எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 06, 2013

பாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை!

பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை).


இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து  மாயா சக்தியால் தோன்றியுள்ளதாக ஐதீகம். ஒரே பிரம்மம் தான் இத்தனை உருவங்கள், குணங்கள் உள்ள ஜீவராசிகளாயும், பிரபஞ்சங்களாயும் தோன்றுகிறது என்றும் ஒன்றான பிரம்மத்தைப் பலவாகக் காட்டுவது அம்பிகையான மாயாசக்தி எனவும் அம்பிகையின் மாயா சக்தி எனவும் கூறுவார்கள்.   இந்தப் பாருள் பிரம்மத்தை அடக்கியவண்ணமும் அவளே காட்சி அளிக்கிறாள்.  பிரம்மமாகவும் அம்பாளே காட்சி அளிக்கிறாள்.  இவளே ஞானாம்பிகை.  இந்த அகண்ட பேரண்டத்தில் பரப்ரும்மத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு அம்பாளாகக் காட்சி தருவதும் அவளே. அதோடு மட்டுமின்றி ஜீவாத்மாக்களைப் பிறவியாகிய பெரும் கடலில் இருந்து விடுவித்து முக்தி என்னும் கரையில் சேர்ப்பவளும் அவளே!  ஆகவே இந்தக் காளியானவள் பரப்ரும்மத்தை மட்டும் உள்ளடக்கியவளாய் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பவதாரிணியாகவும் விளங்குகிறாள்.

இவளுடைய மூன்று கண்களில் வலக்கண் சூரிய வடிவம் எனப் பார்த்தோம்,  அது பகலைப் படைக்கிறது. இடக்கண் இரவைப் படைக்கிறது.  இரண்டுக்கும் நடுவே உள்ள அக்னியாகிய கண்ணானது சந்த்யா காலத்தைப் படைக்கிறது.  ஆகவே அது சிவந்து விளங்குகிறது.  இவ்வாறு காலத்தையும் கடந்து நிற்பதால் காலஸ்வரூபிணி என்றும் இவளைச் சொல்லலாம்.

//பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //

வேத மந்திரங்களாலும் இவளைப் பற்றி வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு எல்லையற்றவள்.  ஏனெனில் வேதங்களின் பரம தாத்பரியமான அத்வைதமாகவும் இவளே விளங்குகிறாள்.  அவளே அனைத்துமாய் எங்கும் நிறைந்தவளாய் காலங்களை எல்லாம் கடந்தவளாய் இருக்கிறாள்.  இதோ பாரதியின் பார்வையில் காளி:

"யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்:
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ!
பூதமைந்தும் ஆனாய்-காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்!"

பாரதி கண்ட காளி இவள். பாரதி காளியின் பக்தன். கண்ணனின் பக்தன் ஆனால் காளியின் பக்தனும் ஆனான்.பாரதி எவ்வாறு காளியைத் துதித்தான் என்றால்

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண்" என்றும் "நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்:அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே!
சொல்லத்தகுந்த பொருளென்று காண்!இங்குசொல்லுமவர் தமையே!
அல்லல் கெடுத்தமரர்க்கிணையாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்." என்கிறான்.


பாரதி கண்ட அந்தக் காளியின் காட்சி எவ்வாறு என்பதைப் பார்ப்போமா?

படர்ந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்ததனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் குருதி சொட்டும் அசுரனின் தலை என்று காண்போரைக் கதி கலங்க வைக்கும் தோற்றமுள்ள இந்தக் காளி, சடலமாகத் தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன்னிரு கால்களைப் பதித்துப் பயங்கரமாகத் தரிசனம் தருகிறாள். ஆனால் இந்தத் தோற்றம் ஒவ்வொன்றுக்கும் அரிய தத்துவங்கள் உண்டு.


உயிர்கள் அவளிடம் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவளின் மாலையில் உள்ள அரிந்த சிரங்கள் உணர்த்துகின்றன. மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்துக்கும் சக்தியாக இருப்பவள் அவள் ஒருத்தியே என்பதை உடைந்த கரங்களால் ஆன ஆடை மூலம் தெரிய வரும். ஆணவத்தோடு மனிதர்கள் செய்யும் அற்பக் காரியங்களை அவள் காலக்கிரமத்தில் வெட்டி வீழ்த்துகிறாள் என்பதை இடது கரத்தில் உள்ள வாள் தெரிவிக்கிறது.இயற்கை நடை முறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் மனிதன், இறுதியில் தாயின் வாளுக்கு வெட்டுண்டு பலியாவான் என்பதை வெட்டுண்ட சிரம் தெரிவிக்கிறது. காளியை ஆராதிப்பவர்கள் வீரமாக இருக்க வேண்டும். பயம் கூடாது. அதாவது மரண் பயம். காளி அனுதினமும் சம்ஹாரத் தொழிலைச் செய்கிறாள்.இதையே செந்நிறமான அவளுடைய நீட்டிய நாக்கு காட்டுகிறது. இவளுடைய கோரத் தாண்டவம் நடக்கும் இடம் சுடுகாடு. நம் மனத்தில் ஏற்படும் ஆசை, காமம், கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் ஒழிந்து பஸ்பம் ஆக வேண்டும் . நம் மனம் நிர்மலம் ஆக வேண்டும் என்பதையே அவளது தாண்டவத்தலம் சுடுகாடு தெரிவிக்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் அல்லவா? கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம்? அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா? அப்போதுதான் உலகில் நீதியும், நேர்மையும், நியாயமும் ஏற்பட்டு சாந்தியும், சந்தோஷமும் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தியாக இருந்து நம்மை ரட்சிப்பவளே காளி என்னும் மஹாசக்தி.இவளைத்தான் ஊழிக்கூத்தில் பாரதியார்

"காலத்தொடுநிர்மூலம் படுவுலகும்- அங்கே
கடவுள் மோனத் தொனியே தனியாயிலகும்-சிவன்
கோலங்கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-
கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத்திடுவாய்!
அன்னை!அன்னை! ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை!"

என்று பாடுகிறார்.

அன்னையின் கோபம் ஈரேழு பதினாலு உலகத்தையும் வாட்ட, அவள் கோபத்தைச் சிவன் தான் ஒருவரே தணிக்கமுடியும் என்று உணர்ந்து, சடலம் போலக் கீழே படுக்கிறார். தன்னிலை தெரியாது கோபாவேசத்தில்இருக்கும் அன்னை சிவன் மார்பில் ஏறி நின்று ஊழிக்கூத்தாடினாள். அவள் காலால் மிதியுண்ட சிவன் ஒரு குழந்தையாக மாறி அழ, குழந்தையின் குரல் கேட்ட அன்னை கோபம் தணிகிறாள். அது போல நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள். இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்திலும் காளிக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றிருக்கின்றன.

கருத்து உதவி: தெய்வத்தின் குரல்

12 comments:

  1. அருமையான பகிர்வு.

    பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிகவும் ஆனந்தமாக இருக்கிறது, படிக்க, படிக்க,

    ReplyDelete
  3. மஹாகவி மனசெல்லாம் நிறைஞ்சுட்டார். உங்களதும் உணர்வு கொப்பளிக்கும் வரிகள்.

    ReplyDelete
  4. ஶ்ரீராம், கருத்து ஒண்ணும் சொல்லலையே? :))

    ReplyDelete
  5. வாங்க "இ"சார், அவ்வப்போது உங்கள் வருகை உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ஜீவி சார், வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள். பலமுறை படித்து நினைவில் நிறுத்த வேண்டியவை. மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  8. வாங்க ஜீவா, பல வருடங்கள் (!) கழித்து வந்தமைக்கு நன்றி. :)

    ReplyDelete
  9. //நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள்.// அவள்தானே நம்மைப் படைத்து காப்பவள். அவளிடமே தஞ்சம் புக வேணும்.


    // இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள். //

    பழையோள் என்ற பெயர் புதிதாக இருக்கிறது - என்றென்றும் புதிதாக இருக்கும் சாயைக்கு இப்படி ஒரு பெயர். வியப்பாக இருக்கிறது.

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளுகிறேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. வாங்க ரஞ்சனி, பழையோள் என்ற பெயர் ரொம்பப் பழசாச்சே! :))))வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    முருகனை, "பழையோள் குழவி" எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் எனக் கேள்விப் பட்டிருக்கேன். முருகாற்றுப்படை படிச்சதில்லை. :)))))

    ReplyDelete
  11. உங்களுக்காக இதைக் கண்டு பிடிச்சேன். :))))இதிலே கொற்றவை, பழையோள் இரண்டுமே வரும்.:)))

    ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
    மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
    வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ
    இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
    வானோர் வணங்குவில் தானைத் தலைவ (26

    ReplyDelete
  12. ஒரு வேளை பள்ளியில் படித்திருப்பேனோ என்னவோ, நினைவில்லை. :)
    'பழையோள்' என்கிற பெயர் மிகவம் பிடித்துவிட்டது!
    உங்களது விளக்கம் அருமை. முருகனைப் பற்றிய இந்தப் பாடலை தேடிப்பிடித்து போட்டதற்கு hats off!
    உங்களின் dedication வியக்க வைக்கிறது. எழுதுவதை நீங்கள் ஒரு தவமாகச் செய்கிறீர்கள், கீதா. மறுபடியும் பாராட்டுக்கள்.
    இந்தப் பாடல் முருகாற்றுப்படையில் வருவதா?

    ReplyDelete