எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 14, 2008

புயல் அடித்து விட்டது! ஆனால் ஓய்வில்லை!

சென்ற வருஷம் இந்த நாட்களில் ஹூஸ்டனில் தான் இருந்தோம். அப்போவும் சரியா நாங்க கிளம்பப் போகும் தேதிக்கு ஒரு வாரம் முன்னால் செப்டம்பர் 22 தேதி போல் ஹரிகேன் வரும் என்ற எச்சரிக்கை தினமும் தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பொதுவாய் புயல், காற்று, மழை எல்லாமும் நமக்கு எல்லாருக்குமே பழக்கம்தான். அதுவும் கடற்கரை ஓரத்தில் இருப்பவர்களுக்கு மிகப் பழக்கம் ஆகியிருக்கும். என் நினைவில் உள்ளவரையில் சென்னையில் ஒரு முறை புயலடித்தபோது, மின்சார வண்டியில், வந்து கொண்டிருக்க நேரிட்டபோது, ரெயிலை நிறுத்திவிட்டனர். ஒரு இரவு முழுதும் ரெயிலிலேயே இருக்கும்படி நேரிட்டது. அது தொலை தூரப் பயணிகள் வண்டியும் அல்ல. தினசரி யூனிட் வண்டி. காற்றின் வேகத்தில் ரெயில் பெட்டியே ஆடியது நன்றாய்த் தெரிந்தது. கீழைக் கடல்களிலேயே வேகம் அதிகமாய் உள்ள புயலும், அதைத் தொடர்ந்த பெருமழையும் வழக்கம்தான் என்றாலும் யு.எஸ்ஸின் கடலோர தென் மாநில நகரம் ஆன ஹூஸ்டனில் புயல் அடிக்கப் போகின்றது என்ற செய்தியில் இரண்டுவித அச்சம் ஏற்பட்டது.

அங்கே புயல் என்றால் நம்ம ஊரில் வர மாதிரி இல்லை. ஊரே காலி பண்ணும்படி இருக்கும். காற்றின் வேகமும் அதிகம். மின்சாரமும் கிடையாது. முன்னராகவே மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். குறைந்த பட்சமாய் 4,5 நாளைக்காவது சமைத்து வைத்துக் கொள்ளவேண்டும், அங்கேயே இருக்கும் பட்சத்தில். காபி, டீ, பால் போன்ற சூடான பானங்களோ, உணவைச் சுட வைத்துச் சாப்பிடுவதோ முடியாது. மின்சாரம் இல்லை என்றால் அடுப்பே இல்லையே?? யு.எஸ்ஸில் மிகச் சில இடங்களில் தான் எரிவாயு அடுப்புக்கள் உள்ளன. அட்லாண்டா அம்மாதிரியான ஒரு நகரம். மற்ற இடங்களிலும் எங்கேயே தேடிப் பார்த்தால் ஒரு சில குடியிருப்புகளில் கிடைக்கலாம். மற்றபடி எல்லாவற்றுக்கும் மின்சாரம் தான். தண்ணீரும் கிடைக்காது. ஊரெல்லாம் தண்ணீரில் மிதக்கும்போது குடிக்க நல்ல தண்ணீர் தேவையானதைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பு மூட்ட முடியாது. மண்ணெண்ணை கிடைக்காது. கிடைத்தாலும் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மூட்ட முடியாது. காற்றின் வேகத்தில் வீடுகள் தாக்குப் பிடிப்பதே அதிசயம்.

ஒரு சில இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் பிய்த்துக் கொண்டு வருவதுண்டு. ஆனால் சென்ற வருஷம் நாங்கள் இருந்தபோது இந்த ஹரிகேன் எங்களை ஏமாற்றி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் வந்திருந்தால் ஊருக்குத் திரும்பி இருக்க முடியுமா சந்தேகமே. விமானம் புறப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சரிதான் என்றாலும், இந்த வருஷம் செப்டம்பரில் ஐக் ஹரிகேன் வந்தே விட்டது.
ஹூஸ்டனில் எங்கே பார்த்தாலும் தண்ணீர். பக்கத்தில் உள்ள கால்வெஸ்டன் அநேகமாய்க் காலி செய்து விட்டார்கள். சென்ற வருஷம் தொழிலாளர் தினத்துக்கு முதல் நாள் தான் அங்கே போய் பீச், கடல் என்று எல்லாவற்றையும் சிறியதொரு கப்பலில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தோம். அந்த ஊர் இப்போது பார்க்கும் கோலத்தில் இல்லை. ஹூஸ்டனில் உள்ள எங்கள் பையருக்கு நேற்றுத் தொலைபேசி அழைப்புக் கொடுத்த போது அழைப்பே போகவில்லை. தொலைபேசிக்கு என இருந்த டவர் விழுந்துவிட்டதாம். தண்ணீர் இவ்வளவு உயரத்திலும், வேகத்திலும் வந்திருக்கின்றது. இப்படி வந்தால் டவர் விழாமல் என்ன செய்ய முடியும்? :((((ஆகவே செல்லில் சார்ஜ் இருந்தால் பேச முடியுமே என நினைத்துத் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தோம். அவர் காரில் தண்ணீர் புகுந்து விட்டது என்று அதை சுத்தம் செய்து வேறு இடத்தில் கொண்டுவிடப் போயிருந்தார். செல்லைக் கண்டுபிடித்தவர் புண்ணியவான்.

செல் பழக்கமே இல்லாமல் இருந்த எங்களுக்கு இப்போது அவசரத்திற்கு அது தான் கை கொடுக்கின்றது என்று சொல்லலாம். செல்லில் தண்ணீர் புகுந்துவிடும் என்று வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்ததால், செய்தியைப் பதிவு செய்து வைத்தோம். பின்னர் இரவு வெகு நேரம் கழித்துத் தொடர்பு கொண்டு பேசினார். அவங்க அபார்ட்மெண்டில் தண்ணீர் வந்தது தவிர வேறு தொந்தரவு இல்லை என்றாலும் பக்கத்து ப்ளாகில் உள்ள கட்டிடத்தில் ஜன்னல்கள் விழுந்து, அதுவும் வீட்டுக்குள் விழுந்திருக்கும் போலிருக்கு. ஒரே அமர்க்களமாம். இவங்க நல்லவேளையாக ஜன்னல் இல்லாத இடமாகப் பார்த்துப் படுக்கிறாங்களாம். அப்புறம் தான் நிம்மதியாய் இருந்தது. மெம்பிஸில் இருக்கும் பெண் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் போய்ச் சேரவே இந்த நேரம் 2 நாள் பிடிக்கும். அவ்வளவு ட்ராபிக் ஜாம் ஆகின்றதாம். மேலும் அலுவலகங்கள் எல்லாம் வியாழனில் இருந்து தான் விடுமுறையும் அறிவித்திருக்கின்றனர். விடுமுறை இல்லாமல் போக முடியாதே இந்தியா இல்லையே அது??? என்றாலும் மெம்பிஸில் உள்ள எங்கள் பெண் தம்பியைத் தொடர்பு கொண்டு அவ்வப்போது எங்களுக்கு நேர்முக வர்ணனை செய்து வருவதால் கொஞ்சம் அச்சமின்றி இருக்க முடிகின்றது. இயற்கைச் சீற்றம் ஒரே சீற்றமாய் இருக்கிறதே, எதனால் இப்படி?? இதைத் தடுக்கவே முடியவில்லை அல்லவா???

இப்போ ஹூஸ்டனில் curfew அறிவிப்புச் செய்திருக்கின்றனர். ஒன்றரை மில்லியன் மக்களுக்கு மேல் மாட்டிக் கொண்டு தவிப்பதாயும் சொல்கின்றனர். எங்க பையரும் அதில் ஒருவர். :(((((((( இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அவர்கள் துன்பம் தீரப் பிரார்த்திப்போம்.

3 comments:

  1. கவலைப்படாதீங்க, உங்க பையர், குடும்பத்துடன் நலமாக இருப்பார்.

    ReplyDelete
  2. கவலை வேண்டாம்....நிச்சயமாக நல்ல படியாக இருப்பார்.

    ReplyDelete
  3. உங்க உடம்பு படுத்தறது ஏன்னு இப்பதானே தெரியுது.
    நாராயணன் இருக்கான். பாத்துப்பான்.

    ReplyDelete