எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 18, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 3

ஒரு நிமிஷம் யோசித்த ரமேஷுக்குப் பின்னர் மனம் கொஞ்சம் தெளிந்தது. ஏடிஎம்மில் அதிகம் பணம் எடுக்க முடியாது. குறிப்பிட்ட அளவு தான் எடுக்க முடியும். இவன் நோக்கம் பணத்திலேதான் என்றால் கையிலே இருக்கும் பணத்தோடு ஏடிஎம்மிலும் கிடைக்கும் பணத்தைக் கொடுத்தால் தீர்ந்தது விஷயம்! கொஞ்சம் உற்சாகம் வர, மெல்லச் சீட்டியடிக்கவேண்டும் போல் ஓர் உணர்வு. கடைக்கண்ணால் வித்யாவைப் பார்க்க அவள் என்னமோ அதே கலக்கத்தில் தான் இருக்கிறாள் போல் தெரிந்தது. என்ன இருந்தாலும் பெண்ணல்லவா? வெளியே தைரியமாய்க் காட்டிக்கொண்டாலும் உள்ளூரப் பெற்ற குழந்தையை ஒருத்தன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டினால் அவள் என்னதான் செய்வாள்? மெல்லத் தன் கையால் அவள் கையைப் பிடித்து அழுத்தினான். அந்தத் தொடுகை பல விஷயங்களை வித்யாவிடம் சொல்ல அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து காரை ஓட்டிக் கொண்டிருந்த ரமேஷை எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அவன் லேசாக ஒரு கண்ணை மூடித் திறப்பதைப் பார்த்ததும், ஏதோ திட்டம் வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. என்றாலும் பயம் அவளுக்கு.

பின்னாலிருந்து அதற்குள் துப்பாக்கி மீண்டும் அழுத்தப்பட்டது. "என்ன? திரு ரமேஷ்?? இன்னிக்கு உங்க ப்ரமோஷன் பற்றிய பேச்சு நடந்து முடிஞ்சு நாளையில் இருந்து நீங்க முக்கியமான பொறுப்பை வகிக்கப் போறீங்க இல்லையா? ம்ம்ம்ம்ம்??? அது சரி, வாழ்த்துகள். ஆனால் இப்போப் போட்டீங்களே திட்டம், ஏடிஎம்மில் என்னை மாட்டி விடறதுனு. அதுவும் நடக்காது, வேறே எதுவும் உங்களால் பண்ணவும் முடியாது. நான் சொன்னதைச் செய்யலைனா உங்க பொண்ணை நீங்கத் திரும்பப் பார்க்கவும் முடியாது. ஏடிஎம்மில் குறிப்பிட்ட அளவு பணம் தான் எடுக்க முடியும்னு எனக்குத் தெரியாதா? நான் அந்தக் குறிப்பிட்ட ஏடிஎம்முக்கு ஏன் போகச் சொன்னேன் தெரியுமா? இப்போ மணி என்ன பாருங்க மிஸ்டர்! மணி பார்க்கத் தெரியும் இல்லையா?" அவன் குரலின் எகத்தாளத்தில் சுருங்கிப் போனான் ரமேஷ். வித்யாவுக்கும் மறுபடி ஆயாசம் மிகுந்தது. அந்த ஏடிஎம்மின் அருகே உள்ள கிளையில் தான் வித்யாவும், ரமேஷும் சேமிப்பைப் போட்டு வைக்கும் கிளையும் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் அது மாலை நேரத்தில் இயங்கும். இவங்க மாதிரி அலுவலகம் செல்லும் கணவன், மனைவியரின் வசதிக்காகவே மாலை நேரத்தில் செயல்படும்படி அமைக்கப் பட்டது. இரவு எட்டு மணி வரையிலும் அங்கே பணம் எடுக்கலாம்.

அது சரி, அங்கே தான் இரண்டு பேரின் கணக்கும் இருப்பதை இவன் எப்படி அறிந்து கொண்டான்? நன்கு விஷயம் தெரிந்து கொண்டவனாய் இருக்கிறானே? இவனை என்ன செய்யறது?? "ம்ஹும், ஒண்ணும் பண்ண முடியாது திருவாளர் ரமேஷ் அவர்களே! எனக்கு எல்லா விஷயமும் தெரியும். பேசாமல் நான் சொல்வதைச் செய்யுங்கள். அப்போத் தான் உங்க பொண்ணு உயிரோட இருப்பா. உங்க மனைவியைப் பாருங்க, எப்படி அமைதியாய் இருக்காங்க!" துப்பாக்கியின் நுனி இப்போது வித்யாவின் கழுத்தருகே. வித்யா வியர்த்து விறுவிறுத்தாள். கண்களில் கலவரம் எட்டிப் பார்த்தது. சுட்டு விடுவானோ? "இப்போதைக்குச் சுட மாட்டேன். அவ்வளவு சீக்கிரமாயும் சுடமாட்டேன். " அவன் பதில். எண்ண ஓட்டத்தை அறிந்து வைத்திருக்கிறானே. பேசாமல் அந்தக் கிளைக்கு வண்டியை ஓட்டினான் ரமேஷ்.

"இரண்டு பேர் கிட்டேயும் சேர்ந்து எவ்வளவு பணம் இருக்கோ, மொத்தத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லு உன் மனைவியை. நீ காரை விட்டு எங்கேயும் போகவேண்டாம். " கண்டிப்பான கட்டளை பிறந்தது..

"அப்படி முடியாது. அதிகப் பணம் எடுக்கிறதுன்னா இரண்டு பேரும் சேர்ந்து போய்க் கையெழுத்துப் போடணும்." கெஞ்சுதலாய் ரமேஷ் சொல்ல, வந்தவன் யோசித்தான். "இருபதே நிமிடம் தான் உனக்கு. அதற்குள் வேண்டிய ஏற்பாடுகளை முடித்துக் கொடுத்துவிட்டு உன் மனைவியைப் பணம் வாங்கச் சொல்லிட்டு நீ திரும்ப வந்துடணும். வரலைனா இதோ உன் பெண் இருக்குமிடத்திற்கு ஒரே ஒரு அழைப்பு, ஒரெ ஒரு தலை அசைவு. போதும். உன் பெண் க்ளோஸ்!" சத்தம் போட்டுச் சிரித்தான். ரமேஷ் பல்லைக் கடித்துக் கொண்டே, "இருபது நிமிடத்திற்குள் ஆகலைனா என்ன செய்யறது? " என்று கவலைப்பட, "அது உன் பிரச்னை!" என்று கவலையே படாமல் பதில் சொன்னான் வந்தவன்.

இன்று மதியம் சீக்கிரம் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி வந்தவரைக்கும் தான் இருந்த இருப்பென்ன? தன் தகுதி என்ன? இப்போது நிலைகுலைந்து போய் இப்படியா ஆகிவிட்டது?? ரமேஷின் தொண்டையைத் துக்கம் அடைத்துக் கொள்ள வங்கியின் வாசலில் இருந்த காவலாளி தெரிந்தவன் ஆதலால் வணக்கம் தெரிவித்து உள்ளே அநுமதித்தான். ஒரு நிமிடத் தயக்கத்திற்குப் பின்னர் அவனை ஜாடை காட்டி அழைத்தான் ரமேஷ். "இதோ பார், சிவா," என ஆரம்பிக்க, அவன் கையைப் பிடித்து இழுத்தாள் வித்யா. அவன் கோபமாய் வித்யாவிடம், "நீ சும்மா இரு, இது நம் வாழ்க்கைப் பிரச்னை!" என ஆரம்பிக்க, கண்ணால் ஜாடை காட்டினாள் வித்யா. சற்றுத் தூரத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளே நகர, கூடவே வந்த வித்யா, "இது நம் குழந்தையின் வாழ்வா, சாவா என்ற போராட்டம் என்பதை நினைவில் வைச்சுக்குங்க ரமேஷ், நம்மால் நம் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால்?" என்று பதட்டத்தோடு மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய்ச் சொல்ல, ரமேஷின் ஆத்திரம் மிகுந்தது.

"என்ன நினைத்துக் கொண்டான் அவன்?? அவனை யாரும் ஒன்றுமே கேட்க முடியாதா? இதோ, பார், இப்போப் பார், என்ன நடக்கப்போகிறது என!" என்று ஆரம்பித்துச் சத்தமாய்ப் பேசிய ரமேஷை இழுத்து வந்தாள் வித்யா. "ரமேஷ், அவன் சொன்ன இருபது நிமிடம் முடியப் போகிறது. அதோ, வெளியே காருக்குள்ளிருந்தே கேலியாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்க போங்க சீக்கிரமாய். நான் பணத்தை வாங்கிட்டு வந்துடறேன்."என்று சொல்லியவண்ணம் ரமேஷின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு, அவனைத் தள்ளாத குறையாகக் காருக்கு அனுப்பினாள். வெறுப்போடு வந்த ரமேஷ், ஒரு நிமிஷம் எங்காவது ஓடிவிடலாமா என யோசித்தான். ஐயோ, வித்யா, வித்யா அவனிடம் தனியாக மாட்டிக் கொள்வாளே. எரிச்சல் மீதூரக் காருக்கே வந்தான். அவன் முன்னே குளிர்பானம் நீட்டப் பட்டது. எரித்துவிடுவது போல் பார்த்தான் ரமேஷ். அவனோ மிகவும் நிதானமாக, "சாந்தி, சாந்தி ரமேஷ், அமைதியாக இரு. இப்போது உனக்கு மிகவும் தேவை இதுதான் அல்லவா? எனக்குத் தெரியும் நீ இதை விரும்புவாய் என!" என்று நீட்டினான்.

அவன் கையிலிருந்து அதை வாங்கிய ரமேஷ் கண் மூடித் திறப்பதற்குள்ளாக அவன் முகத்தில் அதை வீசிக் கொட்டினான். வங்கியிலிருந்து பெட்டியோடு வந்த வித்யா அதைப் பார்த்துவிட்டுத் தன்னையுமறியாமல் கத்தினாள். பெட்டி ஏது??? ரமேஷுக்கு யோசனைவர அதைக் கவனித்த அவன், வித்யாவின் கைகளிலிருந்து கிட்டத் தட்டப் பெட்டியைப் பிடுங்கிக் கொண்டே "பெட்டி என்னுடையது தான். நீ முன்னாலே போகும்போது உன் மனைவியிடம் இந்தப் பெட்டியைக் கொடுத்துப் பணத்தை அதில் வைத்து வாங்கி வரச் சொன்னேன். திடீர்னு இத்தனை பணத்தையும் வைக்கப் பெட்டி வேணும்னா நீ எங்கே போவே?" என்று சிரித்தான். ரமேஷ் அவன் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்தான். உடனே தொலைபேசியை எடுத்தான் அவன்.

அவன் குரல் கேட்டது. "ஹெல்லோ, 327, இப்போ என்ன நிலைமை??"

9 comments:

  1. சுபாஷிணி, தனி மெயிலில்,

    மாமி first comment நான் தான் வடை எனக்கு தான். செம்மை thrilling ஆ போறது கதை

    ReplyDelete
  2. ஆகா...தலைவி ரெண்டு பகுதியும் சேர்த்து படிச்சிட்டேன்...எங்கிருந்து பிடிச்சிங்க..;)))

    ReplyDelete
  3. என்னங்க சந்திரமுகி ரஜினி மாதிரி நினைச்சதை எல்லாம் சொல்றான் வில்லன்...? ரமேஷ் பிரமோஷனுக்குத் தகுதியானவன்தான நிலைமையை எப்படி சமாளிக்கிறான்னு கம்பெனியோட செக்கிங்கோ...?

    ReplyDelete
  4. வாங்க சுபாஷிணி, நம்ம வலைப்பக்கத்திலே என்ன போட்டியெல்லாம்?? அதான் காத்தாடுமே! அதனாலே வடை எல்லாம் கிடையாது! :))))))))))) வடைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், உங்களுக்குக் கொடுத்துட்டா எனக்கு?? :P

    ReplyDelete
  5. வாங்க தெய்வசுகந்தி, முதல் வரவு?? நன்றிம்மா.

    ReplyDelete
  6. கோபி, காணோமேனு நினைச்சேன், நன்றிப்பா.

    ReplyDelete
  7. ஸ்ரீராம், எனக்கும் அப்படி ஒரு எண்ணம் தோணித்து. ஆனால் அது இல்லையே??? :)))))))))))

    ReplyDelete
  8. ரெம்ப சஸ்பென்ஸ்ஆ இருக்கே... ? த்ரில்லர் எல்லாம் எழுதி மத்தவங்கள டென்ஷன் படவெக்கறது தான் ஜாலி... இது முடியல...

    ReplyDelete