எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 16, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8

இப்போ அடுத்ததுக்குப் போகறதுக்கு முன்னால் ராம்ஜி யாஹூவின் நேயர் விருப்பம்.

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா தவ சரணயோர்-யா விரசிதா!
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா” என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து.

இதையே அபிராமி பட்டர்,
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு 
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!” 

என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,

“ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா!

என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம்.

இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம்.

இதை லலிதா சஹஸ்ரநாமம்,
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிணீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ!! 

என்று சொல்கிறது.

ஒவ்வொரு ஆதார சக்கரத்தின் வழிபாட்டின் மூலமும், சக்தியானவள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக்கொண்டு மேலே ஏறி சஹஸ்ராரத்தில் நிலை பெற்று இருக்கிறாள். இது யோகியருக்கே புரியும். நம் போன்ற சாமானியருக்கு எளிதில் புரியாது. குரு மூலமாகவே முயலவேண்டும். நம் உடலின் பஞ்சபூத தத்துவங்கள், இவ்வுலகின் பஞ்சபூத தத்துவங்களோடு பெரிதும் சம்பந்தப் பட்டிருக்கிறதைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொண்டோமானால் இந்த வார்த்தைகளுக்குப் பொருளும் எளிதில் விளங்கும்.

மூலாதாரம்-பூமி தத்துவம்
மணிபூரகம்- ஜல தத்துவம்
ஸ்வாதிஷ்டானம்-அக்னி தத்துவம்
அநாஹதம்-வாயு தத்துவம்
விசுத்தி- ஆகாயதத்துவம்
ஆக்ஞா- மனஸ் தத்துவம்

இந்த ஆறு ஆதாரங்களும், பஞ்ச பூதங்களும் காலகதிக்கு உட்பட்டவை, ஆனால் தேவியோ காலத்தைக் கடந்து என்றென்றும் நிற்பவள். இவ்வுலகத்தை அண்டம் என்கின்றோம். அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட நம் உடலோ பிண்டம் எனப்படும். நம் உடலின் மூலப் பொருட்கள் ஒன்பது. இவ்வுலகின் மூலப் பொருட்களும் ஒன்பது. ஆகவே அம்பிகையும் நவகோண நாயகியாவாள்.

நம் உடலின் மூலப் பொருட்களாகிய மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகியவற்றை சிவாம்சம் எனவும், தோல், ரத்தம், மாமிஸம், மூளை, எலும்பு ஆகிய ஐந்தும் சக்தி அம்சம் எனவும் சொல்லப் படும். இது நம் பிண்டத்தின் சிவ, சக்தி அம்சங்கள் எனில் அண்டத்தில் பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் ஐந்தும் சக்தி அம்சமாகவும், அதைச் சார்ந்த மாயை, சுத்தவித்தை, மகேஸ்வரன், சதாசிவன் ஆகியன சிவாம்சமாகவும் கொள்ளப் படும். ஸரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், லக்ஷ்மி அஷ்டோத்திரத்திலும் தேவியை ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்று சொல்லி இருக்கிறது. அம்பிகையே ப்ரம்ம ரூபமாயும், விஷ்ணு ரூபமாயும், ருத்ர ரூபமாயும் இருக்கிறாள் என்பதையும் முன்னரே பார்த்தோம். இந்த மாத்ருகா ரூபங்கள் அனைதுமே தேவியுடையவையே. தேவியை பட்டர் ஐந்து வர்ணங்களையும் உடையவள் என்றும் கூறுகிறார்.

“மங்கலை செங்கலசம் முலையாள் மலயாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கலி தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!” 

சில புத்தகங்களில் பசும்பொற்கொடியே என்றும் பாடம் இருக்கிறது.

மங்கலை என்றால் சுமங்கலி, அதுவும் நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னை, சிவந்த கலசம் போன்ற தனபாரங்களுடன், வருணனால் அளிக்கப் பட்ட சங்கு வளைகளை அணிந்த சிவந்த திருக்கரங்கள், எல்லாக் கலைகளுக்கும் தலைவி. இதை லலிதா சஹஸ்ரநாமம் சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்றும் “கலாவதீ” என்றும் கூறும். அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். ஈசனின் வாமபாகத்தை ஆட்கொண்ட அம்பிகையானவள் பொன் போன்ற நிறம் படைத்த பிங்கலை என்றும் கருநீல நிறம் கொண்ட காலி என்றும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் பெற்ற விந்தியாவாகவும், பச்சை நிறம் பெற்ற மீனாக்ஷி, உமை அம்மையாகவும் இருக்கிறாள். இதிலே பிங்கலை ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினி என்னும் திருநாமத்தோடு பொன்னிறங்கொண்டு விளங்குகிறாள்.

இதை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்,

ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா!
சூலாத்யாயுத- ஸம்பந்தா பீதவர்ணாதி கர்விதா!!
மேதோ-நிஷ்டா- மதுப்ரீதா பந்தின்யாதி- ஸமன்விதா
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ” 

என்று கூறும். இவளே மூலாதாரத்தில் வீற்றிருக்கையில் ஸாகினீ என்னும் பெயரோடு நான்கிதழ்த் தாமரையில் பஞ்ச முகத்தோடு கரிய நிறத்தவளாய் இருக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமம் இதை,

“மூலாதாரம்புஜாரூட பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முக்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ” 

என்றும் ஆக்ஞா சக்ரத்தில்,

“ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ” 

என்றும் கூறுகிறது. இதை பட்டர் “வெளியாள்=கலைமகள்” என்னும் பொருளில் அழைக்கிறார். ஆக்ஞா சக்ரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்துடனே ஹாகினீ என்னும் பெயரோடு வெண்ணிறமுடையவளாய் (சுக்ல வர்ணா)எழுந்தருளி இருக்கிறாள். விசுத்தி சக்ரத்தில் ரக்த வர்ணத்தில் டாகினீ என்னும் பெயரோடும் பட்டர் இவளைப் பொதுவாக “செய்யாள்=திருமகள்” என்னும் பெயரில் அழைக்கிறார்.

“விசுத்தி- சக்ர –நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா
பாயஸான்ன-ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ
அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா-டாகினீஸ்வரீ!

, மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம்.

“மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ

அநாஹதத்தில் ச்யாமளையாக ராகினீ என்னும் பெயரோடு வீற்றிருக்கிறாள்.

“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா!
தம்ஷ்ட்ரேஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர-ஸம்ஸ்திதா
காலராத்ர்யாதி-சக்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ!”

இனி ஸ்ரீலலிதையின் சேனை என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

விக்ன யந்திரம் பொடிப்பொடியாகிப் போனதை அறிந்த பண்டாஸுரன் தன் தம்பிகளை அனுப்புகிறான். விசுக்கிரன் முன்னால் தலைமை வகித்து வருகிறான். மந்த்ரிணீ அவனை எதிர்த்துப் போரிடுகிறாள். அஷ்வாரூடையும் துணை புரிய சக்தி சேனைகள் எதிர்த்துச் சண்டை போட்டும் விசுக்கிரனின் பாணங்கள் மழையெனப்பொழிய அம்பிகையை வேண்டுகின்றனர்.

விஷங்களோடெதிர்த்தாள் மந்திரிணியும் பொல்லா
விசுக்கிரனை எதிர்த்தாள் வாராஹிதேவி
அச்வாரூடை முதலானபேரெதிர்த்தாள்
அந்தச் சேனைகளக்ஷெளஹிணிகளையும்
வஞ்சக விசுக்கிரன் பாண வருஷத்தால்
வாடி மெலிந்து சக்தி சேனைகளும்
அம்பாவின் சேனைகள் அஸ்திரத்தின் தாபத்தால்
அம்மனை வேண்டினார்-சோபனம் சோபனம்

மந்த்ரிணி உரையாலே சிந்துவைச்
சக்திகள் தாபந்தீர அழைத்தாள் 
வந்து சொரிந்தது சுத்த கங்கா தீர்த்தம்
வாரணத்துக்கை போல் இரண்டு சாமம்
வேண்டிய மட்டும் குடித்தே சக்திகளெல்லாம்
வெகு தாகந்தீர்ந்து பலமடைந்து
தேகக்களைகள் தீர்ந்து சத்தி சேனைகளெல்லாம்
ஜயத்துடன் எதிர்த்தார்கள்- சோபனம், சோபனம்

கங்கையின் நீரைப் பருகி புதிய பலம் பெற்று சக்தி சேனைகள் போரிட்டு விஷங்கன், விசுக்கிரன் போன்றோரை மந்திரிணியும், அஷ்வாரூடையும் வதம் செய்கின்றனர். இனி தானே நேரிடையாய்ப் போரிடவேண்டியதுதான் என பண்டாஸுரன் நினைத்தான். அவன் போருக்கு ஆயத்தமாகிறான்.

சேனாதிபதிகள் முதல் தம்பிகள் வரைக்கும்
செலவாய்ப் போனதைக் கேட்டுப் பண்டாஸுரன்
மானங்கெட்டவன் இன்னும் பின்னதி கோபமாய்
மஹேச்வரியை வைது திட்டிக்கொண்டு
கடித்துக்கொண்டான் பர்களையும் உதட்டையும்
கண்களிலே அனல்பொறி பறக்கக்
குடிலாக்ஷனைப் பார்த்து ஆக்கினை செய்கின்றான்
கிப்பக் குழந்தாய் கேள்-சோபனம், சோபனம்

கேளாய் குடிலாக்ஷா லலிதையென்பாளொருத்தி
கேடு செய்தாள் நமக்கினியவளை
வாளாலே லேசுலேசாகவே கொய்கிறோம்
வரவிடுவாய் என்றன் சேனையெல்லாம்
முன்கோட்டை வாசலில் காக்கும் சேனையைத் தள்ளி
மிச்சம் மீதியாயுள்ள சேனையெல்லாம்
பெண்கள் தவிர, மற்றப் பேர்களும் புறப்பட்டார்
பெண்கொடி லலிதைக்கு-சோபனம் சோபனம்

கழுதை, குதிரைகள் போன்றவகள் தேரில் பூட்டப் பட்டன. கரடி, சிங்கம், ஒட்டகம், கரும்பன்றி, காக்கை, பருந்து, கோழி, செந்நாய்கள், பாம்புகள், இன்னும் பூதப் ப்ரேதங்கள், வேதாளங்கள் போன்றவையும் வாஹனங்களாய் வந்து துணை செய்கின்றன. இதைத் தவிரவும் சாமானிய வாஹனங்களும் அநேகமாய் வருகின்றது. பண்டாஸுரன் கிளம்பும்போதே வழக்கம்போல் அபசகுனங்கள் தெரிய வருகின்றன. பூமாதேவி நடுங்கினாள். விண்ணிலிருந்து ரத்தம் சொரிந்தது. யானைகளுடைய தந்தங்கள் திடீரெனக் காரணமே இல்லாமல் முறிந்தன. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண்டாஸுரன் கிளம்பி வருகிறான்.

எந்த உற்பாதமும் எண்ணாமல் வருகிறான்
இலவம்பஞ்சு காற்றில் பறக்கின்றாப்போல்
பொல்லாத காலத்தில் பண்டாஸுரன் சேனை
புறப்பட்ட தம்மனை ஜயிக்கவென்றே
துஷ்டப் பண்டாஸுரன் வருவதைக் கண்டு
சூரிய சந்திரன் ஏழு சமுத்திரமும்
அஷ்டதிக் கஜங்களும் அலறி நடுங்கிற்று
அம்மனுக்கே ஜயம்- சோபனம் சோபனம்



இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.  மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால்   புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம்

15 comments:

  1. நவராத்திரி சமயம் தினமும் லலிதா சஹஸ்ரநாம் பாராயணம் பொற்றாமரை நாணாயங்களால்அர்ச்சனை செய்துவழிபடுகிறாள் என் மனைவி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, நான் நவராத்திரி பூஜை செய்தது இல்லை. சுந்தரகாண்டம் நவாக பாராயணம் படிப்பேன். இந்த வருஷம் முடியலை!

      Delete
  2. அன்னையின் அருளை உங்கள் பதிவால் படித்து பெற்றுக் கொள்கிறேன்.

    அம்பிகையை வணங்கி எல்லா நலங்களையும் எல்லோருக்கும் வழங்க வேண்டுகிறேன்.
    உடல் நலம் எப்படி இருக்கிறது? உங்களுக்கு?
    எனக்கும் கொஞ்சம் உடல் நலம் இல்லை அம்பாளிடம் உடல் நலத்தை அருள கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, மருந்துகள் திங்களோடு முடிஞ்சிருக்கு. இனி வரும் நாட்களில் உபாதை அதிகம் இல்லாமல் இருக்க அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். செய்யும் வழக்கமான வேலைகளைச் செய்து தானே ஆகணும். இப்போ ஒரு பெண்மணியைப் பாத்திரங்கள் கழுவித் தர உதவிக்கு வைத்திருக்கிறேன். இல்லைனா தோள்பட்டை வலி ஜாஸ்தி ஆகிடுது!

      Delete
    2. உங்கள் உடல்நலம் பெற அம்பிகையைப் பிராரத்திக்கிறேன்.

      Delete
    3. நானும் இடது கால் பாதத்தின் மேல்புறம் வலி இருந்து கொண்டு இருக்கிறது.
      வலி மருந்துகள் தடவி கேட்கவில்லை. டாகடரிடம் போய் கொண்டு இருக்கிறேன்.
      உபாதை அதிகமில்லாமல் இருக்க நீங்கள் சொல்வது போல் அம்பிகையை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

      உதவிக்கு ஆள் வைத்து இருப்பது நல்லது. மற்ற வேலைகள் செய்ய பலம் வேண்டும் இல்லையா?
      ஓய்வு எடுத்து எடுத்து வேலை செய்யுங்கள்.
      உங்கள் பிராத்தனைக்கு நன்றி கீதா.

      Delete
  3. பதிவை வாசிக்க வாசிக்க மேனி சிலிர்க்கின்றது...

    செய்திகள் ஓரளவுக்கு அறிந்ததுதான் எனினும்
    நவராத்திரி சமயத்தில் தனியாக இருந்து அவளுடைய புராணத்தில் ஆழ்கின்றபோது -
    சொல்வதற்கு இயலவில்லை... சொல்வதும் ஆகாது...

    அவளருள் கூட வர - அவரவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்!...

    கீழ்க்கண்ட விஷயத்தை -
    தங்களுக்கும் அன்பின் கோமதி அரசு அவர்களுக்குமாகச் சொல்கிறேன்..

    இந்த சமயத்தில் அம்பாள் பணியில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவர்க்கு
    சற்றே தளர்ச்சி ஏற்படுவது இயல்பு...

    மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து
    சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...

    இருப்பினும் சேலை முடிச்சில் அல்லது கையில் அல்லது
    கண்பார்வையில் எலுமிச்சங்கனியை வைத்திருப்பது நல்லது...

    நேற்றே பதிவினை வாசித்து விட்டேன்...
    இணைய வேகம் குறைவு..

    வாழ்க நலம்.. வளர்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நீங்க சொல்வது சரிதான். இதுக்காக சௌந்தரிய லகரி, தெய்வத்தின் குரல், தசமகாவித்யாவின் தேவியர் பத்தி எல்லாம் படிச்சேன். படிக்கப் படிக்கப் பரவசமா இருந்தாலும் உள்ளே போகப் போக விதிர் விதிர்த்து விடுகிறது. அதிலும் அந்த ஆறு ஆதாரங்களின் பொருள்! மிக மிக அருமையாச் சொல்லி இருந்தார் திரு அண்ணா அவர்கள். (ராமகிருஷ்ணா மடத்தின் வெளியீடுகளில் இவர் புத்தகங்கள் கிடைக்கின்றன. ) கூடவே தேவி மகாத்மியமும் படித்தேன். தேவி புராணம் அல்லது தேவி பாடம் படிக்கலாம் என நினைக்கையில் ( "நசன்" என்னும் திரு நடராஜன் எழுதியது) என் அண்ணா அதெல்லாம் வேண்டாம் எனத் தடுத்து விட்டார். அப்போ அம்பத்தூரில் இருந்தோம்.

      Delete
    2. //இந்த சமயத்தில் அம்பாள் பணியில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவர்க்கு
      சற்றே தளர்ச்சி ஏற்படுவது இயல்பு...

      மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து
      சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...// அச்சமெல்லாம் இல்லை. ஆனால் கடுமையான மனச்சோர்வு ஏற்பட்டது. எலுமிச்சை எப்போதுமே வைத்திருப்பேன். சமையலறையில் அது இல்லாமல் இருக்காது. நீங்கள் சொல்லும் இந்த விஷயம் புதிது. எனினும் அவள் அருள் இருக்கையில் கவலை ஏன்?

      Delete
  4. கும்பகோணத்தில் நவராத்தியின்போது சில வீடுகளில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட சுண்டல்களையும், பலகாரங்களையும் செய்வதைப் பார்த்துள்ளேன். உங்களுடைய பதிவு அதனை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நெடுநாட்கள் கழிச்சு வந்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் கிழமைப்படிச் சிலரும் நாள் கணக்குப்படி சிலரும் நிவேதனங்கள் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவி ஆராதிக்கப்படுவதால் அந்த அந்த தேவியர்க்கு உகந்த நிவேதனங்கள் இருக்கும்.

      Delete
  5. பெரிய, ஆழமான, நிறைய விஷயங்களைக் கொண்ட இடுகை.. படித்து மகிழ்ந்தேன். அம்பிகையை மூத்தவள் என்று கூறுவதுபோல் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே! நன்றி.

      //அம்பிகையை மூத்தவள் என்று கூறுவதுபோல் தெரியவில்லை.//புரியலையே!

      Delete
    2. //சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம்//

      Delete
  6. மனோ வாக்கு காயங்களாகிய திரிகரணங்களிலிருந்து
    சிலவற்றை நம்மிடமிருந்து நீக்குகின்றாள் என்று பொருள்... அஞ்ச வேண்டாம்...

    இருப்பினும் சேலை முடிச்சில் அல்லது கையில் அல்லது
    கண்பார்வையில் எலுமிச்சங்கனியை வைத்திருப்பது நல்லது...//


    நன்றி சகோ வாசித்து விட்டேன்.
    நீங்கள் சொல்வது போல் செயல்படுத்தலாம்.
    இந்த முறை கொலு வைக்காமலே உடல் தொந்திரவு.
    கொலுவைக்கும் போதும், அடுத்து எடுத்து வைக்கும் போதும் அம்பாளிடம் கேட்பது உடல் பலத்தையும், மனபலத்தையும் தான். மனபலம் தான் உடல் பலம் தருது. மனதளர்ச்சி பெற்றால் உடலும் தளர்ச்சி அடைந்து விடுகிறது.
    காலில் ஏதோ பிரச்சனை அதை நீங்கள் சொல்வது போல் அன்னை சரி செய்வாள் என்று நம்புகிறேன்.

    வீட்டில் கீதா சொல்வது போல் எலுமிச்சை இருக்கிறது வீட்டில் குளிர்சாதன பெட்டிக்குள்.

    ReplyDelete