எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 02, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

தாமகோஷனின் எண்ணமும், ஜராசந்தன் தந்திரமும்!

அனைவரிலும் அமைதி காத்தது சேதிநாட்டரசன் தாமகோஷன் ஒருவனே. அங்கிருந்த மற்ற மன்னர்களிலிருந்தும், அரசகுமாரர்களிலிருந்தும் அவன் வேறுபட்டிருந்தான். அவனுடைய நோக்கமும் அவர்கள் நோக்கத்தில் இருந்து வேறுபட்டே இருந்தது. ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்டு அவனுக்குக் கீழுள்ள மன்னர்களில் ஒருவனாகத் தான் ஆக்கப் பட்டதை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தாமகோஷனுக்கு. என்றாலும் ஜராசந்தனோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட பின்னர் ஜராசந்தனின் உதவியும் அவனுக்குக் கிடைத்ததை மறுக்கவும், மறக்கவும் முடியாதுதான். ஆனால், அதற்காக ஜராசந்தனின் ஆற்றலும், அவன் பலமும் பெருகிக் கொண்டே போவது சேதி நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஆர்யவர்த்தத்தின் மற்ற நாடுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியதே. பெருகிக் கொண்டு வரும் ஜராசந்தனின் பலம் ஒரு அபாயகரமான சக்தி என்பதை தாமகோஷன் நன்கு உணர்ந்திருந்தான். ஜராசந்தனின் நாடு பிடிக்கும் ஆசையில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் அதை உடனே முறியடிக்கும் அவன் தந்திரத்தைக் கண்டு தாமகோஷனுக்கு உள்ளூரக் கிலி ஏற்பட்டிருந்தது.

அதிர்ஷ்டக் காற்று இப்படியே ஜராசந்தன் பக்கமே வீசிக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், எவர்க்கும் தலை வணங்காத பாஞ்சாலத்தையும், அஸ்தினாபுரத்தையுமே ஜராசந்தன் தன் வழிக்குக் கொண்டு வந்து தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் போல் மாற்றிவிடுவானோ என்றும் அஞ்சினான். ஆஹா! அப்படி மட்டும் நடந்துவிட்டால்??? என்ன துரதிருஷ்டம் ஆர்யவர்த்த்த்துக்கு நேரிட்டுவிடும்! இறைவா! ஜராசந்தனை அடக்க ஒரு ஆள் கூட இல்லாமல், ஒரு அரசகுமாரன் கூட இல்லாமல் ஆர்யவர்த்தமே அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் கட்டளையை எதிர்பார்த்து, அவன் நினைப்பதை நடத்தி வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் படுமே! இதை எப்போதும் தனக்குள்ளேயே சிந்தித்துக்கொண்டிருந்த தாமகோஷன் இதை எவ்விதம் சமானம் ஆக்குவது? ஜராசந்தனுக்குச் சமானமாக எவர் தலை எடுப்பார்கள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் கம்சனின் சாவு ஒரு அபாய எச்சரிக்கை மணிபோல் ஜராசந்தனுக்கு அளிக்கப் பட்டது. தாமகோஷனுக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் ஜராசந்தனுக்கு ஒரு எதிரி தோன்றியதில் உள்ளூர சந்தோஷமே! தடையற்றுப் பெருகிக் கொண்டிருந்த அவன் பலத்தையும், கர்வத்தையும் அடக்கி, ஒடுக்க அந்த இரு இடைச்சிறுவர்களாலும் இயலும் என்று பூரணமாக நம்பினான், எதிர்பார்த்தான். அதிலும் கிருஷ்ணனை யாதவர்களுக்குத் தலைமைதாங்கச் சொன்னபோது ஜராசந்தனுக்குச் சரி சமமான ஒரு எதிரி தோன்றிவிட்டான் என உள்ளூர மகிழ்ந்தான்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த இரு இளைஞர்களும் ஜராசந்தனிடமிருந்து தப்பி நாட்டை விட்டே ஓடவேண்டி வந்துவிட்டதோடு அல்லாமல் அவர்களைத் தேடும் மனிதவேட்டைக்குழுவில் தானும் கலந்து கொள்ளும்படியும் ஆகி விட்டது. அரை மனதாக இதில் கலந்து கொண்டிருந்தாலும் தாமகோஷன் இதில் கலந்து கொள்ளும்படி நேர்ந்த ஒரே காரணம் மஹா சக்ரவர்த்தி ஜராசந்தனின் மனம் கோணாத வண்ணம் எப்படியேனும் இந்த இரு இளைஞர்களின் உயிரையும் காப்பாற்றவேண்டும் என்பதே. அதற்கான சரியான தருணத்திற்காகக் காத்திருந்தான் தாமகோஷன். இப்போது அந்தத் தருணம் வந்துவிட்டதாய் உணர்ந்தான். என்ன செய்யறது எனப் புரியாமல் குழப்பத்தில் இருந்த மற்ற மன்னர்களிடம் வந்தான். “ மன்னர்களே, அரசிளங்குமரர்களே, நாம் நமது நம்பிக்கையை இழக்கவேண்டாம். கடைசிவரை முயலுவோம். அதுதான் மாட்சிமை தாங்கிய நம் சக்கரவர்த்தியின் பெருமைக்குப் பங்கம் விளைவிக்காது. இந்தத் தடைகளிலிருந்து வெளிவர ஒரு வழியைக் கண்டு பிடிப்போம்!” என்றான்.
ஆனாலும் ஜராசந்தனும் சாமானியமானவன் அல்லவே! அவனுக்கும் உள்ளூர தாமகோஷனிடம் நம்பிக்கை இல்லைதான். எப்போதும் அவன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். என்னதான் சேதிநாட்டு மன்ன்னின் கஷ்டங்களில் இருந்து வெளிவரத் தான் உதவி இருந்தாலும், அவன் விசுவாசம் தன்னிடம் பூரணமாய் உள்ளதென்று நம்ப ஜராசந்தன் சிறிதும் தயாராய் இல்லை. சேதிநாட்டரசன் எப்போதுமே நடுநிலைவாதி! நியாயம், அநியாயம் தெரிந்தவன், புரிந்தவன். தர்ம்ம் எதுவென நன்றாய்த் தெரியும் அவனுக்கு! மேலும் ஆழம்காணமுடியாத அளவுக்குத் திறமை வாய்ந்த புத்திசாலியும் கூட. அவன் மூளை எப்போது, எவ்விதம், எந்தப்பக்கம் வேலை செய்யும் என்பதை எளிதில் இனம் காணமுடியாது. அனைத்துக்கும் மேலே அவன் ஷூரர்களின் இணையற்ற தலைவன் ஆன வசுதேவனின் சகோதரியின் கணவன். வீட்டு மாப்பிள்ளை ஆவான். ஆகவே அவனுடைய இரக்கமோ, ஆதரவோ நிச்சயமாய் வசுதேவனின் இரு பிள்ளைகளின் பக்கமே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

ஆனால் தாமகோஷனின் மகன் சிசுபாலன் அப்படி இல்லை. வசுதேவனையோ, கண்ணனையோ, பலராமனையோ அவனுக்குச் சிறிதும் பிடிக்காது. அவன் இந்தக் கூட்டுக் குழுவில் சேர்ந்திருந்தால்???? ம்ம்ம்ம்ம்ம்! ஆனால் தாமகோஷன் முந்திக் கொண்டு தான் வருவதாய்த் தெரிவித்துவிட்டான். வெளிப்படையாய் அவன் வருவதற்கு மறுப்புத் தெரிவித்தால் குழுவில் பிளவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாய் ஜராசந்தனும் ஒப்புக் கொண்டுவிட்டான். வேறு வழியே இருக்கவில்லை அப்போது. மேலும் சேதி நாட்டு அரசன் தன் நன்னடத்தைகளாலும், பழகும் விதத்தாலும் அனைவரையும் கவர்ந்திருந்தான். அனைவராலும் மதிக்கப் பட்டான். அவனை ஒதுக்குவது அவ்வளவு நன்மை அல்ல என்பது தெரிந்தே ஜராசந்தன் அவனைச் சேர்த்துக் கொண்டிருந்தான். மேலும் தன்னுடைய புகழும், வலிமையும், பெருமையும், சாம்ராஜ்யமும் மங்குகின்றதோ? என்று தோன்றும்படியாகச் செய்துவிட்டிருந்தது அவன் மறுமகன் கம்சனின் மரணம். ஆகவே இப்போது தாமகோஷன் வந்து தானே வலுவில் வேறொரு வழியைக் கண்டு பிடிக்கலாம் என்று சொன்னதும் மற்ற மன்னர்கள் மட்டுமின்றி ஜராசந்தனும் ஆவலுடன் அவனைப் பார்த்தான்.

கேட்கவும் கேட்டான்! “என்ன அது மாற்று வழி?”

மெல்ல ஆரம்பித்தான் தாமகோஷன். “ நம்மால் நேரடித் தாக்குதல் மூலம் மலையின் உயரத்தையோ, மலையின் சுற்றளவையோ குறைக்கவோ, அதில் ஏறுவதோ இயலாது. மேலே ஏற முடியாமல் எவ்வளவு நாட்கள் காட்டுமிருகங்கள் நிறைந்த இந்த அடர்ந்த காட்டில் நாம் காத்துக்கொண்டிருப்பது? மலைமேல் உள்ளவர்கள் கீழிறங்குவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. அதே சமயம் நம்மால் திரும்பிப் போகவும் முடியாது. திரும்பிப் போனோமென்றால், ஒரு சிறுவனை எதிர்க்கமுடியாமல் இவ்வளவு பெரிய படை திரும்பி வந்துவிட்டது என அனைவரும் நம்மை எள்ளி நகையாடுவார்கள். இந்தப் பரந்து விரிந்த ஆர்யவர்த்த்த்தின் மற்ற மன்னர்களின் கண்களுக்கும், கருத்துக்கும் சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக அது மாறிவிடும். மேலும், நம் சக்கரவர்த்தி, மாட்சிமை தாங்கிய நம் சக்கரவர்த்தி இவ்வளவு வருடங்களாக ஈட்டிய புகழும், வலிமையும் கேலிக்குள்ளாகும். அனைவரும் அவரைக் கண்டாலே கேலியாகச் சிரிப்பார்கள்.”

“பின் என்னதான் செய்யவேண்டுமென்கிறீர், சேதி நாட்டு மன்னரே?” இடி முழக்கம் போன்ற குரலில் கேட்டான் ஜராசந்தன். அதற்கு தாமகோஷன், “இந்த மலைச் சரிவுகளில் புற்கள் முளைத்துக் காய்ந்து கிடக்கின்றன. மேலும் இப்போது கோடைக்காலம் வேறு நடக்கிறது. அதனாலும் புற்கள் காய்ந்துவிட்டன. மலையின் உச்சி முகடு வரையிலும் காய்ந்து கிடக்கும் இந்தப் புற்களில் தீ வைக்கவேண்டும். கீழே இங்கே தென்படும் சரிவுகளில் தீ வைத்தாலே போதும். அது மலை உச்சி வரை தானே சென்றுவிடும். வாயுபகவான் அதற்கு உதவி செய்வார். நாளைக்குள் அந்தத் தீ மலை உச்சிக்குச் சென்று அங்கே குடியிருப்புகளையும் நாசமாக்கி அங்கே இருப்பவர்களையும் அழித்துவிடும். அந்த வாசுதேவன் இந்த்த் தீயில் இருந்து தப்பிவிடுவது அரிது என்றே தோன்றுகிறது. ஒருவேளை அப்படி அவன் தப்பினாலும், அவன் தன் முகத்தை வெளியே காட்டுவதற்கு வெட்கப் படுவான். நாமும் நாம் வந்த வேலை முடிந்தது என சந்தோஷமாய்த் திரும்பிப் போகலாம்.” என்று முடித்தான் தாமகோஷன்.

3 comments:

  1. ஹரே ராம ஹரே கிருஷ்ணா.,
    சிறந்த பதிவு .அதிர்ஷ்ட வசமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது .
    நன்றிகள்.

    ReplyDelete
  2. நல்ல இருக்குங்க . நானும் இதுதான் இங்கு முதல் வருகை என்று நினைக்கிறேன் . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம் வாழ்த்துக்கள் .மீண்டும் வருவேன்

    ReplyDelete