எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 14, 2012

சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, :))))

கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,

"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

18 comments:

  1. தெரியாத விசயம்... நன்றி. உங்கள் குடும்ப அன்பர்களுக்கும் உங்களுக்கும் இந்நன்னாள் போல என்றும் சிறப்புடன் வாழ எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 'சீரோடும் சிறப்போடும், செல்வ சீமாட்டியா, சின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரிய ஆம்படையானுக்கு புள்ளைய பெத்து'.... :) இதேதான், இதே கேள்வியைதான் நானும் என் பெரியம்மா கிட்ட கேட்டேன். இதே பதில்தான் கிடைச்சது.
    'அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி' இதுக்கு உங்களுக்கு விளக்கம் தெரியுமா? :)

    'இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!'

    ReplyDelete
  3. வாங்க விச்சு, ரொம்ப நன்றி, உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாங்க மீனாக்ஷி, கண்ணைக் கவரும் சங்குப் பூ. பிடிச்ச கலர் கூட. அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டிக்கு நீங்கதான் விளக்கம் சொல்லணும்.

    எல்லாத்தையும் நானே சொன்னால் எப்பூடி?? நீங்களும் சொல்லுங்க; பதிவு எழுதாமலேயே இத்தனை ரசிகர்கள் இருக்கிறச்சே இதையானும் ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டாமா????

    ReplyDelete
  5. அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது. :) நான்தான் உங்க எல்லாரோட ரசிகை. நீங்கள் எல்லாம் எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு எவ்வளவு அருமையா, அழகா எழுதறீங்க. Hats off!

    எனக்கு இது சரியா தெரியாததால்தான் நான் உங்களை கேட்டேன். நீங்க என்னடான்னா என்னை மாட்டி விட்டுடீங்களே! ;)
    நீங்க கேட்டதால எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சதை சொல்றேன். அந்த காலத்துல கூட்டு குடும்பத்துல இருக்கும்போது பிரசவதிற்காகவோ, வேறு
    விஷயங்களுக்காகவோ ஒருத்தரோட மனைவி பிறந்த வீட்டுக்கு கொஞ்ச நாள் போனால் , அவரையும், அவருக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளையும் மிகவும் பொறுப்புடன் அவர் அண்ணன் மனைவியோ அல்லது தம்பியின் மனைவியோ கவனித்து கொள்வார்கள். இதில் 'தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி' என்பது எதனால் என்றால், அவள் எப்படியும் தன்னை விட வயதில் நிச்சயம் சின்னவளாகதான் இருப்பாள் என்பதால், மனைவியை அதிகாரம் பண்ணுவது போல் அவளை அதிகாரம் பண்ண முடியும் என்பதால்தான்.
    எங்க பாட்டி முழுக்க முழுக்க கும்பகோணம், பெரியம்மா மன்னார்குடி. எங்க அம்மா, பெரியம்மா, பாட்டி இவங்க எல்லாம் பேச ஆரம்பிச்சா வரிக்கு வரி இது மாதிரி ஏதாவது வந்துண்டே இருக்கும். நாள் பூரா ஜாலியா கேட்டுண்டே இருக்கலாம்.

    ReplyDelete
  6. தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ளமுடிந்தது. இப்பல்லாம் கனு அன்னிக்கு மஞசள் கீறிக்கவே வரமாட்டேங்கராளே?

    ReplyDelete
  7. நல்ல விளக்கம்ங்க. பல விஷயங்கள் சரியான புரிதல் இன்றி, புரிவிப்பாரும் இன்றி எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்கிறோம் என்று புரிந்தது.

    நாளைக்குத் தானே அங்கே பொங்கல்?..
    தங்களுக்கும், தங்கள் சக குடும்பத்தார் அனைவருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  8. காக்காப் பொடி வைச்சேன் கணுப்புடி வைச்சேன் கணவனும் நானும் பெருவாழ்வு வாழணும். - இது எங்கள் பக்கம் சொல்லக்கூடியது. இது போல, ஐப்பசிப் பூரத்து அன்று, பூரச்சலங்கை இடுவது ஒரு பாரம்பரியமான வழக்கம். அதற்கும் நிறைய சொல்லாடல்கள் உண்டு. கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய நிகழ்ச்சி.

    ReplyDelete
  9. காக்காப் பொடி வைச்சேன் கணுப்புடி வைச்சேன் கணவனும் நானும் பெருவாழ்வு வாழணும். - இது எங்கள் பக்கம் சொல்லக்கூடியது. இது போல, ஐப்பசிப் பூரத்து அன்று, பூரச்சலங்கை இடுவது ஒரு பாரம்பரியமான வழக்கம். அதற்கும் நிறைய சொல்லாடல்கள் உண்டு. கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய நிகழ்ச்சி.

    ReplyDelete
  10. கணுப்பிடி வைப்பது உடன் பிறந்த அண்ணன்,தம்பி ஆகியோர் சீறும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்பதற்கு என்கிற வரையில்தான் எனக்கு தெரியும்.மஞ்சள் கீற்றிக்கொள்ளும் போது செய்யப்படும் ஆசிர்வாதத்திற்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மாமி. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகி இருந்தாலும் குடும்பப் பெண்களுக்கு அவரவர் சகோதரர்களிடமிருந்து
    பொங்கல் சீர் மனி ஆர்டராக வருவதுண்டு. 1961ல் ரூபாய் ஐந்தாக துவங்கியது 2012 ல் ஐ நூறு ஆக உயர்ந்துள்ளது.
    இது ஒரு சென்டிமென்ட் தான். இருந்தாலும் இந்த சென்டிமென்ட்டுக்கு ரெஸிப்ரொகேட் செய்வது மிக அவசியம்
    என்பதால், கணுப்பொங்கல் அன்று தங்கள் கூடப்புறப்பு எல்லாம் நல்லா இருக்கணும் அப்படின்னு வேண்டிண்டு
    எல்லா டிஷ்களையும் பொங்கல் உட்பட, மஞ்சள் கொத்து இலையில் மாடிக்குச் சென்று வைத்துவிட்டு வருவது
    அந்த காலத்திலிருந்து வழக்கம்.

    சின்ன ஆம்படையான், பெரிய ஆம்படையான் விளக்கம் இப்பதான் கேள்விப்படுகிறேன்.

    மீனாட்சி பாட்டி.
    சுப்பு தாத்தa

    ReplyDelete
  12. வாங்க சூரி சார், பல நாட்களுக்குப் பின்னர் வந்ததுக்கு நன்றி. எங்க பக்கம் (மதுரை) கனுப்பிடி வைக்கவும், அன்றைய தினம் சாப்பிடவுமே பிறந்த வீட்டுக்குத் தான் போறது வழக்கம். தமிழ்நாட்டுக்குள்ளாக வெளியூராக இருந்தால் கூட இரவு கிளம்பிப் போவாங்க ஒரு காலத்திலே. இப்போ உள்ளூர் பக்கத்துத் தெருனாக் கூடப் போறதில்லை! :(((

    ReplyDelete
  13. வாங்க மீனாக்ஷி, நீங்க சொல்ற விளக்கம் சரியில்லை; நான் கொஞ்சம் உறுதிப் படுத்திக்கொண்டு சொல்கிறேன்.இங்கே இருப்பதால் இந்தியா போனதும் கேட்டுச் சொல்றேன்.

    ReplyDelete
  14. வாங்க லக்ஷ்மி, மஞ்சள் கீறிக்கொள்வதும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது உண்மையே. :((( முன்பெல்லாம் அக்கம்பக்கத்துப் பெண் குழந்தைகளை அனுப்புவாங்க. இப்போதெல்லாம் யாருமே வரதில்லை. :((((

    ReplyDelete
  15. வாங்க ஜீவி சார், இணையத்து அண்ணாக்கள், தம்பிகளுக்கும் சேர்த்து இன்னிக்குக்கனுப்பிடி வைச்சாச்சு. :))))

    ReplyDelete
  16. வாங்க தீக்ஷிதரே, ஐப்பசிப் பூரம் பத்திச் சீக்கிரமா எழுதுங்க. தெரிஞ்சுக்கலாம்.

    ReplyDelete
  17. வாங்க ராம்வி, ரொம்ப நன்றிம்மா.

    ReplyDelete
  18. இந்த வழக்குச் சொல் பற்றிப் பல விமரிசனங்களைக் கேட்டிருக்கேன். சில வேத மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்வதைப்போல் இதுவும் தவறான புரிதலிலேயே இருக்கிறது. பெரியவங்களும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்; தவறி விட்டார்கள்.

    ReplyDelete