எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 02, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு செளந்தர்ய லஹரி 8

ஐந்தாம் நாளான இன்று அம்பிகையை மாஹேஸ்வரியாகக் காணலாம். மஹதீ என்றும் அழைக்கப்படும் இவளை, லலிதா சஹஸ்ரநாமாவளியில், ‘மாஹேச்’வரீ மஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மாஹேச்’வரியான இவள் உழைப்பின் தேவதை! திரிசூலம் ஏந்தியவண்ணம், பிறைச்சந்திரனைச் சூடி, ஈசனின் ரிஷபவாஹனத்தில் எழுந்தருளுவாள். இவளும் அம்பிகையின் சேனைகளில் ஒருத்தியே ஆவாள். கடும் உழைப்பைச் செய்பவர்கள் இவளைப் பிரார்த்தித்து வழிபட்டால் நன்மை பயக்கும். இவளுக்கான நிவேதனம், கல்கண்டு சாதம்.

ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் என்றாலும், மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். ஆழாக்கு அரிசி, 50 கிராம் பாசிப்பருப்பு, கட்டிக்கல்கண்டு, பால் அரை லிட்டர், குங்குமப் பூ, ஏலக்காய், கேசரிப்பவுடர்(தேவையானால்). நெய் 50 கிராம்,முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம்.

பாசிப்பருப்பையும், அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். அரைலிட்டர் பாலைக் கொதிக்க விட்டு அதில் பாசிப்பருப்பை முதலில் போட்டுக் குழைய விடவும். பின்னரே அரிசியைச் சேர்த்தல் நலம். அரிசி சீக்கிரம் வெந்துவிடும். தேவை எனில் இன்னும் சிறிது பால் சேர்க்கலாம். அரிசியும் பருப்பும் குழைந்ததும், கல்கண்டைச் சேர்க்கவும். கல்கண்டுப் பாகு விட்டுக்கொண்டு வரும். அனைத்தும் சேர்ந்து உருட்டும் பதம் வரவேண்டும். நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துப்போட்டுவிட்டு ஏலக்காய், குங்குமப்பூ சேர்க்கவும்.

மாலை வேர்க்கடலைச் சுண்டல்; பச்சை வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் அதை குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நீரை வடிகட்டிவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுக் கொண்டு வெந்த கடலையையும் போட்டுவிட்டுக் கிளறவும். ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்த்து பொடிவாசனை போகக் கிளறிவிட்டுத் தேங்காய் துருவல் சேர்க்கவும். இதில் காரட் துருவியும் சேர்க்கலாம்.

*************************************************************************************
அம்பிகையின் பாத கமலங்களின் சக்தி எப்படிப்பட்டதெனில், மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டி அபய வரத முத்திரை காட்டுகையில் அம்பிகையோ அதெல்லாம் இல்லாமலேயே தன்னிரு பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டவர்களை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. நேரே தன்னில் அவர்களை ஐக்கியப்படுத்தி மோக்ஷத்தை அளிக்கிறாள். இந்த உலகம், ஈரேழு பதினாலு லோகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் சக்திகள் போன்ற எல்லா சக்தியும் அம்பிகையிடமிருந்தே வந்திருக்கையில் அவளுக்கெனத் தனியாக அபய வர ஹஸ்தங்கள் எதுக்கு என்கிறார் ஆசாரியார். அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களே மற்ற தெய்வங்கள் எல்லாம் என்றாலும், இங்கே அனைத்தும் அடங்கிய லலிதா திரிபுர சுந்தரியாக அம்பிகையைக் காண்கிறார் ஆசாரியார். அத்தகைய லலிதா திரிபுர சுந்தரி இவ்வுலகத்து மாந்தரெல்லாம் அடைக்கலம் புகும் புகலிடமாகவும் இருக்கிறாள். அவள் என்னைச் சரணடையுங்கள்; நான் உங்களை ரக்ஷிப்பேன்; என்றெல்லாம் அபயவர ஹஸ்தம் காட்டவேண்டும் என்பதே இல்லை. அவளை மனதில் தியானித்தாலே போதும். தன்னோடு சேர்த்துக் கொண்டு கேட்டதை வாரி வாரி வழங்குகிறாள்.

த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள

தேவெனப் புகழ அதில் நிமிர்ந்து நிகர்
செப்புவார் அபய வரதமாம்
பாவகத்து அபினயத்தோடு உற்ற கை
பரப்பி என் பயம் ஒறுக்குமே
யாவருக்கும் அஃதரிது நின் பதம்
இரப்ப யாவையும் அளிக்கு மான்
மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என்
மூலமே தழையு ஞாலமே.

கவிராஜப் பண்டிதரின் தமிழாக்கம்

ஸம்சார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையைக் காட்டும் பிற தெய்வங்களைப் போலன்றித் தன் காலடியில் வந்து வணங்கினாலே மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவள் அம்பிகை. நாம் கேட்பதற்கும் அதிகமாகப் பலனைத் தருவாள். லலிதா திரிபுரசுந்தரிக்குக் கரங்களில் பாசாங்குசங்கள், புஷ்பபாணங்கள், கரும்பு வில் போன்றவற்றோடு காட்சி அளிப்பதால் அம்பாளுடைய கைகளால் தன்னைச் சரணடை என இடக்கை பாதங்களைச் சுட்டாமலும், வலக்கை மேல்நோக்கிக்காட்டாமலும் அவளுடைய பாதங்களே சரணம் செய்யத் தக்கவை என்பது இங்கே சூசகமாய்ச் சொல்லப் படுகிறது. பொதுவாகவே பெரியவர்களை நமஸ்கரிப்பது வழக்கம். யார் வீட்டிற்கானும் போனாலும் அங்கே வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை எனினும் இன்னமும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். வீட்டுப் பெரியவர்களை வணங்கினாலே ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கிறது. கீழே விழுந்து வணங்குவதன் மூலம், நாம் அனைத்திலும் சிறியோன் என்ற எண்ணம் தோன்றி விநயம் பிறக்கும். வீட்டின் பெரியவர்களை விழுந்து வணங்கிப் பழகினோமானால் நாளாவட்டத்தில் அம்பிகையின் பாதங்களைப் பூரணமாய்ப் பற்றிக்கொள்ளலாம். நாம், நம்முடைய, என்ற நமது ஆணவம் விலகவேண்டுமானால் பரிபூரண சரணாகதி தான் சிறந்தது.

ஆனால் அம்பிகையோ மூத்தோர்களுக்கெல்லாம் மூத்தவள்! அபிராமி பட்டரும் கூட அம்பிகையை "மூத்தவளே" என ஒரு பாடலில் அழைக்கிறார். ஆதிமூலமான பராசக்தியை அனைத்தையும் இயக்கும் சக்தியை வணங்கினால் கிடைக்கும் பெறர்கரிய பேற்றைப் பற்றி எண்ணுகையிலேயே, அவள் நாமத்தைச் சொல்கையிலேயே மனம் ஆனந்த சாகரத்தில் மூழ்குகிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையையே லலிதா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம். அப்போதாவது நம் ஆணவத்தை எல்லாம் விட்டு விட்டு அம்மா, தாயே, நீயே சரணம், உன் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு நான் நல்வழிக்குத் திரும்பச்செய்வாய்! உன்னை என்றும் மறவாமல் இருக்கும்படி பண்ணுவாய்! என்று நம்மை மறந்து தேவியின் பாதங்களையே நினைத்துக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

இதையே அபிராமி பட்டர் கூறுகையில் சிந்தூரத்தை ஒத்த செந்நிறப்பெண்ணே! அம்பிகையை உதிக்கின்ற செங்கதிருக்கும் ஒப்பிட்டிருக்கிறார் பட்டர். இங்கேயோ சிந்தூரத்தைக் கூறுகிறார். அவ்வளவு செக்கச் சிவந்த மேனியை உடைய பெண்ணரசியே, நான் என்றும் வணங்கி தாள் பணிவது உன் பொன்னிறத் திருவடித் தாமரையில் தானே! தாமரை மலர்களை ஒத்த அந்தத் திருவடியில் விழுந்து வணங்குவதோடு அந்தத் திருவடியைத் தம் சிரசின் மேலும் தாங்குகிறார் பட்டர். அம்பிகையின் திருவடியைத் தம் சிரசின் மேல் தாங்கிக்கொண்டு, தன் மனதினுள்ளே அம்பிகையின் திருமந்திரமான சக்திப் பிரணவத்தை நினைத்த வண்ணம் துதிக்கிறார். அம்பிகையும் தானும் ஒன்றாகி தானே அம்பிகை என்னும் வண்ணம் இரண்டறக் கலந்து விடுகிறார் பட்டர். இவ்வளவும் போதாது என்று, அம்பிகையைத் துதிப்பதே தங்கள் வாழ்நாளின் பெரிய கடமை, பெரும்பேறு என எண்ணும் அடியார் கூட்டத்தோடும் சேர்ந்து அவர்கள் அம்பிகை குறித்த நூல்களைப் பாராயணம் செய்து வாழ்த்திப் பாடுகையில் தாமும் சேர்ந்து கொண்டு அம்பிகையை வாழ்த்திப் பாடுகிறார். இப்படிச் சொல், செயல், நினைவு என எல்லாமும் அம்பிகையாகவே இருக்கத் தான் செய்த புண்ணியம் தான் என்ன என வியந்து மகிழ்கிறார் பட்டர். அவரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அமாவாசை அன்று தாம் பெளர்ணமி என அம்பிகையின் முகதரிசனத்தைக் குறித்துச் சொன்னதை மன்னன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும், மன்னன் கட்டளை இட்டுவிட்டான். பெளர்ணமி பூரணச் சந்திரனைக் காட்டு என! என்ன செய்ய முடியும் அவரால்! அம்பிகையைச் சரணடைந்தார். உன் பக்தன் ஆன நான் சொல்வதும் பொய்யாகுமா அம்மா! என நம்பிக்கையோடு பாடுகிறார். அம்பிகையைப் பூரண நிலவை வரச் செய்தாகவேண்டிய கட்டாயமான சூழ்நிலை; அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!

2 comments:

  1. அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!//

    அம்பிகை கருணை நிறைந்த தாய் அல்லவா!

    அவள் மகிமையை சொல்லிக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இந்த நவராத்திரி காலத்தில் இருந்தால் அன்னை நம்மை ஆசிர்வதிப்பாள், இன்பம் எல்லாம் தருவாள் ,

    உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாங்க கோமதி அரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete