எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 19, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


அக்ரூரரோ பரமபாகவத சிரோன்மணி. ஏதோ சகவாசதோஷத்தால் கிருஷ்ணரிடம் கோபம் ஏற்பட்டதே தவிர, உண்மையில் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார். இங்கே கிருஷ்ணரோ, சததன்வா துவாரகையை விட்டு ஓடும் செய்தி அறிந்ததும், தன் அண்ணனாகிய பலராமரையும் கூப்பிட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து ச்யமந்தக மணி பற்றி அறிந்துவரப் போகின்றார். கிருஷ்ணரும், பலராமரும் ரதத்தில் செல்ல, சததன்வா குதிரையில் ஓடுகின்றான். குதிரை களைத்து விழுந்துவிடக் கால்நடையாக ஓடும் சததன்வாவைப் பிடிக்கக் கிருஷ்ணரும் ரதத்தில் இருந்து இறங்கி ஓடுகின்றார். பலராமர் கிருஷ்ணரோடு போகவில்லை. தப்பி ஓடும் ஒருவனைப் பிடிக்க இருவர் தேவையில்லை என்பது அவர் கருத்து. கிருஷ்ணர் சததன்வாவைப் பிடித்து, சண்டைபோட , சண்டையில் தோற்ற சததன்வா, பின்னர் கிருஷ்ணரால் கொல்லவும் படுகின்றான். அவனிடம் ச்யமந்தகமணியைத் தேடும் கிருஷ்ணருக்கு அது கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி ரதத்துக்கு வந்து பலராமரிடம் நடந்ததைச் சொல்ல, பலராமர் நம்பவில்லை.

கிருஷ்ணர் கபடமாய் மணியை அபகரித்து வைத்துக் கொண்டு சததன்வாவையும் கொன்றுவிட்டு இப்போது பொய் சொல்லுவதாய் நினைத்த பலராமர் கோபத்துடன், கிருஷ்ணருடன் துவாரகைக்குச் செல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு, விதேஹ நாட்டுக்குப் போய்விட்டார். அண்ணனும் திரும்பாமல், மணியும் கிட்டாமல், அனைவரையும் விரோதித்துக் கொண்ட கிருஷ்ணர் செய்வதறியாது விழித்தார். அப்போது தான் அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் இம்மாதிரி அபாண்டமாய்ப் பழி சுமக்க என்று தோன்றுகிறது.

ச்யமந்தகத்தை வைத்துக் கொண்டிருந்த அக்ரூரரோ கிருஷ்ணரிடம் அபாரமான பக்தியும், அன்பும் கொண்டவராதலால் ஒரு க்ஷண நேரம் தன் மனம் மாறியதை நினைத்தும், இப்போது ச்யமந்தகம் தன்னிடம் இருப்பதால் கிருஷ்ணருக்குத் தன்னிடம் உள்ள அன்பு போய் விரோதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலும், த்வாரகையை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஊராக க்ஷேத்திராடனம் செய்து கொண்டு கடைசியில் காசியை அடைகின்றார். அங்கே போனதும் ஏற்கெனவே வேதனைப் பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தவர் மனம் நிர்மலமாக, ஸ்யமந்தகம் எட்டு பாரம் பொன்னை வாரி வழங்க ஆரம்பித்தது. அந்தப் பொன்னையோ, அல்லது ச்யமந்தகத்தையோ தனக்கெனக் கருதாமல், தன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் தேவாலயத் திருப்பணிகளுக்கும், மற்ற உதவிகளுக்கும் செலவு செய்தார் அக்ரூரர். நாளடைவில் காசி க்ஷேத்திரமே செழிப்பாக மாறியது.

இங்கே த்வாரகையில் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் தன் அண்ணன் இல்லாமலும், ச்யமந்தக மணியின் காரணத்தால் உயிரிழந்த தன் சிறிய மாமனார் ஆன பிரசேனன், மாமனார் சத்ராஜித், நண்பன் ஆன சததன்வா ஆகியோரையும் நினைத்து வேதனைப் பட்டார். அக்ரூரரும் த்வாரகையில் இல்லாமையால் அவரிடம் ச்யமந்தகம் இருக்கவேண்டும் என நினைத்தார். அப்போது ஒருநாள் நாரதர் அங்கே வர கிருஷ்ணர் அவரிடம் தன் துன்பத்தைச் சொல்லிக் காரணம் கேட்டார். நாரதர் சொல்கின்றார்:”கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாத சுக்கில பக்ஷ சதுர்த்தி நாள். அன்றைய பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என இருக்க நீ அதைப் பார்த்துவிட்டாய். அதுவே உன் பேரில் ஏற்பட்ட வீண்பழிக்கும் அபவாதங்களுக்கும் காரணம்” என்று சொன்னார். “பாத்ரபத சுக்கில பக்ஷ சதுர்த்தியன்று சந்திரனைக் காணக் கூடாதா? இது என்ன புது விஷயம்? என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி!” என்று கேட்டார் கிருஷ்ணர். நாரதரும் சொல்ல ஆரம்பித்தார். இதோ இப்போ வரப்போறார் பிள்ளையார்.

ஹையா, பிள்ளையார் வந்துட்டாரே! எப்படி இருக்கார் தெரியுமா?? மூஞ்சுறு மேலே ஏறிக் கொண்டு, வேக, வேகமாய் அதிலேயே அகில உலகத்தையும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போனார். நீண்ட துதிக்கை, நம்பிக்கையைக் கொடுக்கின்றது. ஏக தந்தம், அவர் தியாகத்தைக் குறிக்கின்றது. ஆடிக் கொண்டிருக்கும் இரு காதுகளும், மாறி மாறி வரும் பருவங்களையும் குறிக்கின்றது. சாந்தமும், அன்பும், ஞானமும், விவேகமும் கொண்ட அதி அற்புதமான வடிவம். கொழு, கொழுவென்ற பெரிய தொந்தி, குட்டிக் குட்டியாய்க் கால், கைகள், பார்க்கவே அழகு, அழகு கொஞ்சும் இந்தத் தோற்றத்துடன் பிள்ளையார் சஞ்சாரம் பண்ணும்போது, அப்படியே சந்திரலோகத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்தாராம். அங்கே சந்திரன், தன் அருமை மனைவியான ரோகிணியுடன் வீற்றிருந்தான். ஏற்கெனவே சந்திரனுக்குத் தன் அழகிலும், குளுமையிலும் கர்வம் அதிகம் ஆகி இருந்தது. இப்போ வேறே மனைவியோட இருக்கானா? அவளுக்கு முன்னாலே தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக்கிறதா நினைச்சு, சந்திரன் பிள்ளையாரையும் அவரின் உருவத்தையும் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான். கேலி செய்தான், ஏகதந்தத்தையும், யானைத் தலையையும், முறக் காதுகளையும், கொழு கொழு தொப்பையையும், குட்டிக் குட்டிக் கால், கைகளையும்.

கோபமே வராத விநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. சந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும், அப்போதுதான் அவன் கர்வம் அடங்கும் என நினைத்தார் விநாயகர். சந்திரனைப் பார்த்து, “ அப்பா, சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை அல்லவே?? சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய்? நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா? கொஞ்சம் யோசி!” என்று சொன்னார். ஆனால் அகங்காரத்தின் உச்சியிலிருந்த சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட விக்னேஸ்வரன், “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப் படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சொல்லி விடுகின்றார். சந்திரனுக்குப் பயத்துடன் அபவாதம் செய்வார்களே என்ற அவமானமும் மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான்.

2 comments:

  1. mmmm....ippdi oru kadhai ya? indha rendu kadhai yum ippdi connected ena ippodhan theriyudhu.

    Wow! Maami! Unga yezhuthu suvarasyamae thani. I just love reading your blog.

    ReplyDelete
  2. வாங்க எஸ்கேஎம், மறு வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க. எப்படி இருக்கீங்க? எங்கே இருக்கீங்க?? மெயிலுங்க! :)))))))))

    ReplyDelete