசேர அனுபவித்து எந்தக் கவிஞனாலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு செளந்தரியத்துடன் விளங்கும் அந்தப் பகுதியைக் கண்டு ரசித்தனர். மெதுவாய் பதரிகாசிரமம் அடைந்த வசுதேவரும், தேவகியும் அங்கே ஆசிரமங்களில் தங்கி இருந்த ரிஷி, முனிவர்களின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடான தவ வாழ்க்கையையும் கண்டு வியந்த வண்ணம் வியாசர் வசித்த குகைக்குச் சென்று அவரைத் தரிசிக்க எண்ணினார்கள். ஆனால் க்ருஷ்ண த்வைபாயனார் என அழைக்கப் படும் வியாசரோ அப்போது அங்கில்லை. குருக்ஷேத்திரம் சென்றிருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றமடைந்த இருவரும் அங்கேயே தப்த குண்டத்தில் புனித நீராடிவிட்டு பத்ரிநாதரைத் தரிசனம் செய்தனர். அங்கே நர, நாராயண ரூபங்களாய் இருந்த இரு மலை வடிவங்களையும் தரிசனம் செய்து கொண்டனர். அப்போது திடீரென அவர்களுக்கு ஒரு துக்கச் செய்தி கிடைத்தது. வசுதேவரின் சகோதரியான குந்தியின் கணவர் ஆன மஹாராஜா பாண்டு இறந்துவிட்டதாயும், மாத்ரி அவனுடன் உடன் கட்டை ஏறிவிட்டதாயும், குந்தி ஐந்து குழந்தைகளையும் தனியே வைத்துக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாயும் செய்தி வந்து சேர்ந்தது.

Tuesday, April 28, 2009

தமிழ்த் தாத்தாவின் அஞ்சலி, மீள் பதிவு!


தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள் பிப்ரவரி 19-ம் தேதி.

இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.

ஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.

இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் இருவரும் உண்மையாகவே உடல் வருந்தித் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.

குழம்பவேண்டாம். சகாதேவன் தமிழ்த் தாத்தான்னா இன்றைய த்லைமுறைக்குத் தெரியாதேனு சொல்லி இருந்த பின்னூட்டத்தைப் பார்த்ததும், போன வருஷம் அவரோட பிறந்த நாளைக்குப் போட்ட இந்தப் பதிவை மீள் பதிவு செய்கின்றேன். இந்த வருஷம் பெப்ரவரி மாதம் நான் ஊரிலேயே இல்லாததால் இந்த வருஷம் பிறந்த நாள் பதிவு போட முடியலை. முன்கூட்டி அப்லோட் பண்ணி இருக்கணும். அதுவும் பண்ண முடியலை. ஆகையால் அதுக்கும் சேர்த்துப் போட்டதாய் இருக்கட்டும்.

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி!

இன்று தமிழ்த்தாத்தா அவர்களின் நினைவு நாள். தாத்தா இல்லை எனில் இன்றைக்குப் பல தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழுக்குச் சேவை செய்திருக்க முடியாது. ஐயரவர்கள் வாழ்நாளில் பல வகையிலும் கஷ்டப் பட்டு தமிழுக்கு உண்மையான, மறக்க முடியாத தொண்டாற்றினார். ஆங்கில மோகம் அதிகமாய் இருந்த அந்தக் கால கட்டத்தில் தமிழ் மொழியின் பல பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகளைத் தேடிக் கிராமம் கிராமமாய்ச் சென்று அவற்றைக் கண்டு பிடித்து அவை எந்த வகையினால் ஆனது, எதைக் குறித்தது எனக் கண்டு பிடித்து அவற்றை வகைப்படுத்திய பெருமையும் இவர் ஒருவரையேசாரும்.

இவர் காலத்திலும் தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களையும் இழிவாய்ப் பேசும் நபர்கள் இருந்திருக்கின்றனர் என்றும், ஆங்கில மோகத்தில் அனைவரும் மயங்கிப் போய் இருப்பதைப் பற்றி இவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவதில் இருந்து அறிய முடிகின்றது. இப்போதும் தமிழ் பேசுவதும் படிப்பதும் அதே போலத் தான் இருக்கின்றது என எண்ணும்போது கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கிறது. எனினும் காலம் மாறும், காத்திருப்போம். தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி.

Sunday, April 26, 2009

பேசாத பெண்ணொன்று கண்டேன்!


இன்னிக்கு கவிநயாஇங்கே வந்தாங்க. கீழே உள்ளது அவங்க வலைப்பக்கத்தில் எழுதி இருப்பது அவங்களைப் பத்தி. எழுதுவேன் அப்பப்ப.....:) அப்படினு கொடுத்திருக்கிறதுக்குப் பதிலா பேசுவேன், எப்போவாவதுனு கொடுத்திருக்கலாமோ? :)))))))))))))))))
தமிழ் பிடிக்கும்! படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)

பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபமாக வராது. இவங்களுக்குக் கை வந்திருக்கிறது. வாழ்த்துகள். பேசிட்டு இருந்தது நாங்க மட்டும் தான். அவங்க வாயே திறக்கலை, சாப்பிடக் கூட! எங்க வீட்டுப் பறவைகள் கூட சத்தம் போட்டுத் தான் பேசும். எப்போப் பார்த்தாலும் சத்தமாவே இருக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மறக்க முடியாத மாலை. இனிமையான மறக்க முடியாத பொழுது.

Friday, April 24, 2009

அக்னி நட்சத்திரம்னா என்ன?

நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? இந்தக் கதை தெரிஞ்சவங்க நான் திரும்பச் சொல்றதுக்கு மன்னிச்சுக்குங்க.

அக்னி பகவானுக்கு ஒரே பசி. எத்தனையோ ஆஹுதிகள், எத்தனையோ உணவுகள், விதவிதமான உணவுகள் கிடைக்கிறது. ஆனாலும் பசி அடங்கலை. தவியாய்த் தவிச்சான். என்ன கிடைச்சாலும் உடனே சாப்பிட்டுப் பார்த்தாலும் பசி அடங்கவே இல்லை அவனுக்கு. இந்தப் பசி அவனுக்கு எப்படி ஏற்பட்டதுன்னா அதிகம் சாப்பிட்டதாலே தான். என்ன? ஆச்சரியமா இருக்கா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் எதைச் சாப்பிட்டாலும் பசி போகலை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட கோரப் பசிக்கு உணவு காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.

காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் என்ன இது? இந்திரனுக்குப் பொறாமையா? அல்லது தெரியாமல் செய்கின்றானா? அக்னி வனத்தை விழுங்க முயல, இந்திரன் மழையாக வர்ஷிக்க, அக்னி முடிவில் தோற்றே போனான். காட்டை அக்னி நெருங்கினாலே மழை கொட்டியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது. உடனே ஒரு வயோதிகர் உருவெடுத்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து அவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றான் அக்னி.

ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பது அக்னியே என்பதைப் புரிந்து கொள்கின்றார். எனினும் என்ன வேண்டும் எனக் கேட்க, மிகுந்த பசியோடு இருப்பதாயும் உணவு வேண்டும் எனவும் அக்னி சொல்ல, “அக்னியே, உன்னைப் புரிந்து கொண்டேன், உன் பசி அடங்க உணவு கிடைக்கும்” என உறுதி அளிக்கின்றார் ஸ்ரீகிருஷ்ணர். இந்திரன் வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார். காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.

அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் பார்த்ததுக்கு வேறே அர்த்தமும் உண்டு. அர்ஜுனன் அம்பு மழை பெய்து கூடாரங்கள் போட்டு இந்திரனால் பொழியப் படும் பெரும் மழையைத் தடுத்துவிடுவான் அல்லவா? அதே போல அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.

முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.
இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.

Sunday, April 19, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

ராதை எப்படியாவது கண்ணனைக் கட்டிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய நினைத்தாள். ராதையின் சிரிப்பு ஒரு அழகான பெரிய பூவொன்று கண்ணுக்கு நேரே மலர்வதைப் போல் இருந்தது கண்ணனுக்கு. அவள் சிரிப்பும், அதன் ஒலியும் இசையைப் பழிக்கும் வண்ணம் தோன்றியது. அம்மாவின் தாலாட்டை விட இனிமையாகத் தோன்றியது. பளீரென ஒளிவிட்ட வரிசையான முத்துப் போன்ற பற்களும், சிவந்த அதரங்களும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் கண்ணன். ராதை, கண்ணனிடம் சொல்கின்றாள்: “ ஓ, நான் பக்கத்து ஊர் தான். பர்சானாவைச் சேர்ந்தவள், என்னுடைய சகோதரன் இங்கே கோயில் கொண்டிருக்கும், கோபா மஹாதேவரிடம் எனக்கான ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி இங்கே அழைத்து வந்தான். நாங்கள் இங்கிருந்து விருந்தாவனம் செல்கின்றோம். செல்லும் வழியில் இங்கே வந்தோம். என் பெற்றோர் தற்சமயம் விருந்தாவனத்திலேஇருக்கின்றனர் . ஆஹா, இது என்ன, கானா?? உன் உடலில் இத்தனை காயங்கள்? புழுதி படிந்து வேறே உள்ளதே? இரு, இரு, நான் உன்னைச் சுத்தம் செய்து விடுகின்றேன்.” என்றாள் ராதை. கண்ணனுக்கு இந்தக் காயங்கள் ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை என்றாலும் ராதையின் கரங்களால் தனக்கு உதவி கிடைப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தான். ராதை அவன் உடலில் இருந்த புழுதியைத் துடைத்து விடுகின்றாள். “கானா, அம்மா என் உன்னை உரலோடு சேர்த்துக் கட்டினாள்?” ராதை கண்ணனைக் கேட்டாள்.

“ம்ம்ம்ம்?? நான் வெண்ணையைப் பானையோடு உடைத்துவிட்டு நானும் தின்று, குரங்குகளுக்கும், மற்ற மிருகங்களுக்கும் கொடுத்தேன்.”

“ஓஹோ, அதான் உன்னை வெண்ணை திருடி என்கின்றார்களா அனைவரும்?” ராதை கலகலவெனச் சிரித்தாள். ‘உன்னைப் பார்த்து கோகுலத்துப் பெண்கள் அனைவரும் பயப்படுகின்றார்களாமே?”

“இல்லை, இல்லை, அதெல்லாம், இல்லை, ராதே, நீ இங்கேயே தங்குகிறாயா? நீ இங்கேயே தங்கினால் நான் உன்னைத் தொந்திரவு ஒன்றும் செய்ய மாட்டேன்.”
ராதை தன்னைத் தொட்டுப் புழுதியைத் தட்டிச் சுத்தம் செய்த போது இனம் புரியாத சந்தோஷம் தன் மனதில் வந்ததைக் கண்ணன் உணர்ந்தான். அவன் அதை இழக்க விரும்பவில்லை. ராதை சொல்கின்றாள்: “ ம்ம்ம் அப்படியா? ஆனால் நான் தங்கினால் நிச்சயமாய் உன்னை எந்தத் தவறும் செய்ய விடமாட்டேன்.” ராதை சொல்கின்றாள். “மாட்டேன், மாட்டேன், ராதை, நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன், வெண்ணைப் பானையை உடைக்க மாட்டேன். “ திடீரெனக் குறும்பாய் ஒரு எண்ணம் கண்ணன் மனதில். மெதுவாய்ச் சொன்னான் ராதையிடம், “உன்னுடைய வெண்ணைப் பானையைத் தவிர” என்று சொல்லிக் கொண்டே தன்னை அடக்க முடியாமல் அவளைக் கிள்ளப் போனான். “ம்ம்ம்ம்ம், ஒழுங்காய் நடந்துக்கோ கானா, இல்லை எனில்……” என்று ராதை கூறிக் கொண்டே கண்ணனை அடிப்பது போல் கையை ஓங்கினாள். கண்ணனோ எதுக்கும் தயார் என்பது போல் நின்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்து விட்டனர். அப்போது சற்றுத் தூரத்தில் சில பெண்கள் வரும் சப்தம் கேட்டது. ராதை உடனே அவர்களிடம் சென்று கண்ணனின் நிலைமையைச் சொல்லி அவன் உரலோடு அவன் தாயால் சேர்த்துக் கட்டப் பட்டிருப்பதையும் காட்டினாள். அந்தப் பெண்களோ அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்ததோடு அல்லாமல், இரு மரங்கள் வேறே கீழே வீழ்ந்திருப்பதையும் கண்டனர். அந்த வழியே சென்ற ஒருவனைக் கூப்பிட்டு, கண்ணனின் நிலைமையைச் சொல்லச் சொன்னார்கள். கண்ணன் அம்மா வந்தால் ஒழிய உரலில் இருந்து விடுபட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதையும் சொல்லி, யசோதையை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து யசோதை இப்படியா கல் மனசோடு கண்ணனைக் கட்டுவாள் என ஒருவருக்கொருவர் விவாதிக்கத் தொடங்கினார்கள். யாருக்குமே கண்ணன் தங்கள் வீடுகளில் செய்த லூட்டி எதுவும் அப்போது நினைவில் இல்லை. யசோதையே கொடுமைக்காரியாகத் தெரிந்தாள்.



அதோ, யசோதை ஓட்டம் ஓட்டமாய் வருகின்றாளே, அவள் பின்னோடு யார்? வேறு யார் நந்தனே தான். யசோதை ஓட்டம் ஓட்டமாய் வந்தவள் கண்ணனை உரலில் இருந்து விடுவித்து, அவனக் கொஞ்சிக் கொண்டே பல்வேறு அர்த்தமற்ற கொஞ்சல்களைக் கூறிக் கொண்டே தன் கைகளில் எடுத்து அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மாயக் கண்ணனோ யசோதையை விட ஒரு படி மேலே. அம்மாவைச் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டான். இந்த உலகமே அவன் கைகளில் வந்துவிட்டது என உணர்ந்தான். அவனுக்கு நன்றாய்த் தெரியும், யசோதையின் கண்ணின் கருமணி தான் தான் என. ஆகவே அவனுக்கும் அம்மாவை விடப் பெரியதாய் ஏதும் இல்லை தான். அனைவரையும் விட அம்மாவே நல்லவள், மிக மிக நல்லவள். அம்மா, என் அம்மா, யசோதை அம்மா, எனக் கட்டிக் கொண்டான் கண்ணன்.

நந்தனோ அந்த விழுந்த மரங்களைத் திரும்பத் திரும்பச் சென்று பார்த்தான். பின் ஆகாயத்தைப் பார்த்தான். பின் கண்ணனைப் பார்த்தான். அவன் மனதில் கண்ணன் ஒரு தெய்வம் என்ற எண்ணமே எல்லாவற்றையும் காட்டிலும் மேலெழுந்தது. ராதை நடந்தது என்னவெனத் தன் இனிமையான குரலில் விவரித்தாள். அன்றிரவு கண்ணன் தூங்கவே இல்லை. ராதையையே நினைத்துக் கொண்டிருந்தான். காலை பொழுது புலர்ந்ததும், புலராததுமாகக் கண்ணன் எழுந்தான். மெல்ல மெல்ல வீட்டுக்கு வெளியே வந்தான் கண்ணன். ராதை தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு மாட்டு வண்டி பிரயாணத்திற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தது. ராதையின் சகோதரன் பிரயாண மூட்டையுடன் வெளியே வந்தான். ராதையும் வந்தாள். கண்ணனைக் கண்டதும், தன் சகோதரனுக்கு அறிமுகம் செய்தாள் ராதை. கண்ணனைக் கைகளில் தூக்கிக் கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்துக் கீழே இறக்கினான் அந்த சகோதரன். கண்ணனுக்கு என்னமோ அவனைக் கண்டால் பிடிக்கலை தான். ஆனால் வேறே வழி? என்ன இருந்தாலும் ராதைக்கு அண்ணனாச்சே? பொறுத்துக்கணும்.

இருவரும் வண்டியில் ஏறியதும் கண்ணனும் ஏறிக் கொண்டான். சற்றுத் தூரம் வரை தானும் வருவதாய்ச் சொன்னான். ராதையுடன் செய்த அந்தச் சிறு பிரயாணம் மிக இனிமையாக இருந்தது கண்ணனுக்கு. ஊர் எல்லை வந்தது. அரை மனதுடன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். “என்ன வயசு உனக்கு?” என்று ராதை கேட்டாள் கண்ணனிடம். ‘ஏழு” கண்ணன் மறுமொழி கொடுத்தான். “உனக்கு?” திரும்பக் கேட்டான் கண்ணன். “பனிரண்டு” என்று ராதை சொல்லிவிட்டு, ‘விருந்தாவனத்து வா” என அழைப்பும் கொடுத்தாள். “ ஆம் , நிச்சயமாய் வருவேன்.” என்றான் கண்ணன். எவ்வளவு நல்ல சிநேகிதி?என்று கண்ணன் எண்ணினான். வண்டி சென்றது. கண்ணன் மனம் ஒரு கணம் சூன்யம் ஆனது போல் இருந்தது.

Wednesday, April 15, 2009

எண்ணங்கள்

இது ஒரு சோதனைப் பதிவு. மெயில் மூலம் கொடுக்க முயல்கின்றேன்.  சரியா இருக்கா?? தெரியலை. பார்க்கணும், கொடுத்துட்டு. சரியா வந்தா தொண்டர்களெல்லாம் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்கப்பா!!!!

Monday, April 13, 2009

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் துயர் நீங்கி இன்பம் பெருக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். விநாயகர் அருளால் விக்கினங்கள் களையவும், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறவும் பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ராதைக்கேற்ற கண்ணனோ!

இப்போ நாம ரொம்ப நேரமாக் கண்ணனை உரல் மீதே உட்கார்த்திக் காக்க வச்சுட்டோம். ஏற்கெனவேயே கண்ணனுக்குக் கோபமாய் இருக்கிறது. நாம காக்க வைச்சதிலே வேறே அதிகக் கோபம் வந்திருக்கும். . நாம இதை எழுத ஆரம்பிச்ச விசேஷம் இப்போ ராஜ் தொலைக்காட்சியிலே ஸ்ரீகிருஷ்ணா தொடர் ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால் கொஞ்சம் விட்டலாசாரியா படம் போல இருக்கு. இதே போல நாம ராமாயணம் எழுத ஆரம்பிச்சதும் சன் தொலைக்காட்சியிலே ராமாயணம் தொடர் வர ஆரம்பிச்சது நினைவிருக்கும். எல்லாம் போட்டி போடறாங்கப்பா, நம்மளோட! என்னத்தைச் சொல்றது? இப்போ கண்ணன் என்ன பண்ணப் போறான்னு பார்க்கலாம்.
*************************************************************************************
உரல் மீது உட்கார்ந்திருந்த கண்ணன் விழுந்த மரங்களைப் பார்த்து அதிசயித்த வண்ணம் இருக்கையில் சற்று தூரத்தில் பெண்களின் பேச்சுக் குரல் கேட்டு உற்றுக் கவனித்தான். சற்று தூரத்தில் பெண்களில் சிலர் நதிக்குச் செல்லுவதையும் கவனித்தான். ஆஹா, இப்போ நாம அழக்கூடாது. ஏற்கெனவேயே நம்மிடம் கோபத்தோடு இருக்கும் இந்தப் பெண்கள் முன்னால் நாம் அழுதால் நம்மோட பலவீனத்தை அது காட்டிவிடுமே. நாமோ செயற்கரிய ஒரு பெருஞ்செயல் அன்றோ புரிந்திருக்கின்றோம். இரு மரங்களை வேரோடு சாய்த்தது, எல்லாராலும் செய்யக் கூடிய ஒன்றா? நாம் வீரனாகவே காட்டிக்கணும் நம்மை. உரலில் அம்மா நம்மைக்கட்டிப் போட்டிருக்க நாமோ உரலை இழுத்து வந்ததோடு இந்த மரங்களையும் சாய்த்திருக்கிறோமே!

இரு பெண்மணிகள் வருவது தெரிந்தது. இல்லை, இல்லை, பெண்மணிகள் இல்லை, இரு சிறு பெண்கள். சிறுமிகள். ஒரு பெண் கண்ணனுக்குத் தெரிந்த கோபி ஒருத்தியின் பெண்தான். கண்ணனோடு சம வயசுக்காரி. இன்னொருத்தி, இன்னொருத்தி, ம்ம்ம்ம்ம்?? கோகுலத்துக்குப் புதுசாய் இருக்காளே?? நம்மை விடக் கொஞ்சம் பெரியவளாயும் இருக்காள் போல? யாராயிருக்கும் இவள்? ஆஹா, அந்தப் பெண்ணின் கண்கள்? கடல் போலப்பெரியதாய் அல்லவோ உள்ளன? கண்ணின் கருவிழிகள்? அங்குமிங்கும் அலைவதைப் பார்த்தால் கடலில் மீன்கள் ஓயாமல் நீந்துவதை அல்லவோ நினைவூட்டுகின்றது? தலையில் ஒரு பித்தளைக் குடமும், இடுப்பில் ஒரு சிறிய குடமும் இரு பெண்களுமே வைத்துள்ளார்கள். ஆனால் அந்தப் பெரிய பெண்ணின் அலங்காரம்?? தலையை அலங்கரித்துப் புஷ்பங்களைச் சூடி இருக்கும் விதமே அலாதியாய் இருக்கிறதே! அவள் நடை? நடையா இல்லை நாட்டியம் ஆடுகின்றாளா? அவள் உடலே ரப்பர் போல வளைந்து கொடுக்கின்றதே. கொஞ்சம் கூடத் தப்பாமல் ஒரே சீரான தாளகதியில் நடக்கிறதைப் பார்த்தால் ஒரு அழகான நாட்டியத்தைப் பார்ப்பது போல் அல்லவா உள்ளது? அவள் ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் அவள் தோள் வளையும், கை வளையும் ஜல் ஜல் என ஒலிக்கின்றதே!

அதற்குள் அந்தப் பெண்கள் கண்ணனைக் கண்டுவிட்டார்கள். பெரியவள், புதியவள் சொன்னாள்:”அதோ பார், யாரோ ஒரு பையன் அங்கே உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கே!” குரலா அது? இனிமையான கீதம் போலவே ஒலிக்கின்றது. சிறிய பெண் சொல்கின்றாள்.” ஆமாம், ஒரு ஐந்து வயதுப் பையன் போல் இருக்கிறானே! யாருனு பார்க்கலாம்.” கிட்டே சென்ற சிறிய பெண் உடனேயே பெருங்குரலெடுத்துக் கத்துகின்றாள்:” ராதே, அடி ராதே, இவன் வேறு யாருமில்லையடி, இவன் யசோதையின் கானா, கனையா தான்,” என்று தன் கிண்கிணிக் குரலில் கூறிவிட்டுச் சிரிக்கின்றாள். புதிய பெண்ணான ராதையோ அதிசயத்தோடு அவனைப் பார்க்கின்றாள்.” என்ன நந்தனின் மகனா இவன்? நம் தலைவர் நந்தனின் மகனா? என்ன ஆச்சரியம்?” என்று சொன்னாள். கண்ணன் புரிந்து கொண்டான் இப்போது. கோகுலத்துப் பெண் கண்ணனுக்கு ஏற்கெனவேயே அறிமுகம் ஆன கோபி ஒருத்தியின் மகள் லலிதா. மற்றொருத்தி புதிய பெண் அவள் பெயர் ராதை. ஆஹா, என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு நெஞ்சில் போய் நிறைகின்றதே. இவள் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும்போல் இருக்கிறதே. ஏன் இப்படி?

பெண்கள் இருவரும் தங்கள் கைகளில் இருந்த பானைகளைக் கீழே வைத்துவிட்டுக் கண்ணனிடம் ஓடிச் சென்றனர். முதலில் லலிதா கேட்கின்றாள் கண்ணனிடம்:” என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?” நம் கண்ணனா அசருபவன்? மிக மிக சாவதானமாய் ஏதோ தினமும் இதையே செய்பவன் போன்ற எண்ணம் வரும்படியான குரலில் சொல்கின்றான். “ஓ, லலிதா, ஒன்றுமில்லை, இந்த மரங்களைச் சாய்த்துக் கொண்டிருந்தேன்.” கண்ணன் சொன்ன தொனியைக் கேட்டால் ஏதோ தினந்தோறும் கண்ணனின் வேலையே அதுதான் என நினைக்குமாறு இருந்தது. “ஆனால் நீ என்ன உரலோடு சேர்த்தல்லவோ கட்டப் பட்டிருக்கின்றாய்?” விடலையே அந்தப் பெண்கள். அதிலும் ராதை அல்லவோ கேட்கின்றாள் இதை. கண்ணன் இப்போது இன்னும் எச்சரிக்கை அடைந்து, ஆஹா இந்த ராதைக்கு நமக்கு அம்மா தண்டனை கொடுத்த விஷயம் தெரியக் கூடாது என்று உணர்ந்தவனாய், “ஓஓ அதுவா? “ கண்ணன் சிரிக்கின்றான். எந்தத் துன்பமும் இல்லாதது போலவே. “வேறே யாரு கட்டுவாங்க? அம்மாதான்” இப்போவும் அதே தொனி. ஏதோ யசோதைக்கு தினமும் கண்ணனை உரலில் பிடித்துக் கட்டுவதே வேலை என்பதான தொனி. ராதையின் மனம் நெருப்பிலிட்ட மெழுகாய் உருகிக் கரைந்தது. “ஆஹா, உங்க அம்மா ரொம்ப மோசமோ?” என்று கேட்டாள் கண்ணனிடம். கண்ணன் இப்போது ராதையை மிகவும் கிட்டத்தில் பார்த்தான்.

இத்தனை அழகான ஒரு பெண்ணை இவ்வளவு நாட்கள் கண்டதே இல்லை. பார்த்தால் சிறு பெண்ணாய்த் தெரிகின்றாள். ஆனால் என்னைவிடவும் வயதில் மூத்தவளே. இன்றுதான் இவளைப் பார்க்கிறேன் என்றாலும் ஏதோ ஜென்ம ஜென்மாந்தரமாய் இவளைப் பார்த்துப் பேசிக் கொண்டே இருந்தாற்போல் அல்லவா இருக்கிறது? அது சரி, இவள் என்ன சொல்கின்றாள்? ஆஹா, அம்மாவைப் பத்தியா? இல்லை, இல்லை, இவள் அம்மாவைத் தப்பாய் நினைக்கப் போறாளே. அவசரம் அவசரமாய்க் கண்ணன் மறுத்தான். “இல்லை, இல்லை, அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவ, தெரியுமா உனக்கு. என்னிடம் மிக்க ஆசையோடு தான் இருப்பாள். ம்ம்ம்ம்ம் ஆனால், ஆனால், ஆனால் இந்தப் பெண்கள் இருக்கின்றார்களே, உன்னையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன், ஏ, ராதே, திடீர் திடீர்னு அவங்களுக்குக் கோபம் ஒண்ணு வந்துடறது. எல்லாப் பெண்களுமே இப்படித் தான் இருக்கிறாங்கனு நினைக்கிறேன்.” கண்ணன் கண்களும், முகமும் சேர்ந்து சிரித்தன. விஷமம் தாண்டவம் ஆடியது கண்ணனின் முகத்தில்.

கோபமாய்ப் பதில் சொல்ல நினைத்த ராதையால் முடியவில்லை. கண்ணனைப் பார்த்துக் கொண்டே கலகலவெனச் சிரித்தாள் ராதை. சிரிக்கும்போது ராதையின் கன்னத்தில் விழும் அழகான இரு குழிகளைப் பார்த்து பிரமித்தான் கண்ணன். ராதையோ அவனிடம்,” உனக்கு என்ன தெரியும் பெண்களைப் பற்றி?” என்று கேட்கின்றாள். கண்ணன் சொன்னான்:” ஓ, எனக்கு அம்மாவைத் தெரியுமே, அவள் ஓர் பெண் தானே. இதோ இந்த லலிதா இவள் எனக்குத் தோழி, இவளைத் தெரியும், இன்னும் கோகுலத்துப் பெண்கள் பலரையும் தெரியும்,” என்று பதில் சொல்கின்றான். ‘சரி, சரி, லலிதா, வா, வா, இவனை அவிழ்த்துவிடுவோம்.” ராதை லலிதாவைக் கூப்பிட கண்ணனோ வேண்டாம் எனச் சொல்கின்றான். “ அம்மாவே வந்து அவிழ்த்துவிடட்டும். இல்லைனா அவளுக்குக் கோபம் தீராது.’ என்கின்றான் கண்ணன். அம்மா வரலைனா என்று ராதை கேட்க, அம்மா வந்தே விடுவாள் எனக் கண்ணன் உறுதியாய்ச் சொல்லுகின்றான். லலிதாவைப் பார்த்துத் தனக்குக் குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வரும்படிச் சொல்ல, லலிதா சிறிய குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்குச் செல்கின்றாள் நீர் மொண்டு வர. ராதையோ கண்ணன் அருகிலே அமர்ந்து கொள்கின்றாள். அவள் உடலில் இருந்து வந்த சுகந்தங்களின் வாசமும், அவள் அழகான, மென்மையான, அமைதியான முகமும் கண்ணனையும் வேறு ஓர் உலகுக்கே இட்டுச் சென்றது. மனதில் நிம்மதியும், சந்தோஷமும் இதற்கு முன்னர் கண்டிராத வகையில் நிரம்பியது.

“நீ தான் நந்தனின் மகனா?? உன்னைப் பற்றித் தானே கிராமம் பூராவும் பேசிக் கொள்ளுகின்றனர்?” ராதை கேட்டாள். அவள் கண்ணன் பெயரை யசோதா அம்மா போல கனையா என்று சொல்லவில்லை. “கானா” என்று மட்டும் சொல்கின்றாள். கண்ணனுக்கோ அவள் திரும்பவும் தன்னைக் கானா என அழைக்க மாட்டாளா எனத் தோன்றுகிறது. கண்ணன் சொல்கின்றான்:” ஆமாம், நந்தன் மகன் கண்ணன் நான் தான். இந்த ஊர்க்காரங்களுக்கு வேறே வேலை என்ன? என்னைப் பத்தித் தான் பேசுவாங்க. போகட்டும், நீயும் கொஞ்ச நாட்கள் கழிச்சு என்னைப் பத்திப் பேச ஆரம்பிப்பே!” என்று கிண்டலாய்ச் சொல்கின்றான். “உனக்கு எப்படித் தெரியும்?” ராதை கேட்கின்றாள். அவள் கண்ணின் மணிகள் அவள் பேசுவதற்கேற்ப நாட்டியம் ஆடுகின்றன என்று தோன்றியது கண்ணனுக்கு. கண்ணன் எதிர்பாராமல் அவன் வாயிலிருந்து, “உன்னைப் பார்த்தால் ரொம்ப நல்லவளாய்த் தெரிகிறது ராதை, நீ மிகவும் அழகாயும் இருக்கின்றாய். “ என்ற வார்த்தைகள் வந்தன. ஒரு நிமிஷம் கண்ணனே எதிர்பார்க்கலை தான் இப்படிச் சொல்வோம் என. ஆனால் அவன் உள் மனதில் இருந்த எண்ணங்களே இப்படி வந்து விழுந்துவிட்டன என்பதைப் புரிந்து கொண்டனர் இருவருமே. திரும்பவும் ராதையிடம் கேட்கின்றான் கண்ணன்.”யார் நீ? எங்கே இருந்து வந்தாய்? கோகுலத்தில் உன்னை நான் இதுக்கு முன்னர் பார்த்ததே இல்லையே? மீண்டும் வருவாயா நீ? உன்னை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்குமா?” என்று கண்ணன் கேட்க, ராதையின் மனமும் எதிர்பாரா ஆனந்தத்தில் ஆழ்கின்றது

Thursday, April 09, 2009

வல்லி சிம்ஹனின் பிறந்தநாள்! இந்த நாள் இது இனிய நாள்!

415 பதிவுகளை எழுதி இருக்கின்றார் தோழி வல்லி சிம்ஹன். அவரும் நானும் கிட்டத் தட்ட சேர்ந்தே எழுத ஆரம்பித்தோம். எனக்கும் எழுத ஆரம்பித்து மூன்று வருஷங்கள் நிறைந்துவிட்டது என வல்லியின் பதிவைப் படிச்சப்போ தான் நினைவில் வந்தது. எழுதலாமானு நினைச்சுட்டு அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டேன். 782 பதிவுகள் ஆகி இருக்கு இந்த வலைப்பக்கத்தில் மட்டும். கூடியவரையில் பக்தியிலும், புராண, இதிஹாசங்களிலும் யாரும் அறியாதவற்றைத் தரவேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதி வருகின்றேன். வேறு விஷயங்களைத் தொடுவதில்லை என்ற குறிக்கோளும் இருக்கிறது. இப்போ இது சுய புராணம் இல்லை. (ரொம்ப ஓவரா ஆயிடுச்சோ)

வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். இப்போதே தெரிய வந்தது. அவங்களுக்கு வாழ்த்தி ஒரு பதிவு போட வந்துட்டு, என்னோட கதையைச் சொல்லிட்டேன். இன்று பிறந்த நாள் காணும் வல்லி சிம்ஹனுக்கு எங்கள் குடும்பத்தினரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாக்கிலும், செயலிலும் இனிமையையே காட்டி வரும் திருமதி வல்லிக்கு இறைவன் பூரண ஆரோக்கியத்தையும் தரவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்ளுகின்றேன். இன்னும் நேரில் பார்த்ததில்லை. என்றாலும் இனிய தோழி. அவர் கணவருக்கும், அவருக்கும் என்னுடைய வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பிள்ளையார் வந்து வாழ்த்திட்டு இருக்கார்.

வாங்கப்பா, லைனா வந்து எல்லாரும் வாழ்த்திட்டுப் போங்க! (கூடவே என்னையும்)

Monday, April 06, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ராதையின் வரவு!

இந்த உரலைக் கண்ணன் இழுக்கும் நிகழ்ச்சியிலேயே கண்ணனை வளர்ந்தவனாயே காட்டுகின்றார் முன்ஷி. ஆகவே ராதையும் வளர்ந்த ஒரு பெண்ணாகவே முதன் முதல் அறிமுகம் ஆகப் போகின்றாள். கண்ணனுக்கும், ராதைக்கும் நடுவே தோன்றிய அன்பை என்ன பெயரிட்டு அழைப்பது? கண்ணனின் ஜீவன் ராதை என்றே சொல்லலாம். தாய், மகனிடம் காட்டிய அன்பா? காதலி, காதலனிடம் காட்டிய அன்பா? மனைவி கணவனிடம் கொண்ட பாசமா? அல்லது பக்தியா? பக்தை தன் கடவுளிடம் கொண்ட அதீதமான பக்தியா? இன்னதென விவரிக்க முடியாத ஒன்று கொட்டும் அருவி போல கண்ணனை நனைத்து மகிழ்வித்திருக்கின்றது. ஆனால் அவர்களின் நட்போ, காதலோ பின்னர் எங்கேயும் தொடரவே இல்லை. பிருந்தாவனத்திலேயே முடிந்து விடுகின்றது. ஆனால் கண்ணனோ எனில் அவள் தன் நெஞ்சுக்குள்ளேயே ஜீவசக்தியாக உறைந்துவிட்டதாய்ச் சொல்லுவான். அதையும் பார்க்கத் தானே போகின்றோம். நிச்சயமாய்க் கண்ணனை விட ராதை வயதில் மூத்தவளாகாவே இருக்கின்றாள். ஆனால் பாகவதம் எங்கேயுமே ராதை என்ற பெயரையே குறிப்பிடவில்லை. பாரதக் கதையிலும் வரவில்லை.

கண்ணனை எப்போது நாம் நினைத்தாலும் மனதில் தோன்றும் பெயர் ராதா என்பதே ஆகும். இந்த ராதாவைப் பற்றிய பல்வேறு கதைகள் உலாவுகின்றன. கோபியர்களுள் ஒருத்தியே ராதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ராதா என்பவள் கண்ணனின் அத்தை என்றும் பல வருஷம் கண்ணனை விட வயதில் முத்தவள் எனவும், அவள் பேரில் காதல் என்றால் ஏற்பது எங்கனம் என்றும் பல பதிவுகள் வந்துவிட்டன. இதைக் குறித்துக் கேலியாகவும் சிலர் பேசுகின்றனர். ஆனால் ராதா என்ற பெயர் பாகவதத்தில் கிடையாது. மஹா பாரதத்திலும் கண்ணனின் அவதாரத்தைப் பற்றிய குறிப்புகளில் ராதையைப் பற்றிச் சொல்லவில்லை. நம் புராணங்களிலும் அதிகம் ராதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லப் படவில்லை. கண்ணனைக் குறும்புக்காரக் குழந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் நாம், ராதையை ஒரு பிரச்னைகள் மிகுந்த, அல்லது பிரச்னைகளுக்கு ஆளான, அல்லது பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் ஒரு குழந்தையாக/பெண்ணாகவே ஏற்க வேண்டி உள்ளது. சிறந்த பக்திமான்களாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. என்றாலும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்களுக்கு ராதை இன்றிக் கிருஷ்ணன் தனித்துக் கிடையாது.. பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ராதையைப் பற்றிய குறிப்பு எதில் சொல்லி இருக்கின்றது என்று பார்த்தோமானால் நம் தமிழ்க் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் என்று சொல்லலாம். அதில் நப்பின்னையாகக் குறிக்கப் படுபவள் இவள் தான் என்று சிலர் கூற்று. ஆண்டாளும் நப்பின்னையாகக் குறிப்பிடுவது இவளைத் தான் என்றே தோன்றுகின்றது.

ஆதாரபூர்வமாய் நோக்கினால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இலக்கிய அன்பர்கள் ராதையப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம் என்ற பொதுவான கருத்து ஒன்று இருந்து வருகின்றது. ஆனாலும் பொதுவாய்க் கோபிகளைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருந்து வந்திருக்கின்றது. ராதாவைப் பற்றிய தனிப்பட்ட குறிப்போ, அல்லது ராதாவுக்கு முக்கியத்துவமோ கொடுக்கப் படவில்லை. இது கி.பி. 10- நூற்றாண்டு வரையில் இப்படி இருந்திருக்கின்றது. பின்னர் மால்வா அரசனின் காலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து ராதாவையும் குறித்துச் சில பாடல்கள் பாடப் பட்டிருக்கின்றன. ஆனாலும் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ஜய தேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற கிருஷ்ணரின் ராசலீலா பற்றிய அஷ்டபதிகளில் ராதையை முக்கியத்துவம் வாய்ந்த ரசேஷ்வரி ஆக்கி, அவளை முக்கியப் பாத்திரம் ஆக்கிய பின்னரே ராதாவையும், அவளின் கண்ணன் மேல் கொண்ட காதலும் அனைவராலும் பெருமளவும் கொண்டாடப் பட்டது. இந்த ராசலீலாவின் முக்கியப் பாத்திரமே ராதா தான்.

கீத கோவிந்தம் எழுதிய இரு நூற்றாண்டுகளுக்குள் பெரும் பிரசித்தி அடைந்ததோடு அல்லாமல், அது வெளிவந்த கால கட்டத்தில் இருந்த மற்ற நூல்களோடு ஒப்பிடமுடியாத அளவுக்கு, முக்கியத்துவமும் , பெற்று விட்டது. இதை ஒரு பக்தித் தத்துவங்கள் நிறைந்த பாடல் தொகுப்பாகவும் அங்கீகாரம் செய்தனர் மன்னர்களும், அரசர்களும். இதற்குப் பின்னர் எழுதப் பட்ட புராணங்களிலேயே கிருஷ்ணனையும், ராதையையும் இணைத்து எழுத ஆரம்பித்தனர். ராதை கிருஷ்ணன் மேல் கொண்ட காதலின் புனிதமும் எடுத்து உரைக்கப் பட்டது. பல்வேறு எழுத்தாளர்களும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமாய் ராதையின் கதையை எடுத்து உரைத்தாலும், அதன் நோக்கம் மட்டும் ஒன்றே. ராதை கிருஷ்ணனிடம் கொண்ட அளப்பரிய பக்தி நிறைந்த காதல் மட்டுமே சொல்லப் படுகின்றது. மஹாபாரதமும், பாகவதமும் எழுதிய வேத வியாசரால் கூடச் சொல்லப் படாத ஒருத்தி, கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாதவளாய், கிருஷ்ணரை நினைத்தாலே அவளையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டும் என்பதாய், ஒரு தேவதையாய், அம்பிகையாய் மாறிப் போனாள். கிருஷ்ணரின் சிறு வயதுத் தோழியாய் சில புராணங்களில் இவளைச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாப் பிரபுவோ, ராதையைக் கிருஷ்ணனின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே நினைத்தார். ராதையை விட்டுக் கிருஷ்ணனைப் பிரிக்க முடியாது என்பதால் ராதா கிருஷ்ணன் என்றே சொல்லலானார். அதே மாதிரி தான் ராதாபந்திஸ், விஷ்ணுஸ்வாமின்கள், நிம்பர்க்கர்கள் என்னும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் திளைப்பவர்களும் ராதையும், கிருஷ்ணனும் பிரிக்க முடியாதவர்கள் என நம்பினார்கள். நிம்பர்க்கர்கள் ராதையைத் தவிர, வேறொருத்தியைக் கிருஷ்ணனின் மனைவியாக நினைக்கக் கூட இல்லை. தெய்வீக வடிவு கொண்ட ராதை தான் கிருஷ்ணனின் மனைவி எனப் பரிபூரணமாய் நம்பினார்கள். இன்னும் வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களில் ராதையும் ஒரு கோபிகா ஸ்திரீ எனவும், கிருஷ்ணன் மேல் மாறாத அபிமானம் கொண்டவள் எனவும், ஆனால் அவள் கணவன் வேறொருவன் எனவும் அவன் பெயர் ஐயன் என்றும், அந்த ஐயன் கம்சனின் படைவீரன் எனவும் சொல்லிக் கொண்டனர். எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டிலும் ராதையின் கிருஷ்ண பக்தி பரவவே செய்தது.



ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் ராதையுடன் கூடிய கிருஷ்ணனையோ, ராதைக்கு எனத் தனி சந்நிதியோ காண முடியாது. ஆனால் வடநாட்டில் ராதை இல்லாத கிருஷ்ணர் கோயில்களைப் பார்க்கவே முடியாது. கண்ணன் விளையாடிய பிருந்தாவனத்தில் ராதைக்கென்ற தனிக் கோயில் உள்ளது. கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அங்கே தான் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி அன்றே அவதரித்த யோகமாயாவுக்கும், ஸ்ரீ வித்யா உபாசகர்கள் துர்க்காஷ்டமி எனக் கொண்டாடுவார்கள். இதற்கு அடுத்து வரும் சுக்ல பட்ச அஷ்டமியையே ராதாஷ்டமி எனச் சொல்லுகின்றார்கள். ப்ருந்தாவனம் அருகே உள்ள பர்சானா என்னும் ஊரில் வ்ருஷபானுவுக்கும், கீர்த்திதாவுக்கும் விசாக நட்சத்திரத்தில் மகளாய்ப் பிறந்தாள் ராதா என்று சொல்வதுண்டு. விசாக நட்சத்திரத்துக்கு வேதத்தில் ராதா என்ற பெயர் உண்டு என்றும் சொல்கின்றார்கள். (யாருப்பா அங்கே, இதைச் சரியானு சொல்லுங்க!) ஓம் நமோ நாராயணாய, என்னும் அஷ்டாட்சரத்தின் உள்ள” ரா” வும், “ஆதாரம்” என்ற ப்ரபத்தி மார்க்க மந்திரத்தில் உள்ள “தா” வும் சேர்ந்தே ராதா என்ற பெயர் வந்ததாய்க் கூறுகின்றனர். கண்ணனின் இதய சக்தி, பிராண சக்தி ராதாவே ஆவாள்.

ராதைக்கும், கிருஷ்ணனுக்கும் உடல் ஒன்றே. லீலா விநோதங்கள் புரிந்து மக்களுக்குப் போதிக்கவென்றே உடல் இரண்டைக் கொண்டார்கள். நம் உடலில் இருந்து வரும் நிழல் எப்படியோ அப்படியே கண்ணனின் நிழல் போன்றவள் ராதா. ஸ்ரீ கிருஷ்ணன் ராதையை வணங்கினால் , ராதையோ கிருஷ்ணனையே ஆராதனை செய்கின்றாள். ராதையைப் பற்றிய சஹஸ்ரநாமம் கூட இருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். இது ராதையால் கண்ணனுக்குச் சொல்லப் பட்டுப் பின் நாரதருக்கும், சிவனுக்கும் கூறப்பட்டது என்று சொல்கின்றார்கள். ராதையின் ஷடாக்ஷர மந்திரம், “ ஓம் ராதாயை ஸ்வாஹா” என்பதாகும். ராதா என்றால் அன்பு, நிறைவு, வெற்றி, மின்னல், விசாக நட்சத்திரம் எனப் பல அர்த்தங்கள் உண்டு. கண்ணனையே நினைத்தால் ராதை கிடைப்பாள். அதாவது மனதில் நிறைவு உண்டாகும், முக்தி கிடைக்கும். ராதாகிருஷ்ணன் என்று சொல்லும் ஒரு வார்த்தையால் மனம் கிருஷ்ணனிடம் ஈர்க்கப் படுவதோடு அல்லாமல் ராதையால் முக்தியும் கிடைக்கும். ராதை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா.

நாதமும், லயமும் சேர்ந்த விரஸமில்லாத ரஸம் மட்டுமே உள்ள ஒரு ஆட்டத்துக்கே ராஸலீலா எனப் பெயரிட்டனர். கோபிகை தான் ராதை, ராஸேஸ்வரி, ரஸிகேஸ்வரி, ராஸலீலா ப்ரதான பாத்திரம். இதில் ராதைக்குக் கண்ணன் தன்னிடம் காட்டும் அன்பினால் கர்வம் வந்துவிட அவள் கர்வத்தைப் பங்கம் செய்யும் வண்ணம் அவளைத் தவிக்க விட்டுக் கண்ணன் மறைவான். கோபிகைகள் ஏற்கெனவே கண்ணனைக் காணாது தேடியவர்கள், தனியே இருக்கும் ராதையையும் கண்டதும், கண்ணனைத் தேடி அலைவார்கள். அவர்கள் கர்வம் பங்கம் அடையும் வண்ணம் பாடப் படும் அந்த கீதம் “கோபிகா கீதம்” எனச் சொல்லப் பட்டு, இன்றளவும் ஏதேனும் பொருள் தொலைந்தால் ராதா கிருஷ்ண பக்தர்களால் கோபிகா கீதம் பாடினால் பொருள் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் பாடப் படுவதாய் இருந்து வருகின்றது. கோபிகா கீதம் பாடினால் தொலைந்த பொருளோ, எதுவாய் இருந்தாலும் கிடைத்துவிடும் என்பது ராதா கிருஷ்ணர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

பாகவதத்திலோ, பாரதத்திலோ ராதையைப் பற்றிய குறிப்பு வரவில்லை என்பதற்கு கீழ்க்கண்டவாறு காரணம் கூறப் படுகின்றது. பரிட்சித் மஹாராஜாவுக்கு ஏழு நாட்களுக்குள் மரணம் என்பது தெரிந்து நற்கதி கிடைக்கவேண்டும் என்பதற்காக சுக முனிவரை அழைத்து வந்து பாகவதக் கதைகளைச் சொல்லச் செய்கின்றான் பரிட்சித்து. ஆனால் சுக முனிவரால் சொல்லப் பட்ட அந்தப் பாகவதக் கதையில் ராதா என்ற வாக்கியமே வராது. ஏனெனில் சுக முனிவர் ஒரு முறை ராதா என்ற பெயரைச் சொல்லிவிட்டால் ஆறு மாதங்கள் போல, ஆழ்ந்த சமாதி நிலைக்குப் போய்விடுவாராம். பரிட்சித்தோ ஏழு நாட்களுக்குள் மரணம் அடைந்து விடுவான். அவர் சமாதி நிலைக்குப் போனாரென்றால் பரிட்சித்துக்கு நற்கதி கிடைப்பதெப்படி?? சுகரால் சொல்லப் பட்டு வந்த பாகவதம் முடிவடைவதும் எப்படி?? ஆகவே தான் பாரதத்திலோ, பாகவதத்திலோ ராதா என்ற பெயர் சொல்லப் படாமல், அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதவும், சொல்லவும் பட்டது என்று ஆன்றோர் சொல்கின்றனர். இந்த ராதையின் ஒரு சொல்லுக்கு இத்தனை மகிமை என்பது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்தே தெரியவரும். ராதையின் பிரேம பாவத்தை உணர வேண்டி ஒரு பெண் போல் புடவை தரித்து ராமகிருஷ்ணர் ராசலீலை பாடப் பட்ட இடத்தில் நடமாடிக் கொண்டிருந்தபோது அவரை ஒரு ஆண் எனவும், ராமகிருஷ்ணர் எனவும் யாராலும் நம்பமுடியாமல் முற்றிலும் பெண் போலவே இருந்தார் என்றும், பின்னர் தன் உணர்வை அவர் சொல்லும்போது ராதை தனக்குள் புகுந்துவிட்டதாகவே தான் உணர்ந்ததாயும் அவர் சொல்லி இருக்கின்றார் என்பதையும் பார்க்கும்போது இந்த அற்புத தத்துவம் நன்கு புரிந்த ஞானிகளுக்கே எட்டும் என்றும், நம் போன்ற சாமானியர்களுக்கெல்லாம் வார்த்தைகளுக்கு எட்டாத ஒன்று என்றும் புரிய வருகின்றது அல்லவா?? கற்பனையோ, காவியமோ, ராதை என்பவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிக்க முடியாதவள் ஆகிவிட்டாள்.

முன்னால் எழுதியபோது சுகரால் சொல்லப் பட்ட பாரதம் எனத் தவறாய்த் தட்டச்சிவிட்டேன். திரு தேவ் அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தார். இப்போது அதைத் திருத்திக் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன். மற்றபடி முக்கியமான கருத்தில் இருந்து மாறாமலேயே இருக்கின்றது.

ஜெய் ஸ்ரீராதாகிருஷ்ண!

Sunday, April 05, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இப்போ ஸ்ரீமத் பாகவதத்தின் நோக்கில் கண்ணன் கட்டுண்டதைக் காண்போம். ஸ்லோகங்கள் ஸ்ரீமத் நாராயணீயத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.

வேதமார்க பரிமார்கிதம் ருஷா த்வாமவீக்ஷ்ய பரிமார்கயநத்யஸெள!
ஸந்ததர்ஸ ஸுக்ருதிந்யுலூகலே தீயமாந நவநீதம் ஓதவே:!!”

வேதங்கள் தேடிக் கூடக் கிடைக்காத அந்த மாயக் கண்ணனாகிய உம்மைக் காணாமல் (கீழே சிந்திக் கிடக்கும், தயிரையும், பாலையும், வெண்ணையையும், உடைந்து கிடக்கும் பானையையும் கண்ட) யசோதை கோபத்துடன் உம்மைத் தேடிக் கொண்டு வந்தபோது உரல்மீது அமர்ந்து கொண்டு நீ பூனைக்கு வெண்ணை கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டாள்.

த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதிபாவநா பாஸுராநந ஸரோஜம் ஆஸு ஸா!
ரோஷ ரூஷித முகீ ஸகீபுரோ பந்தநாய ரஸநாம் உபாததே!!”

பயந்துவிட்டாற்போல் நடிக்கும் கண்ணனின் முகம் அந்த பாவனை பயத்திலும் மிக்க அழகுடனும், செளந்தரியத்துடனும் பிரகாசித்தது. எனினும் யசோதை தோழிகளின் முன்னிலையில் இந்தக் கண்ணனை அடக்கவேண்டும் என்பதற்காக விரைவாக உம்மைப் பிடித்துக் கோபத்தோடு உரலோடு சேர்த்துக் கண்ணனைக் கட்டுவதற்காகக் கயிற்றையும் எடுத்துக் கொண்டாள். ஆனால் கயிறோ பல கயிறுகளை ஒன்றாய் இணைத்தும், அவற்றால் கண்ணனைக் கட்ட முடியாமல் இரண்டு அங்குலம் குறையாகவே இருந்தது. தோழிகள் வியப்புடன் நகைக்க, யசோதை வியர்த்து விறுவிறுத்துப் போய் நிற்க, வேறு வழியில்லாமல் “கட்டுப் படுவோம்” என நீர் நினைத்தீர்.

கட்டுண்டு கிடந்த கண்ணனை நோக்கி, “அடே போக்கிரி, இந்த உரலோடு இங்கேயே இருக்கவேண்டும் நீ” எனக் கூறிவிட்டு யசோதை உள்ளே செல்ல, நீங்களோ ஏற்கெனவே எடுத்து உரலுக்குள் குழியில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த நெய்யை எடுத்துச் சாவகாசமாய்ச் சாப்பிட ஆரம்பித்தீர்கள்.

முதா ஸுரெளகைஸ்த்வமுதார ஸம்மதைருதீர்ய தாமோதர இத்யபிஷ்டுத:
ம்ருதூதர: ஸ்வைரமுலூகலே லகந்நதூரதோ த்வெள ககுபாவுதைக்ஷதா!”

எவராலும் கட்ட முடியாத அந்தப் பரம்பொருளாகிய நீர் பாசம் என்ற கயிற்றால் யசோதையால் கட்டப் பட்டீர் அன்றோ? அந்த அற்புதக் காட்சியைக் கண்ணாரக் கண்ட விண்ணவர்கள் அனைவரும், “ஹே, தாமோதரா!” என உம்மை அழைக்கத் துவங்கினார்கள். தாமோதரன்= கட்டுண்ட வயிற்றை உடையவன். உரலில் அமர்ந்திருந்த நீர் அருகே இருந்த இரு மருத மரங்களையும் நோக்கினீர்கள். அவை இரண்டும் குபேரனின் புதல்வர்கள் ஆன நள கூபரனும், மணிக்ரீவனும் ஆவார்கள்.
சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனை ஆராதித்ததால் கிடைத்த பெருஞ்செல்வத்தால் ஆணவம் மிகக் கொண்ட குபேரனின் புதல்வர்கள் இருவரும், கந்தர்வப் பெண்களோடு ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது ஆடைகளைக் களைந்துவிட்டு இருவரும் விளையாட அவ்வழியே நாரதமுனி தற்செயலாய்க் கடக்க நேர்ந்தது. பெண்கள் அனைவரும் தேவரிஷியைக் கண்டதும், நடுங்கிப் போய் தத்தம் ஆடைகளை அணிந்து கொண்டு அவரை வணங்கி நிற்க, குபேரனின் புதல்வர்கள் இருவர் மட்டும் மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கத்தோடு ஆணவமும் சேர, நாரதர் வந்ததையே கவனிக்காமல் இருந்தனர். நாரதர் பொறுத்துப் பார்த்துவிட்டு இருவரும் மது மயக்கத்தில் இருந்து நீங்காமல் இருப்பது கண்டு, இருவரையும் “மருத மரமாகி நீண்ட காலம் பூமியில் வாசம் செய்யும்படிக் கட்டளை இட்டார்.” சாபம் கொடுத்ததும் தன் நிலை புரிந்து கொண்ட இருவரும் நாரத முனிவரிடம் சாபத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்ட, கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்பதால், ஸ்ரீஹரி பூமியில் அவதாரம் செய்து வரும்போது அவனால் விமோசனம் அடைந்து உங்கள் இருப்பிடம் சேர்வீர்கள் எனச் சொல்லிச் சென்றார்.

அதன் படி குபேரனின் இரு புதல்வர்களும் அங்கே மருத மரங்களாகி நீண்ட காலமாய்த் தவத்தில் இருந்தனர். உரலில் கட்டுண்டிருந்த தாங்கள் அந்த இரட்டை மருத மரங்களுக்கிடையே மெதுவாய் நடந்தீர்கள். நெடுங்காலம் நின்றிந்த மரங்கள் இரண்டும் வேரறுந்து பலமில்லாமல் இருக்க, மரங்களுக்கிடையே உரல் சிக்க, கண்ணன் அதை இழுக்க இரு மருத மரங்களும் முறிந்து விழுந்தன.

அதந்த்ர மிந்த்ரத்ருயுகம் ததா விதம்
ஸமேயுஷா மந்தரகாமிநா த்வயா:
திராயிதோலூகல ரோத நிர்த்துதெள
சிராய ஜீர்ணெள பரிபாதிதெள தரூ!!

நள கூபுர, மணிக்ரீவர்கள் அந்த மரங்களினின்றும் தோன்றி உம்மைப் போற்றித் துதித்துவிட்டு தங்கள் இடம் சேர்ந்தார்கள். இனி நாம் அடுத்து ராதையின் வரவைப் பார்க்கப் போகின்றோம். ராதை கண்ணன் கதையின் இந்த நிகழ்ச்சியின் போதே வந்து சேர்வதாய் முன்ஷி எழுதி உள்ளார். அதற்கு முன்னர் ராதையைப் பற்றிய ஒரு குறிப்பு, மீள் பதிவு, அதிகம் யாராலும் கவனிக்கப் படவில்லை, முன்னர் போட்டபோது. இப்போப் படித்தால், தொடரும் போது புரிந்து கொள்ள சிரமம் இல்லாதிருக்கும்.

நாளையில் இருந்து முன்ஷியின் கண்ணன் வருவான்!

Thursday, April 02, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

நவநீத சோரன் யசோதைக்குத் தன் இடுப்பைக் காட்டி நின்றான் கட்டுவதற்கு. யசோதை எவ்வளவு முயன்றும் இரண்டு அங்குலக் கயிறு குறைவாகவே இருந்தது. மேலும், மேலும், மேலும் எனக் கயிற்றைச் சேர்த்துக் கொண்டே போனாள் யசோதை. கண்ணனோ கட்டுப் படுவதாயில்லை. அவனைப் பார்த்தாலோ விஷயம் ஏதும் அறியாத அப்பாவியாகவே நின்றிருந்தான். இது என்ன இப்படி ஒரு சோதனை என நினைத்த யசோதை, அயர்ந்து போய் உட்கார நினைத்த சமயம் திடீரெனக் கண்ணன் கட்டுக்கு அடங்கினான். கண்ணனைக் கட்டிவிட்டு யசோதை உள்ளே சென்றுவிட்டாள். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அம்மாவுக்குக் கோபம், கண்ணன் நினைத்தான். “சரி, அம்மாவுக்குக் கோபம்னா எனக்கும் தான் கோபம்! அவளே புரிஞ்சுக்கட்டும், என் கோபத்தை, அப்புறமாய் ஏன் கோவிச்சோம்னு நினைப்பாள்.” எனக் கண்ணன் நினைத்தான்.

ம்ம்ம்ம் இப்போ ஏதானும் செய்யணுமே! செய்தால் தான் அம்மாவின் கோபத்தில் இருந்து அவளைத் திருப்ப முடியும். என்ன செய்யலாம்? யசோதையின் கனையா எழுந்திருக்க முயன்றான். அவன் கைகளும், பாதங்களும் உரலுடன் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. அவன் எழுந்திருக்க முயன்றபோது உரலும் சேர்ந்தே வந்தது. அவனால் நகரமுடியுமா எனச் சந்தேகமாய் இருந்தது. ம்ம்ம்ம்ம்??? என்ன பண்ணினால் இதில் இருந்து தப்ப முடியும்?? கை, கால்களை அசைத்துப் பார்த்தான் கண்ணன், கயிறு ஏதோ கொஞ்சம் நழுவினாப் போல் தெரிஞ்சது. ஆனால் ம்ஹும் இல்லையே, கயிறு நழுவலை. கயிற்றின் நீளம் தான் இப்போ தெரியும்படி இருக்கிறது. மெல்ல மெல்ல கண்ணன் நகர முயல, ஆஹா, இது என்ன? கண்ணனோடு சேர்ந்து உரலும் நகர ஆரம்பிச்சிருக்கே? ஆனால் கொஞ்சம் வேகம், ம்ம்ம்ம்ம்ஹும், வேகமாய் முடியலை, ஆனால் நான் நகர்ந்தால் உரலும் நகருகிறதே!

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ

சத்தமே இல்லாமல், மெல்ல, மெல்ல கண்ணன் உரலுடன் நகர ஆரம்பித்தான். அம்மா என்னத்தைக் கண்டாள்? நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாள் தான் இவ்வாறு உரலுடன் சேர்ந்து நகருவோம் என. மெல்ல, மெல்ல முற்றம் சென்று அங்கே இருந்து தலை வாசலுக்குச் சென்று கண்ணன் இப்போது தெருவுக்கே வந்துவிட்டான். இதோ, காட்டிற்குச் செல்லும் பாதை தெரிகின்றது. கண்ணன் நினைத்தான், இந்த உரலோடு காட்டுக்குச் சென்று நண்பர்களை எல்லாம் பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரே வேடிக்கையாக இருக்குமே! அவங்க கிட்டே இவ்வளவு தூரம் உரலை இழுத்துக் கொண்டு வந்தது பத்திக் காட்டலாமே! கண்ணன் மேலும் நகர ஆரம்பித்தான். நகரும்போதே யோசனை, உரல் இத்தனை கனமாய் இருக்கே, ரொம்பவே வியர்க்கவும் செய்கின்றதே, ஆனால், இப்போ இப்படிப் போய்த் தான் ஆகணும், அம்மாவோ கோபமா இருக்காள், நம்மைக் காணலைனால் தேடுவாள் இல்லையா? அப்போ வந்தால் போதுமே! கண்ணன் மேலே நகர ஆரம்பித்தான்.

ரொம்பக் களைப்பாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு காட்டுப் பாதைக்கு வந்துவிட்டான் கண்ணன். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்க எண்ணி, அந்த உரல் மேலேயே உட்கார்ந்தான் கண்ணன்.
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.

ஆனால் தாகமாயும் இருக்கு. தண்ணீர் எங்கே கிடைக்கும்? சுற்றுமுற்றும் பார்க்கின்றான் நீலமேக சியாமளன். அவன் கண்களில் தண்ணீரே படவில்லை எங்கும். கோகுலத்துப் பெண்கள் நதியில் இருந்து நீர் மொண்டு கொண்டு செல்லும்போது பார்த்தாலும் கொடுப்பார்கள். ஆனால் இப்போ மதிய வேளையாயிடுத்தே! எல்லாப் பெண்களுக்கும் அவங்க அவங்க வீட்டு வேலையே மும்முரமாய் இருக்குமே. எத்தனை நேரம் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது? கண்ணனுக்கு காத்திருப்பதில் பொறுமை இல்லை. வீட்டுக்கு உடனே போயிடலாமா என யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் கண்களில் தெரு ஓரத்தில் பக்கம் பக்கமாய் வளர்ந்திருந்த இரு மரங்கள் பட்டன. அந்த மரங்களை “யமால்” (இரட்டையர் என்ற அர்த்தத்தில்) என்றும், “அர்ஜுன்” எனவும் அழைப்பார்கள். (மருத மரங்களை வடமொழியில் அர்ஜுன் எனச் சொல்லுவதுண்டு.)

ஒரு நிமிடம் யோசிக்கின்றான் நம் கண்ணன் அந்த மரங்களைப் பார்த்து. “ஆஹா, இதோ ஒரு உபாயம்! நாம இப்போ அந்த மரங்களுக்கு இடையே இருக்கும் சின்ன இடைவெளியில் போய்ப் புகுந்து அந்தப் பக்கமாய்க் குதித்தோமானால் தீர்ந்தது. உரல் இந்தப் பக்கம் மாட்டிக் கொண்டு, நடுவில் பிணைத்திருக்கும் கயிறு துண்டாகிவிடும். நாம் அந்தப் பக்கம் போய்விடுவோம். கயிற்றுப் பிணைப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரம் ஆயிடுவோம்.” என நினைத்தான். நினைப்பதும், நினைப்பதைச் செயலாற்றுவதற்கும் நம் கண்ணனுக்குச் சொல்லியா தரவேண்டும்? இதோ, கண்ணன் போய்விட்டான் அந்த மரங்களுக்கிடையில். கண்ணன் எப்படியோ மரங்களின் இடைவெளியில் புகுந்து அந்தப் பக்கம் போய்விட்டான். உரல் மறுபக்கம் தான் இருக்கிறது. ஆனால் கயிறு அறுந்து கண்ணனை விடுவிக்கவில்லையே? கண்ணன் பல்லைக் கடித்துக் கொண்டு, இரு கைமுஷ்டிகளையும் மூடிக் கொண்டு தன் சிறு உடம்பால் பலம் கொண்ட வரைக்கும் இறுக்கி இழுக்கின்றான் கயிற்றை. பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும், மீண்டும் முயலக் கயிறு அறுந்து போகவில்லை. ஆனால் பெரும் சப்தம்! என்ன இது? ஆஹா, இந்த மரங்கள் அல்லவா விழுந்துவிட்டன? கண்ணன் செய்வதறியாது திகைத்தான். வெறுப்பும், கோபமும் மேலோங்கின. தான் விடுதலையாவோம் என எண்ணி இருக்க மரங்கள் அல்லவோ கீழே விழுந்தன. வேறே வழியே இல்லை. யாரானும் வரவரைக்கும் காத்திருக்க வேண்டியது தான். கண்ணனுக்கு அழுகை வரும்போல் இருந்தது. அழுகையை அடக்கவும் முடியாது போல் இருந்தது. ஆனால் கூடவே இன்னொரு எண்ணம். எதுக்கு அழணும்? நாம்தான் இவ்வளவு பெரிய மரங்களைக் கீழே தள்ளிட்டோமே? எவ்வளவு பலசாலி நாம? அழுதால் சிரிப்பாங்க எல்லாரும். ஆனால் உடம்பெல்லாம் காயம் என்னமோ பட்டிருக்கு. அம்மா கிட்டே போகணும் போல் இருக்கு. பரவாயில்லை, யாரானும் வரவரைக்கும் காத்திருப்போம். அம்மா, அம்மா, யாரானும் சீக்கிரம் வரக் கூடாதா?

டிஸ்கி: இந்த மருத மரங்களுக்கிடையே கண்ணன் புகுந்து வருவதை தர்க்க ரீதியாக யோசித்து முன்ஷிஜி தன்னுடைய பார்வையிலே எழுதி இருப்பதையே இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் ஒரு குழந்தையால் இப்படி எல்லாம் முடியுமா என்ற கேள்விகள் எழுவதையும், முடியும் என்பதையும், எப்படி முடிந்தது என்பதையும் நன்கு ஆராய்ந்து அவர் குறிப்பிட்டிருக்கின்றார் பல விஷயங்களிலும் என்பதையும் காண முடிகின்றது. பல சமயங்களில் கண்ணனுடைய அந்தக் குழந்தைப் பருவத்துக்கே போய் அவரே கண்ணக் குழந்தையாக இருந்து அனுபவித்துப் புரிந்து கொண்டிருக்கின்றார். இந்த மருத மரங்களையும், அவை பற்றிய தொகுப்பையும் பாகவதத்தில் குறிப்பிட்டிருக்கும்படி நாளை காணலாம்.

பாசுரங்கள் பொதுவான அர்த்தத்தையே குறிக்கின்றன. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பன அல்ல.