எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 25, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 6

"ஓகே. இப்போ எனக்குப் பசி, பயங்கரமாப் பசி, சாப்பிடப் போகலாமா?" என்றான். வித்யாவும், ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரு பைசாக் கூட இல்லை என்றால் சத்தியமாக இல்லை. சாப்பிடக் கூப்பிடறானே? ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாதவனாக ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் முன் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டுத் தானும் கீழே இறங்கி அவர்களையும் இறங்கச் சொல்லி வற்புறுத்தினான். அவன் சொல்லை மீறினால் என்ன நடக்குமோ எனப் பயந்து அவர்கள் இருவரும் கீழே இறங்கினார்கள். உள்ளே சென்றனர் மூவரும். அங்கே காத்திருந்த பணியாளர் ஒரு இடத்தை அவர்களுக்கெனக் காட்டி அமர உதவி செய்ய மூவரும் அமர்ந்தனர். உணவுக்காக ஏற்பாடுகள் செய்யும் பணியாளர் வந்து"என்ன உணவு?" என்று விசாரிக்க, பசி இருந்தாலும், ரமேஷும், வித்யாவும் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வில்லன் சிரித்துக் கொண்டே, பணியாளரிடம் தனக்கென உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான். பின்னர் இருவரையும் பார்த்துக் குறிப்பாக, ரமேஷிடம், "உனக்கு உன் குடும்பம் முக்கியம் இல்லையா? குடும்பத்துக்கும், குழந்தைக்கும் எதுவேண்டுமானாலும் செய்வாயா?" என்று கேட்க, ரமேஷ் விரக்தியோடு, "அதான் மொத்த சேமிப்பு, நகை எல்லாத்தையும் இழந்துவிட்டு உட்கார்ந்திருக்கேனே. வேலையும் என்ன கதினு நாளைக்குப் போனால் தான் தெரியும்." என்று சொன்னான்.

"ஓகே,ஓகே, இப்போ நீ அதிகமா ஒண்ணும் செய்யவேண்டாம். என் பர்சிலே பணமே இல்லை. இதோ பார்!" என்று திறந்து காட்டினான். க்ரெடிட் கார்டெல்லாம் நான் வச்சுக்கறதில்லை. உங்க க்ரெடிட் கார்டையும் பயன்படுத்த முடியாது. அக்கவுண்டிலே பணமே இல்லையே! அதனாலே இரண்டு பேரும் இப்போச் சேர்ந்து போய் எங்கே இருந்தாவது பணம் புரட்டிக் கொண்டு வாங்க. அதுவும் அரை மணி நேரத்துக்குள்ளே." என்றான். "இந்த நேரம் எந்தக் கடையும் திறந்திருக்காது. எங்கே போய்ப் பணம் கேட்போம்? பிச்சை எடுத்தாலும் கிடைக்காது." என்று ரமேஷ் ஆத்திரத்துடன் சொல்ல, வித்யா ஆமோதித்தாள். "அது உங்க பிரச்னை!' கையை விரித்துவிட்டான் வில்லன். இருவரும் வேறு வழியில்லாமல் எழுந்தனர்.

சற்று நேரம் எங்கே செல்வது, எப்படிப் பணத்துக்கு ஏற்பாடு செய்வது எனப்புரியாமல் விழித்தனர் இருவரும். பின்னர் இப்போதே ஐந்து நிமிடம் போயிடுச்சே என்ற கவலையில் நடந்தனர். கொஞ்ச தூரம் போய்ப் பார்த்தார்கள் இருவரும். எல்லா இடங்களிலும் கடைகளை மூடிக் கொண்டிருந்தனர். திறந்திருந்தாலும் யாரிடம் போய்ப் பணம் கேட்பது?? சுற்றிச் சுற்றி வந்த இருவரின் காதுகளிலும், "ஹே ராம்!' என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தனர் இருவரும். அங்கே ஒரு அடகுக் கடை. அதன் முதலாளியான வட இந்திய சேட் தான் அப்படிக் கூறி இருக்கிறார். கடையை மூடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர் வேலை செய்யும் ஆட்கள்.

ரமேஷின் மூளையில் பளிச்சிட்டது. உடனே வித்யாவின் கைகளைப் பார்த்தான். ஒரு மோதிரம் மட்டுமே இருந்தது. அவள் அதிகம் தங்க நகைகளை தினசரி அணிவதில்லை. இந்த மோதிரமும் ரமேஷ் அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தில் பரிசாக அளித்தது. அதைக் கழட்டச் சொன்னான். தன்னுடைய வாட்சையும் கழட்டினான். மனசே இல்லாமல் கழட்டினார்கள் இருவரும். அந்த நகைக்கடையில் போய் அதை அடகு வைத்துப் பணம் கேட்டார்கள். கடை மூடும் சமயம் எனப் பணம் தர மறுத்தார் வட இந்திய சேட். கெஞ்சிக் கூத்தாடி அவரை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்து அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வளவு என எண்ணிக் கூடப் பார்க்காமல் ஓடி வந்தனர் இருவரும்.

அரை மணி நேரத்துக்கு இன்னும் ஐந்து நிமிஷங்களே இருந்தன. ஓட்டமாய் ஓடோடி வந்து பார்த்தால் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் இல்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டுக் கழிவறையில் இருந்து அவன் வெளியே வருவதைக் கண்டனர் இருவரும். "என்ன பயந்துட்டீங்களா? அப்படியே நான் போயிருந்தால் என்ன? உங்களுக்கு நல்லது தானே?" என்றான் அவன். "நல்லது தான். ஆனால் எங்க பொண்ணு இருக்கிற இடம் தெரியணுமே! நீ போயிட்டியானா உன்னை எப்படிக் கண்டு பிடிக்கிறது?" பல்லைக் கடித்தான் ரமேஷ்.

"ஓஓ அதுவும் அப்படியா?? ஆமாம், ஆமாம், உனக்கு மனைவி, குழந்தை மேல் பாசம் அதிகமாச்சே!' என்று ஏளனம் தொனிக்கக் கூறினான் அவன். ரமேஷ் அவனை அடிக்கப்பாய, ஒரு கையால் தடுத்துக் கொண்டே இன்னொரு கையால் ரமேஷைக் காருக்குப் போ எனத் தள்ளினான். சற்றே யோசித்தவன் போலக் "கொஞ்ச நேரம் காருக்கு வெளியே காத்திருங்க. இதோ வரேன்." என்று சொல்லிவிட்டு எங்கேயோ போனான். கொஞ்ச நேரம் எந்தப்பிடுங்கலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ரமேஷ் வித்யாவைக் கோபமாய்ப் பார்த்தான். வித்யா ஏதோ சொல்ல ஆரம்பித்த போது, "பேசாதே! நீ எப்படி அந்தக் கவரைக் கொண்டு போய் எங்க ஆபீஸோட போட்டி ஆட்களிடம் கொடுப்பாய்? கொடுத்த கவரைப் பிரிச்சுப் பார்க்கணும்னு தோணலையா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்டான்.

"எனக்கு எப்படித் தெரியும் ரமேஷ்?? நானும் உங்களைப் போலதானே?" என்று வித்யா கேட்க, "அவன் நம்மை ஏதோ சிக்கலில் மாட்டிவிட வலை விரிக்கிறான் என்பது கூடப் புரியாதபடிக்கு நீ என்ன மனித வள மேம்பாட்டுத் துறையிலே வேலை செய்யறே?? மனிதர்களோட எண்ணங்களையோ, எண்ண ஓட்டத்தையோ புரிஞ்சுக்காம என்னத்தை வெட்டி முறிக்கிறே?"

"ரமேஷ், ரமேஷ், வேண்டாம், தயவு செய்து வேண்டாம். இது நம் வீடு இல்லை. மேலும் இப்போ நாம இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு சிக்கலில் இருக்கோம். அதைத் தீர்க்கும் வழியைப் பார்க்கலாம்." என்றாள் வித்யா.

ரமேஷோ கோபம் அடங்காமல், "ஒருவழியா என்னோட எதிர்காலத்தை நாசம் பண்ணியாச்சு! போச்சு, போச்சு, என்னோட ப்ரமோஷனும் போச்சு, அதோட வேலைக்கே உலையும் வைச்சாச்சு!" என்று பல்லைக் கடித்துக்கொண்டே வித்யாவிடம் சொல்ல கண்ணீரோடு முகத்தைத் திருப்பிக் கொண்ட வித்யா, திடீரென, "ரமேஷ், அங்கே பாருங்க, அவன் கைபேசியை காருக்குள்ளே வைச்சுட்டுப் போயிருக்கான்." என்று காட்டினாள். ரமேஷ் சட்டெனக் கோபம் அடங்கியவனாய்த் திரும்பிப் பார்த்தான். காரைத் திறந்து அந்தக் கைபேசியை எடுத்துக் கடைசியாய் அவன் பேசிய தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தான். வில்லன் கூப்பிடும்போது, "327" என்று கூப்பிட்டது நினைவில் வரவே, அவனும் அவ்வாறே கூப்பிட்டான்.

3 comments:

  1. ம்ம்ம்ம்.............

    ReplyDelete
  2. என்ன மாமி இப்படி சஸ்பென்ஸ் வெக்கறீங்க... சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க

    ReplyDelete
  3. கதை விறு விறுப்பா போய் கொண்டு இருக்கு !
    சும்மா எதற்கு எடுத்தாலும் இந்த ரமேஷ் வித்யாவை
    குறை சொல்லறதை விட்டுட்டு அடுத்து ஆக வேண்டியதை
    பார்க்க சொல்லுங்க கீதாம்மா !

    ReplyDelete